கடலூர்:
            கடலூர் சில்வர் பீச்சை அழகுபடுத்த ரூ. 1 கோடி மதிப்பில்  திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுலாத் துறையிடம் இருந்து நிதிபெற அரசுக்கு  அனுப்பப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.   
கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி   கூறியது:   
              கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள  திட்டங்களை விரைவுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதிச் சான்றிதழ்  உள்ளிட்ட சான்றிதழ்கள் மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  உள்ளது.   
             கடலூர் ஜவான்ஸ் பவன்- கம்மியம்பேட்டை சாலைத் திட்டத்துக்கான தடையில்லாச்  சான்று, பொதுப் பணித் துறையில் இருந்து, நெடுஞ்சாலைத் துறையால் பெறப்பட்டு உள்ளது.  ரூ. 1.3 கோடியில் இச்சாலை விரைவில் போடப்படும்.   இத்திட்டத்துக்கு 3 நிதி ஆதாரங்களில் இருந்து நிதி பெற, முயற்சி  மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 
                 வண்டிப்பாளையம் சாலை சரவணன் நகர் இணைப்புச் சாலை திட்டம்,  இறுதி ஒப்புதலுக்காக நகராட்சிகளின் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   கல்விக் கட்டணம் தொடர்பாக அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய, முதன்மைக் கல்வி  அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முதியோர் உதவித் தொகை கோரி அதிக அளவில்,  விண்ணப்பங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.  இந்த விண்ணப்பங்களை 100 சதவீதம் ஆய்வு  செய்ய, அரசு வழிகாட்டுதல் எதிர்பார்க்கப்படுகிறது.   
              கடலூர் சில்வர் பீச்சை அழகுபடுத்த ரூ. 1 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு  சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிச்சாவரம் சுற்றுலா தலத்தில் அடிப்படை  வசதிகளை மேம்படுத்த திட்டம் தயாரித்து அனுப்பி இருக்கிறோம்.  கடலூர் பாதாளச் சாக்கடைத்தில் தோண்டப்படும் சாலைகள் சீரமைப்புப் பணிகள்,  வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குமுன் முடிக்கப்படும் என்றார் ஆட்சியர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக