உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

போலி பாஸ்போர்ட்டுகளால் பாழாகும் இளைஞர்கள்


             திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களில் பலர் லட்சங்களைச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.  ஆனால், நம்நாட்டிலிருந்து சென்ற பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். இவர்களில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.  பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரும் கடல் கடந்து செல்வதைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. 

               ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் புற்றீசல்போல நகை, சொத்துகளை அடமானம் வைத்துச் செல்வது இன்றும் கிராமங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது.  மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழர்களாலேயே தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகவே வாழும் நிலை உள்ளது.   இதுஒருபுறமிருக்க, வெளிநாட்டு மோகத்தால் முறைகேடுகளில் ஈடுபட்டு போலீஸôரிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.  வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்காது. என்றாலும், வெளிநாட்டு மோகத்தால் தவறான வழியைப் பின்பற்றும் நிலைக்கு கிராமப்புற இளைஞர்கள் பலர் ஆளாகின்றனர்.  இவர்களிடம் ஆசை காட்டி சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்வதற்கு மூளைச் சலவை செய்யும் இடைத்தரகர்கள் என்ற டிராவல்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகிவிட்டன.  

                டிராவல்ஸ் ஏஜென்டுகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஏமாற்றமடைகின்றனர்.  ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறும் டிராவல்ஸ் ஏஜென்டுகள் மற்றொருவரின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைக் கிழித்துவிட்டு, அப்பாவி மக்களின் புகைப்படத்தை ஒட்டி, பாஸ்போர்ட்டாக கொடுக்கின்றனர். வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பித்து சில தில்லுமுல்லுகளைச் செய்து பணம் வாங்கியவர்கள் பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துவிடுகின்றனர்.  இதை வாங்கிக் கொண்டு விமான நிலையத்துக்குச் செல்லும் நபர்கள் குடியேற்றப் பிரிவு காவலர்களின் சோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்.  

                கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 51 பேர் சிக்கினர். கடந்த ஆண்டில் 70 பேர் கைதாகினர். நிகழாண்டில் ஏப்ரல் வரை 25 பேர் பிடிபட்டுள்ளனர். இதேபோல, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் ஏராளம்.  போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்குவோருக்குக் குறைந்தது இரண்டாண்டுகள்  தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் சம்பாதிக்க நினைத்த அளவுக்கு பணத்தை நீதிமன்றத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது.  டிராவல்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் பெருகிய அளவுக்கு அதை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்டங்களோ அல்லது விதிமுறைகளோ இல்லை. இந்த மோசடியில் ஒரு கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்ணப்பம் செய்வதிலிருந்து, இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், காவல் துறையின் சரிபார்த்தல் பணியும் ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணம்.    விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தகவல் அனுப்பப்படும்.  காவல் துறையினர் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும், அந்த நபரின் முழு விவரங்களையும் சேகரித்து, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே விதிமுறை.  ஆனால், பல காவலர்கள் விண்ணப்பதாரரின் வீட்டைத் தேடிச் செல்வதில்லை. 

              காவலர்கள் வீடு தேடி வருவதற்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே காவல் நிலையத்தை தேடிச் செல்கின்றனர். இவர்களிடம் சில "நூறுகளைப் பெறும்' காவலர்களும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விசாரணையை முடித்து விடுகின்றனர்.  விண்ணப்பதாரர்களைப் பற்றிய முழுமையான விசாரணை இல்லாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டு விடுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் தவறோ அல்லது முறைகேடோ செய்திருந்தால்கூட அது மறைக்கப்பட்டு விடுகிறது. எப்படி இருப்பினும் விதிமுறைக்கு மாறாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு போலீஸôரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.  பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தினால் இதுபோன்ற முறைகேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

இப்படியொரு சாதனை இந்தியாவுக்கு வேண்டாம்

 
            சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மனித உயிரிழப்புகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற சாதனை இந்தியாவுக்கு வேண்டாம் என்பதை மக்களும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.     
 
                உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாலோ என்னவோ இந்தியாவில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரிய மதிப்பிருப்பதில்லை.   இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதுதான் மிகவும் வேதனையானது. சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை சீனா முதலிடத்தில் இருந்தது.  ஆனால் சீன அரசு மேற்கொண்ட கடும் முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை காட்டிலும் பெருமளவு குறைந்து உள்ளது.  
 
               சாலை விபத்துகளைப் பொறுத்தவரை சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  உலக நாடுகளில் ஏற்படும் மொத்த சாலை விபத்துகளில் 10 சத அளவு  இந்தியாவில் ஏற்படுகிறது.   இங்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சாலை விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழக்கின்றனர்.  ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் உலகில் உள்ள மொத்த வாகனங்களில் 1 சதம் மட்டுமே இந்தியாவில் உள்ளன.  இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சாலையில் பயணிக்கும் 1000 வாகனங்களில் 35 வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. ஆனால், உலக சராசரியாக 1000- க்கு 4 முதல் 10 வாகனங்கள் மட்டுமே விபத்தில் சிக்குகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக  ஒவ்வோராண்டும் சாலை விபத்துகளில் சிக்கி சுமார் 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  
 
               ஆனால் சீனா மற்றும் அமெரிக்காவில் கடந்த ஆண்டுகளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் 10 சத அளவு குறைந்து வருகிறது.  இங்கிலாந்து, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் 52 சத வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சாலை விபத்துகள் குறைந்து வருவதற்கு அந்த நாட்டில் உள்ள தரமான சாலைகளே முக்கிய காரணம். கடந்த 1930-ம் ஆண்டிலேயே அறிவியல் ரீதியான சாலைகளை இந்த நாடுகள் அமைத்துள்ளன என்று ஐநாவின் சாலைப் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது. சாலைவிபத்துகளில் உயிரிழப்பவர்களின் 70 சதம் பேரின் குடும்பங்கள் வருமானத்திற்கு வழியின்றி பரிதவித்து வருகின்றன. விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலையைச் சீரழித்துவிடுகின்றன.  அதிகரித்துவரும் விபத்துகளைக் குறைக்கவும் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆட்சியாளர்களுக்கு இல்லை.  சாலை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து நமது உயிரையும் சாலையில் பயணிக்கும் மற்ற அப்பாவி மக்களின் உயிரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மக்களுக்கும் இல்லை. இந்த நிலை மாற வேண்டுமெனில், அரசும், அரசு அதிகாரிகளும் சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து உண்மையான அக்கறையோடு செயல்படத் தொடங்க வேண்டும்.  அரசு சாலைப் பாதுகாப்பிற்கான விதிமுறைகளையும் சட்டங்களையும் நெறிப்படுத்தி சட்டத்தை மீறுவோருக்குக் கடுமையான தண்டனைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.    
 
               அரசு அதிகாரிகள் தங்கள் சுயநல எண்ணங்களை ஒதுக்கிவிட்டு அரசு இயற்றும் சட்டங்களையும் நெறிமுறைகளையும் எந்தத் தொய்வும் இன்றி அமல்படுத்த வேண்டும்.மக்களும் சாலைப் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள பங்கினை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை முழுமையாக உணர்ந்து போதிய கவனம் செலுத்தி தங்கள் நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டிய சீனாவைப் போன்று இந்திய அரசும் சாலை விபத்துகளைக் குறைக்க உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில் உலகிலேயே முதலிடம் என்ற சாதனை நமக்கு வேண்டாம்.  இதனை இந்தியர்கள் என்ற முறையில் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.

Read more »

வணிகர் தினம்: கடைகள் அடைப்பு

 கடலூர்:

             வணிகர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை கடலூரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தினமாகக் கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி கடலூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. நகைக் கடைகளில் 50 சதவீதம் திறந்து இருந்தன. ஹோட்டல்கள் வழக்கம்போல் திறந்து இருந்தன. காய்கறிக் கடைகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள் திறந்து இருந்தன. வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடந்த வணிகர்கள் மாநாட்டுக்கு, கடலூர் மாவட்டத்தில் இருந்து 1000 வியாபாரிகள் சென்றதாக, மாவட்ட தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் டி.சண்முகம் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior