உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 26, 2011

கடலூரில் கோடை விடுமுறை குதூகலம்: மாணவர்களை மகிழ்விக்கும் அண்ணா விளையாட்டு அரங்கம்


கடலூர்:

            தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு விளையாட்டுகளில் கோடைகால சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

               பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மிகப் பெரும் அழுத்தத்தில் இருந்தும், பரபரப்பில் இருந்தும் இப்போது விடுபட்டு இருக்கிறார்கள். ஏனைய மாணவர்களுக்கும் கோடை விடுமுறை குதூகலத்தை கொண்டு வந்திருக்கிறது.  மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்துகிறது கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு மேம்பட்டு ஆணைய நிர்வாகம்.  

கோடை கால பயிற்சி முகாம்கள் குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் கூறியது:  

               அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கு கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடையில் மேலும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறையில், நிறைய நேரம் கிடைப்பதால் மாணவிகள் வந்து கலந்துகொள்ளலாம்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிதாக நீச்சல் கற்றுக் கொள்வோருக்கு, அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 15-ம் தேதிமுதல் நீச்சல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

               15 நாள்களுக்கு பயிற்சிக் கட்டணம் ரூ. 250.  மே 2-ம் தேதிமுதல் மே 22-ம் தேதி வரை 16 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து மற்றும் அத்லெடிக் விளையாட்டுகளுக்கு இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பயிற்சிக்கு வருவோருக்கு முட்டை, பால் வழங்கப்படும்.  மே 8 முதல் மே 22 -ம் தேதி வரை கடலூர் மண்டல, மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுகளில் முதல் 3 பரிசுகளைப் பெற்ற 6,7,8 வகுப்பு மாணவ மாணவியருக்கு, இலவச உணவு, தங்கும் வசதியுடன் விளையாட்டு அரங்கத்திலேயே தங்கவைத்து, சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். 

 யோகா பயிற்சி குறித்து யோகா பயிற்சியாளர் வெற்றி கூறியது:  

              கடலூர் அண்ணா விளையாட்டு அரங்க மாடியில் சிறப்பு யோகா பயிற்சி முகாம், கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்படுகிறது. காலை 5-45 முதல் 7-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5-30 மணி வரையிலும் அனைத்து வயதினருக்கும் பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் 30 நாள்களுக்கு ரூ. 200. யோகா பயிற்சி, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனியார் அமைப்புகள் நடத்தும் பயிற்சிகளை விட அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கட்டணம் மிகவும் குறைவு என்றார் வெற்றி.  டென்னிஸ், கிரிக்கெட் விளையாட்டுகளிலும், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கோடை விடுமுறையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

               அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஷட்டில், பேட்மிண்டன் சிறப்புப் பயிற்சி அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. ஷட்டில் விளையாட்டு சங்கம் நடத்தும் இப்பயிற்சியில் சேர உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 100.  அனைத்து பயிற்சிகளிலும் சேர்ந்து பயனடைய கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகலாம்.    



Read more »

அணைக்கரை பாலம் சீரமைப்பு பணியால் மக்கள் பாதிப்பு






காட்டுமன்னார்கோவில்: 

              அதிகாரிகளின் திட்டமிடாத செயலால் பழுதடைந்த அணைக்கரை பாலம் சீரமைப்பு பணி ஜவ்வாக இழுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் அவதி தொடர்கிறது.

                சென்னை - கும்பகோணம் சாலையில் முக்கிய பாலமாக 174 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொள்ளிடம் அணைக்கரை பாலம் உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு இப்பாலத்தின் கீழணையில் தண்ணீர் தேக்கி கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்ட பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு பலவீனமடைந்த பாலம் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு கருதி லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. இதனால் சென்னை - கும்பகோணம் போக்குவரத்து துண்டித்தது. 

                 அப்பகுதியைச் சுற்றியுள்ள இரு பகுதியைச் சேர்ந்த மக்களும் 2 கி.மீ., தூரம் பாலத்தை கடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை இது வரை தொடர்ந்து வருகிறது. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு தற்காலிமாக பாலம் சீரமைப்பு பணிக்கு 6 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் துவங்கி இதுவரை ஜவ்வாக இழுத்து வருகிறது. மழை, வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு வருவதால் பணிகள் தாமதமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் முறையாக திட்டமிடாத செயலே தொய்விற்கு காரணமாகியுள்ளது.

                    முதல் கட்ட பணியாக தெற்கு பகுதி பாலத்தில் அடித்தளம் கான்கிரீட் போட்டும், கம்பி கட்டி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரசாயன பூச்சு மூலம் (கெனைட்டிங்) பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதில் 40 ஷட்டர்களில் 30 ஷட்டர்கள் பழுது நீக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஷட்டர்கள் பணி நடந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து கடந்த பிப். 27ம் தேதி பாலத்தின் மேல்தளம் முற்றிலுமாக அகற்றப்பட்டு அடித்தளம் அமைப்பதற்காக வேலைகள் துவங்கி நடந்து வருகிறது. தற்போது மேல் தளத்தை பலப்படுத்தும் வகையில் ரசாயன பூச்சு பணி பணி நடக்கிறது. அதற்குமேல் கான்கிரீட் போட்டு தளம் அமைத்து சாலை அமைக்கப்பட வேண்டும்.

                இதற்கு இன்னும் ஒரு மாதம் பிடிக்கும். பாலம் சீரமைப்பு பணி நடப்பதையொட்டி பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல தெற்கு பகுதி கொள்ளிடம் ஆற்றில் தற்காலிகமாக செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு புற ஆற்றில் மட்டும் பாலத்தின் மீது இலகு ரக வாகன போக்குவரத்து தொடர்ந்து வந்தாலும் ஆற்றில் 7 லட்சம் ரூபாய் செலவில் சாலை போடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

              இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கோடை மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகரித்து தற்காலிக சாலை முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 27ம் தேதி முதல் வடபுற பாலத்தில் மேல் தள சாலை உடைக்கும் பணிகள் துவங்கப்பட இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள நிலையில் கோடை மழையால் இரு பக்கமும் ஆற்றில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. 

               இதனால் நேற்று முதல் பொதுமக்கள் ஷட்டரின் மேல் தளத்தில் பாதுகாப்பற்ற நிலையில் நடந்து செல்கின்றனர். கும்பகோணம் ஆர்.டி.ஓ., அசோக்குமார், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வராஜ், அணைக்கரை உதவி செயற்பொறியாளர் பெரியசாமி ஆகியோர் பணிகளை பார்வையிட்டனர். பாலம் பணி துவங்குவதற்கு முன் பொதுப்பணித்துறை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் இரு பாலத்திலும் ஒரே நேரத்தில் பணியை துவங்காமல் ஒரு பாலத்தின் பணியை முழுமையாக முடித்து, அடுத்து மற்றொரு பால பணியை துவக்கலாம். 

                அதுவரை பணி நடக்கும் பாலம் வழியாக ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக அணை கட்டி தண்ணீரை திருப்பிவிடலாம் போன்ற ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். ஆனால் அதுபற்றி கவலைப்படாத பொதுப்பணித் துறையினர் இரு பக்க பாலத்திலும் வேலையை துவக்கி போக்குவரத்தை துண்டித்ததால், தற்போது ஆற்றில் போடப்பட்ட தரைப்பாலமும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் இலகு ரக வாகனம் மற்றும் நடந்து செல்லவே முடியாத நிலையில் அவதியடைந்து வருகின்றனர்.

ஒரே நாளில் காலி

                அணைக்கரை வடப்புற பாலத்தின் மேல்தளம் உடைக்கும் பணி 27ம் தேதி துவங்க உள்ளதால் பொதுமக்கள் ஆற்று வழியாக நடந்து செல்ல 7 லட்சம் ரூபாய் செலவில் ஒரு மாதமாக செம்மண் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் கடந்த மூன்று நாட்கள் பெய்த மழையால் நேற்று தண்ணீர் வந்ததால் முற்றிலுமாக உடைந்து மக்கள் நடந்து செல்ல முடியாத நிலைக்கு வந்து விட்டது.

எப்போது முடியும்? 

               அணைக்கரை பாலத்தில் மார்ச் 1ம் தேதி முதல் போக்குவரத்து துவங்கப்படும் என்றனர். அடுத்து ஏப்ரல் மாதம் என்றனர். தற்போது ஜூன் மாதத்திற்கு நாள் குறித்துள்ளனர். ஆனால் பணியில் வேகம், ஆள் பற்றாக்குறை நீடித்தால் 2012ல் தான் போக்குவரத்து துவங்கும் என்கின்றனர்.

Read more »

சிதம்பரம் பஸ் நிலையம் தெற்கு பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் சிமென்ட் தளம் பணி

சிதம்பரம் : 

           சிதம்பரம் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம் மற்றும் கழிவுநீர் கால்வாய், பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
 
            சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் நடராஜர் கோவில், பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருப்பதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு ஊழியர்கள் தினமும் சிதம்பரம் வந்து செல்கின்றனர். பல்லாயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையம் வந்து செல்லும் நிலையில் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற சிதம்பரம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி கழிப்பிட வசதி கூட இல்லாமல் படுமோசமாக உள்ளது.
 
              பயணிகள் ஓய்வெடுக்கத்தான் வழியில்லை என்றாலும், சில நிமிடங்கள் காத்திருந்து பஸ் ஏறுவதற்கு கூட முடியாத நிலையில் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதற்கிடையே ஆக்கிரமிப்பு வேறு. இடிந்துவிழும் நிலையில் பஸ் நிலையத்தில் கடைகள் உள்ளதால் மழைக்காலங்களில் பயணிகள் நிற்பதற்கே அஞ்சுகின்றனர். இரவு நேரத்தில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. பஸ் நிலைய வாயில் பகுதியிலேயே டாஸ்மாக் கடை தொல்லை. சிறு நகரங்களில் கூட பஸ் நிலையங்கள் சிறப்பாக இயங்கும் நிலையில் சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் சொல்லிக்கொள்ளும் நிலையில் பஸ் நிலையம் இல்லை.
 
             பஸ் நிலையத்தை சீரமைக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இயற்கை இடர்பாடுகள் நிவாரண நிதி ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஆண்டு பஸ் நிலையத்தின் வடக்குப் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. சிமென்ட் தளம், மழைநீர் வடிகால், பிளாட்பாரம் ஆகியன அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு பகுதியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் தற்போது சிமென்ட் தளம், வடிகால், பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. நவீன இயந்திரங்கள் கொண்டு பணியை துரிதமாக முடிக்காமல் மெத்தனமாக நடப்பதால் அந்த வழியாக பஸ்கள் நிறுத்துவதற்கும். பஸ்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டு அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிறது.
 
             பணியை துவங்கும்போது அந்தப் பகுதியில் பஸ் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம். அல்லது பணியை விரைந்து முடிக்க துரிதமாக செயல்படலாம். ஆனால் மெத்தனமாக நடப்பதால் தினம், தினம், பயணிகளும், பஸ் ஓட்டுநர்களும் அவதியடைந்து வருகின்றனர். பஸ் செல்வதற்கு அருகிலேயே பள்ளம் தோண்டி அதில் சிமண்ட் தளம் அமைப்பதால் எந்த நேரத்திலும் பஸ் அதில் கவிழ்ந்து விடும் அபாய நிலையும் உள்ளது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு பணியை செய்தால் பயணிகளுக்கு நல்லது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior