உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

வாகனங்களுக்கு ஆன்-லைனில் தேசிய பெர்மிட்




              வாகனங்களுக்கு தேசிய பெர்மிட் பெற ஜூலை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்,'' என, போக்குவரத்துத் துறை கமிஷனர் ராஜாராம் தெரிவித்தார். போக்குவரத்துத் துறை கமிஷனர் எம்.ராஜாராம் நேற்று மதுரையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களை ஆய்வு செய்தார். 

போக்குவரத்துத் துறை கமிஷனர் எம்.ராஜாராம் கூறியதாவது: 

                     நெடுஞ்சாலைகளில் விபத்தை குறைப்பதில், அவசர கால நிவாரண மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறோம். மதுரையில் இறப்பு விபத்துகளை பொறுத்தவரை 2008ல் 137பேர் இறந்துள்ளனர். 2009ல் 122 ஆக குறைந்துள்ளது. இதற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள விபத்து நிவாரண மையங்கள் காரணமாக உள்ளதென தெரிகிறது. இதனால் விபத்தில் சிக்குவோருக்கு உரிய முதலுதவி கிடைக்கிறது. மதுரை ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பல முன்மாதிரியான செயல்பாடுகள் உள்ளன. விபத்துகள், பாதிப்புகளை படம் பிடித்து கண்காட்சியாக வைத்துள்ளனர். ஓட்டுனர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) பெற வருவோருக்கு விபத்து குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கின்றனர். இதை மாநிலம் முழுவதும் உள்ள 73 ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

                      ஆட்டோ பெர்மிட் வழங்கும் நடைமுறையில் தற்போது மனுக்கள் எதுவும் நிலுவையில் இல்லை. மதுரையில் கடந்த மே இறுதி வரை 2,046 பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் மனுசெய்த 32 ஆயிரம் பேருக்கு, பெர்மிட்டுக்கு முந்தைய "புரொசீடிங்' வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்டோ வாங்கிய பின் பெர்மிட் வழங்கப்படும். பள்ளி வாகனங்களில் பழைய வாகனங்களுக்கு ஆறு மாதங்களுக்குள் வேகத்தடை கருவி பொருத்த வேண்டும். புதிய வாகனங்கள் எனில் பெர்மிட் வாங்கும்போதே அவற்றை பொருத்தியாக வேண்டும். சுப்ரீம் கோர்ட் வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக, வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லாரி உட்பட வாகனங்களுக்கு, "நேஷனல் பெர்மிட்' வழங்கும் புதிய நடைமுறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில் புதிய நடைமுறையாக ஜூலை முதல் ஆன்-லைனில் விண்ணப்பித்து உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் எல்.பி.ஜி., சிலிண்டர் பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே புதிதாக அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை அதுகுறித்து பரிசீலிக்கப்படும். அமைச்சுப் பணியாளர் நியமனம் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜாராம் கூறினார்.

Read more »

நல்ல பி.இ. கல்லூரிகள் எவை? மாணவர்களே தேர்வு செய்ய வசதி- அமைச்சர் பொன்முடி தகவல்


                    நல்ல, தரமான பி.இ. கல்லூரிகளை மாணவர்களே தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகள் பற்றிய தகவல்கள் www.tndte.com என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் தகுதி போன்ற தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறினார். 

                         பி.இ. கலந்தாய்வுக்கு முன்பு, கல்லூரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று அது பற்றிய விவரங்களைச் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள், பெற்றோர் கல்லூரிகளின் நுழைவு வாயிலிலேயே நிறுத்தப்படுகின்றனர். அதனால் கல்லூரிகள் பற்றிய உண்மை நிலையை அவர்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.  அவர்கள் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் சேர்ந்த பின்னர், தங்கள் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லை, ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை, தங்களை வேறு ஒரு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றில் புகார் செய்கின்றனர். மாணவர்கள் இவ்வாறு அவதிப்படுவதைத் தவிர்க்கும் வகையில் கல்லூரிகளைப் பற்றிய உண்மை விவரங்கள் அதாவது கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களின் தகுதி போன்ற விவரங்கள் அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தினமணியில் கடந்த 3-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.இ. விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வாய்ப்பு (ரேண்டம்) எண்களை வழங்கினார். 

அதன் பின்னர் அமைச்சர் கூறியது: 

                    நாட்டில் இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளை  மேம்படுத்துவது, புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவது ஆகியவற்றில் ஏ.ஐ.சி.டி.இ. புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள சில கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன. அதனால் ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பின் தென் மண்டல கல்லூரிகள் பற்றிய விவரங்கள் அந்த அமைப்பின் இணையதளத்தில் இல்லை.  எனவே, மாணவர்கள் நல்ல கல்லூரிகளைத் தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், அவற்றில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு தகுதி வழங்குவதற்காக, அண்ணா பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு செய்து, கல்லூரிகளில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை அவர்களின் தகுதி போன்ற விவரங்களைச் சேகரித்துள்ளன. அந்த விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும். அரசு ஒதுக்கீட்டிலேயே தேவையான பி.இ. இடங்கள் உள்ளன. எனவே, பி.இ. இடம் வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

Read more »

திருச்சி கல்வி மாவட்டத்தில் 1456 மாணவர்களின் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்

          
                  திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளைச் சேர்ந்த 1456 மாணவ, மாணவிகளின் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்களைக் காணவில்லை.  தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 26 ஆம் தேதி வெளியிடப்பட்டன. 

                     இதைத் தொடர்ந்து, மதிப்பெண் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இதன்படி சென்னையிலுள்ள தேர்வுத் துறை அலுவலகத்திலிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பும் பணி கடந்த சில நாள்களாக மேற்கொள்ளப்பட்டது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் லாரி மூலமாக சனிக்கிழமை திருச்சி வந்தன.  இதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.  திருச்சி வருவாய் மாவட்டத்தில் அடங்கிய திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 120 பள்ளிகளுக்கும், லால்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளுக்கும், முசிறி கல்வி மாவட்டத்தில் உள்ள 72 பள்ளிகளுக்கும் மதிப்பெண் சான்றிதழ்கள் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.  

                இதைத் தொடர்ந்து, திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன்பாக, புத்தூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அவற்றைச் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, 11 பள்ளிகளைச் சேர்ந்த 1456 மதிப்பெண் சான்றிதழ்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கி. சுவாமிநாதனுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் விசாரணை நடத்தினார்.  

மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியது:

                              "சென்னையிலிருந்து லாரி மூலமாக 3 மாவட்டங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சிக்கு வந்தன. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கும் வகையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இதில் திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 120 பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களைச் சரிபார்த்த போது 11 பள்ளிகளைச் சேர்ந்த 1456 மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது.  சென்னையிலிருந்து அனுப்பும் போது தவறுதலாக அங்கேயே வைத்துவிட்டார்களா, அல்லது திருச்சியில் மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து விட்டு, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கொண்டு சென்ற போது அந்த மாவட்டங்களின் மதிப்பெண் சான்றிதழோடு சேர்ந்து விட்டனவா என்பது தெரியவில்லை என்றார் அவர்.

Read more »

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்: 1,500 மாணவர்களுக்கு அழைப்பு


                   எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவ-மாணவியரைச் சேர்க்க சென்னையில் வரும் 28-ம் தேதி முதல் கட்ட கவுன்சலிங் தொடங்குகிறது.  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் தொடர்ந்து 5 தினங்களுக்கு ஜூலை 2-ம் தேதி வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெறும். இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கை ஜூலை 3-வது வாரம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கவுன்சலிங் நடைபெறுகிறது. 

இணையதளத்தில்...:  

               ரேங்க் பட்டியல் அடிப்படையில் கவுன்சலிங் அட்டவணை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் ரேங்க் பட்டியல்:  முதல் நாளான ஜூன் 28-ம் தேதியன்று (திங்கள்கிழமை) மாற்றுத் திறனாளிகள், விளையாட்டில் சிறந்து விளங்குவோர், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கும் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 பெற்று சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் கவுன்சலிங் நடைபெறும். மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சலிங் இடத்திலேயே மருத்துவப் பரிசோதனை நடத்தி மதிப்பீடு செய்யப்படும்.  மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களில், 42 இடங்கள் (3 சதவீதம்) ஒதுக்கப்படும். இந்தக் கல்வி ஆண்டில் (2010-11) மொத்தம் 78 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.  விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு 3 எம்.பி.பி.எஸ். இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 2 எம்.பி.பி.எஸ். இடங்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 3 எம்.பி.பி.எஸ். இடங்களும் ஒதுக்கப்படும். சிறப்புப் பிரிவினருக்கான ரேங்க் பட்டியல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார். 

கட்டணம் எவ்வளவு? 

                       கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அட்டவணைப்படி கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கிடைக்காவிட்டாலும்கூட, கவுன்சலிங் அட்டவணைப்படி கட்-ஆஃப் மதிப்பெண் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மறுகூட்டல், மறு மதிப்பீடு மூலம் திருத்தப்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுன்சலிங் அட்டவணைப்படி தகுந்த ஆதாரங்களுடன் கலந்து கொள்ளலாம்.  கவுன்சலிங்குக்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் வர வேண்டும். மருத்துவக் கல்லூரி ஆண்டுக் கட்டணம் ரூ.10,495 மற்றும் கவுன்சலிங் கட்டணம் ரூ.500-க்கு  The Secretary, Selection Committee, Kilpauk, Chennai-10’ என்ற பெயருக்கு இரண்டு  டி.டி.க்களை கவுன்சலிங் வரும்போது எடுத்து வர வேண்டும். 

கட்டணம் திரும்பக் கிடைக்காது:  

                              எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதிக் கடிதம் பெற்ற பிறகு, பி.இ. உள்ளிட்ட வேறு படிப்புகளில் சேரச் செல்லும் நிலையில், மேலே குறிப்பிட்ட கட்டணம் திரும்பத் தரப்பட மாட்டாது என்றார் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

Read more »

பி.இ: ஜூலை 5-ல் பொதுப்பிரிவு கவுன்சலிங்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் ரேண்டம் எண்களை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர்

                             லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், பி.இ. பொதுப்பிரிவு கவுன்சலிங் ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது. பி.இ. கவுன்சலிங் தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண்களை உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கம்ப்யூட்டர் மூலம் 2 நிமிஷங்களில் செவ்வாய்க்கிழமை வழங்கினார். பி.இ. படிப்புகளில் சேருவதற்கு 2 லட்சத்து 2 ஆயிரத்து 133 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இவற்றில் அகாதெமி பிரிவில் 95 ஆயிரத்து 600 மாணவர்கள், 65 ஆயிரத்து 917 மாணவிகள் என 1 லட்சத்து 61 ஆயிரத்து 517 விண்ணப்பங்களும், தொழிற்பிரிவில் 5 ஆயிரத்து 634 மாணவர்கள், 255 மாணவிகள் என 5,889 பேர் என  மொத்தம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பத்துள்ளனர்.   
ஜூன் 18-ல் ரேங்க் பட்டியல்:  
                 பி.இ. தரவரிசைப் பட்டியல் ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதை அடுத்து ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாக ஒரே நாளில் முதலாண்டு பி.இ. வகுப்புகள் தொடங்கப்படும்.  அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் நடத்தப்படவுள்ள தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளுக்கான புத்தகங்கள் வகுப்புகள் தொடங்குவதற்குள் வெளியிடப்படும் என்றார் அவர். 
எந்தெந்த பிரிவினருக்கு எப்போது கவுன்சலிங்? 
விளையாட்டு வீரர்கள் - ஜூன் 28
தொழிற்பிரிவு மாணவர்கள் - ஜூன் 29 முதல் ஜூலை 3
மாற்றுத் திறனாளிகள் - ஜூலை 4
பொதுப்பிரிவு மாணவர்கள் - ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 5
பிற மாநில மாணவர்கள் - ஜூலை 17

Read more »

பி.இ.: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை

             இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 67 ஆயிரத்து மாணவர்களில், 78,086 பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற ஆர்வம் உள்ளவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  இத்தகைய பி.இ. முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் மாணவர்கள் 49,143 பேர்; மாணவிகள் 28,943 பேர். 

                   மொத்தம் விண்ணப்பித்தவர்களில், இவர்களது எண்ணிக்கை விகிதம் 47 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.  பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கும் நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்தத் தகவலை வெளியிட்டார்.  இதேபோன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி உள்ளதாக ஏற்கப்பட்டுள்ள 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில், 6,440 மாணவ-மாணவியர் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற ஆர்வம் உள்ளவர்கள். 

கல்விக் கட்டணம் கிடையாது:  

                   இத்தகைய முதல் தலைமுறை மாணவர்கள், பி.இ. படிப்பில் சேர்ந்தாலோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தாலோ ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.  பி.இ. படிப்பில் அரசு கல்லூரியைப் பொருத்தவரை இத்தகைய மாணவர்கள் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.7,500 செலுத்தத் தேவை இல்லை. சுயநிதி கல்லூரிகளைப் பொருத்தவரை ஆண்டு கல்விக் கட்டணத்தைச் செலுத்தத் தேவை இல்லை. எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-ல், கல்விக் கட்டணமாகிய ரூ.4,000-த்தை இத்தகைய மாணவர்கள் செலுத்தத் தேவை இல்லை. 

ரூ.1.25 லட்சம் தள்ளுபடி:  

                       சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ-மாணவியர் சேரும் நிலையில், ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சம் செலுத்தத் தேவை இல்லை என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

Read more »

மேட்டூர் அணையை காலம் கடந்து பாசனத்துக்கு திறப்பதால் பயன் இல்லை


கடலூர்:
 
                 மேட்டூர் அணையைக் காலம் கடந்து திறப்பதால் பயன் இல்லை. இந்த மாதமே திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கருதுகிறார்கள். 
 
                    மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கும் காவிரி நீரைக் கொண்டு தமிழகத்தில், சுமார் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள். 1972க்கு முன்பு வரை ஜூன் 12-ல், மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா பகுதிகளில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காவிரி நீர் பிரச்னை தொடங்கிய பின்னர், கர்நாடக அரசு தனது அணைகளில் தேக்கி  வைத்த நீர் போக, வழிந்தோடும் உபரிநீர்தான் தமிழகத்துக்கு வழங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி முற்றிலும் தடைபட்டு, 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா சாகுபடி மற்றும் ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை அல்லது வெள்ளப்பெருக்கு என்ற இரு மாறுபட்ட நிலையைச் சந்திக்க நேரிடுகிறது.
 
              இந்த ஆண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்காததால் குறுவை சாகுபடி இல்லை. இனி வரும் சம்பா சாகுபடிக்காவது, உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று, டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.  2006-ம் ஆண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் 115 அடியாக இருந்தபோது, ஜூன் 12-ல் பாசனத்துக்குத் திறக்கப்பட்டது.  2007-ல் 109.8 அடி வரை உயர்ந்த பிறகு, ஜூலை 18-ல் திறக்கப்பட்டது. 2008-ல் 103 அடியாக இருந்தபோது, ஜூன் 12-ல் பாசனத்துக்குத் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு 93 அடியாக இருந்தபோது ஜூலை 28-ல் திறக்கப்பட்டது. தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் 81 அடியாக உள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கி விட்டது.  காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்க இருக்கிறது. எனவே மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு இருப்பதால் பாசனத்துக்குத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கருதுகிறார்கள். அணை நிரம்பவில்லை என்று கூறிக்கொண்டு, ஆகஸ்ட் வரை மேட்டூர் அணையை திறக்காமல் காத்து இருந்து, திடீரென பலத்த மழை பெய்து மேட்டூர் அணை நிரம்பி விடுவதால், அணையைத் திறக்கும் அதேநேரத்தில் வடகிழக்குப் பருவ மழையும் வந்து, டெல்டா நிலங்கள் வெள்ளக் காடாகக் காட்சி அளித்த ஆண்டுகளும் உண்டு. நீர் மேலாண்மையில் உள்ள குறைபாடுகளே பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார்கள் விவசாயிகள். மேட்டூர் அணையப் பிந்தித் திறந்த ஆண்டுகளில், கடைமடைப் பகுதிகளுக்கு (கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர்) காலம் கடந்துதான் நீர் கிடைக்கிறது. அதே நேரத்தில், கடைமடைப் பகுதிகள் வடகிழக்கு பருவமழையில் சிக்கி பாதிப்பைச் சந்திக்க நேரிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் பயிர்கள் நன்கு வளர்ந்து, மழை வெள்ளத்துக்குத் தாக்கு பிடிக்கும் நிலை உருவாகி இருக்கும் என்கிறார்கள். வீராணம் ஏரி நிரம்பி இருக்கும் நிலையில், ஜூன் 20-ம் தேதி மேட்டூர் அணை திறந்தால், 15 தினங்களில் நாற்றங்கால் பணிகளைத் தொடங்கி, ஆகஸ்ட் இறுதிக்குள் சம்பா நடவை முடித்துவிட முடியும்.
 
இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில்,
 
                     காலம் கடந்து தண்ணீர் திறப்பதால், வடகிழக்குப் பருவ மழை தொடங்கி, கடைமடைப் பகுதிகள் வெள்ளப் பாதிப்பைச் சந்திக்க நேரிடுகிறது. சம்பாவுக்குப் பிறகு உளுந்து சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.÷முன்னரே சம்பா சாகுபடியைத் தொடங்கி, வடகிழக்குப் பருவமழையில் குறைவு ஏற்பட்டால்கூட கர்நாடகத்தை அணுகி, நமக்கு உரிய காவிரிநீர் பங்கைப் பெற்று, சம்பா பருவத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். காலம் கடந்து நீர் திறந்தால், வெள்ளச் சேதத்தையும், பல நூறு டி.எம்.சி. நீர் வீணாய் கடலில் கலப்பதையும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்றார்.
 
இதுகுறித்து வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் கூறுகையில், 
 
                        மேட்டூர் அணையில் 70 அடி நீர் இருந்தபோதுகூட, பல ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் அணை திறக்கப்பட்டு இருக்கிறது. முன்னரே மேட்டூர் அணை திறப்பதால், உரிய நேரத்தில் சம்பா சாகுபடியைத் தொடங்கி முடிக்க முடியும். காலம் கடந்து திறப்பதால் வடகிழக்குப் பருவ மழையில் பயிர்கள் சிக்கி வெள்ளப் பாதிப்பை சந்திக்க நேரிடும். எனவே விரைவில் மேட்டூர் அணையை பாசனத்துக்குத் திறக்க வேண்டும் என்றார்.

Read more »

குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்: ஆட்சியர்

கடலூர்:

                      கடலூர் மாவட்டத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இப்பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்து உள்ளார். 

                       தமிழ்நாடு அரசு நடத்திவரும் மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கமானது, 4 மண்டல மற்றும் 52 மாவட்டக் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்ய இருக்கிறது.  விருப்பம் உள்ள குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றங்களை நடத்தி வரும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் ஆர்வலர்கள், நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை பெறுவதற்குக் கடைசி தேதி 30-6-2010 என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணம்

கடலூர்:

                    குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை (ஜூன் 16) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்:

காலை 9 மணி - பூண்டியாங்குப்பம் நியாயவிலைக் கடை திறப்பு விழா. 
மாலை 3 மணி: கருப்பஞ்சாவடி நியாயவிலைக் கடை திறப்பு விழா. 
3-30 மணி: வழுதலம்பட்டு இலவச கலர் டிவி வழங்கும் விழா. 
மாலை 4 மணி: கள்ளையங்குப்பம் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா. 4-30 மணி: குண்டியமல்லூர் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா. மாலை 5 மணி: கொத்தவாச்சேரி இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா.

Read more »

CPI (M) cadre detained

CUDDALORE: 

              About 105 cadre of the Communist Party of India (Marxist) were taken into preventive custody on Tuesday when they tried to disrupt train services at Thirupadiripuliyur railway station here. The protestors demanded that all trains passing through Cuddalore should stop at Thirupadiripuliyur. The cadres said that it would be helpful to commuters, particularly students, elderly and the ailing persons. It would also improve the economic condition of the town as more traders and businessmen would avail themselves of the services, they said.

Read more »

புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணி முடிவது எப்போது? போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்கும் விருத்தாசலம்

விருத்தாசலம் : 

                 விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடர்ந்து ஆமை வேகத்தில் நடப்பதால் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  விருத்தாசலத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடலூர் ரோட்டில் குப்பநத்தத்தில் இருந்து வேப் பூர் ரோட்டில் உள்ள மணலூர் வரை 9.1 கி.மீ., தூரத்திற்கு "தமிழ்நாடு ரோடு செக்டார் ப்ராஜெக்ட்' மூலம் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டு 2010 ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக குப்பநத்தத்தில் இருந்து மணலூர் இடைப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் முழுவதும் முடிவடைந்தது. அதுபோல் மணிமுக்தா ஆற்றில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணியும் முடிவடைந்து தற்போது போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. புறவழி சாலை ரயில் பாதையை கடந்து செல்வதால் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி ரயில்வே நிர்வாகம் மூலம்தான் இது போன்ற கட்டுமான பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக ரயில்வே மேம்பாலம் அமைக்க 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ப்பட்டு "இர்கான்' எனப்படும் இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷனிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஒப் படைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணி முடியாமல் இன்று வரை தொடர்ந்து ஆமை வேகத்திலேயே பணி நடந்து வருகிறது. இதுவரை பில்லர் அமைக் கும் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இதனால் வேப்பூர், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் இருந்து கடலூர் நோக்கிச் செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகரத்திற்குள் வந்து செல்லும் நிலையே உள்ளது.

                      குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியான கடைவீதி வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. தற்போது விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்களும் விருத்தாசலம் நகரத்தின் வழியாக செல்லும் வகையில் மாற்றி விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவிற்குள் புறவழிசாலை பணி முடித்திருந்தால் வேப்பூரில் இருந்து கடலூர் நோக்கி வரும் வாகனங்கள் நகரத்தை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சென்றிருக்கும். அந்த வகையிலாவது நகரத்தில் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்பிருந்திருக்கும். தினம், தினம் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துகளை தவிர்க் கும் வகையில் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரூ.160 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள்: அன்பழகன்

சிதம்பரம் : 

                   கடலூர் மாவட்டத்தில் 160 கோடி ரூபாய் செலவில் வெள்ளத் தடுப்பு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக சென்னை பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அன்பழகன் தெரிவித்தார்.

                      கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் காவிரி டெல்டா பாசன பகுதியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் 56 பிரிவுகளாக நடக்கிறது. மேட்டூரில் தண்ணீர் திறப்பதற்குள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை பொதுப்பணித்துறை நீர்வள பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் பார்வையிட்டார்.

பின்னர் சென்னை பொதுப்பணித்துறை நீர்வள பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் கூறியதாவது: 

                       வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பே பாசன வாய்க்கால் தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 15க்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் இருப்பதால் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும். இதுவரை நடந்த பணிகளில் முழுமையாக திருப்தி என கூற முடியாது. ஆனால் சில இடங்களில் மிக சிறப்பாக நடந்துள்ளது. மேலும் வாய்க்கால் கரைகள் கரையாமல் தடுக்க கரையை சரிவாக அமைப்பதுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் கரை பலப்படுத்தப்படுகிறது.புதிய வீராணம் திட்டத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வீராணம் மதகுகள் சீரமைப்பு மற்றும் பகிர்மான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் நிரந்தரமாக வெள்ள பாதுகாப்பு பணிகளுக்காக 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கரைகள் பலப்படுத்துதல், தடுப்பணை கட்டுதல், வடிகால் வாய்க்கால்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.கொள்ளிடக்கரை கீழணையில் இருந்து சிதம்பரம் வரை 60 கி.மீ., தூரம் கரையை பலப்படுத்தி சாலை அமைக்க 108 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாராக உள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.இவ்வாறு அன்பழகன் கூறினார். கடலூர் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற் பொறியாளர்கள் பெரியசாமி, கலியமூர்த்தி, முருகவேல், லால் பேட்டை உதவி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியல் வழங்கல்


கடலூர் : 

                      எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்தது. இதில் 30 ஆயிரத்து 873 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மே மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. 23 ஆயிரத்து 201 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப் பெண் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு பெற்றோருடன் நேரில் சென்று மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்றுச் சென்றனர். மேலும் மதிப்பெண் பட்டியல் பெற்ற மாணவர்கள் அரசு உத்தரவு படி அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புக்கான பதிவையும் செய்தனர்.

Read more »

அ.தி.மு.க.,-பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர்

ஸ்ரீமுஷ்ணம் : 

                 ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி. மு.க., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர். ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி.மு.க., மாஜி துணை செயலாளர் தங்க கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகர எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் சக்கரபாணி, நகர ஜெ., பேரவை தலைவர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சம்பந்தம், கீழ்புளியங்குடி கிளை செயலாளர் ரங்கநாதன் மற்றும் பாலு, செல்வம், நாகராஜ், மனுநீதிசோழன், மகளிரணி குமுதவள்ளி ஜெயலட்சுமி, நகர வன்னியர் சங்க தலைவர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் அமைச்சர் பன்னீர் செல்வம் இல்லத் தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தி.மு. க.,வில் இணைந்தனர். தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி பகுதியில் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் தங்க.ஆனந்தன், துணை செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, அவைத்தலைவர் சீனுவாசன், பேரூராட்சி துணைத் தலைவர் முருகானந்தம், ஒன்றிய பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

பெரும்பான்மை மக்களில் மூன்று சதவீதத்தினர் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்: வேல்முருகன்

கடலூர் : 

                      ஜாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்கினால் தான் நாட்டில் சமூகநீதி நிலை நாட்டப்படும் என எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க வலியுறுத்தி பா.ம.க., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமை தாங்கி பேசியதாவது: 

                     ஜாதி வாரியாக கணக் கெடுப்பதில் என்ன தவறு உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் 100 சதவீதத்தில் வெறும் 3 சதவீத இட ஒதுக்கீட் டையே அனுபவித்து வருகின்றனர். மீதமுள்ள 97 சதவீதத்தை ஆதிக்க ஜாதியினர் அனுபவித்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுக்கும் அரசு ஜாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இட ஒதுக்கீடு என்பது சாதாரண கிளார்க் முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வரை சமூக நீதி சமமாக இருக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண் டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, ஜாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்கினால் தான் சமூகநீதி நிலை நாட்டப்படும். ஜாதி வாரியாக கணக் கெடுக்க வலியுறுத்தி வரும் 28ம் தேதி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் வன்னியர்கள் அ.தி.மு.க.,- தி.மு.க., என எந்த கட்சியில் இருந்தாலும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.

Read more »

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

நெல்லிக்குப்பம் : 

                 நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடந்தது. துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மேலாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். எழுத்தர் பாபு வரவேற்றார். சேர்மன் கெய்க்வாட்பாபு கொழு கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசு வழங்கினார். சமுதாய அமைப்பாளர் உமா, அமுதா, செவிலியர்கள் விஜயலட்சுமி, ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் நடந்த கொழு கொழு குழந்தைகள் போட்டியில் 10 மாத குழந்தை பிரகதீஸ்வரன் முதல் பரிசை வென்றது. முகாமில் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வைத்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அப் போது தான் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க முடியும். மக்களிடம் மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

Read more »

மத்திய சிறைக் கைதிகளுக்கு இலவச தையல் இயந்திரம்


கடலூர் : 

                 கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு தமிழக சிறைப் பணி பேரவை சார்பில் 20 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. கடலூர் புனித அன் னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கிறிஸ் டினா லாரன்ஸ் சுகி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் எர்மின் விழா நோக்கம் குறித்து பேசினார். தமிழக சிறைப்பணி பேரவை கடலூர் கிளை பொறுப்பாளர் பீட்டர் செபஸ்டியன், லூர்து மேரி, லேம்பர்ட், லில்லி சற்குணம் சிறப்புரையாற்றினர். பின்னர் தமிழக சிறை பேரவை சார்பில் கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்காக வழங்கிய 20 தையல் இயந்திரங்களை சிறைத்துறை டி.ஐ.ஜி., கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். லூர்துமேரி நன்றி கூறினார்.

Read more »

செம்மொழி மாநாட்டு பாடல்: "சிடி' விளம்பரம் செய்ய வேண்டுகோள்

கடலூர் : 

                     கடலூர் மாவட்டத்தில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைய விளக்க பாடல் "சிடி' அலுவலர்கள் வாங்கி விளம்பரம் செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                       இம் மாதம் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட் டிற்கான மைய விளக்க பாடல் கொண்ட "சிடி' தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த பாடல் "சிடி' மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மேல்நிலைப் பள்ளிகள், உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசு அலுவலகங்களில் தலைமை அலுவலர்கள் உடனடியாக ஒப்புதல் கடிதத்துடன் தனி நபர் வாயிலாக மாவட்ட கலெக் டர் அலுவலகத்திலுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஞாயிறு நீங்கலாக வேலை நேரத்தில் மைய விளக்க பாடலின் "சிடி' பெற்று விளம்பரப்படுத் துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பொதுத்தேர்வு தேர்ச்சியை 5 சதவீதம் உயர்த்த நடவடிக்கை: சி.இ.ஓ.,

கடலூர் : 

                     பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி., தேர்வில் இந்த ஆண்டு 5 சதவீதம் தேர்ச் சியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சி.இ.ஓ., தெரிவித்தார். கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி நேற்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்து ஆய்வு மேற் கொண்டார்.ஆய்வின் போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை பார்வையிட்டு எஸ்.எஸ். எல்.சி., மற்றும் பிளஸ் 2வில் பள்ளி அளவில் முதல் மதிப் பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார். மேலும் பசுமை படை சார்பில் ஒருங்கிணைப்பாளர் பழனி முன்னிலையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட் டது. நிகழ்ச்சியில் டி.இ.ஓ., கணேசமூர்த்தி, அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் ஆஷா கிருஸ்டி, பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம், ஆசிரியர்கள், மாணவர்கள் உட் பட பலர் பங்கேற்றனர்.


பின்னர் சி.இ.ஓ., கூறுகையில், 

                   "மாவட்டத்தில் சேமக்கோட்டை மற்றும் சிதம்பரம் பச்சையப்பா பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி 35 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். மேலும் சேமக் கோட்டையில் நிதியுதவி பெறும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால் ஆசிரியர்களுக்கு மூன்று "இன்கிரிமென்ட்டை கட்' செய்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் நடப் பாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியை 5 சதவீதம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி பள்ளியில் காலியாக இருந்த கணித ஆசிரியர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Read more »

சைக்கிள் மீது கார் மோதல்: கணவர் பலி: மனைவி படுகாயம்


கடலூர் : 

                     சைக்கிள் மீது கார் மோதியதில் கணவர் இறந் தார். மனைவி படுகாயமடைந்தார். கடலூர் அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (42). இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடியில் இருந்து தனது மனைவி ராஜேஸ்வரியுடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சைக்கிள் மீது மோதியது. அதில் ராஜதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராஜேஸ் வரி (40) கடலூர் அரசு மரு த்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

ரயில் மறியல் செய்ய முயன்ற மா.கம்யூ.,வினர் 105 பேர் கைது

கடலூர் : 

                     கடலூரில் ரயில் மறியல் செய்ய முயன்ற மா.கம்யூ., கட்சியினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பான்பரி மார்கெட்டிற்கு மாற்றுப் பாதை அமைக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். ஏற்கனவே சென்ற அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும். கல்லூரி, அலுவலக நேரங்களில் காலை, மாலை என சிதம்பரம், விழுப்புரம் செல்ல கூடுதல் ரயில் இயக்க வேண்டும். கடலூர் - புதுச்சேரி - திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமையில் மா.கம்யூ.,வினர், கட்சி அலுவலகத்திலிருந்து திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.லாரன்ஸ் ரோடு ரயில்வே கேட் அருகே வந்த போது, டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தியதால் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதியம் 12.08 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனை கடந்து சென்றது. இதனைத் தொடர்ந்து அனைவரும் ரயில் பாதையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களிடம் பேச் சுவார்த்தை நடத்தியும், மறியலில் ஈடுபட முயன்ற 105 பேரை கைது செய்தனர். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒவ்வொரு பெட்டிக்கும் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Read more »

சிறுகிராமத்தில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

பண்ருட்டி : 

                       பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தில் குடிநீர் வசதி கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் காலனியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படவில்லை. இதனால் இப் பகுதியில் குடிநீர் கிடைக் காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50 பெண்கள் உட்பட 100 பேர் நேற்று காலை 10 மணிக்கு கடலூர் - சித்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் செய்தனர்.தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் மற்றும் வி.ஏ.ஓ.,சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியல் செய்தவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடன் நடவடிக்கை எடுப் பதாக போலீசா ர் உறுதியளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் மறியலை விலக்கிக் கொண்டனர்.இந்த திடீர் சாலைமறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

கிள்ளையில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்

கிள்ளை : 

                     கிள்ளையில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். சிதம்பரம் அடுத்த கிள்ளை தைக்காலைச் சேர்ந்தவர் சிவா. இவரது வீட்டிற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக புவனகிரி அடுத்த வடகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 15 பேர் வேனில் வந்தனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் ஓட்டினார். மாப்பிள்ளை பார்த்து விட்டு திரும்புகையில் கீழச்சாவடி அருகே முன் சக்கர டயர் வெடித்தது. இதில் வேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் வேனில் பயணம் செய்த வெற்றி (35), கணேசன் (45), சேகர் (45), நாகப்பன் (35), செல்வமணி (30) உட்பட 15 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

குழந்தைகள் கடத்தல் வதந்தியால் பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அருகே குழந்தைகளை கடத்துவதாக ஏற்பட்ட வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

                          பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் காலனியைச் சேர்ந்த தேவி வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்தனர். அப்போது தேவி சத்தம் போட்டதால் மர்ம நபர் கள் ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 10ம் தேதி இரவு மீண்டும் மர்ம நபர்கள் தேவி மற்றும் கெஜா வீடுகளில் புகுந்துள்ளனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தில் இப்பகுதி மக்கள் குழந்தை கடத்தல்காரர்கள் வீடு புகுந்திருக்கலாம் என்ற பீதியில் உள்ளனர். இதுகுறித்து தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் புதுப்பேட்டை போலீசாரிடம் கேட்ட போது அப்பகுதியில் குழந்தை கடத்தல் மற்றும் திருட்டு சம்பவம் நடந்ததாக ஏதும் புகார் இல்லை என்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior