உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 15, 2011

விக்ரமின் தெய்வத்திருமகள் திரைப்படம் திரை விமர்சனம்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3041.jpg



தெய்வத் திருமகள்

5 வயது சிறுவனின் மனநிலை கொண்ட கிருஷ்ணாவாக வருகிறார் சீயான் விக்ரம். அவரது 5 வயது மகள் நிலா. சில நிகழ்வுகளால் விக்ரமிடமிருந்து நிலா பிரிக்கப்படுகிறாள். அவளைத் தேடி அலையும் கிருஷ்ணா, வழக்கறிஞரான அனுஷ்காவிடம் போய் சேர்கிறார்.
நல்லதொரு வழக்கிற்காக காத்திருக்கும் அனுஷ்கா, இந்த வழக்கை கையிலெடுக்கிறார். இந்த வழக்கின் மூலம் பணம் கிடைக்கும் என எதிர்பார்த்த அனுஷ்காவிற்கு, விக்ரமின் மனநிலையை அறிந்ததும் அவரை விட்டு விட்டு போய்விடுகிறார். சில சந்தர்ப்பங்களால் விக்ரமின் கதையை அனுஷ்கா கேட்க நேரிடுகிறது.

           அப்போது அவருக்கு குழந்தை பிறந்ததும் அவரது மனைவி இறந்து விடுவதும், விக்ரம் மனநிலை குன்றியவராக இருப்பினும், தான் ஒருவரே குழந்தையை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்ததும், பின் அவரது மாமனாரால் ஏமாற்றப்பட்டு, குழந்தையை அவர்களிடம் பறிகொடுத்து விடுவதும் தெரியவருகிறது.

       இதையடுத்து நீதிமன்றத்தின் மூலம் விக்ரமின் மகளை விக்ரமுடன் ஒருமணி நேர சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதில் வெற்றி பெறுகிறார் வழக்கறிஞரான அனுஷ்கா. அன்னை இல்லாத காரணத்தால், அக்குழந்தை தந்தையிடம் வளர வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் நிலாவை விக்ரமிடம் பெற்றுத் தர முயல்கிறார் அனுஷ்கா. விக்ரமின் மாமனார் தரப்பில் வழக்கறிஞராக வரும் நாசர் எந்த வழக்கிலும் வெற்றியையே சந்தித்திருப்பவர், மனநிலை குன்றியவரிடம் குழந்தை எப்படி ஒப்படைப்பது என்று வாதிடுகிறார்.
deiva-thirumagan2

              இந்த வழக்கின் முடிவு என்ன? கிருஷ்ணாவிற்கு அவரது குழந்தை நிலா கிடைத்தாளா? மனநிலை குன்றிய விக்ரமை விடுத்து அவரது மாமனாரிடம் நிலா சென்றாளா? என்பதை உணர்ச்சி பூர்வமான முடிவை சொல்லியிருக்கிறார்கள். இந்த பத்து நிமிட கிளைமாக்ஸ் காட்சியை பார்ப்பவர்களின் இதயம், எவ்வளவு இரும்பாக இருந்தாலும் அதனை இளகிய கண்ணீராக மாற்றிவிடுகிறது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். உணர்வுகளும், பாச உணர்ச்சிகளும் இந்த பத்து நிமிடத்தில் நம்மை வசியம் செய்து விடுகின்றன.

           சீயான் விக்ரம், இப்படத்தில் 5 வயது கிருஷ்ணாவாக வாழ்ந்திருக்கிறார். ‘மூன்றாம் பிறை’யில் ஸ்ரீதேவி போல, இப்படத்தில் விக்ரம் வாழ்ந்திருக்கிறார். இதற்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றே சொல்லலாம். குழந்தைக்கு கதை சொல்வது,. கண்ணுங் கருத்துமாய் பார்த்துக் கொள்வது என மனிதர் அசத்தியிருக்கிறார். இப்படத்தின் மையமே 5 வயது மகளாக வரும் சாரா என்ற குழந்தைதான். இவளைச் சுற்றித்தான் கதையே நகர்கிறது. படம் பார்ப்பவருக்கு இது நம்முடைய குழந்தை என்று அன்பு கொள்ளும் அளவிற்கு மிகவும் இயல்பாய் நடித்து அசத்தியிருக்கிறாள். சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை இந்த சிறுமி தட்டிச் செல்வாள்.

          வழக்கறிஞராக வரும் அனுஷ்கா, அவருக்கு உதவியாளராக வரும் சந்தானம். இந்த கூட்டணி முன்பாதியில் காமெடியில் களை கட்டுகிறது. பின்பாதியில் விக்ரமிற்காக போராடும் போது, பாராட்ட வைக்கிறது. அனுஷ்காவிற்கு மிகவும் பொறுத்தமான வேடம். கலக்கியிருக்கிறார். நிலாவின் ஸ்கூல் கரெஸ்பாண்டென்டாக வரும் அமலா பால், இறந்து போன தனது அக்காவின் குழந்தைதான் நிலா என்று தெரிய வரும்போது அவர் காட்டுகிற அன்பு நம்மை அசர வைக்கிறது. அவ்வளவு இயல்பு, மைனாவிற்கு அடுத்த படத்தில் மிகவும் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
deiva-thirumagan1

            நாசர் தன் பங்கிற்கு தனது வேலையை கன கச்சிதமாகவும் கம்பீரமாகவும் செய்து முடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது எனலாம். உணர்ச்சி மயமான காட்சிகள் வரும் போது தனது பின்னணி இசையால் அதற்கு உயிரூட்டி இருக்கிறார். பாடல்களும் மெல்லிசை கலந்த தாலாட்டாக காதில் ரீங்காரமிடுகிறது.

          விக்ரமின் குரலில் ‘கதை சொல்ல போறேன்.. ஒரு கதை சொல்லப் போறேன்” பாடல் நிச்சயம் குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு ஊட்டியை அடுத்துள்ள அவலாஞ்சி கிராமத்தை, தனது கேமரா கண்களால் சிறைபிடித்து நம் கண்ணில் உலவ விட்டிருக்கிறது. ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலில் ஒளிப்பதிவாளரின் கோணங்களை, தனது படத்தொகுப்பு திறமையில் செதுக்கியிருக்கிறார் ஆண்டனி.

           ‘மதராசபட்டினம்’ என்ற படத்தைக் கொடுத்த விஜய், ஒரு தந்தை-மகளின் பாசப் போரட்டத்தை மிகவும் உணர்ச்சிமயமாகவும், தனது அட்டகாசமான திரைக்கதையாலும் தெய்வத்திருமகளை நம்முன் உலவ விட்டிருக்கிறார். அவரது உழைப்பு, அனைவரின் நடிப்பு அனைத்தும் குடும்பமாய் வாழ்கின்ற அனைத்து தரப்பு ரசிகர்களின் அரவணைப்பையும் பெறும். இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகின்ற இந்த நீளமான படத்தை, தனது உணர்ச்சிகரமான திரைக்கதையால் அதை மறக்கடிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர் விஜய். ரத்தமும், கலவரமும், சதையும், கவர்ச்சியையும் நம்பி உலா வரும் படங்களிடையே, நம்முள் உறைந்து கிடக்கும் பாச உணர்வுகளை, 'தெய்வத்திருமகள்' மூலமாய் உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கும் விஜய்க்கு ஆயிரம் முறை சபாஷ் போடலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான குடும்பப் படத்தை பார்த்த திருப்தியை இந்த ‘தெய்வத்திருமகள்’ நமக்குத் தருகிறாள்.




Read more »

கடலூர் கப்பல் கட்டும் தொழிற்சாலை: மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு

சிதம்பரம்:

               கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே வேளங்கிராயன்பேட்டை பகுதியில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

              தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.பரங்கிப்பேட்டை அருகே வேளங்கிராயன்பேட்டை பகுதியில் ரூ. 3000 கோடி செலவில் 534 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னையைச் சேர்ந்த குட் எர்த் கப்பல் கட்டும் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் துறைமுகத்துடன் இணைந்த கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக வேளங்கிராயன்பேட்டை, அண்ணன்பேட்டை, புதுக்குப்பம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

                  இந்த கப்பல் கட்டும் தளத் திட்டத்தை 2 கட்டங்களாக முதல் கட்டமாக 2011 முதல் 2014 வரையான காலத்தில் கடலின் முன் நீரில் 625 மீட்டர் அளவுக்கு செப்பனிடப்பட்டு தளம் அமைக்கப்படவுள்ளது.அதன் பிறகு 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அப்போதைய கப்பல் கட்டும் தளத்துக்கு உள்ள சந்தை மதிப்பை கண்டறிந்து அதற்கு ஒப்ப இரண்டாம் கட்டமாக அமைக்கபடவுள்ளது. 117 மீட்டர் கடல் நீரின் உள்ளே செப்பனிட்டு தளம் அமைக்கப்படவுள்ளது. முதல் கட்டப்பணியின் போது, ஆண்டுக்கு 50 ஆயிரம் மெகாடன் இரும்பு கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இத்தொழிற்சாலை மூலம் 9 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைவர் என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

               இந்நிலையில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளங்கிராயன்பேட்டை பகுதி மீனவர்கள் கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் கிராமத் தலைவர் ஏழுமலை தலைமையில் கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த தொழிற்சாலை தொடங்குவது குறித்து வேளங்கிராயன்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

             கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதி, டி.எஸ்.பி. டி.கே.நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் வேளங்கிராயன்பேட்டை பகுதி மீனவர்கள் புறக்கணித்தனர். 

கூட்டத்தில், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: 

          வேளங்கிராயன்பேட்டையில் கப்பல் கட்டும் தொழிற்சாலை என அத்துடன் சூப்பர் பாஸ்பேட் உரம் தயாரிக்க சூசகமாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் மீன்வளம் மற்றும் மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். 2007-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வழங்கிய சுற்றுச்சூழல் சான்று மூலம் இந்த தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய அரசின் சுற்றுச்சூழல் குறித்து சான்று வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இல்லை. எனவே அந்த சான்று தகுதியற்றது.

               இந்த கூட்டத்துக்கு மீனவர்களும், கிராம மக்களும் வரவில்லை. அவர்கள் இல்லாமல் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது தவறாகும். எனவே இந்த கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் மக்களுக்கு எழுத்துப் பூர்வமாகவும், தண்டோரா மூலம் தெரிவித்து கூட்டத்தை கூட்ட வேண்டும். கப்பல் கட்டும் தொழிற்சாலை மற்றும் சூப்பர்பாஸ்பேட் உரம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் சேர்த்து மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

              கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பு அமைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கிள்ளை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கற்பனைச்செல்வன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாளர் மாதவன், பாமக ஒன்றியச் செயலாளர் செல்வகுமார், பரங்கிப்பேட்டை நிஜாமுதீன், விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பதற்கும், சூப்பர்பாஸ்பேட் உரம் தயாரிப்பது குறித்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்துக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.





Read more »

நெய்வேலி மாணவியின் மேற்படிப்பிற்கு உதவுங்கள்

                 பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து, ஜேப்பியார் கல்லூரியில் பயில இடம் கிடைத்தும், கல்லூரிக் கட்டணமே செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவிக்கு நெய்வேலி அதிமுக தொழிற்சங்கம் சார்பில் ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. 

               நெய்வேலி என்எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றவர் மாணவி ஆர்.அனிதா. பிளஸ் டூ தேர்வில் டிராப்ஃட்ஸ் பிரிவில் 1131 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும், பள்ளி அளவில் முதலிடத்தையும் பிடித்தார். இவரது தந்தை பெயிண்ட் அடிக்கும் வேலைசெய்துவரும் கூலித் தொழிலாளி. இந்நிலையில் மாணவி அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்துகொண்டு, சென்னை ஜேப்பியார் கல்லூரியில் கட்டுமான பொறியியல் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.  

             இந்நிலையில் சிறந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பைப் பெற்ற மாணவிக்கு கல்லூரியில் ஆண்டுக் கட்டணத்தை செலுத்த போதிய வசதியில்லாமல் தவித்து வருகிறார். இதனிடையே, நெய்வேலி அதிமுக தொழிற்சங்கம் சார்பில் மாணவியின் கல்லூரிப் படிப்புக்கு உதவிடும் வகையில் ரூ.5 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இத்தொகையை நெய்வேலி எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியனும், குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரனும் மாணவியிடம் வழங்கினர்.

             கொடையுள்ளம் கொண்ட எவரேனும் உதவிட முன்வருவார்களேயானால் ஏழை மாணவியின் எதிர்காலம் பிரகாசிக்க வாய்ப்புண்டு. 

மாணவியின் விவரத்தை அறிய விரும்புவோர் மாணவி பயின்ற என்எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை அணுகலாம். 


தொடர்புக்கு:


04142-255972.









Read more »

கடலூர் மாவட்ட முந்திரி விவசாயிகள் கவனத்துக்கு


கடலூர்:

         முந்திரி மரங்கள் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. இந்தியா, வியத்நாம், நைஜீரியா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 

            தமிழ்நாட்டில் கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், மாவட்டகளில் முந்திரி மரங்கள் அதிகம் பயிடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பண்ருட்டி வட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கரில் முந்திரி மரங்கள் உள்ளன. பண்ருட்டிப் பகுதியில் உற்பத்தியாகும் முந்திரிக் கொட்டைகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் முந்திரிக் கொட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு, உடைத்து பதப்படுத்தியும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

             எனவே கடலூர் மாவட்டத்தில் முந்திரி விவசாயம் தனித் தன்மை வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. முந்திரி மரங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது, இடை உழவு செய்வதன் மூலம், மழைநீரை உள்ளிழுத்து மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாள் பாதுகாக்கிறது. இதனால் முந்திரி மகசூல் திறன் அதிகரிக்கிறது என்றும் வேளாண் துறை அறிவிக்கிறது. முந்திரித் தோப்புகளுக்குள் ஆங்காங்கே காணப்படும் காட்டுச்செடிகள், முள்புதர்களை நீக்குவதன் மூலம், முந்திரி மரங்களுக்கு அளிக்கப்படும் சத்தி மற்றும் நீர் தேவை, போட்டியின்றி முந்திரி மரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

               முந்திரி மரத்தின் அடியில் விழுந்து கிடக்கும், காய்ந்த சருகுகளை நன்றாகக் கொத்தி, மண்ணோடு மண்ணாக ஆக்கி, மரங்களைச் சுத்தமாகப் பராமரிப்பதன் முலம் முக்கிய உரச்சத்து முந்திரி மரங்களுக்குக் கிடைப்பதோடு, பூச்சி, பூஞ்சாணம் தாக்குதலும் குறையும். முந்திரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வருகிற வடகிழக்குப் பருவ மழையினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முந்திரியில் இடைஉழவு செய்வதுடன் ஆங்காங்கே உள்ள புதர்களையும் நீக்குமாறு, வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. 

               மேலும் மரங்களின் ஆழப்பகுதியில் இருந்து, ஒரு மீட்டர் தள்ளி, ஒரு அடி ஆழம் அகலம் குழியெடுத்து, அதில் பரிந்துரைக்கப்பட்ட 50 கிராம் தொழு உரம், ஏக்கருக்கு 500 கிராம் தழைச் சத்து, 200 கிராம் மணிச் சத்து, 300 கிராம் சாம்பல் சத்து, ஆகியவற்றை இட்டு மூடிவிடவும். இதனால் மகசூலை அதிகரிக்க முடியும் என்றும் வேளாண் துறை ஆலோசனை தெரிவித்து உள்ளது.



Read more »

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள்: 13 ஆயிரம் பேரின் சான்றுகள் சரிபார்ப்பு

            தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு முடிவுகள் ஓரிரு வாரங்களில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

             இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத்திலோ வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ. காலியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டது.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வுக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்பதால் பல்வேறு தரப்பினரும் அதில் பங்கேற்க ஆர்வம் காட்டினர். வழக்கமாக, தேர்வு நடத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்ளாக முடிவுகள் வெளியாவது வழக்கம். ஆனால், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வுக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.

              விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இப்போது நடந்து வருகின்றன. மேலும், 10 லட்சம் பேர் எழுதியுள்ள தேர்வில் தேர்ச்சி பெற்ற 13 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அவர்களில் தகுதி வாய்ந்த 4 ஆயிரத்து 561 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்த நடைமுறைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

              வி.ஏ.ஓ. உள்பட அரசுப் பணிகளுக்கு நடைபெற்ற போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த அறிவிப்புக்குச் செயல் வடிவம் கொடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறி வருவதாக தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும் அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஆர்வம் காட்டி வருவதைப் போன்று, பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ள தேர்வுகளின் முடிவுகளையும் விரைந்து வெளியிட அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள், பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.





 

Read more »

மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை

கடலூர்:

              மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அனைத்து வகை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்தது.  

              கடலூர் சுத்துக்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இச்சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனு அளித்துக் காத்து இருக்கும் அனைவருக்கும் விரைந்து உதவித் தொகை வழங்க வேண்டும். ஊனத்தின் அளவைக் குறிப்பிட, ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள் கையொப்பமிடும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க, வங்கிகள் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் உதயகுமார், துணைத் தலைவர் ராஜ்குமார், இணைச் செயலாளர் சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் புதிய தலைவராக ஆளவந்தார், செயலாளராக பி.முருகையன், பொருளாளராக வசந்தி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 





Read more »

குறிஞ்சிப்பாடியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி

கடலூர்:

             பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி, 17-7-2011 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             பள்ளி, கல்லூரி மாணவ, மாணவரிடையே தமிழ் பற்றை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில், கடலூர் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி இப்போட்டியை நடத்துகிறது. குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் 17-ம் தேதி காலை 10 மணிக்கு போட்டிகள் நடைபெறும். 

               பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-வது பரிசு ரூ. 3 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 2 ஆயிரம், ஆறுதல் பரிசு 5 பேருக்கு தலா ரூ. 1,500 வழங்கப்படும். போட்டிக்கு, உரிய கடிதம் மற்றும் ஒப்பிக்க வேண்டிய பாடல் வரிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.






Read more »

ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்

         ரேஷன் கார்டு அச்சிடும் போதே சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படுகிறது. 

          மாநிலம் முழுவதும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தி கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குளறுபடிகளை தவிர்க்க, ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போதே அவர்களின் மொபைல் போன் நம்பர்களும் விண்ணப்பத்தில் பெறப்படுகின்றன. விசாரணை முடிந்து அந்தந்த மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் அச்சிடும் போது, இதுபற்றிய தகவல் பயனாளிக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

            எஸ்.எம்.எஸ்., வந்த ஒரு வாரத்தில் சம்மந்தப்பட்ட பயனாளி தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டை பெற்று கொள்ள முடியும். விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வந்து விட்டதா, இல்லையா என்ற குழப்பமும் இனி இல்லை. பொதுமக்கள் வீணாக அலைவதை தடுக்க இந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.



For more details














Read more »

கடலூர் மாவட்டத்தில் 35 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

கடலூர் :

       கடலூர் மாவட்டத்தில் 35 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்ரமணியபிள்ளை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 கடலூர் மாவட்டத்தில் 2011-2012 கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி அளிக்க அனுமதி பெற்றுள்ள 35 பயிற்சி நிறுவனங்கள் விவரம் வருமாறு:

கடலூர் சேக்ரட் ஹார்ட், 
வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
பச்சையாங்குப்பம் சேவாமந்திர், 
திட்டக்குடி அன்னை மாதா,
தேவனாம்பட்டினம் பிஷப் பீட்டர், 
ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்ஜெயின், 
சேத்தியாத்தோப்பு சந்திரா, 
காட்டுமன்னார்குடி சந்திராவதனம், 
வடலூர் டாக்டர் மகாலிங்கம், 
கடலூர் செம்மங்குப்பம் ஜெ.எஸ்.ஜெ.விஸ்ரீமுஷ்ணம் ஜெயந்தி பத்மநாபன், கீழ்முங்கிலடி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், 
குள்ளஞ்சாவடி லயோலா, 
வளயமாதேவி எம்.கேராமன், 
புவனகிரி மங்கலம் 

பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 

சிதம்பரம் மெர்சி, 
பரங்கிபேட்டை முன்னா, 
கீழகொள்ளை நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், 
வடலூர் ஒ.பி.ஆர்நினைவு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், 
ஸ்ரீ முஷ்ணம் எஸ். பி.ஆர்பெரியவடவாடி செந்தில், 
பண்ருட்டி செவன் ஹில், 
சிதம்பரம் சீனி, 
தொழுதுர் ஸ்ரீஆறுமுகம், 
திருவந்திபுரம் ஸ்ரீ பவானி வித்யாலயா, 
ஸ்ரீமுஷ்ணம் டி.வி.சி,
திட்டக்குடி வெக்காளியம்மன், 
திட்டக்குடி வெங்கடேஸ்வரா, 
புதம்பூர் வெங்கடேஸ்வரா, 
குப்பநத்தம் விருத்தாம்பிகை, 
விருத்தாசலம் செயின்ட் பால் அன்னை இந்திரா, 
சேப்பளாநத்தம் விவேகனந்தா, 
குறிஞ்சிப்பாடி விநாயகா, 
பனிக்கன்குப்பம் ஆறுமுக விநாயகா 

ஆகிய 35 ஆசிரியர் பயிற்சி பள்ளி இந்த ஆண்டு ஆங்கீகாரம் பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 





Read more »

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி

திட்டக்குடி: 

             திட்டக்குடி அடுத்த தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி முகாம் நடந்தது.

            கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார்.கோயமுத்தூரைச் சேர்ந்த பேராசிரியர் பாஸ்கர், மாணவர்களை உளவியல் முறையில் கையாளுதல், ஆசிரியர்கள் தங்களை சரியான முறையில் ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கற்றலின் நோக்கம் அமைதல் குறித்து பயிற்சியளித்தார். பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் செய்திருந்தார். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் ராஜபிரதாபன் நன்றி கூறினார்.






Read more »

காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் துவக்க விழா

காட்டுமன்னார்கோவில் : 

           காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ., முருகுமாறன் துவக்கி வைத்தார். 

            காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்விக் குழு உறுப்பினர் பாண்டியன், கண்ணன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பவானி வரவேற்றார். 

காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி பேசுகையில், 

             "ஆதிதிராவிட மாணவர்கள் மற்றும் மக்களின் மீது முதல்வர் ஜெயலலிதா அதிக அக்கறை கொண்டுள்ளார். தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார். 104 கோடி ரூபாய் சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளில் முன்னேற வேண்டும்' என்றார்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior