உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

மூட்டை மூட்டையாக குவியும் வி.ஏ.ஓ., விண்ணப்பங்கள் சிறப்பு பணி மூலம் "பட்டுவாடா"





           தமிழகத்தில், 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு, மூட்டை மூட்டையாக விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. அவற்றை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வசதியாக, தபால் துறை சிறப்பு பணியை மேற்கொண்டுள்ளது. 

            தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டி.என்.பி. எஸ்.சி.,), 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இதுவரை 8.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதுமிருந்து சென்னை கிரீம்ஸ் சாலை தபால் நிலையத்தில், விண்ணப்பங்கள் மூட்டை மூட்டையாக குவிந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு டெலிவரி செய்யும் வகையில், தபால் நிலையங்களில் சிறப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுமுறை நாளான நேற்று, விரைவு தபால் மூலம் வந்து சேர்ந்த விண்ணப்பங்களை பட்டுவாடா செய்வதற்காக, சிறப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடுதலாக பயன்படுத்தப்பட்டனர். 

இதுகுறித்து சென்னை மத்திய கோட்டத்தின் முதல்நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: 

              இவற்றை வினியோகம் செய்ய தபால் துறையில் சிறப்புப் பணி இன்று (நேற்று) முதல் துவக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஏழாயிரத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்., அலுவலகத்தில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் வந்து சேர, 20ம் தேதி இறுதிநாள் என்பதால், அதுவரை சிறப்புப் பணியை மேற்கொள்ள உள்ளோம். வந்து சேரும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படும்.  இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

Read more »

"தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர் முத்தையவேள்"



சிதம்பரம்:
 
           தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர் ராஜா சர் முத்தையா செட்டியார் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் புகழாராம் சூட்டினார்.
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில், ராஜா சர் முத்தையா செட்டியாரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்தார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி முன்னிலை வகித்து நினைவுப் பரிசுகள் வழங்கினார்.விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் நினைவுப் பேருரையாற்றினார். 
 
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் பேசியது: 
 
           அரசர் முத்தையவேள், அண்ணாமலையாரின் மகன் மட்டுமல்ல. அவர் தமிழ்மகன் ஆவார். மகன் தந்தைக்காற்றும் உதவிகளை எல்லாம் அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கிறார். முத்தையவேள் தமிழ் மொழியை மனம், மொழி, மெய்யால் போற்றியவர் என்றார்.விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. துணைவேந்தர் ம.ராசேந்திரன் பெயரில் ரூ.50ஆயிரத்திற்கு அறக்கட்டளை ஒன்றை இணைவேந்தர் எம்ஏஎம் ராமசாமி நிறுவியுள்ளதாக துணைவேந்தர் எம்.ராமநாதன் விழாவில் தெரிவித்தார்.
 
           பொறியியல்புல முதல்வர் பி.பழனியப்பன் வரவேற்றார். இந்திய மொழிப்புல முதல்வர் பழ.முத்துவீரப்பன் நன்றி கூறினார். விழாவில் தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் பல்கலைக்கழக இசைக்கல்லூரி சார்பில் ராஜா முத்தமிழ் மன்ற 24-ம் ஆண்டு இசை விழா நடைபெற்றது. பல்கலைக்கழக இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சியும், ஸ்ரீரங்கம் கலைமாமணி ரேவதிமுத்துசாமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Read more »

பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் கடலூர் மக்கள்


சனிக்கிழமை பெய்த மழையால் சகதியாக காட்சி அளிக்கும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் கடலூர் திருப்பாப்புலியூர் முத்தையா நகர் - எஸ்.பி.ஐ. காலனி இணைப்புச் சாலை 
 
கடலூர்:
 
          கடலூரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பழுதடைந்து கிடக்கும் நகராட்சி சாலைகளால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 
 
           கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கி, 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திட்டம் எப்போது நிறைவடையும் என்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை வெவ்வேறு காலங்களை, ஆருடம் போல் கணித்துக் கூறி வருகின்றன. ஆனால், யாராலும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது.நகராட்சி சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, தற்போது மழைநீர் தேங்கும் குளங்களாகவும், வாய்க்கால்களாகவும், குன்றுகளாகவும், பாதாளக் கிடங்குகளாகவும் காட்சி அளிக்கின்றன. 
 
           பாதிக்கப்பட்ட முக்கிய நெடுஞ்சாலைகளான நெல்லிக்குப்பம் சாலை, வண்டிப்பாளையம் சாலை ஆகியவை மிகுந்த போராட்டத்துக்கு இடையே அண்மையில் சீரமைக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இச்சாலைகள் புதிதாக போடப்பட்டதால், ஒலித்த குரல்கள் கொஞ்சம் குறையத் தொடங்கி உள்ளன. ஆனாலும் நகராட்சி சாலைகளின் நிலை, அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்வதால், இந்த பரிதாபநிலை மேலும் மோசமாகி இருக்கிறது. கடலூர் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரி செலுத்தும் 1.5 லட்சம் மக்களுக்கு, பாதுகாப்பான சாலைகள்கூட இல்லை என்ற பரிதாப நிலை. வரிப்பணத்தின் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்துக்கே போய்விடுகிறது. மக்கள் பணிக்கு பணத்துக்கு எங்கோபோவது என்ற நிலையில்தான் கடலூர் நகராட்சி உள்ளது என்கிறார்கள், நகராட்சி உறுப்பினர்கள்.
 
              பாதாள சாக்கடைத் திட்டத்தால் பழுதடையும் நெடுஞ்சாலைகளை சரி செய்ய திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் நகராட்சி சாலைகளை சீரமைக்க நகராட்சிதான் பணம் ஒதுக்க வேண்டும் என்ற சங்கடம், கடலூர் நகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் பரிதாபமாக காட்சி அளிக்கின்றனவே என்று அங்கலாய்க்கும் மக்களிடம், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே நிதி இல்லை, மின் கட்டணம் செலுத்த முடியவில்லை, சாலை வசதிக்கு எங்கே போவது என்கிறார் நகராட்சி உறுப்பினர் சர்தார். 
 
நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது 
 
               நகராட்சி சாலைகளை சீரமைக்க, பாதாள சாக்கடைத் திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. நகராட்சி நிதியில் இருந்துதான் செய்ய வேண்டும். சாலைகளைச் சீரமைக்க மாநில அரசிடம் ரூ. 12 கோடி கடன் கேட்டு இருக்கிறோம். ரூ. 5 கோடியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 1.5 கோடி கேட்டு இருக்கிறேன். அதுவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். வடகிழக்கு பருவ மழை தொடங்குமுன் நகராட்சி சாலைகளை சரி செய்ய முயன்று வருகிறேன் என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior