உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 07, 2010

இருளில் மூழ்கும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம்


 
கடலூர்:
 
                 கடலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் இந்த ரயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.  
 
                மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில்பாதை திட்டப் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், திருப்பாப்புலியூர், துறைமுகம் நகர் சந்திப்பு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், ரயில் நிலையத்தை சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி இருக்கிறது.  
 
                        திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின் தண்டவாளங்களுக்கு மேற்குப் பகுதியில் பயணிகள் முன்பதிவு மையமும், கிழக்குப் பகுதியில் டிக்கெட் கௌன்டர்களும் செயல்படுகிறது. டிக்கெட் கௌண்டர் கட்டடத்தில் பெரும்பாலும் விளக்குகள் எரிகின்றன. ஆனால் கணினி முன் பதிவு மையம், சரக்கு அலுவலகம் மற்றும் மாடியில் நிரந்தர ஓய்வறைகள் உள்ள மேற்குப் பகுதி கட்டடத்தில், மாலை 5 மணிக்கு மேல் மின் விளக்குகள் எரிவதில்லை.   திருப்பாப்புலியூர்- விழுப்புரம் மார்க்கத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் வரை பிளாட்பாரம் அரை வட்ட வடிவில் நீண்டு கிடக்கிறது. 
 
                         ஆனால் இந்த அரை கி.மீ. தூரம் உள்ள இந்த பிளாட்பாரத்தில், இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை. மின் விளக்குகளுக்கான ஃபிட்டிங்குகளே பொருத்தப்படவில்லை.  இதை அடுத்துள்ள போடிச்செட்டித் தெரு, திரௌபதி அம்மன் கோயில் அருகே நகராட்சி ஹைமாஸ் விளக்கு உள்ளது. அதில் இருந்து கிடைக்கும் வெளிச்சமே பிளாட்பாரத்துக்குக் போதுமானது, பிளாட்பாரத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை என்று, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து விட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  
 
                மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பஸ் நிலையம், பெரிய அங்காடி ஆகியவற்றின் மத்தியில், திருப்பாப்புலியூர் பஸ் நிலையம் அமைந்து இருக்கிறது. இதனால் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத சக்திகள் யாரையாவது கண்டுபிடித்துத் துரத்தினால், அவர்கள் ஓடிவந்து எளிதில் பதுங்கிக் கொள்ள ஏதுவாக, இருண்டு கிடக்கும் ரயில் நிலையம் வசதியாக இருப்பதாக போலீஸôர் தெரிவிக்கிறார்கள்.  
 
                  மேலும் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட்டில் இருந்து சிதம்பரம் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்களின் ஒருபுறம் பஸ் நிலையமும், மறுபுறம் மார்க்கெட்டும் இருப்பதால் இரவு, பகல் எந்த நேரமும், மக்கள் அடிக்கடி தண்டவாளத்தை நடந்து சென்று கடக்கிறார்கள். கடந்த 4 மாதங்களில் மட்டும், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி இறந்து உள்ளனர்.  கணினி முன்பதிவு மையத்துக்கு அருகில் உள்ள 14 ரயில்வே குடியிருப்புகளில் 9-ல் மட்டும் ரயில்வே ஊழியர்கள் குடியிருக்கிறார்கள். மற்றவை சேதம் அடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. 
 
                இப்பகுதியும் அதை ஒட்டியுள்ள இருண்டு கிடக்கும் பிளாட்பாரமும், இரவு நேரங்களில் மது அருந்துவாருக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும் மிகவும் வசதியான பாதுகாப்பான இடமாக உள்ளது.  
 
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
                   "மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது விளக்குகளுக்கு, தனித்தனி ஸ்விட்சுகள் இருந்தன. தற்போது திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் முழுவதும் 3 ஸ்விட்ச்களின் கட்டுப்பாட்டில் அடங்கி விடுகிறது. இரவு 8-30 மணிக்கு பயணிகள் ரயில் கடந்து சென்றதும், இரவு 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே எக்ஸ்பிரஸ் ரயில்கள் பலவும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தைக் கடக்கின்றன. அதிலும் 2 ரயில்கள் மட்டுமே இங்கு நின்று போகின்றன. எனவே இரவு 12 முதல் 3 மணி வரை பிளாட்பாரத்தில் விளக்குள் எரிய விடப்படுகிறது. மற்ற நேரங்களில் சிக்கன நடவடிக்கை கருதி விளக்குகள் எரிவதில்லை' என்றார்.  
 
இதுபற்றி தென் ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கூறுகையில், 
 
                       "திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் விளக்குகள் எரியாமல் இருப்பது, மின் விளக்குகள் பொருத்தப்படாத பிளாட்பாரம் மற்றும் இரவு நேரங்களில் பிளாட்பாரம் இருண்டுகிடப்பதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பது ஆகியவை குறித்து ரயில்வே பொது மேலாளருக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறேன். நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார்.

Read more »

இயற்கை வேளாண்மைக்கு தயாராகலாமே


 
சிதம்பரம்:
 
               இயற்கை வேளாண்மையில் விளைச்சல் குறைவாக இருந்தாலும், நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாரமாக அது அமையும் என முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
 
இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் முனைவர் ஜே.வசந்தகுமார் தெரிவித்த தகவல்கள்:  
  
இயற்கை முறை காய்கறி சாகுபடி குறிப்புகள் மற்றும் இயற்கை உரமிடுதல்
 
                       வேளாண் பயிர்க் கழிவுகளை மக்க வைத்து இயற்கை தொழு உரம் தயார் செய்துவிடலாம். பசுந்தாள் உரங்களை தக்கைப்பூண்டு, அகத்தி, சணப்பை, கொளிஞ்சி போன்றவற்றை பயிரிட்டு மக்க வைத்து பயன்படுத்தலாம். கம்போஸ்ட் எரு, தொழுஉரம், கோழி எரு, பன்றி எரு, கம்போஸ்ட் கரும்பு ஆலை கழிவு எரு, தென்னை நார் கழிவு எரு ஆகியவற்றை பயன்படுத்தலாம். புண்ணாக்கு வகைகளான வேம்பு, ஆமணக்கு, புங்கம், இலுப்பை, தென்னை கடலை எள், காட்டாமணக்கு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.  
 
மண்புழு உரமிடுதல்: 
 
                இந்த உரத்தில் பயிருக்கு தேவையான சத்துக்கள் மட்டுமல்லாமல் பயிருக்கு தேவையான இயற்கை பயிர் ஊக்கியும் இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாகும். இதை அடியுரமாக இடுவதை விட முக்கியமாக காய்கறிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 2-3 டன் உரத்தை மேலுரமாக செடிகளை சுற்றி, செடி விதைத்த 20 நாள்களுக்கு ஒருமுறை வீதம் 3 முறை இடுவது நல்லது.  
 
நுண்ணுயிர் உரங்கள் இடுதல்: 
 
                காய்கறிப் பயிர்கள் நன்கு செழித்து வளர செலவில்லாத நுண்ணுயிர் உரங்களான ரைசோபியம், பாஸ்போபேக்டீரியா, அசோஸ்பைரில்லம், மைக்கோரைசாவேர் உட்பூசணம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை, உதாரணமாக ரைசோபியம் பால்போபாக்டீரியா (அலலது) ரைசோபியம் மைக்கோரைசாவேர் உட்பூசணம் (அல்லது) அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற விகிதத்தில் கடைசி உழவுக்கு முன்பு இட வேண்டும். 
 
               அடியுரமாக இடமுடியாத தருணத்தில், விதை நேர்த்தியாக கூட பயன்படுத்தலாம், மேற்கூறிய உயிர் உரங்களை ஏக்கருக்கு 2 பாக்கெட் என்ற விகிதத்தில் குளிர்ந்த அரிசிகஞ்சியுடன் கலந்து விதைகளை விதைப்பதற்கு முன் நிழலில் 6 மணி நேரம் உலரவைத்து விதைக்க வேண்டும்.  
 
இயற்கை முறையில் விதை நேர்த்தி: 
 
                  சூடோமோனாஸ் 10 கிராம் கிலோ அல்லது டிரைகேடெர்மா 4 கிராம்கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். ஒரு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு தொழு உரம் 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம் 5 கிராம், பாஸ்போபேக்டீரியா 5 கிராம் மற்றும் மைக்கோரைசாவேர் உட்பூசணம் 60 கிராம் என்ற அளவில் இடலாம். விளைநிலங்களில் அசோஸ்பைரில்லம் 400 கிராம் கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்தல், ஓரு ஹெக்டேர் நிலத்துக்கு 2 கிலோ பாஸ்போபாக்டீரியா மற்றும் மைக்கோரைசாவேர் உட்பூசணம் 4 கிலோ என்ற அளவில் இடலாம். மண்புழு உரம் மறறும் வேப்பம் புண்ணாக்கு இடலாம், பஞ்சகாவியாவை பாசனநீர் மூலம் கலந்து விடலாம். முருங்கை இலைச்சாற்றை மேலுரமாக தெளிக்கலாம்.  
 
நுண்ணுயிர்களின் பங்கு: 
 
                          மண்ணிற்கு நுண்ணுயிர்கள் மக்கவைக்கும் இயல்பை தருகிறது. ஒளிச்சேர்க்கை செய்வதை துரிதப்படுத்திவிடும் லேக்டிக் அமில பாக்மரியா மண் மற்றும் உரங்களில் உருவாகும் தீமை தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தக்கூடும். இந்த நுண்ணுயிர்களை மண்ணிலும், உரத்திலும் நீரிலும் தெளிப்பதன் மூலம் உற்பத்தியை பெருக்கி கூடுதல் மகசூலைப் பெறலாம்.  
 
நுண்ணுயிர் கரைசல் தயாரிப்பு முறை: 
 
                          20 லிட்டர் தண்ணீரில் (குளோரின் கலக்காதது) 1 கிலோ நாட்டு சர்க்கரை கலந்து அதனுடன் 1 லிட்டர் நுண்ணுயிர் கரைசல் கலந்து இவை அனைத்தையும் 20 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து இருட்டான, குளிர்ச்சியான அறையில் 10 நாள்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து இனிமையான மணம் உருவாகும். இக்கரைசலை கம்போஸ்ட்கள் மீதும் மற்றும் விவசாய சாகுபடி செய்யக்கூடிய மண்ணின் மீதும் தெளிக்கலாம். நுண்ணுயிர் கரைசல் புதுச்சேரி ஆரோவில்லில் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பயன்படுத்தி சாகுபடி பொருள்களின் தரத்தை உயர்த்தி அதிக லாபம் பெறலாம் என்கிறார் வசந்தகுமார்.

Read more »

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுக்காக குவியும் விண்ணப்பங்கள்!


           
               தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்யக் கோரி இளைஞர்களிடம் தினமும் பெறப்படும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கட்டுக் கட்டாகக் குவிந்து வருகின்றன.   தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் மின் ஆளுமை மயமாக்கும் திட்டத்தை ரூ.5.06 கோடியில் செயல்படுத்த அரசு அனுமதி அளித்தது.   இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மென்பொருள்கள் முடக்கப்பட்டன.   
 
                வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், முகவரி மாற்றம், கூடுதல் கல்வி தகுதி பதிவு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன.   இதையடுத்து, ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. வேலைவாய்ப்புத் துறைக்காக பிரத்யேக இணையதள முகவரியும் வெளியிடப்பட்டது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இதுவரை இந்த இணையதளம் செயல்படவில்லை. ஆன்லைன் பதிவு சேவையும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக முடங்கிய நிலையில் உள்ளது.   
 
                    வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இப்போது 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், புதிதாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தினமும் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் குவிகின்றனர். ஆனால், பெரும்பாலான கணினிகள் செயல்படாததால், பதிவு செய்தல் உள்ளிட்ட அன்றாடப் பணிகளைக் கூட செய்ய முடியவில்லை. இதனால், வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் தவிக்கும் நிலை தொடர்கிறது. 
 
                   இதையடுத்து, வேலைவாய்ப்பு பதிவு கோரி வருவோரிடம் விண்ணப்ப மனுவையும், அஞ்சல் தலையுடன் கூடிய சுய முகவரியிடப்பட்ட கடித உறைகளும் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் எதுவும் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுவது இல்லை. ஏற்கெனவே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 387 காலியிடங்களை நிரப்பாத நிலையில், இப்போது விண்ணப்பங்கள் குவிவது, கூடுதல் பணிச் சுமையாக அதிகரித்துள்ளது.   போதிய இடவசதி இல்லாததால், கட்டுக் கட்டாக குவிந்துள்ள விண்ணப்பங்களைப் பராமரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும், மீண்டும் விண்ணப்பங்களைப் பெறுவது கண் துடைப்பாக மாறி வருகிறது.      
 

Read more »

பி.இ. தமிழ்வழி மாணவர்கள் முதல்பருவத் தேர்வுகளை தமிழ்-ஆங்கிலம் கலந்து எழுதலாம: துணை வேந்தர் மன்னர் ஜவஹர்


தமிழ் வழி பொறியியல் படிப்புகளுக்கான முதல் பருவ பாடப் புத்தகங்களை புதன்கிழமை வெளியிட்டார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர்.
   
                   பி.இ. தமிழ் வழி மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை தமிழ்-ஆங்கிலம் கலந்து எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.  தமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தமிழ் வழி பொறியியல் படிப்புகளுக்கான பாட புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
  
புத்தகங்களை வெளியிட்ட துணை வேந்தர் மன்னர் ஜவஹர் பேசியது: 

                    பி.இ. இயந்திரவியல் மற்றும் கட்டடவியல் தமிழ் வழி பிரிவுகளுக்கான முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் அனைத்தும் முழுமை பெற்றுள்ளன. இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் ஒரு மாத காலத்தில் தயாராகிவிடும்.  இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டுக்கான புத்தகங்கள் 2011 ஜூன் மாதத்துக்குள் தயாரிக்கப்பட்டுவிடும்.  தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலப் புலமையை பெறுவதற்காக 6 பருவங்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு 2 பருவங்களுக்கு மட்டுமே ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  

                 தமிழ், ஆங்கிலம் கலந்து போதிக்க ஏற்பாடு : தமிழ் வழி மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம் மொழிகளைக் கலந்து பாடங்களை நடத்துமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தமிழ் வழி மாணவர்கள் முதல் பருவத் தேர்வை தமிழ், ஆங்கிலம் கலந்து எழுதலாம். இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை எப்படி எழுவது என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார். 

                     தமிழில் பாடங்களை நடத்துவதால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். ஆர்வமும் மிகுந்து காணப்படுகிறது. வகுப்புத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் 90 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் தெரிவித்தனர். 

Read more »

பண்ருட்டியில் சாக்கடை நாற்றத்தின் மத்தியில் ரேஷன் கடை

பண்ருட்டி:

                      பண்ருட்டியில் ரேஷன் கடை முன் சாக்கடைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் ரேஷன் கடைக்கு வருபவர்களும், அப்பகுதியில் குடியிருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். 

                      பண்ருட்டி லட்சுமிபதி நகர் 18-வது வார்டில் வடகைலாசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை உள்ளது. 1700 ரேஷன் கார்டுகளைக் கொண்டுள்ள இந்த ரேஷன் கடையில் மேலப்பாளையம், லட்சுமிபதி நகர், வி.எஸ்.பி.நகர், லிங்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன் அடைகின்றனர். இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளதால் வீடுகளும், குடியிருப்புகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 

                    ரேஷன் கடை அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால், ரேஷன் கடை முன் தேங்கி நிற்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் ரேஷன் கடைக்கு வருபவர்கள், அவ்வழியே செல்லும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், கழிவுநீரில் உற்பத்தியாகும் நோய் கிருமிகளால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடைக்கு வந்தவர்கள் கூறியது: 

                     கடைக்கு முன் சாக்கடைநீர் தேங்கி நிற்கின்றது. இதில் நடந்து சென்றுதான் பொருள்களை வாங்கி வருகின்றோம். இதை சரி செய்ய யாரும் முன்வரவில்லை எனக் கூறினர். 

வடகைலாசம் கூட்டுறவு சங்கச் செயலர் ஆனந்தன்: 

                        கடை முன் சாக்கடைநீர் தேங்கியுள்ளதால் அண்மையில் இரண்டு வண்டி மண் அடித்து சரி செய்தேன். மழையில் மண் அடித்துச் செல்லப்பட்டதால் மீண்டும் கழிவுநீர் தேங்கி உள்ளது.

வார்டு கவுன்சிலர் ரமாதேவி ராமலிங்கம்: 

                      இந்த பகுதியில் நான்கு பள்ளிகள் உள்ளதால் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால் கழிவுநீர் கால்வாய் இல்லை. ரேஷன் கடை முன் தேங்கி உள்ள சாக்கடைநீரையாவது சரி செய்து தரும்படி பலமுறை நகர நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் முன்வரவில்லை.

Read more »

நாய்களின் சரணாலயமாக மாறியுள்ள பண்ருட்டி பஸ் நிலையம்!

பண்ருட்டி:

             நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பண்ருட்டி பஸ் நிலையத்தில் கால்நடைகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

               வியாபார நகரமான பண்ருட்டியில் மளிகை, காய்கறி மொத்த வியாபாரமும், முந்திரி பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன. இதனால் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் நாள்தோறும் பண்ருட்டிக்கு வந்து செல்வதால் பஸ் நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடையின்கீழ் பலா, வாழை, கொய்யா உள்ளிட்ட பழக் கடைகளும், பஸ் நிலையத்தின் உள்பகுதியில் சிற்றுண்டி கடைகளும் உள்ளன. இ

              த்தகைய கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளை உண்பதற்காக கால்நடைகளும், தெரு நாய்களும் பஸ் நிலையத்துக்குள் சுதந்திரமாக சுற்றி வருகின்றது. இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளும், தெரு நாய்களும் இரை எடுப்பதில் ஏற்படும் போட்டியால் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. அடிக்கடி இதுபோல் நிகழ்வதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளையும், தெரு நாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என பலர் புகார் தெரிவித்தும் நகர மற்றும் மாவட்ட நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை.

                          மேலும் பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, உட்கார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், இலவச கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இந்நிலையில் கால்நடைகள், நாய்களின் தொல்லை வேறு. எனவே பொதுமக்களின் நலன்கருதி கால்நடைகளும், நாய்களும் பஸ் நிலையத்துக்குள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

விருத்தாசலம்:

               விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் வட்டார வளமையக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆங்கிலப் பயிற்சி நடைபெற்றது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தா தலைமையேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தார். ஆசிரியப் பயிற்றுநர்கள் மஞ்சுளாதேவி, உமாமாலினி ஆகியோர் கருத்தாளர்களாக உள்ளனர்.

Read more »

கடலூர் நகர சாலையை புதுப்பிக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர்: 

               கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப் பட்ட சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
 
                    கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடி ரூபாயில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை. நகரம் முழுவதும் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டி சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்து வரும் இப்பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்ட சாலைகளும் இன் னும் புதியதாக சார்சாலை போடாமல் இருந்து வருகிறது. நகராட்சியில் போதிய அளவு நிதி இல்லாததால் சாலை பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தது.

                   இந்நிலையில் தமிழக முதல்வர் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் நகராட்சிகளில் சாலை சீரமைப்பிற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டார். இந்த நிதியைப்பெற கடந்த மாதம் கடலூர் நகராட்சியில் அவசர கூட்டம் நடத்தி புதிய பணிகள் நிறைவேற்றிட 15 கோடி ரூபாய் தேவை என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன்பேரில் முதல்வர் கடலூர் நகரத்தில் சாலை பணிகள் மேற்கொள்ள 11 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான டெண்டர் விடும் பணி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.

Read more »

வயலில் தண்ணீர் பாய்ந்ததை அறியும் "அலாரம்' : அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை மாணவர் கண்டுபிடிப்பு

சிதம்பரம் : 

                    வயலில் போதுமான அளவு தண்ணீர் பாய்ந்ததை அறியும் அலாரத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண்மை மாணவர் கண்டுபிடித் துள்ளார்.

                     விவசாயிகள் தங்கள் நிலங்களில் தண்ணீர் பாய்ச்சும் போது இரவு நேரங்களில் கண் விழிக்க வேண்டும். அப்படியே கண் விழித்தாலும் போதுமான அளவு தண்ணீர் பாய்ந்து விட்டதா என துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது. அதிகமாக தண்ணீர் பாய்ந்தாலும் மின்சாரம் அதிக அளவில் செலவாகும். இதற்கு தீர்வு காணும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவர் ராஜேஷ்குமார், வயலில் தண்ணீர் பாய்ந்து விட்டதை அறிந்து கொள்ள "அலாரம்' கண்டுபிடித்துள்ளார்.

                    இரண்டு அங்குலத்தில் மூன்று அடி நீள பிளாஸ்டிக் பைப்பில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள் ளது. கருவியில் மின் ஒயர் மூலம் இணைத்து தனியாக நமக்குத் தேவையான இடத்தில் "அலாரம்' பொருத்திக் கொள்ளலாம். வயலில் தண்ணீர் பாய வேண்டிய அளவை அக்கருவியில் பதிவு செய்து விட்டால் பதிவு செய்யப்பட்ட தண்ணீர் பாய்ந்தவுடன் "அலாரம்' ஒலிக்கும். அதன் பிறகு மோட் டாரை ஆப் செய்து கொள்ளலாம். எளிய முறையில் யாரும் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக் கருவியை 200 ரூபாய் செலவிலேயே செய்து விட முடியும் என்கிறார் மாணவர் ராஜேஷ்குமார். சிதம்பரம் அடுத்த வலசக்காடு கிராமத்தில் பயிற்சி பெற்று வரும் வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள் விவசாயிகளுக்கு "அலா ம்' குறித்து விளக்கம் அளித்தனர்.

Read more »

நாட்டின் வளத்தை அழிப்பதில் ஊழலுக்கு பெரும் பங்கு : தேசிய ஆசிரியர் கல்விக்குழுத் தலைவர் வேதனை

சிதம்பரம் : 

               "தரமான கல்வியின் மூலம் தான் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்' என டில்லி தேசிய ஆசிரியர் கல்விக்குழு தலைவர் முகமது அக்தர் சித்திக் பேசினார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் டில்லி தேசிய ஆசிரியர் கல்விக்குழு தலைவர் முகமது அக்தர் சித்திக் பேசியது: 

                 அண்ணாமலை செட்டியாருக்கு 80 ஆண்டுகளுக்கு முன் இருந்த தொலைநோக்கு முயற்சி இப்பகுதி கல்வி தரத்தை மாற்றியதோடு, உயர் கல்வி வாய்ப் பினை வழங்கியுள்ளது. இந்த உலகம் போட்டி, பொறாமை, சவால்கள் நிறைந்தது. சவால் களை எதிர்கொள்ளவும், வாய்ப் புகளை பயன்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து போராட நீங்கள் இங்கே பெற்ற அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் சவால்களை கண்டு ஒதுங்க வேண்டாம். சூழ்நிலை புரிந்து செயல்பட வேண்டும்.

                       நாட்டின் வளர்ச்சிக்கு அடிப் படை கல்வி அவசியம். தரமான கல்வியின் மூலம் தான் பொரு ளாதார வளர்ச்சியை காண முடியும். 2009ம் ஆண்டில் தொடக்கக் கல்வி அடிப்படை உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. வளர் பருவத்தினர் அனைவருக் கும் இடை நிலைக் கல்வி அளிக்க தேசிய இடைநிலை கல்வித் திட்டம் செயலாற்றி வருகிறது. நமது நாட்டில் 12 சதவீதத்தினரே உயர் கல்வி பெற்றுள்ளனர். 2020ம் ஆண்டு வாக்கில் 500 மில்லியன் இளைஞர்களுக்கு தொழிற்கல்வி அளிக்கப்படும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

                    நாட்டில் 30 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை தேசிய வளர்ச்சியை பெரிதும் பாதிக் கும். வளரும் நாடுகளையும் சேர்த்து எல்லா நாடுகளிலும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் என்ற நம்பிக் கையில் பொருளாதார உலகமயமாக்கல் திட்டம் தொடங்கப்பட் டுள்ளது. இந்தத் திட்டம் மக்களின் நிலையை மேம்படுத்தும். கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டம் சமுதாயத்தின் சில பகுதியினருக்கு மட்டுமே கூடுதலான பயன்களை அளித்துள்ளது. நலிந்த மக்களையும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களையும் தவிர்த்துள்ளன.

                     வெளிநாட்டு பொருளாதார நிறுவனங்கள் தங்களது அளவு கடந்த செல்வாக்கை பயன்படுத்தி தங்களின் மிகுந்த லாப கொள்கையை கொண்டு செயல் படுவது நம் அரசாங்க நலத்திட் டங்களுக்கு சவாலாக உள்ளது. நமது மக்கள் தொகை நூறு கோடியை தாண்டியதால் திட்டமிடுபவர்களுக்கு சவாலான விஷயமாக உள்ளது. இலக்கை அடைய தீவிர வேலையில் ஈடுபடுபவர்கள் பெரும் சோதனைகளை சந்திக்க நேரிடும். அப்போது நீங்கள் திடமான பொறுமை மற்றும் விடா முயற்சியுடன் எதிர் கொள்ள வேண்டும். மக்களாட்சி கோட் பாட்டை பலப்படுத்துவது நமது கடமையாகும்.

                       பொருளாதார உலகமாக்குத் தல் கலாசார உலக மயமாக்கலுக்கு வழிவகுத்தது. இதனால் பல்வேறு தரப்பட்ட கலாசார பண்பாட்டு சூழ்நிலையில் உள்ள மக்கள் ஒருவரோடு, ஒருவர் பழகிக் கொள்ள ஏதுவாக உள்ளது. நம் பண்பாடு மற்றும் கலாசாரத்தை மதித்து அமைதியுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது கலாசார மற்றும் மத வேறுபாடுகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு சமுதாய ஒற்றுமை மற்றும் நாட்டு அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும்.

                   பொறுப்புள்ள குடிமக்களாகிய நீங்கள் நம் நாட்டில் ஊழல் அரக்கனை ஒழிப்பதில் கவனமாய் இருங்கள். நாட்டின் வளத்தை அழிப்பதில் ஊழல் பெரும்பங்களிப்பதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கிறது. கல்வித் துறையில் ஊழல் மலிந்து வருவது கல்வி நிலையங்களில் சீர்கேடுகள் நடைபெற ஏதுவாகிறது. கல்வித் துறையை சீர்தூக்க கடமையுணர்வு, உண்மை, ஒற்றுமை, நீதி, நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

                       நாட்டின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. இளைஞர்களை நல்வழிப்படுத்தி நாட்டை சிறப்பு மிக்க நாடாக மாற்ற வேண்டும். உங்களுடைய திறமை, அறிவு, சமூக பற்று மற்றும் உங்களுக்குள் வளர்ந்து வரும் துறைசார் அறிவுத்திறனால் நாட்டை சீர்மிகு நாடாக மாற்றுங்கள். சமுதாயத்தில் நிகழும் அனைத்து சீர்கேடுகளையும் களைந்து நம் சந்ததியினக்கு நாட்டை வளமுடன் கொடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அதற்கு தரமான கல்வி ஒன்றுதான் சிறந்த வழி என்பதை உணர வேண்டும். இவ்வாறு முகமது அக்தர் சித்திக் பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior