உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கியூசெக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கியூசெக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 08, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 10 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கும் ரசாயனக் கழிவு நீரகற்று நிலையம்

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளின் கியூசெக்ஸ் எனும், பொதுக் கழிவு நீரகற்று நிலையம்.
கடலூர்:

             கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கான பொதுக் கழிவு நீரகற்று நிலையம் (கியூசெக்ஸ்), கடந்த 10 ஆண்டுகளாக, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கிக் கொண்டு இருக்கிறது.  

             கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 32 தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பென்சிலின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பெயிண்ட் மூலப்பொருள்கள், பி.வி.சி. மூலப் பொருள்கள், சாயங்கள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பவை.  இந்த ஆலைகள் நாளொன்றுக்கு, 2 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி, பயன்படுத்துகின்றன. சிப்காட் ரசாயன ஆலைகளால் தொழிற்பேட்டையை அடுத்துள்ள கடலூர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று பெருமளவுக்கு மாசுபடுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். 

               ஆலைக் கழிவுகள் வங்கக் கடலிலும், உப்பனாற்றிலும் கலப்பதால், மீன் வளம் குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்த ஆலைகளின் சுத்திகரிக்கப்பட்ட திரவக்கழிவுகளை சேகரித்து கடலில் கலக்க, கியூசெக்ஸ் நிறுவனம், 2000-ம் ஆண்டு ரூ. 5 கோடி மூலதனத்தில் மேற்கண்ட ஆலைகளாலேயே உருவாக்கப்பட்டது.  இது நாளொன்றுக்கு 1.20 கோடி லிட்டர் ரசாயனக் கழிவுகளைச் சேகரித்து, கடலில் கலக்கும் திறன் கொண்டது. 

             இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து, இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.  காரணம் இந்த நிறுவனம் கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள், மாசுக் கட்டுப்பாடு வாரிய தர அளவுகளின்படி இல்லை என்பதுதான்.  சுத்திகரிக்காத கழிவுகளை கியூசெக்ஸ் நிறுவனம் கடலில் கலப்பதாக, கடலூர் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், ஆதாரங்களுடன் 2004-ம் ஆண்டு புகார் தெரிவித்தது. இச்செய்தி தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் வெளிவந்தது. இச்செய்திகளை சென்னை உயர்நீதிமன்றம் தன்னேற்பு மனுவாக எடுத்துக் கொண்டு, விசாரணை மேற்கொண்டது.  

             2010 அக்டோபரில் கியூசெக்ஸ் பொதுகழிவு நீரகற்று நிலையத்தை மூடுமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  ÷சுமார் ஒரு மாதம் மூடலுக்குப்பின் கியூசெக்ஸ் திறக்கப்பட்டது. கியூசெக்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்த மனு அடிப்படையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.   ரசாயன ஆலைகளின் திரவுக் கழிவுகளை, தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் (நீரி) 6 மாதம் ஆய்வு செய்து, அண்மையில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு அறிக்கை அளித்தது. அறிக்கை விவரங்களை அறிந்தபின், உயர் நீதிமன்றம், இறுதி ஆணையை பிறப்பிக்க உள்ளது.

து குறித்து சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பக ஆலோசகர் எம்.நிஜாமுதீன் கூறுகையில்

             கியூசெக்ஸ் நிறுவனம் தொடர்ந்து சுத்திகரிக்காத ரசாயனக் கழிவுகளை கடலில் கலப்பது சட்ட விரோதமானது.  இயக்க அனுமதி பெறாத ஒரு ஆலையை, மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்வதாகக் கூறுவதே சட்ட விரோதம். ரசாயனத் தொழிற்சாலைகள் செய்யும் தவறுகளுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உடந்தையாக இருக்கிறது. ஆலைகள் சுத்திகரிக்காத கழிவுகளை தனக்கு அனுப்புவதாக, கியூசெக்ஸ் நிறுவனமே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  

             அதன்மீதும் வாரியம் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த நிலையில் திருப்பூர் ஆலைக் கழிவுகளை, கியூசெக்ஸ் நிறுவனம் மூலம், கடலில் கலக்க இருப்பதாக அறிகிறோம். இத்திட்டம் ஏற்கப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது என்றார்.  

இதுபற்றி கியூசெக்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி இந்திரகுமார் கூறுகையில், 

             "21 ஆலைகள் இதில் முன்பு உறுப்பினர்களாக இருந்தன. தற்போது 13 ஆலைகள் உள்ளன. தொழிற்சாலைகள் அனுப்பும் கழிவுகளை, கடலில் வெளியேற்றுவதே கியூசெக்ஸ் வேலை. ஆலைகள் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் அனுப்பினால், எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. இது தொடர்பாக ஆலைகளுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.  அது குறித்து சம்மந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாசுக் கட்டுப்பாடு வாரியம்தான். கடந்த 8 மாதங்களாக கியூசெக்ஸ் நிறுவனம் நன்றாகச் செயல்படுகிறது. 

              எனவே கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் அனுமதி ( உயர்நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பின், வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.  திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவுகளை சேகரித்து கடலில் கலக்க அனுமதி கேட்டனர். அந்த அளவுக்கு கியூசெக்ஸ் நிறுவனத்தில் வசதி இல்லை என்று கூறிவிட்டோம்' என்றார். 







Read more »

வியாழன், அக்டோபர் 21, 2010

மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை: கடலூர் சிப்காட் பொதுக் கழிவுநீர் அகற்று நிலைய மின்இணைப்பு துண்டிப்பு

கடலூர்:

                சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடலூர் சிப்காட் பொதுக் கழிவுநீர் அகற்று நிலையத்துக்கான மின் இணைப்புகள் அண்மையில் துண்டிக்கப்பட்டன.  

                 கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரசாயனத் தொழிற்சாலைகள்.  இவற்றில் 19 ரசாயனத் தொழிற்சாலைகள் இணைந்து, ரூ.  4 கோடி முதலீட்டில் கியூசெக்ஸ் என்ற பொதுக் கழிவுநீரகற்று நிலையத்தை 2001-ல் உருவாக்கிச் செயல்படுத்தின. இதில் சிப்காட் நிறுவனம் 30 சதவீதம் முதலீடு செய்திருந்தது. இந்த நிறுவனம் தனது உறுப்பு தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பெற்று, கடலுக்குள் செலுத்தும் பணியைச் செய்து வந்தது.  

                    தற்போது கியூசெக்ஸ் நிறுவனத்துடன் 8 தொழிற்சாலைகள் மட்டுமே இணக்கப்பட்டுள்ளன. மற்ற தொழிற்சாலைகள் சொந்தமாக கழிவு நீரகற்று நிலையங்களை உருவாக்கியதாலும், சில தொழிற்சாலைகள் கழிவுநீர் எதையும் வெளியேற்றாமல் 100 சதவீதம் மறுசுழற்சி செய்து, பயன்படுத்துவதாலும் கியூசெக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகிக்கொண்டன. இந்த நிலையில் கியூசெக்ஸ் நிறுவனம் மீது பல புகார்கள் எழுந்தன. 

                   முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுகள், ஆலைகளில் இருந்து கியூசெக்ஸ் நிறுவனத்துக்கு வருவதாகவும், கியூசெக்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் ரசாயனக் கழிவுகள் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மாசு அதிகம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.  

                 2000 ஆண்டு முதல் 5 முறை கியூசெக்ஸ் நிறுவனத்துக்கு, மாசுக் கட்டுப்பாடு வாரியம் இதுதொடர்பாக விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 2004 முதல் குழாய்களில் ரசாயனக் கழிவுகள் கசிவு, உடைப்பு, நீர் நிலைகளில் கழிவுகள் கலத்தல் போன்ற 15 சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  மேலும் கியூசெக்ஸ் நிறுவனம் இயங்குதற்கு, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் தடையில்லாச் சான்று மட்டுமே பெறப்பட்டு இருப்பதாகவும், கட்டுமான இசைவாணை, செயல்படுவதற்கான இசைவாணை, கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் இருந்து அனுமதி பெறப்படவில்லையாம். 

                   ஆனால் மாசுக் கட்டுப்பாடு வாரியம் உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் 2004-ம் ஆண்டு சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து, எம்.நிஜாமுதீன் தலைமையிலான மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு பேரவை, தி அதர் மீடியா, குளோபல் கம்யூனிட்டி மானிட்டரிங், சிப்காட் கம்யூனிட்டி மானிட்டர் ஆகிய அமைப்புகள் இணைந்து, கேஸ் ட்ரபிள் என்ற அறிக்கையை வெளியிட்டன.  இந்த அறிக்கை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில், கியூசெக்ஸ் நிறுவனம், சில தொழிற்சாலைகள், சிப்காட் கம்யூனிட்டி மானிட்டர் ஆகியவை தங்களை இணைத்துக் கொண்டன.  

               வழக்கில் கடந்த 21-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. 4 வாரத்துக்குள் கியூசெக்ஸ் நிறுவனத்தை முடிவிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டபடி, கியூசெக்ஸ் நிறுவனத்துகான மின் இணைப்புகளை, மின்சார வாரியம் வியாழக்கிழமை துண்டித்தது.  

இதுகுறித்து சிப்காட் தொழிற்சாலைகளின் தலைவர் இந்தர்குமார் கூறுகையில், 

                      ""ரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்று கூறித்தான், ஆலைகளுக்கான நிலங்களை சிப்காட் வழங்கியது. கியூசெக்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள ரசாயனத் தொழிற்சாலைகள் இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும். ஒரு சில நாள்கள் மட்டுமே அவை தமது கழிவுகளை ஆலை வளாகத்தில் சேமித்து வைக்க முடியும். அதன்பிறகு ஆலையின் உற்பத்தியை நிறுத்த வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழப்பார்கள்'' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior