உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 01, 2012

தானே புயல்: கடலூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கம் , அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/7087cbd7-4d97-42bb-9392-f2ad3187265b_S_secvpf.gif

கடலூர்:

           தானே புயல் தாக்குதலால் கடலூர் மாவட்டம் முழுவதுமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் தொடங்கி சிதம்பரம் வரை கடலோரப்பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களும் புயல் தாக்குதலால் சின்னாபின்னமாக ஆகி உள்ளன.

              கடற்கரை அல்லாமல் உள்பகுதியில் உள்ள விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம், நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமண்ணார்கோவில் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் முற்றிலும் மரங்கள் விழுந்துகிடப்பதால் இன்னும் போக்குவரத்து சீராகவில்லை. பெரும்பாலான மின்கம்பங்கள் விழுந்துவிட்டதால் 3 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் அத்தியவசிய தேவைக்கான தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

             கடலூர் அருகே புயல் கரையை கடந்ததால் இந்த நகரம் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. எந்த பகுதியிலும் மின்சாரம் இல்லை. பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. வெளியூரில் இருந்து வரவேண்டிய காய்கறி, பெட்ரோல், டீசல் போன்றவை வரவில்லை. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்கில் மட்டும் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பெட்ரோல் போடுகிறார்கள்.

             மின் மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் சப்ளை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்கிறார்கள். அது நகருக்கு போதியதாக இல்லை. எனவே லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக சென்னை மற்றும் நெய்வேலியில் இருந்து 23 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து 10 லாரிகள் வர உள்ளன. 

             ஆவின் நிறுவனம் நேற்று 2 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்தது. அது போதுமானதாக இல்லை. எனவே பால் கிடைக்காமல் மக்கள் அவதிபட்டனர். பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க மாவட்டம் முழுவதும் 27 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 14 ஆயிரம் பேருக்கு உணவு வளங்கப்பட்டு வருகிறது. மின்சார துண்டிப்பை சரி செய்ய பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரவு பகலாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

              கடலூர் நகரில் பாதிரிகுப்பம் பகுதியில் இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு மின்சாரம் கிடைப்பதற்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் முழுமையாக மின்சாரம் கிடைக்க 3 நாட்கள் வரை ஆகலாம். புயலுக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வரமுடியாததால் ஆங்காங்கே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

               மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 11 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாததால் விளக்கு எரிப்பதற்காக கூடுதலாக 132 கிலோ லிட்டர் மண்எண்ணை கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தானே புயல்: கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள முதல் கட்ட சேத அறிக்கை ரூ.300 கோடி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/c6fcbdee-f64e-47ec-a23e-0f35c171563e_S_secvpf.gif

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/28dbc06d-f9c4-4132-9fcd-43c8ce788bcb_S_secvpf.gif

கடலூர் :
               வங்க கடலில் மையம் கொண்டிருந்த தானே புயல் புதுவை மாநிலம் தவளக்குப்பம், கடலூர் மாவட்டம் தாழங்குடா இடையே நேற்று காலை கரையை கடந்தது. இதனால் கடலூர் மாவட்டம் முழு வதும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

       கடலூர் நகரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. ஆங்காங்கே மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நகரம் முழுவதும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து முடங்கியது. இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. கடலூர் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாகுப்பம், கொத்திக்குப்பம் உள்பட 20 மீனவ கிராமங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அவர்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி சமுதாய கூடம் மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்கியுள்ளனர்.

          புயல் காற்றினால் கடலூர் நகரில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை பகுதியில் பெரும்பாலான குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டன. கடலூர் சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் மேற்கூரைகள் புயல்காற்றினால் பெயர்ந்து விழுந்தன. இதனால் தொழிற் சாலைகள் முற்றிலும் செயல்படவில்லை. நேற்று முன்தினம் இரவில் இருந்தே கடலூர் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காற்று வீசியபோது ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன. முற்றிலும் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது.

            நெய்வேலியில் இருந்து மின்சாரம் வரும் உயர் அழுத்த மின்கோபுரங்களும் சரிந்து கிடக்கின்றன. எனவே கடலூர் நகருக்கு எந்த வழியிலும் மின்சாரம் வரவில்லை. இதை சரிசெய்து மின்சாரம் கொண்டு வருவதற்கு 1 வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் நகரம் நேற்று முழுவதும் மற்ற ஊர்களில் இருந்து துண்டிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கடலூர் -புதுவை இடையே ரோட்டில் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. அதே போல் கடலூரில் இருந்து பண்ருட்டி வரை போக்குவத்து சீராகி உள்ளது.

             சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் போன்ற பகுதிகளுக்கு இன்னும் போக்குவரத்து தொடங்கவில்லை. அந்த பாதைகளில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. சாலைகளில் கிடக்கும் மரங்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் வெட்டி அகற்றி வருகிறார்கள். வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு ஏராளமான போலீசாருடன் சென்று ஆங்காங்கே கிடக்கும் மரங்களை அகற்றி வருகிறார். கடலூர் மஞ்சக்குப் பம் மைதானத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புயலால் அங்கிருந்த அத்தனை பொருட்களும் தூக்கி வீசப்பட்டு சின்னபின்னமானது. நகரில் உள்ள கடைகள் முன்பு வைத்திருந்த போர்டுகள், அலங்கார பொருட்கள் நாசமாயின. இதனால் நேற்று முழுவதும் கடைகள் திறக்கப்படவில்லை.

            இன்றும் ஒருசில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்காமல் முடியாமல் தவித்தனர். மின்சாரம் இல்லாததால் கடலூர் நகரம் முழுவதும் இருளில் மூழ்கி கிடந்தது. குடிநீர் வரவில்லை. வீட்டில் இருந்த மோட்டாரால் இயக்கியும் தண்ணீர் எடுக்க முடியாத நிலை இருந்தது. எனவே மக்கள் குடிநீர், மற்ற தேவைகளுக்கான தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடலூர் நகரம் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் கடலோர பகுதிகள் முழுவதும் இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டமே முற்றிலும் முடங்கியுள்ளது. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

          மாவட்டம் முழுவதும் வீடுகளை இழந்த 50 ஆயிரம் பேர் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதம் மட்டும் ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு 1 வாரத்திற்கு மேலாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Read more »

தானே புயல் : கடலூர் மாவட்டத்தில் பணப்பயிர்கள் 80 சதவீதம் சேதம்

கடலூர் :

            கடலூர் மாவட்டத்தின் பிரதான பணப்பயிர்களான முந்திரி, கரும்பு பயிர்கள் "தானே' புயலால், 80 சதவீதம் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

          கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம் தாலுகாக்களில், தோட்டக்கலை பயிர்களான முந்திரி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலும், பலா மரங்கள், 3,000 ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளன. பண்ருட்டி பகுதியிலிருந்து முந்திரிகள் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆண்டுதோறும் முந்திரிகள் தை மாதத்தில் பூ வைத்து, சித்திரை மாதம் முதல் அறுவடை செய்யப்படும். 

             தற்போது பெய்த மழையில் அதிகளவிலான விளைச்சலை எதிர்பார்த்து விவசாயிகள் முந்திரி மரத்திற்கு உரம் வைத்து பராமரித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீசிய "தானே' புயலின் ருத்ர தாண்டவத்திற்கு மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் முந்திரி மரங்கள் முறிந்து விழுந்தும், வேரோடும் சாய்ந்தன. அதேபோல் பண்ருட்டி பலா பழமும் மிகவும் பிரசித்தி பெற்றது. புயலில் 80 சதவீத பலா மரங்கள் முறிந்து விழுந்தும், வேரோடும் சாய்ந்தன. இதனால், இந்தாண்டு முந்திரி, பலா விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளதால் விவசாயிகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior