உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 04, 2011

கடலூரில் சுழல்காற்று, கடல் கொந்தளிப்பு: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை


பலத்த கடல் கொந்தளிப்பு காரணமாக, கடலூர் உப்பனாற்றில் முடங்கிக் கிடக்கும் படகுகள்.
 
கடலூர்:

            கடலூரில் வியாழக்கிழமை வழக்கத்துக்கு மாறாக பலத்த சுழல்காற்று வீசியது. பலத்த கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்கள் 2 நாள்களாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.  

             இலங்கை அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில், 2 நாள்களாக, பலத்த சுழல்காற்று வீசிக் கொண்டு இருக்கிறது. சாலைகளில் செல்வோர் மீது மணலை வாரிக் கொட்டும் அளவுக்கு காற்று பலமாக உள்ளது.  இரவு மற்றும் காலை நேரங்களில் பனி சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் நாள் முழுவதும், வடகிழக்கு பருவமழை காலம் போல் வானம், மேக மூட்டத்துடன் காணப் பட்டது.  

           வழக்கமாக கடலூரில் 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். ஆனால் கடந்த 2 நாள்களாக காற்றின் வேகம் 32 கி.மீ. முதல் 35 கி.மீ. வரை இருப்பதாக கடலூர் துறைமுக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.  வங்கக் கடலில் வழக்கத்துக்கு மாறாக கொந்தளிப்பு அதிகம் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் வியாழக்கிழமை 2-வது நாளாக கடலூர் மாவட்ட மீனவர்கள், மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை என்று மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார். 

              கடலில் நீரோட்டம் மாறியிருந்ததாகவும், பலத்த காற்று காரணமாக கடலில் படகுகளை நிலை நிறுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  இதன் காரணமாக அங்காடிகளில் மீன் வரத்து குறைந்தும், விலை அபரிமிதமாக உயர்ந்தும் காணப்பட்டது. கடலூரில் தற்போது அதிகமாகப் பிடிபடும் சங்கரா மீன் விலை, மற்ற நாள்களில் கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை இருக்கும். ஆனால் வியாழக்கிழமை கிலோ ரூ. 160 ஆக உயர்ந்தது.  

வானிலை மாற்றம் குறித்து விவசாயிகள் கூறியது 

                 பலத்த காற்று காரணமாக முதிர்ந்த நெற்பயிர்கள் சாயத் தொடங்கி விட்டன. காற்றில் ஈரப்பதம் குறைந்து வருவதால், மணிலா போன்ற பயிர்கள் எளிதில் காயத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தனர்.

Read more »

கடலூரில் கேஸ் விநியோக குளறுபடி: நுகர்வோர் அவதி




கேஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து சிலிண்டர் விநியோகிப்பதைவிட, ஏஜென்ஸிகளுக்கு நுகர்வோர் நேராகச் சென்று பணம் செலுத்தி, அவர்களாகவே சேமிப்புக்கிடங்கிலிருந்து பெற்றுகொள்கிரர்கள் 
 
கடலூர்:
 
              சமையல் கேஸ் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, கடலூர் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  
 
              கடலூரில் உள்ள சமையல் கேஸ் விநியோக ஏஜென்ஸிகளில் சிலிண்டர் வழங்கப்பட்ட நாளில் இருந்து 21-வது நாள்தான் மறு சிலிண்டருக்குப் பதிவு செய்ய முடியும் என்கிறார்கள் அதற்காக கணினியில் மென்பொருளையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சிலிண்டர் வழங்கப்பட்ட மறுநாளே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்யலாம் என்று கேஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.  

              கடலூரில் எந்த ஏஜென்ஸியும் 21-வது நாளில் பதிவு செய்வதில்லை. பதிவு செய்ய தொலைபேசியில் தொடர்பு கொண்டால், தொடர்ந்து 3 நாள்கள் கூட என்கேஜ்டு டோன்தான் கிடைக்கிறது. பலர் தொலைபேசி ரிசீவரை எடுத்து வைத்து விடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. 21-வது நாளில் பதிவு செய்தாலும் மறுநாளே சிலிண்டர் வழங்குவது இல்லை. பதிவு செய்து 10 நாள் கழித்தே பல ஏஜென்ஸிகள் சிலிண்டர் வழங்குகின்றன. அவ்வாறு காலம் கடந்து வழங்கப்பட்ட தேதியில் இருந்து 21 நாள் கழித்துத்தான் மீண்டும் பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள்.  
 
             பல நேரங்களில் சிலிண்டர் வழங்கப்பட்ட தேதியும், பில் போடப்பட்ட தேதியும் ஒன்றாக இருப்பது இல்லை. குறிப்பிட்ட தேதியில் பில் போட்டு, அதற்கு 3 அல்லது 4 நாள்கள் கழித்து சிலிண்டர் விநியோகம் செய்கிறார்கள். மேலும் சிலிண்டர் கொண்டு வரும் ஊழியர்கள் ரூ. 15 முதல் ரூ. 25 வரை கூடுதலாகப் பணம் வசூலிக்கிறார்கள். மறுத்தால் அடுத்த முறை சிலிண்டர் விநியோகம் மேலும் தாமதம் ஆகிறது.   தற்போதெல்லாம் கடலூரில் கேஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து சிலிண்டர் விநியோகிப்பதைவிட, ஏஜென்ஸிகளுக்கு நுகர்வோர் நேராகச் சென்று பணம் செலுத்தி, அவர்களாகவே சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று தங்கள் வாகனங்களில் சிலிண்டர்களை எடுத்துவரும் ஆபத்தான நிலை அதிகரித்து வருகிறது.  
 
                  பல ஊர்களில் கேஸ் ஏஜென்ஸிகள் 3 ஆண்டுகளுக்கு மாதாந்திர டோக்கன்களை வழங்கத் தொடங்கி உள்ளன. கடலூரில் சில விநியோகஸ்தர்கள், இன்னும் இந்த டோக்கன்களை வழங்கவில்லை. ஆனால் ரேஷன் கார்டை காண்பித்து, டோக்கன் வாங்கினால்தான் சிலிண்டருக்குப் பதிவு செய்ய முடியும் என்று தொலைபேசியில் மிரட்டுகிறார்கள். ஆனால் 3 ஆண்டுகளுக்குத் தேவையான டோக்கன்களை வழங்கினால் அவற்றை எப்படி பாதுகாப்பது என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன்.  
 
               கடலூரில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள், ஆம்னி வேன்கள் கேஸ் மூலம் இயக்கப் படுகின்றன. கடலூரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் வசதி இன்னமும் வரவில்லை. அப்படி இருக்க ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு கேஸ் எங்கிருந்து கிடைக்கிறது. அது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் சமைல் கேஸ்தான் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் நிஜாமுதீன்.  மேலும் டீக்கடைகள், ஹோட்டல்களில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற புகார் நீண்டகாலமாக உள்ளது.  
 
             குறைகளை கேஸ் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி எண்களை தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த எண்களில் தொடர்பு கொண்டால், பெரும்பாலும் யாரும் பதில் சொல்வது இல்லை என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள். வட்ட வாரியாக கேஸ் நுகர்வோர் கூட்டங்களை, விநியோகத்துறை அதிகாரிகள் நடத்துகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு கேஸ் எஜென்ஸிகளின் பிரதிநிதிகளோ, கேஸ் நிறுவன அதிகாரிகளோ வருவதில்லை என்று நுகர்வோர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இக்கூட்டங்களில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு தீர்வே கிடைப்பது இல்லை. 
 
                 கடலூரில் மகந்தா கேஸ் ஏஜென்ஸி அலுவலகத்துக்கு (மாடி) செல்லும் வழி ஸ்பைரல் படிக்கட்டுகளாக உள்ளன. மிகவும் குறுகலான இந்தப் படிக்கட்டுகளில் ஒருவர் மேலே ஏறிச் சென்றால், அதே நேரத்தில் மற்றொருவர் கீழே இறங்கி வர வாய்ப்பு இல்லை.  சில கேஸ் ஏஜென்ஸிகளில், அவற்றின் ஊழியர்களால் நுகர்வோர் அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த ஏஜென்ஸிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாததால், நுகர்வோர் அமரக்கூட வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம். 

Read more »

கல்வித்துறை விதிகளை மீறும் கடலூர் பள்ளிகள்?

கடலூர்:

                  கடலூர் மெட்ரிக் பள்ளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கல்வித்துறை விதிகளை மீறுவதாக உள்ளது.  

              மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை மே மாதத்தில்தான் நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னரே விண்ணப்பப் படிவங்களை விநியோகிப்பதும், பெற்றோரை நேர்காணலுக்கு அழைப்பதும் கூடாது என்று, 2009-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டம் தெளிவாகத் தெரிவிக்கிறது.  ஆனால் கடலூரில் சில மெட்ரிக் பள்ளிகள் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விண்ணப்பப் படிவங்களை இப்போதே விநியோகித்து வருகின்றன.

             விண்ணப்பப் படிவங்களை வழங்கும்போதே, பெற்றோரை நேர்காணலுக்கு அழைத்து, அவர்கள் பட்டம் படித்தவர்களாகவும், பள்ளி முதல்வரின் கேள்விகளுக்கு மிகவும் பௌய்வியமாக பதில் அளிப்பவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள், வழங்கப்படுகின்றன.  பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணப்பப் படிவங்கள் வழங்குவது, கடைசி தேதி என்றும் அறிவித்து உள்ளன. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும் என்றும் சில மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்து உள்னன.  

             சில பள்ளிகள் இப்போதே மாணவர்கள் சேர்க்கையை முடித்துக் கொள்கின்றன. பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்றிதழ்களும் கேட்கப்படக் கூடாது என்றும், அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டம் தெரிவிக்கிறது. ஜாதிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு இப்பள்ளிகள் ஒன்றும், எல்.கே.ஜி. யிலேயே இட ஒதுக்கீட்டைக் கடைபிடிக்கப் போவதில்லை.   தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு, இந்தக் கட்டணக் கல்விக் கூடங்கள், சலுகைகளை வாரி வழங்கப்போவதும் இல்லை.  கல்வி உதவித்தொகைகளை பெற்றுத்தரப் போவதும் இல்லை. அப்படி இருக்க இந்தக் கல்வி நிலையங்கள், ஜாதிச் சான்றிதழைக் கேட்டு பெற்றோரை ஏன் துன்புறுத்த வேண்டும் என்று தெரியவில்லை என்கிறார்கள் பெற்றோர்.   மேலும் பிறந்த தேதிக்கான சான்றிதழ்களையும், மாணவர்களைச் சேர்க்கும் போது வழங்கக் தேவையில்லை என்றும் கல்வி உரிமைச் சட்டம் தெரிவிக்கிறது.

            பெற்றோர் தாங்களாக எழுதிக் கொடுத்தால் போதும் என்றும் சட்டம் கூறுகிறது. சட்டம் இவ்வாறு இருக்க, ஜாதிச் சான்றிதழையும், பிறப்புச் சான்றிதழையும் கேட்டு பெற்றோரை மிரட்டி வருகின்றன கடலூர் மெட்ரிக் கட்டணக் கல்விக் கூடங்கள்.÷இதனால் பெற்றோர் தாலுகா அலுவலகங்களுக்கும் நகராட்சி உள்ளிட்ட ஏனைய அரசு அலுவலங்களுக்கும் நடையாய் நடக்கும் நிலைக்கும், படாதபாடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.  கொஞ்சம் கல்வி நன்றாக இருக்கிறதே என்று நினைத்து இப்பள்ளிகளை நாடினால், ஏதேனும் ஒன்றைக் கேட்டு பெற்றோரை அலைக்கழிக்க வேண்டும்.  தாங்கள் அரசுக் கல்விக் கூடங்களைவிட உயர்ந்தவர்கள் என்று, காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோளாக இருப்பதாகப் பெற்றோர் குமுறுகிறார்கள். 

               இது குறித்துக் கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   இப்பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்துக்கு முரணான, மெட்ரிக் பள்ளிகளின் இச்செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.  சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.  

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

               இத்தகைய புகார்கள் கல்வித் துறைக்கு வந்துள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior