நெய்வேலி:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகையை வடக்கு வெள்ளூர் கிராம மக்களிடம் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில்,
எங்களிடம் எல்லா ஆவணங்களையும் விஏஓ பெற்றுக்கொண்டார். ஆனால் இதுநாள் வரை பணம் எங்களுக்கு வழங்கவில்லை. கேட்டால் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பொங்கல் பண்டிகை கழித்து வாருங்கள், வந்திருந்தால் தருகிறேன் என்கிறார். பலருக்கு அரசு வழங்கிய தொகையைக் காட்டிலும் குறைவாகவே நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார். மேலும் சொந்த விருப்பு - வெறுப்புகளை வெள்ள நிவாரணம் வழங்குவதில் வெளிப்படுத்துகிறார். தனக்கு பிடிக்காதவர்களுக்கு வந்திருந்த நிவாரணத் தொகையை வருவாய் ஆய்வாளரிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டார் என்றனர் கிராம மக்கள்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,
வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட 98 குடியிருப்புகளில் 18 மட்டுமே முழுமையாக பாதிக்கப்பட்டவை, எஞ்சிய 18 மட்டுமே முழுமையாக பாதிக்கப்பட்டது. கூனங்குறிச்சி ஊராட்சியில் பலர் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வெள்ள நிவாரணத் தொகைக்கான ஒதுக்கீடு பெற்றிருந்தனர். அவற்றை ஆராய்ந்தபோது, அவ்வாறு எதுவும் பாதிக்கப்படவில்லை என தெரியவந்ததை தொடர்ந்து 10 பேரின் தொகை வருவாய் ஆய்வாளரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளேன் என்றார் பாலசுப்ரமணியன்.