உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 03, 2011

ஜூன் 6-ல் கடலூர் மாவட்ட வருவாய் தீர்வாயம் தொடக்கம்

கடலூர்:

           கடலூர் மாவட்ட வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் 6-ம் தேதி தொடங்கும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) சி.ராஜேந்திரன் தெரிவித்தார்.  

 கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              மாவட்ட வருவாய் தீர்வாயம் இந்த மாவட்டத்தில் உள்ள 7 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும். வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாள்களில் சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலரிடம், பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் அளித்தால், சம்பந்தப்பட்ட துறை அலுவலரால் விசாரணை நடத்தி, தீர்வாய நாள்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.  மனுதாரர்கள் அனுப்பும் மனுவில் தங்கள் கிராமத்துக்கான ஜமாபந்தி நடைபெறும் தேதியைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். 

வட்ட வாரியாக வருவாய் தீர்வாயம் நடைபெறும் தேதி, தீர்வாய அலுவலர் விவரம் வருமாறு:  

குறிஞ்சிப்பாடி வட்டம்:  மாவட்ட ஆட்சியர், 6 முதல் 13-ம் தேதி வரை.

விருத்தாசலம் வட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர், 6 முதல் 24-ம் தேதி வரை. 

கடலூர் வட்டம்: வருவாய் கோட்டாட்சியர், கடலூர் 6 முதல் 16-ம் தேதி வரை. 

சிதம்பரம் வட்டம்: வருவாய் கேட்டாட்சியர், சிதம்பரம் 6 முதல் 23-ம் தேதி வரை. 

திட்டக்குடி வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் விருத்தாசலம் 6 முதல் 17-ம் தேதி வரை. 

காட்டுமன்னார்கோயில் வட்டம்: மாவட்ட வழங்கல் அலுவலர், 6 முதல் 21-ம் தேதி வரை. 

ண்ருட்டி வட்டம்: மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர், 6 முதல் 16-ம் தேதி வரை.  

மேலும் விவரங்களுக்கு,

கடலூர் 04142- 295189. 
பண்ருட்டி 04142- 242174. 
குறிஞ்சிப்பாடி 04142- 258901.
சிதம்பரம் 04144- 222322. 
காட்டுமன்னார் கோயில் 04144- 262053. 
விருத்தாசலம் 04143- 238289. 
திட்டக்குடி 04143- 255249 

என்ற வட்டாட்சியர்களின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Read more »

கடலூர் நகராட்சியில் ரூ. 10 கோடிக்கு மேல் சொத்துவரி வசூல் பாக்கி

கடலூர்:

             சாலைகளையும் பொது இடங்களையும் ஆக்கிரமிப்பதற்குச் சற்றும் அஞ்சாத நகரமாக மாறிவருகிறது கடலூர். 

                  2 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாவட்டத் தலைநகரான கடலூரில் போக்குவரத்து நெரிசல் கடந்த சில ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்து விட்டது.  தேசிய நெடுஞ்சாலை 45ஏ கடலூர் நகரைக் கிழித்துக் கொண்டு செல்வதால், வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பிட்ட சாலைகளை விட்டு வெளியே சென்று, வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பாத வணிகர்கள், குறிப்பிட்ட சாலைகளில், கோயில் நிலங்களில் தங்கள் வணிகத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தால், கடலூர் சாலைகளில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

                 இதனால் லாரன்ஸ் சாலை, பாரதிசாலை, நேதாஜி சாலை, சுப்புராயச் செட்டித் தெரு, தேரடித் தெரு, சன்னதித் தெரு, முதுநகர் சிதம்பரம் சாலை ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு மிகச் சாதாரணமாகத் தடையின்றி நடந்து வருகிறது.  நகராட்சி, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைத் துறைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை ஆண்டுக்கு ஒருமுறை வெறும் சம்பிரதாயத்துக்காகவே நடத்துகின்றன.  கோடை காலத்தில் 2 அல்லது 3 மாதங்கள், கடைகளுக்கு முன் வேனில் பந்தல் அமைக்கக் கூட, காவல்துறை மற்றும் நகராட்சியில் அனுமதி பெற்றுதான், மற்ற நகரங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. 

                   ஆனால் கடலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கே, வணிகர்களின் அனுமதி பெற்றுதான் அரசுத் துறைகள் சாலைகளில் வர வேண்டும் என்ற பரிதாப நிலையில் கடலூர் உள்ளது என்கிறார், கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன்.  சுகாதாரப் பணிகளில் கடலூர் நகராட்சி ஜீரோ மதிப்பெண் பெற்று, கடை நிலையில் இருப்பதாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அறிவித்து இருக்கும் நிலையில், சாலைகள், பொது இடங்கள், நடைபாதைகளை ஆக்கிரமிப்பதில் நாட்டில் முதல் இடம் வகிப்பதாக மக்கள் சான்றிதழ் அளிக்கிறார்கள். 

                பலகோடி செலவிட்டு, பளபளப்பான கற்கள் பதித்து, சாலையோரங்களில் நடை பாதைகள் அமைக்கப்பட்டும், அவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளனர்.  பழக்கடைகள், சிறு வணிகர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போயிற்று கடலூரில். தேசிய நெடுஞ்சாலையும் ஆக்கிரமிப்புக்கு விதிவிலக்கல்ல. தேசிய நெடுஞ்சாலையோரம் உருவாகி வரும் பழக்கடைகள், போக்குவரத்தை பெரிதும் ஆபத்தாக மாற்றி வருகின்றன.  

       தி.மு.க. வின் பொறுப்பில் உள்ள கடலூர் நகராட்சி, கோடிக்கணக்கில் மக்களிடம் வரி வசூலித்துக் கொண்டு, வணிகர்களின் கைப்பாவையாக மாறி, மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகப் பொதுநல அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.  எதுவாக இருந்தாலும் வியாபாரிகளைக் கேட்டுத்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று, கடலூர் நகராட்சி கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு, மக்கள் நலனைப் புறக்கணித்து விட்டதாக குடியிருப்போர் நலச் சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளன.  ரூ. 10 கோடிக்கு மேல் சொத்துவரி வசூல் ஆகாமல் பாக்கி இருப்பதாக அடிக்கடி  நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.  

              ஆனால் மக்கள் நலனைப் புறக்கணித்து யாருக்காக நகராட்சி நிர்வாகம் வக்காலத்து வாங்குகிறதோ?, அவர்கள்தான் நீதிமன்றத் தடை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, நகராட்சிக்கு வரி செலுத்த மறுத்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.  இதனால் மைனாரிட்டி ஆக்கப்பட்ட மக்கள் சமூகம், நாள்தோறும் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது.  கடலூரில் சுரங்கப்பாதை அமைக்க வணிகர்கள் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை.  என்றாலும் நகராட்சி நிர்வாகிகளோ, நீதிமன்றம் தடைவிதித்து விட்டதாகவே சொல்லிக் கொண்டு, சுரங்கப் பாதைப் பணிகளை நிறைவேற்ற விடாமல், 4 வணிகர்களுக்கு ஆதரவாகவும், ஒட்டுமொத்த நகர மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டுகிறார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன். 

               எனவே கடலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சமின்றிச் செயல்பட வேண்டும் என்று, பொதுமக்கள் புதிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த நிலையில் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் மற்றொரு பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கருத்துக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் ஆதரவு தெரிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.




Read more »

கடலூர் அரசு ஐ.டி.ஐ.யில் பயில விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

           கடலூர் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. மற்றும் மகளிர் ஐ.டி.ஐ. ஆகியவற்றில் சேர்ந்து பயில மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              கடலூர் செம்மண்டலத்தில் அமைந்துள்ள அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. மற்றும் மகளிர் ஐ.டி.ஐ. ஆகியவற்றில் கீழ்காணும் தொழில் பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில ஆண், பெண் இருபாலரும் 21-6-2011 வரை விண்ணப்பிக்கலாம்.  பயிற்சிக் கட்டணம் எதுவும் கிடையாது. விதிகளுக்கு உள்பட்டு பயிற்சி பெறுவோருக்கு உதவித் தொகை அரசால் வழங்கப்படும். இலவச போக்குவரத்து வசதியும் உள்ளது.  விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு அரசு உதவித் தொகை கிடைக்கும். இலவச விடுதி வசதியும் உண்டு.  

பாடப் பிரிவுகள், கல்வித் தகுதி மற்றும் பயிற்சியாளர்களுக்கான இடங்கள் விவரம்: 

பொருத்துநர், 10-ம் வகுப்பு, 104 இடங்கள். க
டைசலர் 10-ம்வகுப்பு, 78 இடங்கள். 
இயந்திர வேலையாள், 10-ம் வகுப்பு, 16 இடங்கள். 
கம்மியர் (மோட்டார் வண்டி), 10-ம் வகுப்பு, 21 இடங்கள்.  
கம்பியாள் 8-ம் வகுப்பு, 42 இடங்கள். 
வெல்டர் 8-ம் வகுப்பு, 125 இடங்கள். 
பிளாஸ்டிக் வழிமுறைப் பணியாளர், 10-ம் வகுப்பு, 125 இடங்கள். 
கணினி இயக்குநர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் 12-ம் வகுப்பு, 52 இடங்கள் 

என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior