உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

என்.எல்.சி. போராட்டம்: தமிழக MPக்கள், MLAக்கள் குழுவினர் பிரதமரை சந்திக்க முடிவு

பா.ம.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் எம்.எல்.ஏ.  கடலூரில் நேற்று அளித்த பேட்டி:


                         ’’என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்காக பல போராட்டங்கள் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை. 

                 சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.ஆகவே, அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து, நாளை  கடலூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வியாபாரிகள், பொதுமக்கள், டிரைவர்கள் தாமாகவே முன்வந்து, 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் துயரத்தில் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

                 இந்த போராட்டம் எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் நடைபெறும். பால் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தமாட்டோம். மருந்து கடைகள் திறந்து இருக்கும். மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு செல்லாமல், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவில்லை என்றால் மேற்கு வங்காளம், நந்திகிராமத்தில் ஏற்பட்டது போன்ற பிரச்சினை ஏற்படும்.  உயிருக்கு ஆபத்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, முறையாக பயிற்சி இல்லாத கிராமப்புற இளைஞர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியில் ஈடுபடுத்துகிறது. முறையான பயிற்சி பெறாததால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                       வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம், அடையாள அட்டையை பறிப்போம் என என்.எல்.சி நிறுவனம் மிரட்டுவது சட்டவிரோதமானது. தொழிற்சங்க தலைவர்களை காவல்துறையினர் மிரட்டுவதும் கண்டனத்துக்குரியது. தொழிலாளர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

                      பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வருகிற 21-ந் தேதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிலக்கரித்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கிறோம். இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செம்மலை, ஆனந்தன், தம்பித்துரை, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சின்னசாமி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.கே.ரெங்கராஜன் தலைமையில் 3 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு குருதாஸ் குப்தா தலைமையில் 3 எம்.பி.க்களும், பா.ம.க. சார்பில் நானும் கலந்து கொள்கிறோம்’’என்று தெரிவித்தார்.

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில்பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு


குறிஞ்சிப்பாடி

               குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில், மேலும் இருவர் இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எல்லப்பன்பேட்டை வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சிவக்கொழுந்து, நாட்டு பட்டாசு தயாரிக்க அனுமதி பெற்றுள்ளார். இவரது குடோனில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வெடி மருந்தை எடுப்பதற்காக மின் விளக்கின் சுவிட்சை போட்ட போது, பல்பு வெடித்தது. இதில் ஏற்பட்ட தீப்பொறியால் பட்டாசு குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது.

                   இதில், குடோன் தரைமட்டமானது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இவ்விபத்தில் உரிமையாளர் சிவக்கொழுந்து அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு (23), சுப்ரமணியன் மகன் அப்பு என்கின்ற சரத்குமார் (23), கணபதி மகன்கள் தருண் (10), சந்தானம் (7) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பு என்கிற சரத்குமார், நேற்று அதிகாலை தருண் (10) இருவரும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.அமைச்சர் ஆறுதல்: விபத்தில் இறந்த சிவக்கொழுந்தின் உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க, முதல்வர் நிவாரண நிதி உதவி வழங்க பரிந்துரை செய்தார்.

மோட்டார் கொட்டகையால் விபரீதம்:

                           வெடி விபத்தில் இறந்த சிவக்கொழுந்து பட்டாசு தயாரிக்க முறையாக லைசென்ஸ் பெற்றிருந்தும், தனது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டார் கொட்டகையை அனுமதியின்றி வெடிகளை இருப்பு வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். மோட்டார் கொட்டகை உள்ளே ஆறு அடி ஆழத்திற்கு பள்ளம் அமைத்து, அதில் மருந்துகளை சேகரித்து வைத்திருந்தார். மோட்டார் கொட்டகை என்பதால் மின்சார உபகரணங்கள் அதிகமாக இருக்கும். மேலும், பாதுகாப்பற்ற நிலையில் வெடி மருந்தை வைத்திருந்ததால் இந்த வெடி விபத்து நேரிட்டுள்ளது.

Read more »

வெள்ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்க ரூ.92 லட்சம் செலவில் தடுப்பணை

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே நவாப்பேட்டை வெள்ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் 92 லட் சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப் பணை அமைக்கும் பணி துவங்கியது. நவாப்பேட்டை அருகில் உப்பனாற்றுப் பகுதியில் மண் அரிப்பு ஏற் பட்டு ரயில் சாலை வரை பாதிப்பு ஏற்படும் நிலையில் இருந்தது.

                     ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு இப்பகுதியில் தடுப்பணைக் கட்டாவிட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தற் காலிக தடுப்பு அமைக்க திட்ட மதிப் பீடு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து கலெக் டர் சீத் தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

                 அதனைத் தொடர்ந்து 92 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப்பணைக் கட்ட திட்டமிட்டனர். தற்போது 40 அடி ஆழம் உள்ள வெள்ளாற்றில் 600 மீட்டர் தொலைவில் பனைமரத்தை நட்டு மண் மூட்டை கொண்டு தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக சுற்றுப்பகுதியில் இருந்து 6 ஆயிரம் பனைமரம் வாங்கி கிள்ளை ரயில் நிலையத் தில் அடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி மழைகாலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior