உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 25, 2010

அரசு பஸ் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப் பலன்களை வழங்கக் கோரிக்கை

கடலூர்:

                 அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கைவிடுத்தது. இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                     ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அரசு புறநகர் பஸ்களில் பயணம் செய்ய இலவச பாஸ் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்தப் பணப் பலன்களை ஓய்வு பெற்றவர்களுக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாநில அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                        கூட்டத்துக்கு எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கே.கர்சன் சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலாளர் ஜி.ராமச்சந்திரன், பொருளாளர் பி.சேசையன், அரசு போக்குவரத்துக் கழக ஊழிர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more »

நெய்வேலியில் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம்

நெய்வேலி:
                   
                  நெய்வேலி இன்னர் வீல் சங்கம் சார்பில் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் மந்தாரக்குப்பத்தில் உள்ள பொன்னி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

                      நெய்வேலி இன்னர் வீல் சங்கமும், அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாமுக்கு நெய்வேலி லிக்னைட் சிட்டி அரிமா சங்கத் தலைவர் நாகரத்னம் தலைமை வகித்தார். முகாமில் மகளிருக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 100 பெண்கள் இம்முகாமில் கலந்துகொண்டனர். மேலும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் டாக்டர் அன்புக்கிளி மற்றும் டாக்டர் காயத்ரி ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நெய்வேலி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பாபுஜி மற்றும் நெய்வேலி விப்ஸ் அமைப்பின் தலைவி டாக்டர் தாரணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read more »

என்எல்சியில் 60 சதவீத வேலைவாய்ப்பை நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க வலியுறுத்தல்

நெய்வேலி:

                       என்எல்சி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக 60 சதவீத தாற்காலிக வேலைவாய்ப்பு வழங்கி, எஞ்சிய காலிப் பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என என்எல்சிக்கு நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

                      என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட நலச் சங்கத்தின் கருத்தாய்வுக் கூட்டம் சங்கச் செயலர் எ.ஜான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள் வி.பெருமாள், செந்தில்குமார், வெங்கடேசன், மதியழகன், ராஜேந்திரன், வஜ்ரவேலு, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 

                      நிறுவன விரிவாக்கப் பணிகளுக்காக வீடு நிலம் கொடுத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டோரை எளிதில் அடையாளம் காணுகின்ற வகையிலும், ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையிலும் சிறப்பு பல்நோக்கு அடையாள அட்டையை என்எல்சி வழங்க வேண்டும். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏதுவாக தனி இன்கோ-சர்வ் சொசைட்டி உருவாக்கப் பட வேண்டும்.

                    மேலும் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்க உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியிருப்பதாகவும், அதனடிப்படையில் பரிசீலனை நடைபெறுவதாகவும் அறிகிறோம். அப்படி என்எல்சி நிர்வாகம் பரிசீலனை செய்யும்பட்சத்தில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பில் 40 சதவீதமும், தாற்காலிக வேலைவாய்ப்பில் 60 சதவீதமும் வழங்கி மீதமுள்ள காலிப் பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

                             வீடு நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என சங்கம் சார்பில் கேட்டுக்கொள்வது உள்ளிட்டத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Read more »

சிதம்பரத்தில் அரசு பொறியாளர் பணிக்கு 1700 பேர் தேர்வு எழுதினர்

சிதம்பரம்:

                      தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் பொறியாளர் பதவிக்காக தமிழக அரசு தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் சிதம்பரத்தில் 7 மையங்களில் 1700 பேர் தேர்வு எழுதினர். சிதம்பரம் நகரில் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் 1700 பேர் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் மேற்கண்ட மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.   

Read more »

பண்ருட்டியில் கவிதை நூல் வெளியீட்டு விழா

பண்ருட்டி:
                 
                    "மரபில் மலர்ந்த மகரந்தப் பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா பண்ருட்டியில் சனிக்கிழமை நடந்தது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை நூலை வெளியிட, விழாவுக்கு தலைமை தாங்கிய நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபா.இராஜேந்திரன் முதற்படியை பெற்றுக்கொண்டார்.

                    முன்னதாக கல்லைக்கவி தேவ.இராமதாசன் தலைமையில் "நான் பேசினால்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிக்காளமேகம் சக்தி, கவிஞர் வான்மதி கல்லைக்கண்ணன், ஆசுகவி ஆராவமுதன், தேனிசைக் கவிஞர் பரிக்கல் ந.சந்திரன், காரை பழ.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் வரவேற்றார். எழுத்தாளர் இமயம், நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், துணைத் தலைவர் கே.கோதண்டபாணி, முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் கல்லைக் கவிஞர் வீ.கோவிந்தராஜன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Read more »

பண்ருட்டி வட்டாரத்தில் செயல்விளக்கத் திடல் அமைக்க மானியம்

பண்ருட்டி:

                 பண்ருட்டி வட்டாரத்தில் நீர்வள நிலவளத் திட்டத்தில் கெடிலம் நீர் வடிமுக பகுதியில் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல்கள் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                  பண்ருட்டி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி மிகக் குறைவாக உள்ளது. இச்சாகுபடியை ஊக்கப்படுத்த ஒரு ஹெக்டர் செயல்விளக்கத் திடல்கள் சாலையோரத்தில் உள்ள விவசாயிகளின் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்யும் நீரைக் கொண்டு இரண்டு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். 

உமியில்லாத உணவு தானியம். 

                             இதில் பல்வேறு உணவுப் பொருள்களை தயாரித்து உணவாக உண்கிறோம். கோழித் தீவனம் தயாரிக்கப் பயன்படுகிறது. ஹெக்டருக்கு இரண்டரை டன்னுக்கு மேல் மகசூல் தரவல்லது, இதனை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும், கலப்புப் பயிராகவும், வரப்பு ஓராப் பயிராகவும் பயிரிடலாம்.

                           எனவே பாசன நீரின் சிக்கன உபயோகத்துக்கும், மக்காச்சோளம் சாகுபடியை பரவலாக்கவும் சாலையோரங்களில் செயல் விளக்கத் திடல்கள் கெடிலம் நீர்வடி முகடுப் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. தகுதியான முன்னோடி விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகலாம் என பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior