உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

இன்று டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக்

 பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 6500 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

Read more »

கடலூரில் சிதைக்கப்படும் மழைநீர் வடிகால்கள்


கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகே சிதைந்து கிடக்கும் சின்னவாய்க்கல்.
கடலூர்:

                தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, பரவனாறு ஆகியவை கடலூர் அருகே கடலில் சங்கமிக்கின்றன. மழைக் காலங்களில் குறிப்பாக வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில், இந்த ஆறுகளில் பெருமளவு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், கடலூர் நகரில் ஆங்காங்கே தேங்கும் மழைநீர் கடலில் சென்று வடிவதில் சிரமம் ஏற்படுகிறது.

             கடலூரில் முறையான ஒருங்கிணைந்த வடிகால் வசதி இல்லை. நகராட்சியும் நெடுஞ்சாலைத் துறையும் போட்டி போட்டுக் கொண்டு ஆண்டுதோறும் வடிகால் வசதிக்காக பணத்தை செலவிடுகின்றன. ஆனால் மழைநீர் வடிவதில்லை. வடிகால் வாய்க்கால்கள் ஒன்றுகொன்று தொடர்பு இல்லாமலும், முறையாக மேட்டில் இருந்து பள்ளத்தில் பாயும் வகையில் வாட்டம் இல்லாமல் கட்டப்படுவதாலும், அவை வடிகால்களாக இல்லாமல் தொட்டிகளாகக் காட்சி அளிக்கின்றன.

            மழைக் காலங்களில் இவை நிரம்பி மழைநீருடன் சாக்கடையும் கலந்து, பல பகுதிகளில் இடுப்பளவுக்குக் குளம்போல் தேங்கி விடுகின்றன. இவை வடிவதற்கு 10 நாள்களுக்கும் மேல் ஆகிறது. நகராட்சி மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றுவது, ஆண்டுதோறும் நடைபெறும் மீட்புப் பணிகளில் ஒன்றாகும். தற்போது பாதாள சாக்கடைத் திட்டத்தில் தோண்டப்படும் மண்ணை அகற்றாமல், சாலையிலேயே பரப்பி விடுகின்றனர். அதன் மீது 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு கருங்கல் ஜல்லி பரப்பி, பின்னர் தார் போட்டு, புதிய சாலைகளாக அமைப்பதால், சாலைகளின் உயரம் திடீரென 2 அடி உயர்ந்து விடுகிறது. இதனால் தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.  

                இந்த நிலையில் தண்ணீர் வடிகின்ற நிலையில் உள்ள வாய்க்கால்களும் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து, மண் மேடிட்டு வருகின்றன. நகரின் முக்கிய மழைநீர் வடிகால்களாகத் திகழ்பவை, திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடல் நோக்கிச் செல்லும் சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் என்பவைதான். 50 ஆண்டுகளுக்கு முன் இந்த வாய்க்கால்கள் தலா 3 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டுகளைக் கொண்டதாகவும் இருந்தன. ஆனால் இந்த வடிகால்கள்  பெருகிவரும் வீட்டுமனைப் பிரிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.  

                 ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்றபோது இந்த வாய்க்கால்களுக்கு சில இடங்களில் கருங்கற்களால் கரை அமைத்து நேர்த்தியாக சிமென்ட் பூசப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது சில மாதங்களாக தனியார் செல்போன் நிறுவனத்தினர் கேபிள் பதிப்பதற்காகவும், குடிநீர் வாரியத்தினர் பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்கள் பதிப்பதற்காகவும் இந்த வடிகால்களை, சிதைத்து வருகின்றனர். சேதப்படுத்துவோர் அவற்றை சரி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் இருந்த போதிலும் அவர்கள் செய்வதில்லை. இந்த வாய்க்கால்கள் பல இடங்களில் சேதம் அடைந்து மழைக் காலத்தில் தூர்ந்து சாலைகளில் வெள்ளம் வழிந்தோடும் நிலை உருவாகி வருகிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் 500 பேருக்கு கொத்தனார் பயிற்சி

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்ற வசதியாக, 500 பேருக்கு கொத்தனார் பயிற்சி அளிக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             2010-11-ம் ஆண்டில் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சியில் 50 சதவீதம் அளவுக்கு கட்டுமானத் தொழில் தொடர்பான பயிற்சியை அளிக்க அரசு திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சிறப்புத் திட்டமான கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில், மாநில அளவில் குடிசைகளுக்குப் பதில், 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் கொத்தனார் பயிற்சி அளிக்க 2010-11-ம் ஆண்டுக்கு இலக்கு 500 பேர் என நிர்ணயித்து, |40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

             ஒரு பயிற்சியாளருக்கு, அளிக்கும் நிதி ஒதுக்கீடு |8 ஆயிரம். நிறுவனத்துக்கு பயிற்சிக் கட்டணம் ஒருவருக்கு |3 ஆயிரம். பயிற்சி பெறுவோருக்கு ஊக்கத் தொகை 45 நாள்களுக்கு |4,500. ஒருவருக்கு |500 மதிப்புள்ள தொழில் கருவிகள் வழங்கப்படும். முதல் கட்டமாக 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ்களும்,  தலா |500 மதிப்பிலான தொழில் கருவிகளும் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.  ஊக்கத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

மாணவர்களுக்கு அதிக சலுகை அளிக்கும் மாநிலம் தமிழகம்: எம்.எல்.ஏ.அய்யப்பன்

கடலூர்:
 
           மாணவர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கும் மாநிலம் தமிழகம் என்று, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் பெருமிதம் தெரிவித்தார். 

            கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம், முந்தைய ஆண்டில் 74 சதமாக இருந்து, கடந்த ஆண்டு 84 சதமாக உயர்ந்தது. இதற்காக ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. 

பணியில் உள்ள ஆசிரியர்களையும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் பாராட்டி, பரிசுகளை வழங்கி அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசியது:

             கல்விக்காக இரு அமைச்சர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்வர் கருணாநிதி. கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் மாணவர்களுக்கு அதிக சலுகை வழங்கும் மாநிலம் தமிழகம்தான். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. 

            இதனால் மாணவ, மாணவியர் அரசுப் பள்ளிகளை நாடி வருகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கு தரமான கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.நான் கல்வி அமைச்சரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு |67 லட்சத்திலும், திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்குத் தலா 1 கோடியிலும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்றார் அய்யப்பன்.

                இத்தகைய விழாக்கள் நடத்துவதற்கு வசதியாக, தமிழ்ச் செம்மொழி நினைவு கலைஞர் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையை ஏற்படுத்த அய்யப்பன் தனது சொந்த நிதியில் இருந்து,  50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.விழாவுக்கு தலைமை ஆசிரியர் க.சண்முகம் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் பி.வெங்கடேசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வி.ஞானப்பிரகாசம், பி.சந்தானலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமை ஆசிரியர் தி.பாபு நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் 300 பேருக்கு இலவச சமையல் எரிவாயு

விருத்தாசலம்:

              விருத்தாசலத்தில் இலவச சமையல் எரிவாயு வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

           விருத்தாசலம் 27-வது வார்டு பகுதி மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் வ.க.முருகன் 300 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கிப் பேசினார்.நகர்மன்ற உறுப்பினர் ராமு வரவேற்றார். நகரமன்றத் தலைவர் வ.க.முருகன் தலைமை ஏற்றார். துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, திமுக நகர செயலர் தண்டபாணி, வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் அபுபக்கர், பொருளாளர் கதிரவன், நகர்மன்ற உறுப்பினர்கள் அரங்க.பாலகிருஷ்ணன், கர்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

டாஸ்மாக் பணியாளர் சாவு விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்:

          விருத்தாசலத்தை அடுத்த மு.பரூர் கிராமத்தைச் சேர்ந்த  டாஸ்மாக் ஊழியர் இளங்கோவன் திங்கள்கிழமை இரவு இறந்தார். 

            இவரது சாவில் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுவதால் விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை பரபரப்பான சூழல் காணப்பட்டது. விருத்தாசலத்தை அடுத்த மு.பரூர் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் இளங்கோவன். இவர் விருத்தாசலம் அடுத்துள்ள தொட்டிக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிய இளங்கோவன் செவ்வாய்க்கிழமை காலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக இறந்ததாக இளங்கோவனின் தந்தை மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

              ஆனால் 11-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என இளங்கோவனிடம் அதிகாரிகள் கையெழுத்து வாங்கியதால் மன உளைச்சல் அடைந்து தூக்குப்போட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விருத்தாசலத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநில அண்ணா தொழிற்சங்க செயலருமான சின்னசாமி, விருத்தாசலம் வந்தபோது இறந்த இளங்கோவன் திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் என்பதை அறிந்தார். 

பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநில அண்ணா தொழிற்சங்க செயலருமான சின்னசாமி தெரிவித்தது:

                 டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு போராட்டக் குழு அமைப்பை உருவாக்கி போராட உள்ளோம். இதில் அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 4 அமைப்புகள் இணைந்து போராடவுள்ளன.கடந்த மாதம் 27-ம் தேதி திருச்சியில் தொழிலாளர் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் அரசுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அரசு எந்த பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை.இந்நிலையில் 11-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என  ஊழியர்களை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். 

             இதில் மன உளைச்சல் அடைந்த டாஸ்மாக் பணியாளர் இளங்கோவன் தூக்குபோட்டுக் கொண்டுள்ளார். இளங்கோவனின் சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

திமுகவினர் அஞ்சலி: 

               இறந்த திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இளங்கோவனுக்கு திமுக நகரச் செயலர் தண்டபாணி மற்றும் ஒன்றியச் செயலர் ராமு உள்பட பல நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Read more »

விருத்தாசலத்தில் விடுதி மாணவர்கள் உண்ணாவிரதம்

விருத்தாசலம்:

          விருத்தாசலம் அரசுக் கல்லூரி விடுதி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கோட்டாட்சியர் தலையிட்டு திங்கள்கிழமை முடித்துவைத்தார்.

           விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரிக்கு அருகில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி உள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதி சமையலருக்கும் மாணவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விடுதி சமையலர் தனசேகரன் என்பவர் தனது உறவினர்களை அழைத்து வந்து விடுதி மாணவர்களை ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

            இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடுதி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். தகவலறிந்த கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் வட்டாட்சியர் ஜெயராமன் விடுதிக்குச் சென்றனர். கோட்டாட்சியர் முருகேசன் விடுதி காப்பாளர் முருகனிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களிடம் பேசியபோது, விடுதியில் முழுமையான சுகாதார வசதிகள் இல்லை, உணவு சரியாக இருப்பது இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் விடுதி மாணவர்களை தாக்கிய விடுதி சமையலரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதற்கு கோட்டாட்சியர் முருகேசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

Read more »

காவிரி பாசனப் பகுதிகளுக்கு அமைச்சர் இன்று தண்ணீர் திறக்கிறார்

டலூர்:

              கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குக் கொள்ளிடம் கீழணையில் இருந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) தண்ணீர் திறக்கிறார். 

             அத்துடன் பல்வேறு அரசு விழாக்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார். கடலூர் மாவட்டத்தில் காவிரி நீரால், 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சென்னை குடிநீருக்கும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது. இவற்றுக்காக கொள்ளிடம் கீழணையில் இருந்து காவிரி நீர் புதன்கிழமை காலை 9 மணிக்கு திறந்து விடப்படுகிறது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கீழணையின் மதகுகளைத் திறந்து விடுகிறார். 

               நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு ராசாப்பேட்டையில் சுனாமி குடியிருப்பை அமைச்சர் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு காரைக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 30 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடத்தையும், கே.புதூரில் முழுநேர ரேஷன் கடையையும் அமைச்சர் திறந்து வைக்கிறார்.மாலை 5 மணிக்கு திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடத்தையும், மாலை 6 மணிக்கு சி.என்.பாளையத்தில் 1.28 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும் திறந்து வைக்கிறார்.  

                    மேலும் சி.என்.பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியைத் திறந்து வைத்து, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குகிறார்.மாலை 7 மணிக்கு சஞ்சீவிராயன் கோயிலில் ரேஷன் கடைத்திறப்பு, 7-30 மணிக்கு ராமாபுரத்தில் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குதல் நிகழ்ச்சி ஆகியவற்றிலும் அமைச்சர் பங்கேற்கிறார்.

Read more »

பரங்கிப்பேட்டையில் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை : டாஸ்மாக் கடை இடமாற்றம்

பரங்கிப்பேட்டை : 

           பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனை இரண்டாவது நாளாக முற்றுகையிட்டதால் கடை மாற்றப்பட்டது. 

              கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பரங்கிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று மாலை அதே இடத்தில் மீண்டும் கடையை திறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டது.

Read more »

கடலூர் மாணவர்கள் சுதந்திர தினஅணி வகுப்பு ஒத்திகை

கடலூர்:

           சுதந்திரதினத்தை முன் னிட்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு ஒத் திகை கடலூர் போலீஸ் மைதானத்தில் நடந்தது.

            64வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் காலை 8 மணிக்கு நடக்கிறது. விழாவில் கலெக்டர் சீத்தாராமன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். விழாவில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனை முன்னிட்டு கடலூர் போலீஸ் மைதானத்தில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு ஒத்திகை நடந்தது.


Read more »

வீராணம் பாசன வாய்க்கால்கள் சீரமைப்புப் பணி தீவிரம்

சிதம்பரம்:

           வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் 22 கோடி ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

           சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில் பாதிப் பின்றி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க் கின்றனர்.காவிரி கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக வீராணம் ஏரி உள்ளது. காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட காவிரி கடைமடை பகுதி விவசாய பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதி பாசனத்திற்காக வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் மூலமும், வடவாற்றில் இருந்து பிரியும் பாசன வாய்க் கால்கள் மூலமும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

               அந்த வகையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள், பாசன வாய்க்கால்கள் தூர்ந்து பாசனத்திற்குப் போதுமான தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று 22 கோடி ரூபாய் செலவில் வடவாறு மற்றும் வீராணம் பாசன வாய்க்கால்கள், மதகுகள் சீரமைப்புப் பணி கடந்த இரண்டு மாதங் களாக தீவிரமாக நடந்து வருகிறது. வீராணம் ஏரியில் கீழ்கரையில் 28 பாசன வாய்க் கால்களும், மேல் கரையில் 6 மற்றும் வடவாறு உள்ளிட்ட 59 பாசன வாய்க் கால்கள் உள்ளது. இதில் பெரும்பாலான வாய்க் கால்கள் தூர் வாருதல், மதகு சீரமைப்பு, தடுப்புச் சுவர் கட்டுதல் பணி நடந்து வருகிறது. சம்பா சாகுபடிக்கு இன்று 11ம் தேதி கீழணையில் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி வடவாறு வழியாக வீராணத்திற்கு தண்ணீர் வரும். அதனால் வடவாறு மதகு மற்றும் பாசன வாய்க்கால் பணிகள் அவசர, அவசரமாக முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

            ஆனால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விட காலம் இருப்பதால் அந்தப் பகுதிகள் முடிய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என தெரிகிறது. சில இடங்களில் பாசன வாய்க்கால் பணிகள் மிக தீவிரமாகவும், சில இடங்களில் மந்தமாகவும் நடந்து வருகிறது.இந்தத் திட்டத்தில் வீராணம் ஏரிக் கரையில் களியமலைக்கும் கந்தகுமாரனுக்கும் இடையே குமுளி மதகு உள்ளது. இந்த மதகு வழியாக கலியமலை, பூர்த்தங்குடி, நெடுஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1,245 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்நிலையில் 6.5 கி.மீ., நீள முள்ள இந்தப் பாசன வாய்க்கால் மண்மேடிட்டு தூர்ந்து போதுமான தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப் பட்டு வந்தனர்.

                  இதுதொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையின் பேரில், குமுளி மதகு பகுதியில் இருந்து பாசன வாய்க்கால் முழுவதும் தூர்வாரி, இரு கரை பகுதிகளிலும் தலா 250 மீ., நீளத் திற்கு "கான்கிரீட்' தடுப்பு சுவர் அமைக்க 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வீராணம் ஏரிப் பாசன வாய்க்கால் பணிகள் பெரும்பாலானவை முடியாத நிலையில், சம்பா பயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண் டும் என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே வேலை உறுதியளிப்பு திட்டத்தில்புதிய குளம் அமைக்கும் பணி தீவிரம்

திட்டக்குடி:

          திட்டக்குடி அருகே வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புதிய குளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.திட்டக்குடி அடுத்த கொடிக்களம் ஊராட்சியில் நூறு நாள் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செல்லியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் புதியதாக குளம் அமைக்கும் பணி  தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் நலப்பணியாளர் கலைச்செல்வி முன்னிலையில் 61 ஆண்கள், 102 பெண்கள் பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் உமாராணி, துணைத் தலைவர் சுரேஷ், எழுத்தர் சண்முகம் ஆகியோர் பணிகளை பார் வையிட்டு துரிதப்படுத்தினர்.

Read more »

கடலூர் பகுதியில் தினம் தினம் மழைகாய்கறி உற்பத்தியாளர்கள் கவலை

கடலூர்:

                 கடலூர் மற்றும் சுற்றுப் பகுதியில் தினமும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடலூர் சுற்றுப்பகுதி கிராமங்களான ராமாபுரம், நல்லாத்தூர், நாணமேடு, கண்டக்காடு, திருவந்திபுரம் போன்ற கிராமங்களில் இருந்து கத்தரி, வெண்டை, அவரை, பாகை, கொத்தவரை, சுரை, பீன்ஸ், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்பட்டு கடலூர், பண்ருட்டி, புதுச்சேரி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
 
           புஞ்சை நிலத்தில் பயிர் செய்யப்படும் காய்கறி பயிருக்கு அதிக தண்ணீர் தேவை இருக்காது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச் சினாலே போதுமானது.ஆடி மாதப்பட்டத்தில் காய்கறி, நெல் விதைப்பது வழக்கம். தற்போது விதைக்கப்படும் காய்கறி பயிருக்கும் அளவான தண்ணீர்தான் வேண்டும். வழக்கமாக அக்டோபர் மாதங்களில் எப்போதாவது ஒரு முறை தான் மழை பெய்யும். மழை பெய்யும் போது நெல், கம்பு போன்றவற்றை விவசாயிகள் விதைப்பு செய்வர்.

                  தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பகலில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. கடந்த 15 நாட்களாக இதே போன்ற நிலை நீடித்து வருவதால் காய்கறி பயிர்கள் மடிந்து வருகின்றன. ஏற்கனவே காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகள் காலாவதியாகி வருகின்றன. அதேபோல் தொடர்ந்து நிலம் ஈரமாக இருந்து வருவதால் புதியதாக வளர்ந்துள்ள காய்கறி பயிர்களுக்கும் களை வெட்ட முடியாமல் மண்டி உள்ளது. இதனால் காய்கறி உற்பத்தி தொடர்ந்து பாதிக்கும் நிலை உள்ளதால் விளைச்சல் குறையும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Read more »

தி.மு.க.,வை மக்கள் அருவருப்பாக பார்க்கிறார்கள்: முன்னாள் அமைச்சர் செம்மலை

சேத்தியாத்தோப்பு:

            தி.மு.க.,வை அருவருப்பாக பார்க்கிறார்கள் என முன்னாள் அ.தி. மு.க., அமைச்சர் செம்மலை பேசினார்.கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., விவசாய பிரிவு நிர்வாகிகள் தேர்விற்கான ஆலோசனைக் கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. 

              மாநில விவசாயப் பிரிவு செயலாளர் சோழன் பழனிசாமி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளர் அருண்மொழித் தேவன், துணை செயலாளர் முருகுமாறன், அவைத் தலைவர் கலியமூர்த்தி, தொகுதி செயலாளர் கருப்பன், நகர செயலாளர் இளஞ்செழியன், புவனகிரி முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன், மாநில விவசாயப் பிரிவு நிர்வாகிகள் கமலநாதன், பாரதியார், தலைமை கழக பேச்சாளர் கோபி, முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், முன்னாள் நகர துணை செயலாளர் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் உட் பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேசியதாவது:

               அ.தி.மு.க.,வில் உள்ள 13 அமைப்புகளில் விவசாயப் பிரிவு செல்வாக்கில்லாத பிரிவு என்று யாரும் கருதிவிடக் கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில் பொறுப்புகளை வேண்டி மனு கொடுத்திருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும். அந்த அங்கீகாரத்தை ஏற்று அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். கோவையில் ஜெ., பங்கேற்ற கூட்டத்திற்கு பின் கருணாநிதி கதிகலங்கி தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார். கருணாநிதியையும், தி.மு.க.,வையும் மக்கள் அருவருப்பாகவும், அ.தி.மு.க.,வை அன் போடும் பார்க்கிறார்கள். வரும் 14ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டம் கோவையை மிஞ்ச வேண்டும். அதைக் கண்டு கருணாநிதி மீண் டும் அஞ்ச வேண்டும். இவ்வாறு செம்மலை பேசினார்.

Read more »

பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணம்:

              பள்ளி மாணவர் இறப் பிற்கு காரணமான நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர்.

              கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் (16). ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குப்பாளையத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை விடுதியில் உள்ள செப்டிக் டேங்க் கழிவை சுத்தம் செய்யும்படி விஜய் உள் ளிட்ட மாணவர்களிடம் வார்டன் கூறினார்.
 
               மின் மோட்டார் இணைப்புடன் கூடிய பைப் மூலம் கழிவுநீரை வெளியேற்ற, மின் இணைப்பு கொடுத்தபோது எதிர்பாராதவிதமாக விஜய் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் விஜய் இறந்தார். மாணவர் விஜய் ஹாஸ்டலில் உள்ள சுவிட்சை போடும் போது மின்சாரம் தாக்கி இறந்ததாக, பள்ளி நிர்வாகத்தினர் சோழத்தரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

                  இதனையறிந்த மாணவரின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிந்து நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பள்ளியின் ஹாஸ்டல் வார்டன்கள் அந்தோணிசாமி, பாக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர். மேலும், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் விஜயலட்சுமி நேரில் சென்று பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Read more »

மேல்மாம்பட்டில் கலங்கலான குடிநீர்

பண்ருட்டி:

           பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு ஊராட்சியில் குடிநீர் தூர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

            பண்ருட்டி அடுத்த மேல் மாம்பட்டு மேற்கு தெரு, மாரியம்மன் கோவில் தெருவில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதி மக்களுக்காக மோட் டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக குடிப்பதற்கு பயன் படுத்த முடியாத நிலையில் குடிநீர் செம்மண் கலந்த பழுப்பு நிறத்தில் எண்ணெய் படிந்தது போல் வருகிறது. 

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 

                 "கலங்கலாக வரும் குடிநீர் துணி துவைப்பதற்கும், கால்நடைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றோம். ஒரு சில நேரங்களில் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. மேல்மாம்பட்டில் உள்ள கெம்ப்ளாஸ்ட் ஆலைக் கழிவுகள் நிலத்தடியில் கலந்து குடிநீர் மாசு ஏற்பட்டதால் குடிநீர் நிறம் மாறி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் என அனைவரிடமும் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை' என தெரிவித்தனர்.

Read more »

வரைகலை போட்டியில் பண்ருட்டி மாணவர் முதலிடம்

கடலூர்:

             உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் நடந்த பள்ளி அளவிலான இணைய தள கம்ப்யூட்டர் தமிழ் வரைகலை தனி நபர் போட்டியில் பண்ருட்டி மாணவர் முதல் பரிசை பெற்றார்.

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் நடந்த பள்ளி அளவிலான இணையதள கம்ப்யூட்டர் தமிழ் வரை கலை தனி நபர் போட்டி நடந்தது. இதில் பண்ருட்டி நியூ ஜான் டூயி பள்ளியை சேர்ந்த சுதாகரன் முதல் பரிசு பெற்றார். புனித மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளி சமரிநாதன் 2ம் பரிசும், திருவந்திபுரம் ஸ்ரீவித்யா கலாகேந்திரம் பள்ளியை சேர்ந்த மாணவர் கலைச்செல்வன் 3ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் சீத்தாராமன் பாராட்டி பரிசு வழங்கினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior