உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 03, 2010

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


உலக மக்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ( நவம்பர் 05, 2010)

Read more »

அணைக்கரை பாலத்தில் டிசம்பர் முதல் போக்குவரத்து நிறுத்தம் : செயற்பொறியாளர் தகவல்





காட்டுமன்னார்கோவில் : 

           பழுதடைந்த அணைக்கரை பாலம் சீரமைப்பு பணிக்காக, வரும் டிசம்பர் முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

                 சென்னை - கும்பகோணம் சாலையில் 174 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் அணைக்கரை பாலம் கடந்த ஆண்டு பலவீனமடைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி, கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை - கும்பகோணம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள், பாலத்தில் நடந்து சென்று மறு பகுதியில் பஸ் ஏறி சென்று வருகின்றனர். மேலும் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பயன்படுத்தும் இப்பாலத்தை ஒருவரும் கண்டு கொள்வதில்லை என, கடந்த ஆக.,1ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

                    இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனையொட்டி, பாலத்தின் அவசர அவசியம் கருதி, தற்காலிகமாக சீரமைப்பு பணி மற்றும் 94 ஷட்டர்கள் சீரமைக்க, 6 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கி நடந்து வருகிறது. பாலத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரசாயன பூச்சு மூலம் சீரமைக்கும் பணி நடக்கிறது. முதல் கட்டமாக அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைக்கப்படுகிறது. 

இதுகுறித்து, செயற்பொறியாளர் செல்வராஜ் கூறுகையில்,

                    "பழுதடைந்த இடங்கள் செப்பனிட்டு ரசாயன பூச்சு (கெனைட்டிங்) மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் இருந்து பாலத்தில் மேல் பகுதியில் பணிகள் துவங்குவதால், தற்போது இயக்கப்படும் இலகுரக வாகனங்களும் முற்றிலும் நிறுத்தப்படும். மொத்த பணிகளும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து, மார்ச் துவக்கத்தில் போக்குவரத்து துவங்கப்படும். அணைக்கரையில் நிரந்தர பாலம் கட்ட 940 மீ., முன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.

Read more »

கடலூர் வில்வநகர் பகுதியில்தொட்டிலில் தூங்கிய குழந்தையை வெறிநாய் கடித்து குதறியது


கடலூர் : 

                  கடலூர் வில்வநகர் பகுதியில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துக் குதறியது. வெறிநாயின் அட்டகாசத்தால் கன்றுக்குட்டி, பூனை இறந்தன.

                   கடலூர் வில்வநகர் பாப்பான்தோட்டம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெறி நாய் ஒன்று அப்பகுதியில் சென்றவர்களை மட்டுமின்றி ஆடு, மாடு, பூனை, நாய்கள் என அனைத்தையும் கடித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள முருகன் என்பவர் வீட்டில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது ஆஷா என்ற குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கடித்துக் குதறியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாயை அடித்து விரட்டினர். 

                      அப்பகுதியில் உள்ளோர் வெறிபிடித்து திரியும் நாயை அடித்துக் கொல்ல தடியுடன் தேடி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த விஷால் (3), தினேஷ் (15) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை கடித்தது. மேலும் நேற்று காலை அம்மாபொண்னு என்பவரின் கன்றுக்குட்டி மற்றும் தெருவில் உள்ள பூனை, நாய்கள் என கடித்துக் குதறியது. இதில் கன்றுக்குட்டியும், பூனையும் அதே இடத்தில் இறந்தன. குழந்தை ஆஷா கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெறிநாயின் அட்டகாசத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் நாயை துரத்திச்சென்று உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொன்றனர்.

                         அடித்துக் கொல்லப்பட்ட வெறிநாய் அந்த பகுதியில் உள்ள நாய்களுடன் சண்டையிட்டு அவைகளை கடித்துள்ளதால் அந்த நாய்கள் கடித்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Read more »

ரயில்பாதை அரிப்பை தடுக்க ரூ. 92 லட்சத்தில் வெள்ளாற்றில் தாற்காலிக பனமரத் தடுப்பு


 
சிதம்பரம்:
                  விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான ரயில்பாதையில் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதையை நெருங்கியுள்ளது.
 
                 இதனால் ரயில்பாதை பாதிக்கும் நிலை உருவானது. இதைத் தடுக்க தாற்காலிகமாக பொதுப்பணித் துறை சார்பில் ரூ. 92 லட்சம் செலவில் வெள்ளாற்றில் ரயில்பாதை ஓரம் பனமரங்களாலான தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.
 
இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தது: 
 
                        சிதம்பரத்தை அடுத்த கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே ரயில்பாதையிலிருந்து 1915-ல் 1400 மீட்டர் தூரம் வெள்ளாறு இருந்தது. அதன் பின்னர் 1930-ல் 600 மீட்டரும், 1970-ல் 30 மீட்டரும், 2005-ல் 3.5 மீட்டரும் தூரமும் வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதையை நெருங்கியது. இதை தடுக்காவிடில் மயிலாடுதுறை-விழுப்புரம் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கும் நிலை உருவாகும். 
 
                   வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதையை நெருங்கியதால் தலைமைச் செயலர் தலைமையில் சென்னையில் தென்னக ரயில்வே முதன்மைப் பொறியாளர், பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டு தாற்காலிகமாக வெள்ளாற்றில் 360 மீ. தூரத்துக்கு ரூ. 92 லட்சம் செலவில் பனமரத்தடுப்பு மற்றும் மணல் மூட்டைகள் அமைத்து தடுப்பு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது.
 
                          இன்னும் 10 தினங்களில் பணி முடிவுறும். மேலும் வெள்ளாற்றின் அரிப்பைத் தடுக்க ஆற்றின் நீரை திருப்பிவிட நிரந்திரத் தீர்வு காண நீர்வளஆதாரத் துறை தலைமைப் பொறியாளர் குமரேசன் தலைமையில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது என செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

Read more »

கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது நிறுத்தம்


சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்படும் 6640 கனஅடி உபரிநீர்.
 
சிதம்பரம்:

                கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் 44 அடிக்கு மேல் நீரை தேக்கி வைக்கக் கூடாது என்ற முடிவால் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது என பொதுப்பணித்துறை கொள்ளிட வடநில கோட்ட செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

                 தற்போது செவ்வாய்க்கிழமை நிலவரப்படி வீராணம் ஏரியில் 44 அடி நீர் உள்ளது. மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். மழைக்காலம் என்பதால் வீராணம் ஏரியில் 44 அடிக்கு மேல் அதிகளவு நீர் தேக்கி வைக்கக் கூடாத நிலையில் கீழணையிலிருந்து தற்போது வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரிப் பாசனத்துக்கு 50 கனஅடியும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனத்துக்கு அரியகோஷ்டி வாய்க்கால், மானம்பார்த்த வாய்க்கால், பழையமுரட்டு வாய்க்கால், உடையூர், மிராளூர் வாய்க்கால் ஆகியவற்றில் 449 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

               சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 74 கனஅடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் செல்லும் மதகுகள் முழுவதுமாக அடைக்கப்படவில்லை என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார். வெள்ளாற்றில் 6640 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் கோமுகி மணிமுத்தாறிலிருந்து பிரிந்து வெள்ளாறு உருவாகி சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக வந்து கடலில் கலக்கிறது. தற்போது விருத்தாசலம், விளாந்துறை, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் வெள்ளாற்றில் அதிகளவு நீர் வருகிறது.

                     சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் முழுக்கொள்ளளவு 7.5 அடி கொள்ளளவு நீர் உள்ளதால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றில் 6640 கனஅடிநீர் கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

Read more »

கடலூரில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்க தமிழக அரசு கவனம் செலுத்துமா?

கடலூர் : 

                    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட கடலூர் துறைமுகம் சரக்கு கப்பல் போக்குவரத்தின்றி முடங்கிப்போய் உள்ளது. கடலூர் துறைமுகம் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வாணிபத்திற்காக இந்தியா வந்தபோது கடலூரை தலை நகரமாகக் கொண்டு வியாபாரம் செய்தனர். 

                     தமிழகத்தில் இயற்கையான துறைமுகமான கடலூரில் சாலை, குடோன் அருகிலேயே ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக இருந்ததால் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, சீனா, வளைகுடா நாடுகளில் இருந்து "புளோர்ஸ்பர்' (சீன களிமண்) செல்ஸ்பர் கற்கள்,  நிலக்கரி, கோதுமை, உரம், தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட் நிறுவனத்திற்குத் தேவையான "புரப்பலின் காஸ்' உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

                     இரும்புத் தாது, வெங்காயம், அரிசி, சர்க்கரை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு மாவு உள்ளிட்ட பொருட்கள் சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1960ம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில் 16 கப்பல்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் சிறப்பாக நடந்தது. இதனால் கடலூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.

                        நாளடைவில் படிப்படியாக கப்பல் போக்குவரத்து குறைந்து வணிகம் மந்தமடைந்தது. கடந்த 1996ம் ஆண்டில் இருந்து கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் துறைமுகம் முற்றிலும் முடங்கியது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல் போக்குவரத்து இல்லாததால் துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடோன்கள், துறைமுக சாலை, முகத்துவாரம் தூர்ந்து நாளடைவில்  பழுதடைந்தது.

                         கடலூர் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 2007-08ம் ஆண்டு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 14 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. முகத்துவாரத்தில் இருந்து இரு பக்கமும் மண் சரியாமல் இருக்க 300 மீ., தூரத்திற்கு கருங்கற்கள் கொட்டி அலை தடுப்பு அமைக்கப்பட்டது. 

                      இதனைத் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு கடலூர் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கியது. கடந்த 2008 ஜனவரி மாதம் சீனாவில் இருந்து இரண்டு கப்பல்கள் மூலம் "யூரியா' உரம் இறக்குமதி செய்யப்பட்டது.தொடர்ந்து மார்ச் மாதம் இந்தோனேஷியாவில் இருந்து மூன்றாவது கப்பலில் வந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.  அத்துடன்  கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக துறைமுகம் பழையபடி வெறிச்சோடியது.

                               இந்நிலையில் கடலூர் துறைமுகத்தை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அருகில் உள்ள காரைக்கால் துறைமுகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் 14 கோடி ரூபாய் செலவு செய்து சீரமைக்கப்பட்ட கடலூர் துறைமுகத்தின் மீது தமிழக அரசும் தனி கவனம் செலுத்தாததால் மிகப்பெரிய துறைமுகம் முற்றிலும் செயலிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

                       நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகத்தின் கீழ் இயங்கி வரும் கடலூர் துறைமுகத்தின் மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க நடவடிக்கை மேற்கொண்டால் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். பல ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், தொடர்ந்து பல்வேறு புதிய தொழிற்சாலைகளும் அமைய வாய்ப்புள்ளது. 

                        கடலூர் அடுத்த பெரியக்குப்பத்தில் அமைக்கப்பட்டு வரும் நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் நிறுவனம், கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவில் அமைய உள்ள நிலையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்கினால் கடலூர் மாவட்ட மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Read more »

தழைச்சத்து உரத்திற்கு அசோலா பயன்படுத்த வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரை

கடலூர் : 

                தழைச்சத்து உரத்திற்கு அசோலாவை பயன்படுத்த வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

                      இயற்கை, உயிர், ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை உரிய காலத்தில் சமச்சீர் அளவில் அளிப்பதே ஒருங்கிணைந்த உர மேலாண்மையாகும். தாவர வகை தழைச்சத்து உரமான அசோலா பிற உயிரினங்களோடு சார்ந்து இயங்கும் பெரணி வகை தாவரம்.  அனாபீனா அசோலி என்ற நீலபச்சைப்பாசி அசோலாவின் உள்ளிருந்து வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. பயிருக்கு தழைச்சத்து அளித்து மண்ணிற்கு இயற்கை உரமாக மாறி மண் வளத்தை பெருக்குகிறது. 

                      விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால் பகுதிகளிலும் அசோலா இயற்கையாகவே வளர்ந்து இருப்பதை கவனித்து சேகரித்து நெல் வயல்களில் தூவி வளர்த்த பின் மிதித்து அழித்து விடலாம். ஒரு ஏக்கருக்குத் தேவையான அசோலாவை உற்பத்தி செய்ய 4 சென்ட் நாற்றங்கால் போதுமானது. ஒரு சென்ட்டுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் 10 கிலோ மாட்டுச்சாணமும் இட்டு 5 - 10 செ.மீ., வரை தண்ணீர் தேக்க வேண் டும். அதன்மேல் ஒரு சென்ட்டுக்கு 8 கிலோ அசோலா வீதம் பரப்பி விட வேண்டும். 

                     இந்த நாற்றங்காலிலிருந்து 7 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சென்ட்டில் 50 கிலோ என்ற அளவில் அசோலா கிடைக்கும். அசோலாவை ஏக்கருக்கு 100 கிலோ வீதம் பரப்பி ஒரு வாரம் தண்ணீர் தேக்கி வைத்திருந்து சேற்றில் மிதித்துவிட்டு பின் நடவு செய்ய வேண்டும். அவ்வாறு அசோலா இட்ட வயலில் 25 சதவீதம் தழைச்சத்து உரத்தை குறைக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

3 injured in minor blast near Sethiathope

CUDDALORE: 

                Three persons were injured in a minor blast that occurred in a fruit shop located on Bazaar Street at Sethiathope near here on Monday. The injured have been identified as shopkeeper Ramalingam and his assistants Velmurugan and Kumar. The police said that the blast was caused by chemical ripening agent calcium carbide.

                After spreading the chemical over the fruits, Velmurugan and Kumar had sprinkled water to increase the humidity and hasten the ripening process. However, the temperature in the closed room, where the fruits were kept, shot up suddenly owing to chemical reaction, resulting in the blast.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior