உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

பஸ்களே வராத பஸ் நிலையம்

கடலூர்:
 
              நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலையத்தை அண்மைக்காலமாக பஸ்கள் புறக்கணித்து வருகின்றன.   நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு, 2008-ம் ஆண்டு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்தது முதல் ஓராண்டாக பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்களும் செல்வது இல்லை.    இதுகுறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் முயற்சியால், 2009 அக்டோபர் 1-ம் தேதி முதல் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வந்தன. ஆனால் 3 மாதங்கள்தான் இந்த நிலை நீடித்தது. மீண்டும் எந்த பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் செல்வது இல்லை. கடலூர்-நெல்லிக்குப்பம் வழித்தடத்தில் 6 நகரப் பஸ்கள் உள்ளன. இவைகள் நெல்லிக்குப்பத்தின் மேற்கு எல்லையான வைடிப்பாக்கத்தில் இருந்து முன்பு புறப்பட்டு வந்தன.  பஸ் நிலையம் திறக்கப்பட்ட பின், வைடிப்பாக்கம் வரை நகரப் பஸ்கள் செல்வதில்லை. போலீஸ் நிலையம் வரை மட்டும் சென்று திரும்பி விடுகின்றன. பஸ் நிலையத்துக்கு உள்ளேயும் செல்வதில்லை. நெல்லிக்குப்பம் பிரதானச் சாலையில் நின்றே பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. நெல்லிக்குப்பம் வழியாகச் செல்லும் நீண்ட தூரப் பஸ்களும், பஸ் நிலையத்துக்குள் சென்று வருவது சிரமமாக உள்ளது, காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, பஸ் நிலையத்துக்குள் செல்ல மறுத்து வருகின்றன.  போலீஸ் காவலர்கள் அங்கு இருந்தால் மட்டுமே பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் செல்கின்றன. பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்தால், குறைந்தபட்சம் இங்கிருந்து புறப்படும் பஸ்களில் ஏறுவதற்காவது பயணிகள் உள்ளே வருவார்கள் என்கிறார்கள் பொதுமக்கள்.  பஸ் நிலையத்துக்குள் 9 கடைகள், ஒரு ஹோட்டல், சைக்கிள் ஸ்டாண்டு, புறக் காவல் நிலையம், பஸ்களுக்கான நேரக் காப்பகம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வராததால், கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வியாபாரம் செய்யமுடியாத நிலை உள்ளது.   இந்நிலையில் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வராதது குறித்து, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து உள்ளார். அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்துபோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார்.

Read more »

கூலி உயர்வு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பண்ருட்டி:

              வாய்க்கால் தூர்வாரும் பணியில் கூலியை உயர்த்தித் தரக்கோரி கிராம மக்கள் கடலூர்-விழுப்புரம் சாலை மாளிகைமேட்டில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி வட்டம் மாளிகைமேடு கிராமத்தில் சித்தேரி கால்வாய் உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் இக்கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 100-ம் மேற்பட்ட பெண்கள் கூலியை உயர்த்தித் தரக்கோரி கடலூர்-விழுப்புரம் சாலை மாளிகைமேட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வட்டாட்சியர் ஆர்.பாபு, இன்ஸ்பெக்டர் செல்வம், அண்ணாகிராமம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், தமிழரசி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு நடத்தி சாலை மறியலை கைவிட செய்து, பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் கடலூர்-விழுப்புரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

சாலை விபத்தில் தீயணைப்பு வீரர் சாவு

விருத்தாசலம்:

           விருத்தாசலத்தில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் தீயணைப்பு வீரர் இறந்தார்.  விருத்தாசலத்தைச் சேர்ந்த குணாளன் (55) குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது, விருத்தாசலத்திலிருந்து கடலூர் சென்றுகொண்டிருந்த அரசு பஸ் மோதியது, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே குணாளன் உயிரிழந்தார். இது தொடர்பாக ஓட்டுநர் செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பஸ்கள் மோதல்: 2 டிரைவர்கள் சாவு

பண்ருட்டி:

           பண்ருட்டி அருகே திங்கள்கிழமை அதிகாலை அரசு மற்றும் தனியார் சொகுசு பஸ் ஆகியவை மோதிக்கொண்ட விபத்தில், இரு பஸ்களின் ஓட்டுனர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பஸ்களில் பயணம் செய்த 35 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் சொகுசு பஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 40 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பஸ்ûஸ தஞ்சாவூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (58) ஓட்டி வந்தார். இதேபோல் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. இதை பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்தார். இவ்விரு பஸ்களும் திங்கள்கிழமை அதிகாலை பண்ருட்டி சித்திரைச்சாவடி அருகே வரும் போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அரசு மற்றும் தனியார் சொகுசு பஸ் ஓட்டுனர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பஸ்களில் பயணம் செய்த காட்டுமன்னார்கோவில் புடையூர் கிராமத்தைச் சேர்ந்த நடத்துனர் குப்புசாமி (50), தஞ்சாவூர் சுப்பிரமணியன் (60), பட்டுக்கோட்டை ஆண்டாள் (60), கும்பகோணத்தைச் சேர்ந்த சுகன்யா (19), குமார் (14) உள்ளிட்ட 35-ம் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி. பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

திட்டங்களுக்குப் பணம் இல்லையா?

கடலூர்:

          கடலூர் நகராட்சியில் எந்த திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், அதிகாரிகள் பணம் இல்லை என்கிறார்கள் என்று திங்கள்கிழமை நடந்த நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

கடலூர் நகராட்சியின் இயல்புக் கூட்டம் நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது. 

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:  

 துணைத் தலைவர் தாமரைச் செல்வன்: 

சபையில் உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தில் தோண்டப்பட்ட சாலைகள் மாதக் கணக்கில் போக்குவரத்துக்குத் தகுதி அற்றதாகக் கிடக்கின்றன. குழந்தைக் காலனியில் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். 

 ராதாகிருஷ்ணன்: 

              நகராட்சியில் அண்மைக் காலமாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், அதிகாரிகள் பணம் இல்லை என்கிறார்கள்.  ரூ.5 லட்சம் திட்டத்துக்குப் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள், ரூ.45 லட்சத்துக்கான திட்டத்துக்கு உடனே அனுமதி அளிக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்.

         ராஜா: நகராட்சியில் திட்டங்களுக்குப் பணம் இல்லை என்கிறார்கள். ஆனால் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, ரூ.12 ஆயிரம் ஒதுக்குகிறார்கள். 

 தலைவர் தங்கராசு: 

          பணம் இல்லை என்று அதிகாரிகள் உறுப்பினர்களிடம் கூறுவது முறையல்ல. 

  திட்டத்தைப் பற்றி பேசினால் உறுப்பினர்களை என்னிடம் தெரிவிக்குமாறுதானே அதிகாரிகள் சொல்ல வேண்டும். நிதியைப் பெருக்க, வரி போடாத வீடுகளுக்கு வரி விதிப்பு செய்யுங்கள் என்றால் அதிகாரிகள் செய்வதில்லை.

 ஆனந்த்: 

        நகரில் விஷக்காய்ச்சல் அதிகமாகப் பரவி இருக்கிறது. நகராட்சி மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.÷தலைவர் தங்கராசு: மருத்துவ முகாம்கள் நடத்தலாம். 

 எதிர்க்கட்சித் தலைவர் குமார் (அ.தி.மு.க.): 

              நகரில் பூங்காக்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.26 கோடி ஒதுக்கியும் பயன் இல்லை. நகரில் சிக்குன்-குனியா காய்ச்சல் அதிகமாகப் பரவி உள்ளது. சாக்கடை தேக்கமும், கொசுத் தொல்லையுமே இதற்குக் காரணம். நகராட்சி செயல் இழந்து விட்டது.

வி.எஸ்.எல்.குணசேகரன்: ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் என்ன ஆயிற்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும். 

முத்து: நகரில் கட்டப்பட்டு உள்ள சாக்கடைக் கால்வாய்கள் ஒன்றுக் கொன்று மட்டம் சரியில்லை. இதனால் சாக்கடை ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து விட்டது. ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

தலைவர் தங்கராசு:

அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாகச் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தலாம். பாதாள சாக்கடைத் திட்டத்தில் 148 கி.மீ. நீளச் சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 72 கி.மீ. நீளச் சாலைகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளன. 22 கி.மீ. நீளம் மட்டுமே புதிய சாலை அமைக்கப்பட்டது. சர்தார்: போலி ரேஷன் கார்டுகள் என்று உண்மையான கார்டுகளையும் ரத்து செய்து விட்டனர். எனது வார்டில் 1,100 கார்டுகளில் 250 கார்டுகளை ரத்து செய்து விட்டனர். கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டைகளில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக அச்சிடப் படவில்லை.

Read more »

கடலூர் அருகே பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுப்பு



கண்டெடுக்கப்பட்ட கோழிச் சின்னம் பொறிக்கப்பட்ட பிரெஞ்சு செப்புக் காசு.​ ​(வலது)​ செப்புக்காசில் புதுச்சேரி என்று எழுதப்பட்ட மறுபக்கம்.
கடலூர்:
 
                கடலோர கிராமமான தியாகவல்லியில் பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.​ ​கடலூர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கச்சிராயர்.​ ​ கடலூர் திரைப்பட இயக்கச் செயலாளராகவும் குறும்படத் தயாரிப்பாளராகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.​ சாமிக்கச்சிராயர் தனது கிராமத்தில் தொடர்ந்து தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.​ ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள வயல் வெளியில் பழங்காலச் செப்பக்காசு ஒன்றை கண்டெடுத்தார்.​ வட்ட வடிவமான இந்தச் செப்புக் காசின் ஒரு புறம் கோழிச் சின்னமும்,​​ மறுபுறம் புதுச்சேரி 1837 என்றும் உள்ளது.இதுகுறித்துச் சாமிக் கச்சிராயர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:​ ​கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் புதுவை மாநிலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் அரிக்கமேடுவரை பல்லாண்டுகளாக பழந்தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் நாணையங்கள்,​​ பானை ஓடுகள்,​​ சுட்ட மண்ணால் செய்யப்பட்ட கலன்கள்,​​ ​ மது ஜாடிகள்,​​ பாசிமணிகள் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைத்து உள்ளன.​ ​கடலூர் கடற்கரையோர கிராமங்களில் ஆங்காங்கே காணப்படும் மணல் திட்டுகள் பல காலங்களில் நடந்த கடல்கோள்களால் அழிந்த நகரங்கள்,​​ கிராமங்களின் சுவடுகளாக உள்ளன.​ அத்தகைய மணல் குன்றுகளில் இருந்துதான் இத்தகைய பழங்கால பொருள்கள் கிடைத்து வருகின்றன.​ இந்த மணல் குன்றுகள் பல ரசாயனத் தொழிற்பேட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டது தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.​ ​தற்போது கிடைத்து இருக்கும் செப்புக்காசு கடலூர் பகுதியில் பிரெஞ்சு அரசின் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததை எடுத்துக் காட்டுகிறது.​ கிராமங்களில் கோழிக்காசு என்று முதியோர் பலர் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் கடலூர் பகுதிகளில் ஆபரணத் தொழிற்சாலைகள் இருந்தது முன்னரே கண்டறியப்பட்ட தகவல் ஆகும்.​ எனவே கடலூர் துறைமுகம் பழங்காலத்தில் மேன்மையுடன் செயல்பட்டு வந்ததையும் இங்கு வணிகம் சிறந்து இருந்ததையும் இந்தச் செப்புக்காசு எடுத்துக் காட்டுகிறது.​ விரைவில் இந்தக் காசு தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சாமிக் கச்சிராயர் தெரிவித்தார்.

Read more »

ஊராட்சி அலுவலகங்களுக்கு தலைவர்கள் வருவதில்லை! மாட்டுத் தொழுவமாக மாறும் அவலம்

கடலூர் : 

               ஊராட்சி தலைவர்களின் "ஈகோ' பிரச்னையால் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்கள் பயன்பாடின்றி பூட்டிய நிலையில் பாழடைந்து, காட்சி பொருளாக உள்ளது.

             உள்ளூர் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு உள்ளாட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக தேர் தல் நடத்தி கிராம பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் ஓரிடத் தில் கூடி கிராம பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், கிராம அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வசதியாக கிராமங்கள் தோறும் அரசு ஊராட்சி அலுவலகங்களை கட்டிக் கொடுத்துள்ளது. அவ்வாறு கடலூர் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளும், அண்ணாகிராமம் 42, பண்ருட்டி 42, குறிஞ்சிப் பாடி 49, காட்டுமன்னார் கோவில் 55, குமராட்சி 57, கீரப்பாளையம் 63, புவனகிரி 47, பரங்கிப்பேட்டை 41, விருத்தாசலம் 51, நல் லூர் 64, கம்மாபுரம் 53, மங்களூரில் 66 ஊராட்சிகள் என மாவட்டத்தில் 681 ஊராட்சிகள் உள்ளன.
            ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசின் நிதி மூலம் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. பொது மக்களிடம் குறைகளை கேட்பது, மனுக்களை பெறுவது, திருமண உதவித் தொகை, முதியோர், விதவை உதவித் தொகை பெற சான்றுகளில் கையெழுத்திடுவது, வீட்டு வரி, தண்ணீர் வரி ரசீதுகளில் கையெழுத்திடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்காக ஊராட்சித் தலைவர்கள் அலுவலகங்களுக்கு அவசியம் வரவேண்டும். ஆனால் ஊராட்சித் தலைவர்கள் அலுவலகங்களுக்கு வருவதில்லை. பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்கள் திறக்காமல் வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. சில அலுவலகங்கள் பராமரிப்பின்றி இரவு நேரத்தில் ஆடு, மாடுகளின் தொழுவமாகவும், சூதாட்ட விடுதிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தலைவர் ஒரு ஊரிலும், அலுவலகம் பக்கத்து ஊரிலும் இருந்தால் அதனை கவுரவ குறைச்சலாக நினைத்து அவர்கள் அலு வலகங்களுக்கு செல்வதில்லை. ஒரு சில தலைவர்கள் நகர் புறங்களில் குடியேறிவிட்டதால் அவர் கள் ஊராட்சிகளின் பக்கமே செல்வதில்லை. சில ஊராட்சிகளில் எழுத் தர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு எப்பொழுதாவது சென்று வருகின்றனர். தலைவரை அவரது வீட் டிற்கு சென்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

              அதே போல் ஊராட்சி அலுவலகங்களில் மாதம் தோறும் சாதாரணக் கூட்டம் மற்றும் அரசு அறிவிக்கும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண் டும். ஆனால் இந்த கூட் டங்கள் பெரும்பாலும் ஊராட்சி தலைவர்களின் வீடுகளிலேயே நடத்தப்படுகிறது. சில ஊராட்சிகளில் கூட்டம் நடத்தாமலே பதிவேடுகளில் கையெழுத்து வாங்கி கூட்டம் நடத்தியதாக அதிகாரிகளுக்கு ஊராட்சித் தலைவர்கள் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. கிராம பிரச்னைகளை கூடி பேசி தீர்வு காணவே அரசு ஊராட்சி அலுவலகங்களை கட்டித் தருகிறது. ஆனால் அங்கு சென்று பணிபுரிவதை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கவுரவ குறைச்சலாக கருதி தங்கள் வீட்டையே ஊராட்சி அலுவலகமாக செயல்படுத்தி வருகின்றனர். இதனால் அரசு கட்டிக் கொடுத்த ஊராட்சி அலுவலகங்கள் பல பயன்பாடின்றி பூட்டி பாழடைந்து வருகிறது. இதனைத் தவிர்த்திட ஊராட்சி அலுவலகங்கள் தினசரி குறிப்பிட்ட நேரம் திறந்திருக்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல் லையெனில் வீணாகி வரும் ஊராட்சி அலுவலகங்களை அப்பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்காவது ஒதுக்கீடு செய்தால் கட்டடம் வீணாவதை தடுக்கலாம்.
மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்களும் வீணாகிறது: 

                  மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளி லும் அரசு நிதி மூலம் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன. இந்த கட்டடங்களும், ஊராட்சி அலுவலகம் போன்றே பூட்டியே கிடக்கிறது. இங்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் வாராந்திர கூட்டங்கள் நடத்துவதில்லை. மகளிருக்கென மாவட்டம் முழுவதும் கட்டபட்ட இந்த அலுவலகங்களுக்காக அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் பணம் வீணானது தான் மிச்சம்.

Read more »

சத்யார்த்த தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமுஷ்ணம் வருகை

ஸ்ரீமுஷ்ணம் : 

        ஸ்ரீமுஷ்ணம் பூவராகவாமியை தரிசிக்க உத்திராதி மடத்தின் தற்போதைய பீடாதிபதி நாளை ஸ்ரீமுஷ்ணத்திற்கு வருகை தருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திராதி மடத்தின் தற்போதை பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் வழி வந்த ஸ்ரீசத் யார்த்த தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள உத்திராபதி மடத்திற்கு நாளை (10ம் தேதி) மாலை வருகை தருகிறார்.நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாள் ஸ்ரீமுஷ்ணத்தில் தங்கி பூவராகசுவாமியை தரிசனம் செய்கிறார். பீடாதிபதி வருகையையொட்டி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடக் கிறது. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது.

Read more »

கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமானப்பணி விரைவில் துவக்கம்

கடலூர் : 

                கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஒதுக் கப்பட்ட நிதியை ரயில்வே மேம்பாலத்திற்கு செலவிடப்பட்டதால் சுரங் கப்பாதை அமைக்கும் பணி தடைபட்டு வந்தது. தற்போது விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதைப்பணி முடிவடைந்து ஒரு சில மாதங்களில் ரயில் விடப்படவுள்ளது. இதனால் முன்பு இருந்ததைவிட அதிக எண்ணிக்கையில் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறை மார்க்கத்தில் வரவுள்ளது. அதனால் ரயில்வே கேட் அடிக்கடி திறந்து மூட வேண்டிய நிலை உள்ளதால் லாரன்ஸ் ரோட்டில் நிரந்தரமாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும். எனவே லாரன்ஸ் ரோட்டில் உடனடியாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு நலச்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின. 

                      தற்போது இந்த சுரங்கப்பாதை பணிக்காக அரசு 5.6 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. அதனால் சுரங்கப் பாதை அமைப்பதற்கான டெண்டர் விடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரயில்வே துறை மூலம் செய்யப்படும் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ரயில்வே துறையும் பாலம் கட்டுமானப்பணி வரைபடத்தை தென்னக ரயில்வே தலைமை பொறியாளருக்கு (பாலங்கள் மற்றும் வரைபடம்) அனுப்பி வைத்துள்ளது. ரயில்வே பணி முடிந்தவுடன் தொடர்ந்து நெடுஞ்சாலை பணிகள் துவங்கப்படவுள்ளது. லாரன்ஸ் ரோட்டில் ராட்சத குடிநீர் குழாய்கள், கேபிள்கள் செல்வதால் அதை அகற்றி மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Read more »

கடலூரில் நாளை ஆர்ப்பாட்டம்: ஐக்கிய ஜனதாதளம் முடிவு

சேத்தியாத்தோப்பு : 

                   விலைவாசி உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் நாளை (10ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்த ஐக்கிய ஜனதாதளம் முடிவு செய் துள்ளது. ஐக்கிய ஜனதாதளம் மாவட்ட செயற்குழு கூட்டம் சேத்தியாத் தோப்பில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் திருவரசமூர்த்தி, நகர தலைவர் பெரியண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.மாநில துணை தலைவர் ஜெங்கால், பொதுச் செயலாளர் எழிலோவியன், செயலாளர் இப்ராம் பால், ஊனமுற்றோர் பிரிவு தலைவர் காமராஜ், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு பொதுச் செயலாளர் சின்னையன் உள்ளிட்டோர் பேசினர்.அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தேசிய தலைமையின் முடிவை ஏற்றும் நாளை (10ம் தேதி) கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாவட்டத்தில் பரவி வரும் விஷகாய்ச்சல் நோயை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு-விருத்தாசலம் சாலையை சீரமைக்க வேண்டும். சேலம், சென்னை செல்லும் அரசு பஸ்களை சேத்தியாத்தோப்பு வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நகர செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Read more »

பெயரளவில் தமிழில் அர்ச்சனை: குன்றக்குடி ஆதீனம் வேதனை

சிதம்பரம் : 

                  கோவில்களில் தமிழில் அர்ச்சனை பெயரளவில் பெயர் பலகையில் மட்டுமே உள்ளது. அதை நடைமுறைபடுத்த வேண்டும் என குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.  சிதம்பரத்தில் மூன்று நாள் நடந்த 12வது உலக சைவ மாநாட்டின் நிறைவுரையாக குன்றக்குடி ஆதீனம் பேசியதாவது: சைவம் என்பது வெறும் சமயம், தத்துவம் மட்டுமல்ல, வாழ்க்கை முறை. சைவ சமயம் கடைபிடிக்கப்படாததால், வீடுகளில் விருந்தோம்பல், தங்க வைப்பது போன்ற மரபுகள் மறைந்து விட்டன. குடும்பங்கள் இன்றைக்கு வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன. இதனால் உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் அதிகரித்துவிட்டன. குடும்ப வாழ்க்கை முறைகள் மாறி வருகின்றன. இன்றைய திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை. ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. துணையை பிரிந்த விலங்கினங்கள் கூட தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் உண்டு. ஆனால், கணவரை பிரிய மனைவியும், மனைவியை பிரிய கணவரும் விவகாரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கின்ற நிலை இன்றைக்கு உள்ளது. எனவே, பெரியபுராணம் காட்டிய வாழ்க்கை முறைக்கு நாம் மாற வேண்டும். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வழக்கம் 1961ம் ஆண்டு தமிழகத்தில் அரங்கேறியது. அப்போது, முதல்வராக இருந்த பக்தவச்சலத்திடம் 63 அறிஞர்கள் நேரிடையாக சென்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. அது பெரும்பாலும் இன்று கோவில்களில் பெயரளவில் பெயர் பலகையில் மட்டுமே உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. கோவிலில், தமிழில் அர்ச்சனை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு குன்றக்குடி ஆதீனம் பேசினார்.

Read more »

நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிதம்பரத்தில் சாலை போடும் பணி

சிதம்பரம் : 

               சிதம்பரத்தில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு போல்நாராயணன் தெரு சாலை 12 லட்சம் ரூபாய் செலவில் போடும் பணி துவங்கியது. சிதம்பரம் நகரில் போக் குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடலூர் மார்க்கம் இருந்து சீர்காழி மார்க் கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் போல் நாராயணன் தெருவழியாக திருப்பி விடப் பட்டது.  இதனால் கனரக வாகனங் கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அந்த சாலை வழியாக சென்று வருகிறது. ஆனால் அந்த சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவில் இருந்தது. மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக தண் ணீர் தேங்கி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கலெக்டரின் மாவட்ட பொது நிதி 12 லட்சத்தில் சாலைபோட ஒதுக்கீடு செய் யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக பணி நடந்து வருகிறது. 8 மீட்டர் அகலத்தில் சாலை உயர்த்தி போடப்பட்டு வருகிறது.

Read more »

உழவர் சந்தைக்கு வாருங்கள் : வேளாண் அலுவலர் அழைப்பு

விருத்தாசலம் : 

              பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி பயனடையுமாறு வேளாண் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து விருத்தாசலம் உழவர் சந்தை வேளாண் அலுவலர் நந்தினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

                   விருத்தாசலம் உழவர் சந்தை தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினசரி சராசரியாக 50ம் குறைவில்லாத விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகள், கீரைகள், பழங்களை விற்கின்றனர். குறைந்த விலை, சரியான எடை விற்கப்படுவதால் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். தற்போது நிறைய அளவில் உழவர் அடையாள அட்டை கேட்டு விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். எனவே பொதுமக்கள் உழவர் சந்தையால் பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Read more »

கடலூர் இணைப்பு சாலையில் மெகா பள்ளம் : ஒரே பாதையில் வரும் வாகனங்களால் விபத்து

கடலூர் : 

              கடலூர் ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் "மெகா சைஸ்' பள்ளங்கள் உள்ளதால் பஸ் நிலையத்திலிருந்து வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல ஒரே பாதையை பயன் டுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

                 கடலூர் பஸ் நிலையத்திலிருந்து சிதம்பரம் மார்க்கம் செல்லும் பஸ் கள் செல்வதற்காக ரயில்வே மேம்பாலத்தையொட்டி இணைப்பு சாலை அமைக்கப் பட்டுள் ளது.  இதனால் சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள் மேம்பாலத்தின் வலதுபுற சாலை வழியாகவும், பஸ் நிலையத்திலிருந்த வரும் வாகனங்கள் இடது புற சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத் தில் இடதுபுற சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பஸ் நிலையத்திலிருந்து சிதம்பரம் வரும் பஸ்கள், மேம்பாலத்தில் வலதுபுற சாலை வழியாகவே செல்கின்றன. இந்த சாலை குறுகிய பகுதி என்பதால் ஒரே வழியில் வாகனங்கள் வந்து, செல்லும்போது நெரிசல் காரணமாக தொடர் விபத் துக்கள் ஏற்பட்டு வருகிறது.
                மேலும் மேம்பாலத்திலில் வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக பாலத்தின் இறக் கத்தையொட்டிய வலது புற சாலையில் திரும்பும் போது திடீரென எதிரில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்த்திட ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் உள்ள மெகா பள்ளத்தை மூடி சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு : பறக்கும் படை கண்காணிப்பு

கடலூர் : 

             பிளஸ் 2 செய்முறைத் தேர்வை கண்காணிக்க தலைமையாசிரியர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக செய்முறைத் தேர்வுகள் இம்மாதம் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கான ஆரல், ஓரல் நடந்தது. தொடர்ந்து நேற்று (8ம்தேதி) முதல் அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், தொழில் கல்வி செய்முறைத் தேர்வுகள் நடக்கிறது. இத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க ஒரு தலைமையாசிரியர் தலைமையில் 3 முதுகலை ஆசிரியர்கள் கொண்ட இரண்டு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது மாவட்டம் முழுதும் அதிரடி சோதனை மேற் கொண்டு முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தேர்வு அறையிலிருந்து மாணவ, மாணவிகள் வெளியேற்றப்படுவதுடன் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித் துறை எச்சரித்துள்ளது.

Read more »

சுற்றுலா சென்று திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு

சிதம்பரம் : 

                அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கல்வி சுற்றுலா சென்ற சிறுபான்மை மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் இருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவிகள் கல்வி சுற்றுலா சென்றனர். அதில் புவனகிரியில் இருந்து 7 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடந்த 2ம் தேதி தென் மாவட்டங்களுக்கு கல்வி சுற்றுலா சென்றவர்கள் கடந்த 6ம் தேதி திரும்பினர். அவர்களை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மதினா, ராமலு, மாணிக்கவாசகம், தலைமை ஆசிரியர் சுந்தரம் ஆகியோர் வரவேற்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Read more »

இந்திய கம்யூ., பஞ்சர் ஒட்டும் போராட்டம் : அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் வாபஸ்

திட்டக்குடி : 

                    திட்டக்குடியில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பஞ்சர் ஒட்டும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.திட்டக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்காததைக் கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் நேற்று மாலை பஞ்சர் ஒட்டும் போராட்டம் நடத்தப் பட இருந்தது. 

                     அதனைத் தொடர்ந்து நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் பேச்சவார்த்தை நடந்தது. தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் பாலு, மகாராணி, நெடுஞ் சாலைத்துறை இளநிலை உதவியாளர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழு சுப்ரமணியன், வட்ட செயலாளர்கள் மகாலிங்கம், சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தொழுதூர்- கருவேப்பிலங்குறிச்சி நெடுஞ்சாலை சீரமைப்பு பணிக்கு 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இறையூர்- கண்டப்பங்குறிச்சி சாலையில் நடைபெற்று வரும் பேட்ஜ் ஒர்க், 20 லட்சம் மதிப்பில் தொளார் கைகாட்டி- வேப்பூர் சாலை, திட்டக்குடி - ஆவட்டி, தொழுதூர் - பனையாந்தூர், ஆவினங்குடி - நாவலூர், கொட்டாரம்- செங்கமேடுகுடிக்காடு, ஆவட்டி - சிறுபாக்கம் உள்ளிட்ட சாலைகளை விரைவில் சீரமைக் கப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதனையேற்று இந்திய கம்யூ.,வினர் போராட் டத்தை கைவிட்டனர்.

Read more »

ஆசிரியர்கள் கடமை தவறாமல் செயல்பட்டால் இந்தியா முன்னேறும் : எம்.பி., அழகிரி பேச்சு

சிறுபாக்கம் : 

                  ஆசிரியர்கள் கடமை தவறாமல் செயல்பட்டால் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா வளர்ச்சியில் முதன்மையாக இருக்கும் என எம்.பி., அழகிரி பேசினார். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக் கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஐவதுகுடியில் நடந்தது. விழாவிற்கு சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமை யேற்று ஜே.ஆர்.சி., நிறுவனர் படத்தை திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர்கள் ஐவதுகுடி கோவிந்தராசு, நகர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் குருநாதன் வரவேற்றார்.

ஜே.ஆர்.சி., கொடியை ஏற்றி வைத்த எம்.பி, அழகிரி பேசியதாவது:
 
                  இந்தியாவில் கேபினட் செயலர் முதல் மாநில அமைச்சர்கள், பல்வேறு துறைகள் இருந்த போதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாட வேண்டி இருப்பது வருத்தப்பட வேண்டிய செயலாக உள்ளது. இதற்கு ஜே.ஆர்.சி., சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவிகளை பயன்படுத்தி அரசே போலியோ சொட்டு மருந்து வழங்க அனுமதிக்க வேண்டும். கடந்த 10 நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு கூட் டத்தில் பேசும் போது இந் தியாவும், சீனாவும் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணம் இரு நாடுகளிலும் கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவர்கள் அதிக வளர்ச்சி அடைந்து நாட் டின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகின்றனர்.
                      இந்தியாவை காட்டிலும் சீனா 2.5 மடங்கு விவசாயத்தில் வளர்ச்சியடைந்து ஆசியா முழுக்க உணவு பொருட்களை வழங்கிட தயாராக உள்ளது. இதற்கு சீனாவில் 24 மணி நேரமும் விவசாயம், கல்வி, சமுதாய கட்டமைப்பை வலியுறுத்தி வருவதோடு, ஒற்றை ஆட்சி முறை அமல்படுத்தி வருவதே காரணமாக உள்ளது. இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறை இருப்பதால் தன்னிச்சையாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது. எந்த பகுதியில் இருந்து நாட்டை வளமான பாதைக்கு கொண்டு வருவது என்பதை உணர தாமதம் ஏற்பட்டு வருகிறது.

              என்னை பொறுத்தவரையில் பள்ளிகளில் கல்வி உட்பட ஒரே சமுதாயம், நாட்டின் வளர்ச்சிக்கான வழி உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்கள் கடமை தவறாமல் செயல் பட்டால் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா வளர்ச்சியில் முதன்மையாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதகமாக இருப்பது உள் நாட் டில் பல மொழி, கலாசாரங்களே. இதனை மாற்றிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சீனாவிற்கு அனுப்பி அங்குள்ள கல்வி முறை, சமூக கட்டமைப்பு உள்ளிட்டவைகளை பார் வையிட்டு வர கோரிக்கை வைத்துள்ளேன். இது நடைமுறை படுத்தினால் இந்தியா மேலும் வளர்ச்சியடைந்து உலக நாடுகளே திரும்பி பார்க்கும் நிலை ஏற்படும் என பேசினார். ஜே.ஆர்.சி., மாவட்ட இணை அமைப்பாளர் அருள்தாஸ் நன்றி கூறி னார்.

Read more »

விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு பரிசு

கடலூர் : 

           மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கடலூர் மகாலெட்சுமி ஐ.டி.ஐ., மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந் தது. இதில் கடலூர் மகாலெட்சுமி ஐ.டி.ஐ., மாணவர்கள் கால்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தையும், 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் இரண்டு இடங்களையும், ஈட்டி எறிதலில் முதலிடத்தையும், 400 மீட்டர் ஓட்டத்தில் இரண் டாம் இடத்தையும், குண்டு எறிதலில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். புள்ளிகள் அடிப்படையில் மாவட்டத்தில் இரண் டாம் இடத்தை பிடித்த மாணவர்கள் மற்றும் பயிற் சியாளர்களை பாராட்டி தாளாளர் ரவி ரொக்க பரிசு வழங்கினார். துணை முதல்வர் தணிகாசலம் உடனிருந்தார்.

Read more »

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் பயனடைய மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு

சிறுபாக்கம் : 

            மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. 

இது குறித்து மங்களூர் வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:  

                  மங்களூர் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டம் நடப் பாண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு உற்பத்தியை அதிகரிக்க விதை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும், பயறு வகை விதைகள் வாங்கும் விவசாயிகளுக்கு குவிண்டால் விதைக்கு 2 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம், ஜிங்க் சல்பேட், டி.ஏ.பி., உரம், கைதெளிப்பான், தானிய குதிர்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நடுவீரப்பட்டு ஊராட்சி தலைவர் தொடர்ந்து செயல்பட உத்தரவு

நடுவீரப்பட்டு : 

            பதவி நீக்கம் செய்யப் பட்டவர் மீண்டும் ஊராட்சி தலைவராக தொடர கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியின் தலைவராக ஆறுமுகம் பதவி வகித்து வந்தார். இவர் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு செய் ததாக எழுந்த புகாரின் பேரில் கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்து கலெக் டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.இதனை ரத்து செய் யக்கோரி ஆறுமுகம் சீராய்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி முதன்மை செயலர் அஷாக் வர்தன் ஷெட்டி ஊராட்சி தலைவர் ஆறுமுகம் பதவி நீக்கம் செய்ததில் தெளிவான காரணத்தை குறிப்பிட்டு பதவி நீக்கம் செய்யவில்லை. அதனால் நடுவீரப்பட்டு ஊராட்சி தலைவராக ஆறுமுகம் தொடர்ந்து செயல்பட உத் திரவு பிறப்பித்தார். அதன் பேரில் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் நடுவீரப் பட்டு ஊராட்சி தலைவராக ஆறுமுகம் செயல் பட உத்தரவிட்டுள்ளார்.

Read more »

கோவில்களில் அறங்காவலர்களாக நியமிக்க விஸ்வகர்ம கைவினைஞர்கள் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் : 

                        கோவில்களில் விஸ்வகர்ம சமுதாயத்தினர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு, மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு, மருத்துவ காப்பீட்டு திட்ட அடை யாள அட்டை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா காட்டுமன்னார்கோவிலில் நடந்தது. அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் துரைக் கண்ணு, சுந்தரரேசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கண்ணையன் வரவேற்றார். நிறுவன தலைவர் சுப்பையன், மாநில தலைவர் சண்முகநாதன் பேசினர். எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி சேர்மன் கதிரவன் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

                  கூட்டத்தில் மாநில துணை தலைவர் அப்பாவு, பேரவை தலைவர் வடிவேல், பொதுச் செயலாளர் மாதவராஜ், தனுஷ்கோடி, செல்வராஜ், சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியுள்ள சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கைவினைத் தொழிலாளர் மற்றும் பொற்கொல்லர் நல வாரிய தலைவர், கோவில்களில் அறங்காவலர் மற்றும் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிகளின் விஸ்வகர்ம சமூகத்தினரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் : இந்து மக்கள் கட்சி முடிவு

பண்ருட்டி : 

              நெய்வேலி 21ம் வட் டத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காத என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து வரும் 15ம்தேதி ஆர்ப்பாட் டம் செய்ய இந்து மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

              நெய்வேலியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைக்கண்ணு, திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சிவபாபு முன்னிலை வகித்தனர். நகர தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நெய் வேலி 21ம் வட்டத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கு 40 ஆண்டாக மின் இணைப்பு வழங்காத என்.எல்.சி., நிர்வாகத்தை கண்டித்து வரும் 15ம் தேதி என்.எல்.சி.இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Read more »

15 பேரிடம் லஞ்சம் வாங்கிய கடலூர் பெண் அலுவலர் கைது

கடலூர் : 

                   தமிழக அரசின் திருமண உதவித்தொகை வழங்க பயனாளிகள் 15 பேரிடம் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் கனகசபை நகர் நடராஜன் தனது மகள் சுபத்திரா திருமணத்திற்காக தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைக்காக கீரப்பாளையம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பூங்கோதையிடம் மனு கொடுத்தார். இவரைப் போன்று பலர் மனு கொடுத்திருந்தனர். நடராஜன் உள்ளிட்ட மனுதாரர்களை நேற்று நேரில் அழைத்து 1,000 ரூபாய் பணத்துடன் மாலை கடலூரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வருமாறு பூங்கோதை கூறினார். கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் நடராஜன் புகார் செய்தார். அவர்கள் கூறியபடி நடராஜன் நேற்று மாலை 6.30 மணிக்கு கடலூர் செம்மண்டலம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அலுவலர் பூங்கோதையிடம், 1,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பூங்கோதையை(55) கைது செய்தனர். விசாரணையில் நடராஜனுக்கு முன்பாக மேலும் 14 பேரிடம் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, பூங்கோதையின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற் கொண்டனர்.

Read more »

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

சிதம்பரம் : 

                 சிதம்பரத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் மேலகுண்டபாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் முக்கூட்டு முருகன் (33). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. சமீபத்தில் வல்லம்படுகை அருகே வெடிகுண்டு வீசிய வழக்கில் அண்ணாமலைநகர் போலீசார் கைது செய்தனர். முக்கூட்டு முருகன் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ரிந்துரையை ஏற்று கலெக்டர் சீத்தாராமன் பிறப்பித்த உத்தரவின் பேரில் முக்கூட்டு முருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டார்.

Read more »

கரும்பு வயலில் தீ: ரூ.50 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் : 

                கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான கரும்பு பயிர் எரிந்து நாசமானது. வேப்பூர் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த கரும்பு பயிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் மனோகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

பூச்சி மருந்து குடித்து மூதாட்டி சாவு

பரங்கிப்பேட்டை : 

               வயிற்று வலியால் அவதிப்பட்ட மூதாட்டி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

                    புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜகுமாரி (65). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த ராஜகுமாரி கடந்த 5ம் தேதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

தே.மு.தி.க., கொடிகம்பம் மாயம்

பரங்கிப்பேட்டை : 

               புதுச்சத்திரம் அருகே தே.மு.தி.க., கொடி கம் பத்தை மர்ம ஆசாமிகள் வெட்டி எடுத்து சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு மாதாக் கோவில் அருகே தே.மு.தி.க., கொடி கம்பம் இருந்தது. கடந்த 4ம் தேதி யாரோ மர்ம ஆசாமிகள் கொடிகம்பத்தை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். காலையில் கொடிகம்பத்தை காணாததால் செயலாளர் சந்திரசேகர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

மூவரை தாக்கிய இருவருக்கு வலை

சிதம்பரம் : 

                    அரிசி கடை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை சேர்ந்த ரத்தினசபாபதி வடக்கு மெயின் ரோட்டில் அரிசி கடை வைத்துள்ளார். இவரது கடை ஊழியர் பழனிசாமி மூன்று சக்கர சைக்கிளில் அரிசி மூட்டைகளை கடைக்கு ஏற்றிக் கொண்டு வந்தார். கூத்தாடும் பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது அனந்தீஸ்வரன் கோவில் தெரு வெள்ளையன் மகன் பிரபு, எடத்தெரு நடராஜன் மகன் கணேசன் இருவரும் பழனிசாமியை வழிமறித்து அரிசி மூட்டைகளை இறக்கும்படி கூறி தாக்கினர்.தகவலறிந்த ரத்தினசபாபதி மற்றும் சிவக்குமார் இருவரும் சென்று தட்டிகேட்டனர். அவர்களையும் உருட்டு கட்டையால் தாக்கினர். காயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பிரபு, கணேசன் இருவரையும் தேடி வருகின்றனர்.

Read more »

மைத்துனரை தாக்கியவருக்கு வலை

சிதம்பரம் : 

           கணவன், மனைவி தகராறை தட்டி கேட்ட மைத்துனர் தாக்கப்பட்டார். சிதம்பரம் சின்ன மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்கள் பாலு. இவரது மனைவி காந்திமதி. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அறிந்த காந்திமதியின் சகோதரின் கணவர் முருகன், பாலுவை கண்டித்தார். அதில் ஆத்திரமடைந்த பாலு, எனது குடும்ப பிரச்னையில் நீ ஏன் தலையிடுகிறாய் எனக் கேட்டு தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பாலுவை தேடி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior