உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

மூட்டை மூட்டையாக குவியும் வி.ஏ.ஓ., விண்ணப்பங்கள் சிறப்பு பணி மூலம் "பட்டுவாடா"





           தமிழகத்தில், 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு, மூட்டை மூட்டையாக விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. அவற்றை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வசதியாக, தபால் துறை சிறப்பு பணியை மேற்கொண்டுள்ளது. 

            தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டி.என்.பி. எஸ்.சி.,), 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இதுவரை 8.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதுமிருந்து சென்னை கிரீம்ஸ் சாலை தபால் நிலையத்தில், விண்ணப்பங்கள் மூட்டை மூட்டையாக குவிந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு டெலிவரி செய்யும் வகையில், தபால் நிலையங்களில் சிறப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுமுறை நாளான நேற்று, விரைவு தபால் மூலம் வந்து சேர்ந்த விண்ணப்பங்களை பட்டுவாடா செய்வதற்காக, சிறப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடுதலாக பயன்படுத்தப்பட்டனர். 

இதுகுறித்து சென்னை மத்திய கோட்டத்தின் முதல்நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: 

              இவற்றை வினியோகம் செய்ய தபால் துறையில் சிறப்புப் பணி இன்று (நேற்று) முதல் துவக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஏழாயிரத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்., அலுவலகத்தில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் வந்து சேர, 20ம் தேதி இறுதிநாள் என்பதால், அதுவரை சிறப்புப் பணியை மேற்கொள்ள உள்ளோம். வந்து சேரும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படும்.  இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

Read more »

"தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர் முத்தையவேள்"



சிதம்பரம்:
 
           தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர் ராஜா சர் முத்தையா செட்டியார் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் புகழாராம் சூட்டினார்.
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில், ராஜா சர் முத்தையா செட்டியாரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்தார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி முன்னிலை வகித்து நினைவுப் பரிசுகள் வழங்கினார்.விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் நினைவுப் பேருரையாற்றினார். 
 
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் பேசியது: 
 
           அரசர் முத்தையவேள், அண்ணாமலையாரின் மகன் மட்டுமல்ல. அவர் தமிழ்மகன் ஆவார். மகன் தந்தைக்காற்றும் உதவிகளை எல்லாம் அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கிறார். முத்தையவேள் தமிழ் மொழியை மனம், மொழி, மெய்யால் போற்றியவர் என்றார்.விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. துணைவேந்தர் ம.ராசேந்திரன் பெயரில் ரூ.50ஆயிரத்திற்கு அறக்கட்டளை ஒன்றை இணைவேந்தர் எம்ஏஎம் ராமசாமி நிறுவியுள்ளதாக துணைவேந்தர் எம்.ராமநாதன் விழாவில் தெரிவித்தார்.
 
           பொறியியல்புல முதல்வர் பி.பழனியப்பன் வரவேற்றார். இந்திய மொழிப்புல முதல்வர் பழ.முத்துவீரப்பன் நன்றி கூறினார். விழாவில் தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் பல்கலைக்கழக இசைக்கல்லூரி சார்பில் ராஜா முத்தமிழ் மன்ற 24-ம் ஆண்டு இசை விழா நடைபெற்றது. பல்கலைக்கழக இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சியும், ஸ்ரீரங்கம் கலைமாமணி ரேவதிமுத்துசாமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Read more »

பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் கடலூர் மக்கள்


சனிக்கிழமை பெய்த மழையால் சகதியாக காட்சி அளிக்கும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் கடலூர் திருப்பாப்புலியூர் முத்தையா நகர் - எஸ்.பி.ஐ. காலனி இணைப்புச் சாலை 
 
கடலூர்:
 
          கடலூரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பழுதடைந்து கிடக்கும் நகராட்சி சாலைகளால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 
 
           கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கி, 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திட்டம் எப்போது நிறைவடையும் என்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை வெவ்வேறு காலங்களை, ஆருடம் போல் கணித்துக் கூறி வருகின்றன. ஆனால், யாராலும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது.நகராட்சி சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, தற்போது மழைநீர் தேங்கும் குளங்களாகவும், வாய்க்கால்களாகவும், குன்றுகளாகவும், பாதாளக் கிடங்குகளாகவும் காட்சி அளிக்கின்றன. 
 
           பாதிக்கப்பட்ட முக்கிய நெடுஞ்சாலைகளான நெல்லிக்குப்பம் சாலை, வண்டிப்பாளையம் சாலை ஆகியவை மிகுந்த போராட்டத்துக்கு இடையே அண்மையில் சீரமைக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இச்சாலைகள் புதிதாக போடப்பட்டதால், ஒலித்த குரல்கள் கொஞ்சம் குறையத் தொடங்கி உள்ளன. ஆனாலும் நகராட்சி சாலைகளின் நிலை, அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்வதால், இந்த பரிதாபநிலை மேலும் மோசமாகி இருக்கிறது. கடலூர் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரி செலுத்தும் 1.5 லட்சம் மக்களுக்கு, பாதுகாப்பான சாலைகள்கூட இல்லை என்ற பரிதாப நிலை. வரிப்பணத்தின் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்துக்கே போய்விடுகிறது. மக்கள் பணிக்கு பணத்துக்கு எங்கோபோவது என்ற நிலையில்தான் கடலூர் நகராட்சி உள்ளது என்கிறார்கள், நகராட்சி உறுப்பினர்கள்.
 
              பாதாள சாக்கடைத் திட்டத்தால் பழுதடையும் நெடுஞ்சாலைகளை சரி செய்ய திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் நகராட்சி சாலைகளை சீரமைக்க நகராட்சிதான் பணம் ஒதுக்க வேண்டும் என்ற சங்கடம், கடலூர் நகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் பரிதாபமாக காட்சி அளிக்கின்றனவே என்று அங்கலாய்க்கும் மக்களிடம், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே நிதி இல்லை, மின் கட்டணம் செலுத்த முடியவில்லை, சாலை வசதிக்கு எங்கே போவது என்கிறார் நகராட்சி உறுப்பினர் சர்தார். 
 
நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது 
 
               நகராட்சி சாலைகளை சீரமைக்க, பாதாள சாக்கடைத் திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. நகராட்சி நிதியில் இருந்துதான் செய்ய வேண்டும். சாலைகளைச் சீரமைக்க மாநில அரசிடம் ரூ. 12 கோடி கடன் கேட்டு இருக்கிறோம். ரூ. 5 கோடியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 1.5 கோடி கேட்டு இருக்கிறேன். அதுவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். வடகிழக்கு பருவ மழை தொடங்குமுன் நகராட்சி சாலைகளை சரி செய்ய முயன்று வருகிறேன் என்றார்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் இன்று தொடக்கம்

சிதம்பரம்:

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2010-11 கல்வி ஆண்டுக்கான கீழ்க்கண்ட அனைத்து வகுப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் (ஆகஸ்ட் 9) வகுப்புகள் தொடங்கப்படும் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் கலெக்டர் உத்தரவை மீறி வெள்ளாற்றில் மணல் எடுப்பு ; ஷட்டர்களின் அடித்தளம் பலவீனமாகும்.



சேத்தியாத்தோப்பு: 

          கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் வேறு இடத்தில் மணல் எடுப்பதன் மூலம் வெள்ள அபாயத்தை பொதுப்பணித் துறையினரே ஏற்படுத்தி வருகின்றனர். 

            சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 400க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய வீராணம் திட்ட பாலத்தின் அருகில் மணல் எடுத்து வந்தனர். இதனால், வீராணம் திட்ட பாலம் பலவீனமாகும் நிலை உருவானது. இதுபற்றி கடந்த மாதம் (ஜூலை 12) தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீராணம் திட்ட பாலத்தின் பில்லர் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி சமப்படுத்தும் பணியினை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர். இதுகுறித்தும் ஜூலை 16ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. 

             மேலும் அச்செய்தியில் 35 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் மட்டுமே மூழ்கக் கூடிய மணல் மேட்டை கரைக்க வேண்டி அங்கு மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால், பொதுப்பணித் துறையினரோ வீராணம் திட்ட பாலத்தின் பில்லர் பகுதியை மட்டும் மணல் கொட்டி மேடாக்கி விட்டு பாலத்தையொட்டி 300 மீட்டர் தூரத்தில் சமப்படுத்தப்பட்ட பகுதியில் மீண்டும் மணல் எடுத்து வருகின்றனர். 

              மணல் எடுப்பதிலும் கூட அரசு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் தொடர்ந்து வருகிறது. மேலும் வெள்ள அபாயத்தை தடுக்க வேண்டி மணல் எடுக்க கலெக்டர் உத்தரவிட்ட பகுதிகளை அப்படியே விட்டு விட்டு வெவ்வேறு இடங்களில் மணல் எடுத்து வருகின்றனர். வெள்ளம் வந்தால் விரைவாக தண்ணீர் சூழும் பகுதியிலேயே மீண்டும் பள்ளங்கள் உருவாக்கி மணல் எடுப்பதன் மூலம் வெள்ளாற்றில் உள்ள நீர் தேக்க அணையின் ஷட்டர்களின் அடித்தளம் பலவீனமாகும். இதனை தவிர்க்க மணல் எடுக்கும் பகுதியை கலெக்டர் நேரிடையாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் கடலோர காவல் படையினருக்கு மற்றொரு அதிநவீன விசைப்படகு




கடலூர்: 

           கடலோர  பாதுகாப்பை தீவிரப்படுத்த, கடலோர காவல் படை போலீசாருக்கு மற்றொரு அதிவேக விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது. 

          மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பின், கடலோரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக கடலோரப் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்துப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினருக்கு இதற்கு முன், நவீன இரண்டு இன்ஜின் உள்ள ஐந்து டன் திறனுள்ள படகு வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் கடலில் வெகு தூரம் சென்று கண்காணித்து வருகின்றனர். 

                   தற்போது மேலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தும் விதமாக அரசு, மற்றொரு 12 டன் எடை கொண்ட அதிநவீன படகு ஒன்றை வழங்கியுள்ளது. டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட இந்தப் படகு மணிக்கு 35 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். இதன் மூலம் கடலில் வெகு தூரத்தில் வருபவர்களை எளிதாக கண்காணிக்க வசதியாக,  படகில் மேல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை விரட்டிச் சென்று பிடிப்பதற்கு பல வசதிகள் இந்த படகில் அமைக்கப்பட்டுள்ளன.


Read more »

கடலூரில் காவலர், வார்டன், தீயணைப்புவீரர்களுக்கான தேர்வு: 7,104 பேர் பங்கேற்பு



கட​லூர் மஞ்​சக்​குப்​பம் புனித வள​னார் மேல்​நி​லைப் பள்​ளி​யில் நடந்த 2-ம் நிலை காவ​லர்​க​ளுக்​கான எழுத்​துத் தேர்​வைப் பார்வை​யி​டும் கட​லூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்


கடலூர்:

          கடலூரில் நடந்த காவலர், வார்டன், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வில் மாவட்டத்திலிருந்து 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

             தமிழகத்தில் உள்ள காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றில் ஏற்படும் காலி பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் எழுத்துத்தேர்வு  நடத்தி நிரப்பப்படுகிறது. தற்போது இம் மூன்று துறைகளிலும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப மாவட்டம் தோறும் எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்திலிருந்து 7,104 பேர் நேற்று எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 856 பேர் பெண்கள்.

             கடலூரில் 2 மையங்களில் தேர்வு நடந்தது. செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண்கள் 5,000 பேரும், புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண், பெண் 2,104 பேரும் தேர்வு எழுதினர். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தேர்வு ஹாலை பார்வையிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி ஒலிப்பெருக்கி மூலம் அறிவுரை வழங்கினார்.

இது குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

                  இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 80 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத 80 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்வியும் ஒரு நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். ஒரு பெஞ்சில் 4 பேர் எழுதினால் கூட ஏ, பி, சி, டி, என 4 விதமான கேள்வித் தாள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அனைத்து கேள்விகளும் இடம் பெற்றிருந்தாலும் கேள்விகள் இடம் மாறி இருக்கும். எனவே அருகில் இருந்தாலும் காப்பியடிக்க முடியாது. இதில் 50 வினாக்கள் பொது அறிவைப் பற்றியும், 30 கேள்விகள் திறன், அடிப்படை கணிதம் பற்றியும் கேட்கப்பட்டுள்ளது' என்றார்.

Read more »

சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் வங்கி டி.டி., வாங்க மறுப்பு

சேத்தியாத்தோப்பு: 

            சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் சேத்தியாத்தோப்பில் உள்ள வங்கிகளின் டி.டி.,யை (வரைவோலை) பெற மறுப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

            தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பண பரிமாற்றம் மூலம் லஞ்சம் அதிகரித்ததால், அதைக் கட்டுப்படுத்த பத்திரப் பதிவிற்கான பதிவு கட்டணத்தை, வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்திரப் பதிவு செய்ய நிலம் மற்றும் மனைகளின் மதிப்பிற்கு ஏற்ப பதிவு தொகைக்கான பணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக பெற்று, அதை, சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள், சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பின்பற்றப்படவில்லை. சேத்தியாத்தோப்பில் இந்தியன் வங்கி, பல்லவன் கிராம வங்கி, கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய மூன்று வங்கிகள் உள்ளன. 

            சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடியில் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை உள்ளது. இந்த வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் வாங்க மறுக்கின்றனர். மாறாக ஸ்டேட் வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை மட்டுமே பெற்றுக் கொள்வோம் என திட்டவட்டமாக கூறுகின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை எடுத்தால் என்ன தவறு என விளக்கம் கேட்பவர்களிடம் உங்களது பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஐந்து மாதம் கழித்து தான் கிடைக்கும் என கூறி விடுகின்றனர். 

                இதனால் சேத்தியாத்தோப்பில் பத்திரப் பதிவு செய்ய வருபவர்கள் அருகில் உள்ள பின்னலூர் ஸ்டேட் வங்கி கிளைக்குச் சென்று வரைவோலை பெற வேண்டிய நிலை உள்ளது. வரைவோலை பெற சேத்தியாத்தோப்பில் மூன்று வங்கிகள் இருந்தும் கடும் அலைச்சலுக்கும் அவதிக்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே, சேத்தியாத்தோப்பில் உள்ள வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள தக்க ஏற்பாடுகளை பதிவுத்துறை செய்ய வேண்டும்.

Read more »

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது

 


சிதம்பரம்: 

             வீராணம் ஏரியில் தண்ணீர் வரத்து இல்லாததால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து குளம்போல் காணப்படுகிறது. 

              கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளக்குவது வீராணம். கோடை காலங்களில் தண்ணீர் வற்றி பாலைவனமாக மாறிவிடும். ஆனால், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதையொட்டி, கடந்த சில ஆண்டுகளாகவே வீராணம் வற்றாமல் கோடையிலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. தற்போது, ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மொத்த கொள்ளளவான 47.5 அடி உயரத்தில், 40 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால், வீராணம் ஏரி பாசி செடிகள் வளர்ந்து, வறண்ட குளம் போல் காணப்படுகிறது. இருந்தும் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கிடையே, வரும் 11ம் தேதி, கீழணையில் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், விரைவில் ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more »

Sewing machines for differently-abled

CUDDALORE: 

           It has been proposed to give away motorised sewing machines, free of cost, to differently-abled persons. A statement from the Collectorate states that the beneficiaries should be holding the national identity card and should be in the age group of 18 to 45 years, and should also produce a certificate either from a government or aided institution to the effect that they know tailoring.

No income limit

            There is no income limit or educational qualifications for getting the benefit. The eligible candidates can apply to 

The Welfare Officer for the Differently-abled, 
37, Ramadass Street, 
Pudupalayam, 
Cuddalore – 607 001 

             before August 20.

Read more »

நீண்ட இழுபறிக்கு பின் நொச்சிக்காடு பாலம் பணி துவங்கியத

கடலூர்:

             கடலூர் அடுத்த நொச்சிக்காடு - செம்மங் குப்பம் இடையே உப்பனாற்றின் மீது 7.14 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நான்கு ஆண்டு இழுபறிக்கு பின் மீண்டும் துவங்கியது.

              கடலூர் அடுத்த நொச்சிக்காடு கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தியாகவல்லி, நடுத்திட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி, திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடலூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு கம்பளிமேடு, ஆலப்பாக்கம் வழியாக 7 கி.மீ., தூரம் சுற்றி கடலூர் - சிதம்பரம் சாலைக்கு வர வேண்டும்.  இல்லையெனில் நொச்சிக்காட்டிலிருந்து உப்பனாறு வழியாக படகு மூலம் செம்மங்குப் பம் வந்து கடலூர் - சிதம்பரம் சாலையை அடைய வேண்டும்.

               இரவு நேரங்களில் விஷக்கடி, பிரசவம் உள் ளிட்ட அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும், வெளியூர்களுக்கு செல்லவும் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் செம்மங்குப்பத் தில் இருந்து நொச்சிக்காடு வழியாக சென்றுவர உப்பனாற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டித்தர வேண் டும் என அப்பகுதி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது.இதனையடுத்து கடந்த 2006ம் ஆண்டு நொச்சிக் காடு உப்பனாற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அப்போதையை கலெக்டர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினர். 

              அடிக்கல் நாட்டிய பின் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவித பணிகளும் துவங்காமல் பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.இதனால் நொச்சிக்காடு உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் உப்பனாறு வழியாக படகு மூலம் செம்மங்குப்பத்தை அடைந்து பள்ளிக்குச் சென்று வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உப்பனாற்றில் படகு கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தண்ணீரில் மூழ்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். படகு கரையோரத்தில் கவிழ்ந்ததால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

            இதனையடுத்து பள்ளி மாணவர்களின் நலன் கருதி அப்பகுதி கிராம மக்கள் நொச்சிக்காடு பாலம் கட்டுமான பணியை விரைந்து துவக்க வேண் டும் என மீண்டும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எம்.பி., தொகுதி நிதி மற்றும் சுனாமி நிதி ஆகியவற்றின் மூலம் 7 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அனுமதி பெறப்பட்டு நொச்சிக்காடு - செம்மங்குப்பத்திற்கு இடையே உப்பனாற்றில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. உப்பனாற்றின் குறுக்கே செம் மண் அடிக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. 

                 விரைவில் உப்பனாற்றில் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர்கள் எழுப்பும் பணி நடைபெற உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இப்பணி இந்த முறையாவது தடைபடாமல் நடந்து உயர் மட்ட பாலம் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரும் 2011ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதிக்குள் பாலம் கட்டும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. இப்பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டால் நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி, திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.


Read more »

குறைகேட்புக் கூட்டத்தை அதிகாரிகள்புறக்கணிப்பதாக விவசாயிகள் புகார்

சிறுபாக்கம்:

            மங்களூர் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

                மங்களூர் ஒன்றிய விவசாயிகளின் குறைகேட்புக் கூட்டம், ஒன்றிய வளாகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மார்கெட்டிங் பிரிவு அலுவலர் சிவக்குமார், தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு மானாவாரி நிலங்களுக்கு தேவையான மக்காச்சோள விதைகள், வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்குழாய் கிணறு, மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களுக்கு உரங்கள், பயிர்களை நாசம் செய்யும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதில் அளித்து உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் பேசுகையில், 

               "இது குறித்து சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப் படும்' என்றார்.தொடர்ந்து விவசாயிகள், கடந்த ஆண்டு நவம் பர் முதல் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத் திற்கு மின்துறை, ஊரக வளர்ச்சி, பொதுப்பணித் துறை, வருவாய் மற்றும் வனத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் வருவதில்லை. தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.இதனால் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் தெரிவிக்க முடிவதில்லை என அனைத்து விவசாயிகளும் புகார் தெரிவித்தனர்.

Read more »

விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு

விருத்தாசலம்:

           விருத்தாசலம் பகுதி ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

            விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர் குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பொது சுகாதாரம் மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற் பார்வையாளர் நாகராஜன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் பாபு, நாட்டுதுரை, முரளி, வீரமணி, ரகுபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 51 ஊராட்சிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி பராமரிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


Read more »

கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 38, 39 வார்டுகளில் காஸ் அடுப்பு வழங்கும் விழா

கடலூர்:

            சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி பகுதியில் 515 பயனாளிகளுக்கு எம். எல்.ஏ., அய்யப்பன் இலவச காஸ் அடுப்பு வழங்கினார்.

              கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 38, 39 வார்டுகளில் சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி பகுதியில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.,அய்யப்பன் தலைமை தாங்கி, 515 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப புகளை வழங்கி பேசினார்.சேர்மன் தங்கராசு, துணைச் சேர்மன் தாமரைச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கோமதி சம்பத், நித்தியானந்தம், தமிழரசன், தங்கமணி, இளங்கோவன் மற்றும் பிரதிநிதிகள் கலைமணி, கோவிந்தன், ஹாஜா, இளைஞரணி சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் பள்ளியில் எரிசக்தி விழிப்புணர்வு ஊர்வலம்


ஸ்ரீமுஷ்ணம்:

            ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ.,மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் சார்பில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி விழிப்புணர்வு மற்றும் வாகன பிரசார ஊர்வலம் நடந்தது.

             முன்னதாக எரிசக்தி குறித்த விளக்க கூட்டம் நடந்தது. செயலர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஞானசேகரன் வரவேற்றார். புதுப் பிக்கவல்ல எரிசக்தி பயன்பாடு மற்றும் பயன் படுத்தும் விதம் குறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை விரி வாக்க மேலாளர் வெங்கட்ராமன் விளக்க உரையாற்றினார். பின்னர் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அருகே நாட்டு வெடி வெடித்து விபரீதம்ஐந்து சிறுவர்கள் படுகாயம்




விருத்தாசலம்:

             ஸ்ரீமுஷ்ணம் அருகே வெடிக்காத நாட்டு வெடியை வெடிக்கச் செய்த ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர். 

              கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆனந்தகுடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் பெரிய அளவிலான நாட்டு வெடி சரமாக கட்டப்பட்டு வெடிக்கப்பட்டது. இதில் இரண்டு வெடிகள் வெடிக்காமல் கிடந்தது. நேற்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வெடிக்காத இரண்டு வெடிகளை எடுத்துச் சென்று ஆற்றில் வைத்து கொளுத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக அவை திடீரென வெடித்ததில் பாண்டியன் மகன் ஜெயகிருஷ்ணன் (10), பாண்டுரங்கன் மகன் மணிமாறன் (9), முருகானந்தம் மகன் வீரபாண்டியன் (8), பழனிவேல் மகன் பிரதாப் (14), சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் மணிபாரதி ( 8) உள்ளிட்ட சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

                 இதில் ஜெயகிருஷ் ணன் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற சிறுவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .“இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

பண்ருட்டியில் கண்டக்டருக்கு "தர்ம அடி'பஸ் நிலையத்தில் வியாபாரிகள் "அட்டூழியம்"

பண்ருட்டி:

           பண்ருட்டியில் பஸ்சில் ஏறி பலாச்சுளை விற்க முயன்றவர்களைத் தடுத்ததால் அரசு பஸ் கண்டக்டருக்கு தர்ம அடி விழுந்தது.

              வேலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசு விரைவு பஸ் டி.என்.23.என்.1865 நேற்று காலை 11.30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ் நிலையத்திற்குள் வந்ததும் தட்டில் பலாச்சுளை விற்கும் மூன்று வியாபாரிகள் பஸ்சில் ஏறினர். அப்போது கண்டக்டர் ஜானகிராமன் (51) பலாப்பழம் விற்பவர்களை பஸ்சில் ஏற வேண்டாம் பயணிகள் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் இடையூறாக இருக்கும் என கூறினார். அதனை ஏற்காத வியாபாரிகள் மூவரும் கண்டக்டர் ஜானகிராமனிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கினர். இதனைக் கண்ட பஸ் பயணிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களும் திகைத்தனர். உடன் கண்டக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஸ் டிரைவர் பஸ்சை குறுக்கே நிறுத்தி மறியல் செய்தார். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அய்யாசாமி மற்றும் போக்குவரத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.

தொடரும் அவலம்..

                 பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் உட்காரும் இடத்தில் தரைக் கடை ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. பஸ்சில் பலாப்பழம், சிப்ஸ், வெள்ளரிபிஞ்சு, கொய்யாப்பழம் ஆகியவை விற்கும் இளைஞர்கள், பயணிகளுக்கு இடையூறாக ஏறி, இறங்குவதால் ஒரு சில நேரங்களில் பயணிகளிடம் தகராறு செய்கின்றனர். ஒரு சில நேரங்களில் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்வதும் தொடர்கிறது. போலீசார் இதனைப் பற்றி கண்டு கொள்ளாதது பொது மக்களுக்கும், பயணிகளுக்கும் வேதனை அளிக்கிறது.

Read more »

திட்டக்குடி அருகே தீ விபத்தில்3 வீடுகள் சேதம்

திட்டக்குடி:

           திட்டக்குடி அருகே தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சேதமடைந்தது. திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி காத்தாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கூரை மீது தீ பரவியது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த மகாலிங்கம், ஆனந்தகுமார் ஆகியோரது கூரை வீடுகளுக்கும் பரவியது. உடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Read more »

திட்டக்குடி அருகே வாலிபரை கைது செய்ய எதிர்ப்புபோலீஸ் மீது கல்வீச்சு: எஸ்.ஐ., காயம்


திட்டக்குடி:

            திட்டக்குடி அருகே வாலிபரை கைது செய்ய முயன்ற போலீசார் மீது கல்வீசி தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டது.  கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த தொளார் காலனியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வீரமணி (17) மற்றும் அவரது நண்பர்களையும் கடந்த 4ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாக்கினர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசன் (22), மணிகண்டன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

                 இந்நிலையில் எதிர் தரப்பில் காலனியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் ஆனந்தராஜை (21) கைது செய்ய நேற்று மாலை மாவட்ட அதிவிரைவுப்படை போலீசார் 20க்கும் மேற்பட்டோர் தொளார் காலனிக்குச் சென்றனர்.அ ப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தராஜை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிவிரைவுப்படை போலீசார் அனைவரையும் விரட்டியடித்து ஆனந்தராஜை கைது செய்து வேனில் ஏற்றினர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் போலீஸ் வாகனம் கண்ணாடி உடைந்து சப் இன்ஸ்பெக்டர் பழனி காயமடைந்தார். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நீடிப்பதால் தொளார், ஆவினங்குடி பகுதிகளில் அதிவிரைவுப் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior