"தானே" புயலால், மொத்தம், 1.76 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண்  பயிர்களும், 48 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான தோட்டக்கலை பயிர்களும்,  சேதமடைந்ததாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதற்காக,  210 கோடி ரூபாய்  நிவாரணத் தொகையும் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில், புயல் பாதிப்பு  மாவட்டங்களை சேர்ந்த சவுக்கு விவசாயிகள், தங்கள் பயிருக்கு நிவாரண தொகை  அறிவிக்கப்படவில்லை என, குமுறுகின்றனர். தோட்டக்கலை பயிரான சவுக்கு, கடலூர்  மாவட்டத்தில், பயிர் பரப்பளவில் வாழைக்கு அடுத்தப்படியாக உள்ளது.  மாவட்டத்தில், 4,000 ஹெக்டேர் அளவிற்கு சவுக்கு சேதமடைந்துள்ளது, என  தெரிகிறது.
சவுக்கு விவசாயிகளின் நிலை குறித்து, பண்ருட்டி வட்டம், பணப்பாக்கத்தைச்  சேர்ந்த சவுக்கு விவசாயி, சவுந்தரராஜன் கூறியது 
             ""8.5 ஏக்கரில்,  சவுக்கு பயிரிட்டிருந்தேன். புயலில் அனைத்தும் சேதமடைந்துவிட்டது. ஒரு  ஏக்கரில் 40 முதல் 50 டன் சவுக்கு பயிராகும். ஒரு டன் 2,000 ரூபாய்க்கு  விலைபோன சவுக்கு, தற்போது 700 ரூபாய்க்கு தான் விலை போகிறது. தமிழக அரசு,  முந்திரி, பலா போன்ற தோட்டக்கலை பயிர்களைப் போல, சவுக்கிற்கும் நிவாரணத்  தொகை தர வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து, கடலூர் மாவட்ட கலெக்டர், அமுதவள்ளி கூறியது 
          "கடலூர்  மாவட்டத்தில், 4,000 ஹெக்டேர் அளவிற்கு சவுக்கு சேதமடைந்துள்ளது. இதற்கான  நிவாரணத்தை தனியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பயிர் காப்பீடு தொகை? 
"பயிர் கடன்பெறும் விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு தொகை கட்டாயம் பிடித்தம் செய்யப்படுகிறது. பயிர் காப்பீடு செய்து, "தானே'புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், சில மாதங்களில் இழப்பீடு வழங்கப்படும்,' என, கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவள்ளி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக