உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கொத்தமல்லி (தனியா) சாகுபடி முறைகள்





கடலூர் : 
 
         குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.

                கொத்தமல்லி மசாலா வகைப் பயிர்களில் முக்கியமானது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 2009-10-ம் ஆண்டில் கொத்தமல்லி (தனியா) 3.6 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு 2.37 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. 
 
               தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 2008-09-ம் ஆண்டில் 14.4 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டு 4.80 ஆயிரம் டன் கொத்தமல்லி (தனியா) உற்பத்தி செய்யப்பட்டது. கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது. 
 
              குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் கொத்தமல்லியில் அதிக மகசூல் எடுக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கொத்தமல்லி பெருமளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது. இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. 
 
                 கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம். சாகுபடி முறைகள்: நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும். பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும். கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை. முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும். இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும்.
 
                பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும். ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும். ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும்.  நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும். 
 
               கொத்தமல்லி விதை (தனியா) உற்பத்தி, கொத்தமல்லித் தழையை விட கூடுதல் வருவாய் தரும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2012-ல் (அறுவடையின் போது) கொத்தமல்லி குவிண்டாலுக்கு ரூ.3,100 முதல் ரூ.3,300 வரை விலை நிலவும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் விலை முன் அறிவிப்பு செய்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior