உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைந்தார் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி



            ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் அவதரித்து உலகம் முழுக்க தன்னுடைய அருள் வெள்ளத்தைப் பாய்ச்சிய ஆன்மிகச் செல்வர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு முக்தி அடைந்தார். 

            அவருக்கு வயது 86.  வெறும் உபதேசங்கள் மட்டும் போதாது என்று உணர்ந்து ஏழைகள் பால் கருணையும் இரக்கமும் கொண்டு கல்வி நிலையங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி இலவசமாகவே எல்லாவற்றையும் பெற வழிகாட்டிய அருள் செல்வரின் மறைவு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.  நாட்டு மக்களின் நலனுக்காகவே தன் வழியில் உழைத்த பாபா, மார்ச் 28 முதல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்தினார்.  
 
மருத்துவ அறிக்கை: 
 
             பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா இன்று நம்மிடையே இல்லை. இதயம் செயலிழந்ததால் காலை 7.40 மணிக்கு அவர் தன்னுடைய பூத உடலை நீத்தார். புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் அரங்கில் அவருடைய பூத உடல் பக்தர்கள் தரிசிக்க வசதியாக ஞாயிறு மாலை 6 மணி முதல் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் வைக்கப்பட்டிருக்கும்' என்று ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிலையத்தின் இயக்குநரான ஏ.என். சஃபாயா அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
 
 கீதா ரெட்டி:  
 
             ஆந்திரத் தொழில்துறை அமைச்சரும் சாய் பக்தருமான ஜே.கீதா ரெட்டி, ஒருங்கிணைப்புப் பணிக்காக பிரசாந்தி நிலையத்தில் முகாமிட்டிருக்கிறார். பாபாவின் பூத உடல் வரும் புதன்கிழமை காலை குல்வந்த் அரங்கிலேயே அடக்கம் செய்யப்படும் என்றும் நேரம் பிறகு தீர்மானிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். 
 
 4 நாள் அரசு துக்கம்: 
 
              ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு சுமார் 170 நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் இருப்பதால் அவர்கள் கடல் கடந்து வந்து பாபாவைத் தரிசிக்க வசதியாக 4 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  உடல் அடக்கம் நடைபெறும் புதன்கிழமை, அனந்தப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ சத்ய சாய் பாபா ஆன்மிகப் பேரரசை நிறுவியவர் என்பதால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவது என்று ஆந்திர அரசு முடிவு செய்திருக்கிறது.  
 
தலைவர்கள் வருகை: 
 
            பாபாவின் மறைவுச் செய்தி கேட்டவுடன் மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி ஆகியோர் புட்டபர்த்திக்கு விரைந்தனர். பாபாவின்பால் பக்தி கொண்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள் புட்டபர்த்தி நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.  புட்டபர்த்தியில் உள்ள சாய் அறக்கட்டளைக்குச் சொந்தமான தனி விமான நிலையம் பெரிய விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வந்து இறங்க வசதியாக தயார்படுத்தப்பட்டுவிட்டது.  மாநிலப் போலீசா ரும் அனந்தப்பூர் மாவட்டம் முழுக்க காவலையும் கண்காணிப்பையும் பலப்படுத்தியிருக்கின்றனர். 
 
            பிரமுகர்களும் பக்தர்களும் பாதுகாப்பாக வந்து பாபாவைத் தரிசிக்கவும் நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்படுகின்றன.  பக்தர்களுக்காக போக்குவரத்து, உணவு, குடிநீர், முதலுதவிச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை சாய் சமாஜங்களே செய்துள்ளன.  சாய்பாபா தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய பக்தர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒழுங்கு, கட்டுப்பாடு, உணர்ச்சிகளுக்கு ஆள்படாமை, பிறருக்கு உதவுதல், அமைதி காத்தல் ஆகியவற்றை அவருடைய பக்தர்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதால் எத்தனை ஆயிரம்பேர் வந்தாலும் சமாளித்துவிட முடியும் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையுடன் இருக்கிறது. 
 
 1926-ல் அவதாரம்: 
 
              புட்டபர்த்தியில் 1926-ம் ஆண்டு ஸ்ரீ சாய் பாபா அவதாரம் செய்தார். அப்போது அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சத்ய நாராயண ராஜு. சத்யம், சிவம், சுந்தரம் என்ற தத்துவங்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த பாபா தன்னுடைய பக்தர்களுக்காக காற்றிலிருந்து விபூதி வரவழைப்பது, லிங்கங்களை வரவழைத்துத் தருவது போன்ற சித்து வேலைகளைச் செய்வார். அதைத்தான் அவருடைய விமர்சகர்கள் மிகப்பெரிய குறையாகச் சொன்னார்கள். ஆனால் பாபாவின் அருளாசியால் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் மீண்டதால் அவரை அவதார புருஷனாகவே மக்கள் பார்த்தனர். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பாரதவாசிகள் முதல் படித்த வெளிநாட்டவர் வரை அவருடைய சீட கோடிகளின் எண்ணிக்கையும் தரமும் அனேகம்.  பாபா மறையவில்லை. கோடிக்கணக்கான சீடர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார். அடுத்து பிரேம சாயாக கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அவதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். சாய் பக்தர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள் அவரைத் தரிசித்து ஆசி பெற.

Read more »

கடலூரில் கட்டுமானப் பொருள்கள் விலை கடும் உயர்வு


கடலூர்:

              கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, கீழ்நிலையில் இருப்போர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை, நிராசையாக, கனவாகவே கலைந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது.  

                   கடலூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு லாரி செங்கல் (4 ஆயிரம் செங்கல்) விலை லாரி வாடகை, ஆள் கூலி உள்பட ரூ. 8,500 ஆக இருந்தது. இது ஜனவரி மாதத்தில் ரூ. 26 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போது செங்கல் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. ஒரு லாரி செங்கல் ரூ. 16 ஆயிரமாகக் குறைந்துள்ளது.  ஆற்று மணல் விலை கடலூரில், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லாரி (3 யூனிட்) ரூ. 2 ஆயிரமாக இருந்தது. பின்னர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஆறுகளில் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு லாரி மணல் ரூ. 6 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போதும் ரூ. 7 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.  

              பெண்ணை ஆற்றில் எங்கும் மணல் குவாரி இல்லை. இதனால் சேத்தியாத்தோப்பில் இருந்தும், பெண்ணாடத்தில் இருந்தும் கடலூருக்கு மணல் வருவதால், ஆற்று மணல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் மாட்டு வண்டி ரூ. 600 ஆக உள்ளது.  கருங்கல் ஜல்லி ஒரு லாரி (அதிகமாக பயன்படுத்தும் முக்கால் அங்குல ஜல்லி) 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 6,500 ஆக இருந்தது ரூ. 9,500 ஆக உயர்ந்து விட்டது. இரும்புக் கம்பி விலை கிலோ ரூ. 36 ஆக இருந்தது ரூ. 42 ஆக உயர்ந்து விட்டது. சிமென்ட் விலையும் மூட்டைக்கு ரூ. 25 அதிகரித்து, மூட்டை ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.  

           மின்சார கம்பிகள், மின் சாதனங்கள், தரை ஓடுகள் மற்றும் இதர கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள், கடந்த 10 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்து இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  கட்டுமான வேலைக்கு கொத்தனார், சித்தாள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் உருவாகி இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள், மேஸ்திரிகள் கூறுகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பு கொத்தனார் சம்பளம் ரூ. 350 ஆக இருந்தது தற்போது ரூ. 420 முதல் ரூ. 450 வரை உயர்ந்து உள்ளது. சித்தாள் கூலி ரூ. 200 ல் இருந்து ரூ. 300 ஆக உயர்ந்து விட்டது என்றும் தெரிவிக்கிறார்கள். 

                தரை ஓடு பதித்தல் போன்ற பணிகளுக்கு நாள் கூலி ரூ. 600 ஆக உயர்ந்து இருக்கிறது.  மேலும் கடந்த ஓராண்டில், வீட்டு நிலங்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. கடலூரில் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளில், வீட்டு நிலங்களில் விலை குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ. 250. நகர் புறங்களில் குறைந்த விலை சதுர அடிக்கு ரூ. 450. நெடுஞ்சாலை ஓரம் உள்ள நிலங்களின் குறைந்தபட்ச விலை சதுர அடிக்கு ரூ. 2,500.  கடலூரில் வீடுகள் கட்டுவதற்கான குறைந்தபட்ச செலவு சதுர அடிக்கு ரூ. 1,300. ஆனால் வங்கிகள் சதுர அடிக்கு ரூ. 1,000 என்று செலவை நிர்ணயம் செய்து, அதில் 80 சதவீதம் மட்டும் கடனாக வழங்குகின்றன. 

         இத் தொகையைக் கொண்டு நடுத்தர மக்களும், கீழ்நிலையில் இருக்கும் பலரும் வீடு கட்டுவது என்பது சாத்தியம் அற்றதாக மாறியிருக்கிறது.  கடலூரில் தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. தற்போதுதான் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.  

இதுகுறித்து கடலூர் மாவட்ட கட்டுமானப் பொறியாளர் சங்க துணைத் தலைவர் ராஜா கூறுகையில், 

            கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம், வீடுகள் கட்டும் பணிகளை பெரும்பாலும் முடக்கி விட்டன. தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடந்த கட்டுமானப் பணிகள் தற்போதுதான் தொடங்கி இருக்கின்றன. கட்டுமானப் பொருள்கள் விலை, ஆள் கூலி உயர்வு காரணமாக, பலர் வீடு கட்ட முன்வருவதில்லை. உயர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் மற்றும் பணக்காரர்கள்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது.  

           வங்கிகள் கடலூரில் கட்டுமானச் செலவு சதுர அடிக்கு ரூ. 1,000 எனக் கணக்கிட்டு, அதில் 80 சதவீதம் மட்டுமே கடன் வழங்குகிறது. இதனால் வங்கிக் கடனை மட்டும் நம்பி, வீடுகட்ட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. ஓராண்டுக்கு முன் ரூ. 10 லட்சத்தில் கட்டிய வீட்டை, தற்போது ரூ. 20 லட்சம் செலவிட்டால்தான் கட்ட முடியும். சொந்த வீடு என்பது நடுத்தர மக்களுக்கு கனவாகத்தான் உள்ளது என்றார் பொறியாளர் ராஜா.  

Read more »

கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் சரண்


 
கடலூர்:

           அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் சனிக்கிழமை மாலை சரண் அடைந்தார்  

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், முன்னதாக கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை அடைந்தவர் ஜான் டேவிட் (34).  சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு (17). 1996-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் நாவரசு, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அதே மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தவர் ஜான் டேவிட். 

            கரூரை சேர்ந்த மருத்துவத் தம்பதியர் டேவிட் மாரிமுத்து, எஸ்தர் லட்சுமி ஆகியோரின் மகன்.  6-12-1996 அன்று நாவரசுவை ராகிங் காரணமாக ஜான்டேவிட் கொலை செய்தார். பின்னர் நாவரசுவின் உடலை, ஜான் டேவிட் பல துண்டுகளாக வெட்டினார். தலையை ஒரு பையில் போட்டு, அண்ணாமலைப் பல்கலக்கழகம் அருகே உள்ள வாய்க்காலில் போட்டார். உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து சென்னைக்கு கொண்டு சென்றார். வழியில் உள்ள வாய்கால்களில் கை, கால்களை வீசி எறிந்தார். தலை, கால், கைகளற்ற உடலை, சென்னை நகர பஸ் ஒன்றில் வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். 

               இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ஜான் டேவிட்டுக்கு, கடலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 11-3-1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.  தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து புதன்கிழமை உத்தரவிட்டனர். 

                கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  அதைத் தொடர்ந்து ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைய வேண்டும் அல்லது அவரை கடலூர் போலீஸôர் கைது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையே ஜான் டேவிட், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் மத போதகராக இருப்பதாகவும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின.  ஜான் டேவிட்டை கைது செய்ய 4 தனிப் படைகளை அமைத்து இருப்பதாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் அறிவித்தார்.  

               தனி போலீஸ் படையினர் கரூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இந்த நிலையில் சனிக்கிழமை மாலை ஜான் டேவிட் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டுவரப்படுவதாக ஒரு தகவலும், ஜான்டேவிட் தானாக வந்து, கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாக மற்றொரு தகவலும் வெளியாயின.  மாலை 5 மணிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மத்திய சிறைச் சாலைக்கு விரைந்து வந்த பிறகே உண்மை தெரிந்தது.

            ஜான் டேவிட் மாலை 4.30 மணிக்கு, தனது தாயார் மற்றும் வழக்கறிஞருடன் வந்து கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்தார் என்பது பின்னரே தெரிய வந்தது.  போலீஸ் மற்றும் செய்தியாளர்கள் கண்ணிóல படாமல் சிறைச் சாலையில் சரண் அடைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  

எஸ்.பி. பேட்டி: 

ஜான் டேவிட் சரண் அடைந்தது குறித்து எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் கூறியது: 

              உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்து ஜான் டேவிட்டை கைது செய்ய திட்டமிட்டோம். அதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் திருச்சி, கரூர், சென்னை போன்ற இடங்களில் விசாரணை நடத்தினர்.  தீவிர விசாரணையில் ஜான் டேவிட் சென்னை வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில், ஜான் மாரிமுத்து என்ற பெயரில் வேலை பார்ப்பதாகத் தகவல் கிடைத்து. அந்த நிறுவனத்தை நெருங்கும் நிலையில், ஜான் டேவிட் புதுவைக்குச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது.  போலீஸ் வருவதற்குள் ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாகத் தகவல் வந்து விட்டது என்றார் எஸ்.பி. 

 ஜான் டேவிட்டின் வழக்கறிஞர் ஆறுமுக ராஜன் கூறுகையில்,

          உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்ததும், ஜான் டேவிடே சரண் அடைய முடிவு செய்தார். அவரது வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் விரைவில் செய்யப்படும் என்றார். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior