உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நாவரசு கொலை வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவரசு கொலை வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 08, 2012

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு 3 நாள் பரோல்


கடலூர்:

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரும் ஜான் டேவிட்டுக்கு, அவரது தந்தை மரணம் காரணமாக 3 நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

            சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1996-ம் ஆண்டு, மருத்துவம் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது நாவரசுவை, அதே மருத்துவக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவரான ஜான் டேவிட், கொடூரமாகக் கொலை செய்தார்.  இக்கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் 11-3-1998 அன்று, ஆயுள் தண்டனை விதித்தது. ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 5 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர், அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டது. 

            ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 20-4-2011 அன்று உச்ச நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு, ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 23-4-2011 அன்று, ஜான் டேவிட் மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஜான் டேவிட்டின் தந்தை மாரிமுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை இறந்தார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, பரோலில் செல்ல அனுமதி அளிக்குமாறு ஜான் டேவிட் கோரிக்கை மனு அளித்தார். 

       மனுவை ஏற்றுக் கொண்ட சிறைத்துறை, அவருக்கு 3 நாள் பரோலில் செல்ல அனுமதி அளித்துள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீஸ் காவலர்கள் அடங்கிய பாதுகாப்புடன், ஜான் டேவிட் செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.   





Read more »

புதன், செப்டம்பர் 14, 2011

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக்கோரிய மனு தள்ளுபடி

             சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஜான்டேவிட் மருத்துவக் கல்வி பயின்றார். அவருடன் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு மருத்துவக் கல்வி படித்தார்.

                   இந்த நிலையில் நாவரசு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து 11.3.98 அன்று கடலூர் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது. செசன்சு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஜான் டேவிட்டை 5.10.01 அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது. பின்னர் போலீஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

           அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, செசன்சு கோர்ட்டு பிறப்பித்த ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து 20.4.11 அன்று உத்தரவிட்டது. தற்போது ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் எஸ்தர் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தபோது, அவரது வயதை கருதாமல் பொது சிறையில் அடைத்துவிட்டனர்.

               சிறுவராக இருக்கும் ஒருவரை சிறுவர் சீர்திருத்தச் சட்டப்படி பொது சிறையில் அடைக்கக் கூடாது. சிறுவர் இல்லங்களில்தான் வைக்க வேண்டும். 21 வயதுக்கும் மேற்பட்டவரைத்தான் பொது ஜெயிலில் அடைக்க முடியும்.
எனவே ஜான் டேவிட்டை பொது சிறையில் அடைத்தது சிறுவர் சீர்திருத்தச் சட்டத்தை மீறியதாகும். சட்டவிரோத காவலில் அவரை போலீசார் அடைத்திருந்தனர். எனவே இந்த சட்டவிரோத நடவடிக்கைக்காக ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

                 இந்த மனுவை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதால், மனுவை திரும்பப் பெறுவதாக எஸ்தர் தரப்பில் வக்கீல் குறிப்பிட்டார். மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.














Read more »

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

நாவரசு கொலை வழக்கில் ஜான்டேவிட் தனி அறையில் அடைப்பு

            மருத்துவக்கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயிலில் அவரது நடவடிக்கைகள் பற்றி அதிகாரி ஒருவர் கூறியது: 

             ஜான்டேவிட் ஒரு பிரபலமான கைதியாக கருதப்படுகிறார். இதனால் அவரை கடலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் சென்ட்ரல் பிளாக்கில் தனி அறையில் அடைத்துள்ளோம். இதுபோன்ற பிரபலமான கைதிகளை சில நாட்கள் தனிமை சிறையில்தான் அடைப்பது வழக்கம். ஏனென்றால் மற்ற கைதிகள் அவரோடு எப்படி பழகுகிறார்கள் என்பதை தீர்மானித்த பிறகுதான், மற்ற கைதிகளோடு அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில்தான் ஜான்டேவிட்டை தனி அறையில் அடைத்துள்ளோம்.

               அவர் ஜெயிலுக்கு வந்தவுடன் முகத்தில் எந்தவிதமான கவலையையோ, பயத்தையோ காட்டவில்லை. சர்வசாதாரணமாகவும், இயல்பாகவும் காணப்பட்டார். ஜெயிலில் வழங்கப்படும் சாப்பாட்டை நன்றாக சாப்பிடுகிறார். இரவிலும் நன்றாக தூங்குகிறார். மற்ற கைதிகள் அவரிடம் ஏதாவது பேசினால் சிரிப்பை மட்டுமே பதிலாக காட்டுகிறார். இரவில் தூங்குவதற்கு முன்பு பைபிள் படிக்கிறார். நாங்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் அவர் மிகவும் இயல்பாக காணப்படுகிறார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Read more »

திங்கள், ஏப்ரல் 25, 2011

கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் சரண்


 
கடலூர்:

           அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் சனிக்கிழமை மாலை சரண் அடைந்தார்  

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், முன்னதாக கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை அடைந்தவர் ஜான் டேவிட் (34).  சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு (17). 1996-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் நாவரசு, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அதே மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தவர் ஜான் டேவிட். 

            கரூரை சேர்ந்த மருத்துவத் தம்பதியர் டேவிட் மாரிமுத்து, எஸ்தர் லட்சுமி ஆகியோரின் மகன்.  6-12-1996 அன்று நாவரசுவை ராகிங் காரணமாக ஜான்டேவிட் கொலை செய்தார். பின்னர் நாவரசுவின் உடலை, ஜான் டேவிட் பல துண்டுகளாக வெட்டினார். தலையை ஒரு பையில் போட்டு, அண்ணாமலைப் பல்கலக்கழகம் அருகே உள்ள வாய்க்காலில் போட்டார். உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து சென்னைக்கு கொண்டு சென்றார். வழியில் உள்ள வாய்கால்களில் கை, கால்களை வீசி எறிந்தார். தலை, கால், கைகளற்ற உடலை, சென்னை நகர பஸ் ஒன்றில் வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். 

               இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ஜான் டேவிட்டுக்கு, கடலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 11-3-1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.  தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து புதன்கிழமை உத்தரவிட்டனர். 

                கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  அதைத் தொடர்ந்து ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைய வேண்டும் அல்லது அவரை கடலூர் போலீஸôர் கைது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையே ஜான் டேவிட், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் மத போதகராக இருப்பதாகவும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின.  ஜான் டேவிட்டை கைது செய்ய 4 தனிப் படைகளை அமைத்து இருப்பதாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் அறிவித்தார்.  

               தனி போலீஸ் படையினர் கரூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இந்த நிலையில் சனிக்கிழமை மாலை ஜான் டேவிட் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டுவரப்படுவதாக ஒரு தகவலும், ஜான்டேவிட் தானாக வந்து, கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாக மற்றொரு தகவலும் வெளியாயின.  மாலை 5 மணிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மத்திய சிறைச் சாலைக்கு விரைந்து வந்த பிறகே உண்மை தெரிந்தது.

            ஜான் டேவிட் மாலை 4.30 மணிக்கு, தனது தாயார் மற்றும் வழக்கறிஞருடன் வந்து கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்தார் என்பது பின்னரே தெரிய வந்தது.  போலீஸ் மற்றும் செய்தியாளர்கள் கண்ணிóல படாமல் சிறைச் சாலையில் சரண் அடைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  

எஸ்.பி. பேட்டி: 

ஜான் டேவிட் சரண் அடைந்தது குறித்து எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் கூறியது: 

              உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்து ஜான் டேவிட்டை கைது செய்ய திட்டமிட்டோம். அதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் திருச்சி, கரூர், சென்னை போன்ற இடங்களில் விசாரணை நடத்தினர்.  தீவிர விசாரணையில் ஜான் டேவிட் சென்னை வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில், ஜான் மாரிமுத்து என்ற பெயரில் வேலை பார்ப்பதாகத் தகவல் கிடைத்து. அந்த நிறுவனத்தை நெருங்கும் நிலையில், ஜான் டேவிட் புதுவைக்குச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது.  போலீஸ் வருவதற்குள் ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாகத் தகவல் வந்து விட்டது என்றார் எஸ்.பி. 

 ஜான் டேவிட்டின் வழக்கறிஞர் ஆறுமுக ராஜன் கூறுகையில்,

          உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்ததும், ஜான் டேவிடே சரண் அடைய முடிவு செய்தார். அவரது வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் விரைவில் செய்யப்படும் என்றார். 

Read more »

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை


கடலூர்:
 
           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருப்பதைத் தொடர்ந்து, தண்டனைக்குரிய அடைந்துள்ள ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் வியாழக்கிழமை தெரிவித்தார். 
 
              சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு (17). 1996-ம் ஆண்டு நாவரசு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த கரூரைச் சேர்ந்த ஜான்டேவிட் 6-12-1996 அன்று, நாவரசுவை ராகிங் காரணமாகக் கொலை செய்தார். அவரது தலையை அண்ணாமலை நகரில் உள்ள வாய்க்காலில் போட்டார். உடலை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்து, சென்னை செல்லும் வழியில் கை கால்களை வாய்க்கால்களில் வீசினார். தலையற்ற உடலை சென்னையில் நகரப் பஸ் ஒன்றில் விட்டுச் சென்றார்.  
 
              நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு, கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 11-3-1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.  உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தும் கடலூர் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தும் புதன்கிழமை உத்தரவிட்டனர்.  
 
              கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஜான் டேவிட் கிறிஸ்தவ மத போதகராக மாறி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஜான் டேவிட் தமிழக போலீஸôரிடம் சரண் அடைந்து மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது போலீஸôர் அவரைக் கைது செய்ய வேண்டும்.  
 
எனவே இது குறித்து வியாழக்கிழமை கடலூர் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ்  கூறியது:  
 
                 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் ஜான் டேவிட் பற்றிய தகவல்களை சேகரிக்க சிதம்பரம் டி.எஸ்.பி., அண்ணாமலை நகர் போலீஸ் ஆய்வாளர், சிதம்பரம் நகர போலீஸ் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  தனிப்படையினர் திருச்சி, கரூர், சென்னை பகுதிகளுக்கு சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள். வெளிநாட்டில் ஜான் டேவிட் இருந்தால், வெளியுறவுத்துறை மூலம் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எஸ்.பி.
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior