உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 18, 2010

விடுதி சாலையை உடனே சீரமைக்க சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் "ஸ்டிரைக்'

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் விடுதி சாலையை சரிசெய்யக்கோரி நேற்று மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.  சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். 

              கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதிகள் உள்ளன. இந்த விடுதியில் வெளியூர் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரியில் இருந்து விடுதிக்கு செல்லும் சாலை சரியில்லாமல் இருப்பதால் மழைக்காலங்களில் மாணவர்கள் லுங்கியுடன் கல்லூரிக்கு வந்து உடைமாற்றினர். எனவே சாலையை சரிசெய்ய வேண்டும். கல்லூரி வளாகத்தில் விடுதியை சுற்றி மரங்கள், முட்புதர்கள் அதிகளவில் இருப்பதால் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. 

             எனவே விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு கல்லூரி துவக்கத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது சிதம்பரம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால் இது நாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது  பெய்து வரும் மழையால் மாணவர்கள் தேர்வு நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

                நேற்று தேர்வு முடிந்து கல்லூரிக்கு வந்த மாணவர்கள் விடுதி மாணவர்களுக்கு ஆதரவாக வகுப்பை புறக்கணித்தனர்.  கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு செல்லும்  சாலையை சரிசெய்ய வேண்டும், கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு வகுப்பை புறக்கணித்தனர்.

Read more »

செங்கல் உற்பத்தி செய்ய 35 சதவீத மானியத்துடன் கடன்: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர்:

                  கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அட்டை வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 41 ஊராட்சிகளுக்கு பி.முட்லூரில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட 41 கிராமங்களைச் சேர்ந்த 10,429 நபர்களுக்கு தகுதி அட்டை வழங்கி பேசியது:-

            முதல்- அமைச்சர் கலைஞரின் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 10,429 பேருக்குக்கு 5 ஆண்டுகளில் வீடு கட்டி வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 1,66,327 பேருக்கு வீடுகள் கட்டுவதற்காக தகுதி அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் 26,119 பேருக்கு வீடு கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், கடந்த ஆட்சியில் ஏழை மக்களுக்கு இதுபோன்ற கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படவில்லை.

              கலைஞர் 5-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 75 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருகின்றன. இது தவிர, கலைஞர் ஏழை மக்களுக்காக இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி, இலவச எரிவாயுடன் கூடிய அடுப்பு, இலவச வீட்டு மனைப் பட்டா, திருமண நிதியுதவி, பள்ளி மாணவ- மாணவி களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை வழங்குதல,¢ இலவச சைக்கிள் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.


              தமிழகத்தில், ஏழை எளிய மக்கள் குடும்பம் ஒன்றிற்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான உதவிகள் கிடைக்கின்றன. எனவே, கலைஞர் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு செங்கல் பற்றாக் குறையாக இருப்ப தால் கிராமப் புறங்களில் செங்கல் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். செங்கல் உற்பத்திக்கு 35 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

                 பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முத்துபெருமாள், குமராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மாமல்லன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வெங்கடாசலம் வரவேற்றார். பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரஹாசன் நன்றி கூறினார். ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சரவணகுமார், சிதம்பரம் கோட்டாட்சியர் ராமராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்

Read more »

குறிஞ்சிப்பாடியில் மோதல்; 2 பேர் படுகாயம் 3 பேர் கைது

நெய்வேலி:

             குறிஞ்சிப்பாடி மேல விநாயககுப்பம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 34) விவசாயி. இவரும் இவரது நண்பர் வீராசாமியும் ஒரு மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி காலனி எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த சிவசக்திவேல், ராமராஜன், ரத்தினவேல் ஆகியோர் வேனுக்கு வழிவிடும்படி கூறினார்கள். இதையொட்டி அவர்களுக்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

             அப்போது சிவசக்திவேல் உள்பட 3 பேர் ஆத்திரம் அடைந்த நடராஜனையும், வீராசாமியையும் கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். வீராசாமி, குறிஞ்சிப்பாடி ஆஸ்பத்திரியிலும், நடராஜன், கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 

          இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த மோதல் தொடர்பாக சிவசக்திவேல், ராமராஜன், ரத்தினவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior