உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 26, 2011

நடிகர் ரவிச்சந்திரன் மறைவு


கண்ணீர் அஞ்சலி !

       http://admin.tamil.india.com/wp-content/uploads/2011/07/ravichandaran.jpg



             கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் ரவிச்சந்திரன் நேற்று  இரவு மருத்துவமனையில் காலமானார்.

            பழம்பெரும் நடிகரான அவர், டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த "காதலிக்க நேரமில்லை" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுக படமே அவருக்கு நல்ல ‌பெயரை பெற்று தந்தது. அதிலும் அந்தபடத்தில் வந்த  "விஸ்வநாதன் வேலை வேண்டும்..." , "உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா..." உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். இவர் நடித்த "அதே கண்கள்", "இதயகமலம்", "கெளரி கல்யாணம்", "குமரிப்பெண்", "உத்தரவின்றி உள்ளே வா" உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை. 
 http://www.vikatan.com/news/images/Ravichandran-1.jpg
                

             தனக்கென தனி பாணியைப் பின்பற்றிய ரவிச்சந்திரனின் ஸடைல், அப்போதைய  கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளை வெகுவாய்க் கவர்ந்தது. பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் "ஊமை விழிகள்" படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதில் வில்லனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்தார்

               .சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவிச்சந்திரனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

               இதனால் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிசிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று (26/07/2011) நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.








Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம்

         அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக் கழகத்தின் அரியலூர் படிப்பு மைய உதவிப் பேராசிரியரும், தொடர்பு அலுவலருமான எல்.கே. வேலாயுதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் நிகழ் கல்வியாண்டில் இளநிலைப் பிரிவிலும், முதுநிலைப் பிரிவிலும் பல்வேறு புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இளநிலைப் படிப்பில் வேதியியல், மைக்ரோபயாலஜி, அனிமேஷன், விஷூவல் தொழில்நுட்ப சினிமா தயாரிப்பு ஆகிய பாடப் பிரிவுகளும், முதுநிலைப் படிப்பில் என்.ஜி.ஓ. மேலாண்மை, விரிவாக்க மேலாண்மை, மைக்ரோ பயாலஜி, முதுநிலைப் பட்டயப்படிப்பில் பங்குச் சந்தை வணிகம், அனலிடிகல் டாக்ஸிகாலஜி, சான்றிதழ் பாடப் பிரிவில் மிருதங்கம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

              நிகழ் கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. படிப்பில் ஹெல்த் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜமென்ட், ப்ரொஜக்ட் மேனேஜ்மென்ட், எனர்ஜி மேனேஜ்மென்ட் ஆகிய பாடப் பிரிவுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பாடங்கள் அனைத்தும் ஆன்லைனில் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இதன் மூலம் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்தே எம்.பி.ஏ. படிக்கலாம். தொலைநிலைக் கல்வி முறையில் சேர்க்கை பெறும் எஸ்.சி, எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.  இந்த உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

                  நிகழ் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவோர், ஏற்கெனவே சேர்க்கை பெற்றவர்கள், பயின்றவர்கள், குறிப்பிட்ட சில பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை 50 சத கட்டணச் சலுகையில் படிக்கலாம். மேலும், படிப்புக் கட்டணம் நீங்கலாக மற்றக் கட்டணங்களைச் செலுத்தி மாற்றுத் திறனாளிகள் சேர்க்கை பெறலாம் என்றார் அவர்.












Read more »

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரிக்கை

கடலூர்:

              திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 6-வது செமஸ்டர் (இளநிலை பட்டப்படிப்பு இறுதித் தேர்வு) தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், தமிழக ஆளுநர், முதல் அமைச்சர் உள்ளிட்டோருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

           கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 96 கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு, 6-வது செமஸ்டர் தேர்வு முடிவுகளை இன்னமும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. ஏப்ரல் 1-ம் தேதியே பட்டப்படிப்புக்கான 3-ம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டன. ஆனால் தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.

                இதனால் அண்மையில் நடைபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரி கவுன்சலிங் உள்ளிட்ட பல்வேறு உயர் படிப்புகளுக்கு, இந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தால்கூட, மாணவர்கள் அதைப் பயன்படுத்தி, உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை உடனே வெளியிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் அலட்சியம் காட்டும் இப்பல்கலைக்கழகம் மீது நடடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior