உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 20, 2010

புதர் மண்டிக் கிடக்கும் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கம்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில், புதர் மண்டிக்கிடக்கும் நடைப்பயிற்சி செல்வோருக்கான நடைபாதை. (உள்படம்) உடைந்து தொங்கும் சூரிய விளக்குகளில் ஒன்று.
கடலூர்:
                நடைப்பயிற்சி செய்வோர் பாதுகாப்பாக செல்ல முடியாத அளவுக்கு, கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் நடைபாதைகள் புதர் மண்டிக் கிடக்கின்றன.
                 கடலூர் நகரின் மையப் பகுதியில் 66 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருப்பது அண்ணா விளையாட்டு அரங்கம். 1970-ல் இந்த விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டது. இதில் டென்னிஸ், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், இறகுப்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டுகளுக்கான உள் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வசதிகள் உள்ளன.
                நடைப்பயிற்சி செய்வோருக்கு வசதியாக பல லட்சம் செலவில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளன. தினசரி நடைப்பயிற்சி செய்வோர் உள்பட சுமார் 1,000 பேர் இந்த விளையாட்டு அரங்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். நடைப்பயிற்சி செய்வோர் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபாதைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
               ஆனால், நடைபாதைகள் ஓரம் முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது. புதருக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக, நடைபாதைகளைப் பயன்படுத்துவோர் தெரிவிக்கிறார்கள். நடைபாதைகளைச் சுற்றிலும் 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்து, 2வது முறையாக அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின் விளக்குகளும் உடைந்து சேதம் அடைந்து கிடக்கின்றன.மைதானத்தில் பல்வேறு விளையாட்டுகளை, இரவு நேரத்தில் நடத்துவதற்கு வசதியாக, உயர் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
                  ஆனால் அவற்றில் விளக்குகள் எதுவும் இல்லை.முதல் கட்டமாக விளையாட்டு அரங்கத்தில் நடைப்பயிற்சி செய்வோருக்கான நடைபாதைகளையாவது, புதர்களை அகற்றி சுத்தம் செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். விளையாட்டு மைதானத்துக்கு மின் விளக்குகளுக்கான கட்டணச் செலவினத்தை மாவட்ட விளையாட்டு அலுவலக நிதியைக் கொண்டு சமாளிக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் கூறியது
                    பராமரிப்புப் பணிகளுக்கு போதிய நிதி இல்லை. விளையாட்டு அரங்கத்தில் 2 ஊழியர்கள்தான் பணியில் உள்ளனர். அவர்களும் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அவர்களைக் கொண்டு முடிந்தவரை சுத்தம் செய்கிறோம். மேலும் என்.எஸ்.எஸ். மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறோம். சூரிய சக்தி விளக்குகளை எல்லாம் சமூக விரோதிகள் சேதப்படுத்தி விட்டனர். 
                   பகல் நேரங்களில் மாணவர்கள் பலர் கூட்டமாக வந்து, முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். மைதானத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மனமகிழ் மன்றத்தில் இருந்து மது பாட்டில்கள் வீசி எறியப்படுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.இரவு நேரங்களில் மின்விளக்கு ஒளியில் போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக, விளையாட்டு மைதானங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் கோபுரங்களில் உள்ள விளக்குகளை, பத்திரமாகக் கழற்றி எடுத்து வைத்து இருக்கிறோம். போட்டிகள் நடத்தும்போது பொருத்தி பயன்படுத்துகிறோம். மைதானப் பராமரிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தால் மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும்' என்றார்.

Read more »

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

                மாவட்ட துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர், துணை காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கத்தின் துணை பதிவாளர் உள்ளிட்ட மொத்த 61 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த மே 2-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.

                  5 மாதங்கள் ஆகியும் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், குரூப்-1 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2011 ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

Read more »

மழைக் காலம்; கடலூர் மக்களுக்கு சோதனைக் காலம்

கடலூர்:

                இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை காலம், கடலூர் மக்களுக்குப் பெரும் சோதனைக் காலமாக அமைந்து உள்ளது.

                  கடலூர் மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக, பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதால், மழைக் காலம் சோதனைக் காலமாக மாறியிருக்கிறது. கடலூர் நகரில் முக்கிய நகராட்சித் தெருக்கள், பிரதான மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் சிதைந்துக் கிடக்கின்றன.

                பாதாளச் சாக்கடைத் திட்டத்தைப் பொறுத்தவரை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்னாக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் அறிக்கைகள், செய்தித்தாள்களின் கண்டனங்கள் அனைத்துக்கும் இங்கு எந்த மரியாதையும் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.பாதாளச் சாக்கடைத் திட்ட பள்ளங்களால் நிகழ்ந்த விபத்துகளில், இதுவரை 8 பேர் இறந்துள்ளனர்.

                300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இரு சக்கர வாகனங்களும் 4 சக்கர வாகனங்களும் பெருத்த சேதங்களுக்கு உள்ளாகின்றன. நகரில் உள்ள 45 வார்டுகளில் 32 வார்டுகளில் மட்டுமே பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. திட்டம் நிறைவேற்றப்பட்டதும், டெபாசிட் தொகையாக சில ஆயிரங்கள் செலுத்த வேண்டும், மாதாமாதம் ஒரு தொகையை சாக்கடை வரியாகவும் செலுத்த வேண்டும். 

                   இத்தகைய நிலையைப் பார்க்கும் ஏனைய 13 வார்டு மக்களும், எங்களுக்கு இந்தத் திட்டம் வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். சிதைந்துக் கிடக்கும் சாலைகள், இருண்டுக் கிடக்கும் தெருக்களைக் கண்டு பயந்து, ஆட்டோக்கள், வாடகைக் கார்கள் பல நகர்களுக்கு வருவதே இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவர்களை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவரும் பெற்றோரும் தினம் தினம் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior