உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 28, 2011

விருத்தாசலம் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

விருத்தாசலம்:

              விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு விஷமிகள் யாரோ எம்.ஜி.ஆர். சிலையின் இடதுகையை உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இன்று காலை இதனை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

              இதுகுறித்து கம்மாபுரம் கிளை ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ஆறுமுகம் கம்மாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரில், எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், அக்டோபர் 27, 2011

உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்

  http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/b04547bb-42e0-470b-b75e-06e7a6f8c01e_S_secvpf.gif

          நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
 
            இந்த தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து மாநகராட்சிகளை கைப்பற்றியதுடன் பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 39.02 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

               அ.தி.மு.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 39.24 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 38.69 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம் கிராமங்களில் அதி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்திய சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 38.4 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது. அதன்பிறகு 4 மாதத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 39.02 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது. 4 மாத இடைவெளியில் அ.தி.மு.க.வுக்கு 0.62 சதவீத ஓட்டு அதிகரித்து இருக்கிறது. அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.

             உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 26.09 சதவீத ஓட்டுகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு கிராமப் பகுதியில் 25.71 சதவீதமும், நகரப்பகுதியில் 26.67 சதவீத ஓட்டும் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் 22.38 சதவீத ஓட்டுகளே பெற்ற தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் 26.1 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதன்மூலம் தி.மு.க.வுக்கு 3.72 சதவீத ஓட்டுகள் அதிகரித்துள்ளது.

             தே.மு.தி.க. உள்ளாட்சி தேர்தலில் பெற்ற இடங்களின் அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் ஓட்டு சதவீத அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு 10.11 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டபோது 2006 சட்டசபை தேர்தலில் 8.38 சதவீதமும், 2009 பாராளுமன்ற தேர்தலில் 10.08 சதவீத ஓட்டும் பெற்று இருந்தது. தற்போது அதன் ஓட்டு 10.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் மட்டும் தே.மு.தி.க. அ.தி. மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து 10.11 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

               தே.மு.தி.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 11.93 சதவீதமும், நகரப்பகுதியில் 7.4 சதவீத ஓட்டும் கிடைத்துள்ளது. இதன்மூலம் தே.மு.தி.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா 2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 பாராளுமன்ற தேர்தலில் 2.34 சதவீத ஓட்டுக்களையும் பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் 1.35 சதவீத வாக்குகளை மட்டும் அக்கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

             பா.ம.க. 1998 பாராளுமன்ற தேர்தல் முதல் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. அணியில் மாறிமாறி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 3.5 சதவீத ஓட்டுகளை பெற்று காங்கிரசுக்கு அடுத்தப்படியாக 5-வது இடத்தில் உள்ளது. பா.ம.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 4.63 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 1.93 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. நகரங்களில் பா.ம.க.வுக்கு ஆதரவு இல்லை. கடந்த சட்டசபை தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1.7 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

             தனித்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு 0.71 சதவீத வாக்குகளும், தே.மு.தி.க.வுடன் இணைந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 1.02 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. தனித்துப்போட்டியிட்ட காங்கிரஸ் 5.71 சதவீத ஓட்டுகள் பெற்று தே.மு.தி.க.வுக்கு அடுத்தப்படியாக 4-வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டதன் மூலம் அந்த கட்சிகளுக்கு செல்வாக்கு என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியது.

கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்:-

அ.தி.மு.க. 39.02

தி.மு.க. 26.09

தே.மு.தி.க. 10.11

காங்கிரஸ் 5.71

பா.ம.க. 3.55

ம.தி.மு.க. 1.70

பா.ஜனதா 1.35

மார்க்சிஸ்ட் கம்யூ. 1.02

இந்திய கம்யூ. 0.71 மற்ற கட்சிகள் 1.28

சுயேச்சைகள் 9.46
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

புதன், அக்டோபர் 26, 2011

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை: நடவுப் பணிகள் பாதிப்பு


கடலூரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால், குளம்போல் காட்சி அளிக்கும் மஞ்சக்குப்பம் மைதானம். (வலதுபடம்) கொட்டும் கனமழையின் பின்னணியில் தெரிவது மாவட்ட
கடலூர்:

           கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாண்டு கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஆகும். 

                        இம்மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.தேவையான டி.ஏ.பி.உரம், பொட்டாஷ் கையிருப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.டெல்டா பாசனப் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் நாற்று நடவுப் பணிகள் முடிவடைந்து விட்டது. வீராணம் பாசனப் பகுதிகள் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், இனிமேல்தான் நடவுப் பணிகள் தொடங்க வேண்டும்.பெரும்பாலான பகுதிகளில், நாற்றுகள் 30 நாள் பயிராகி நடவுக்குத் தயாராக உள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், கடந்த 2 நாள்களாக டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் வயல்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளது. 

             எனவே நடவுப் பணிகளை விவசாயிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை, கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியதாகவும், வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், தண்ணீப் பற்றாக்குறை தீர்ந்து விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள் .டெல்டா பாசனப் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில், நெல்பயிர் நட்டு 15 முதல் 25 நாள்கள் பயிராக உள்ளது. இப்பயிருக்கு தற்போது பெய்து வரும் மழை, உகந்ததாக இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். வீராணம் ஏரியின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 44 அடியாக இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதும், வீராணம் ஏரிக்கு வரும் காட்டாற்று வெள்ளத்தை நினைத்து, டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளிடம் அச்சம் ஏற்படுவது வாடிக்கை. எனினும் இவ்வாண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக முன்னரே பாசனத்துக்கு திறக்கப்பட்டதால், டெல்டா பாசனப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நடவுப்பணிகளை முடித்து விட்டது, பெரிதும் அச்சத்தைப் போக்கி இருக்கிறது.

இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

               "டெல்டா கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் நடைபெற வேண்டியது இருக்கிறது. மழை 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை சற்று ஓய்ந்து இருந்தால் நடவுப் பணிகள் முடிவையும். தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் டி.ஏ.பி. உரம் விவசாயிகள் கேட்கும் அளவுக்குத் தாராளமாகக் கிடைக்க வில்லை.டி.ஏ.பி. உரம் தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் அச்சம் உள்ளது.வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம் ஏரியின் நீர் மட்டும் திடீரென உயரவும், உடனேயே அதிக அளவில் உபரிநீரைத் திறந்து விடும் நிலையும் ஏற்பட்டால் டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு சொல்லும் தரமன்று.

        எனவே வீராணம் ஏரி நீர் மட்டத்தை 44 அடிக்கு மேல் உயர்த்தாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.வீராணம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றார். 

கடலூரில் 77 மி.மீ                 

              வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கி விட்டதால், கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. செவ்வாய்க்கிழமையும் பலத்த மழை கொட்டியது.

செவ்வாய்க்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு: 

              கடலூர் 77, பரங்கிப்பேட்டை 29, ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர், சேத்தியாத்தோப்பு 25, காட்டுமன்னார்கோவில் 11, தொழுதூர் 18, விருத்தாசலம் 15, பண்ருட்டி 7.5, கொத்தவாச்சேரி 21, கீழ்ச்செறுவாய் 20, அண்ணாமலை நகர் 18, புவனகிரி 21, லால்பேட்டை, மேமாத்தூர் 10, வேப்பூர் 12, குப்பநத்தம் 23, லக்கூர் 14, பெலாந்துரை 22.










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior