உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 08, 2011

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு செல்ல வாகனத்திற்கு பணம் இல்லை: குளூக்கோஸ் பாட்டிலுடன் காத்திருந்த பெற்றோர்


 


பண்ருட்டி : 

     வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக செல்ல, "குளூக்கோஸ்' பாட்டிலுடன் பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்தது, பரிதாபமாக இருந்தது.


          கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அமுதா. கூலி தொழிலாளர்கள். இவர்களது மகன் பாண்டியன் (12). நேற்று முன்தினம் மாலை முதல் பாண்டியனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அபாய கட்டத்தில் இருந்ததால், பாண்டியனுக்கு இரு கைகளிலும் "குளூக்கோஸ்' ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் சிபாரிசு செய்தனர்."ஆம்புலன்சில் செல்ல பணம் இல்லை. இங்கேயே சிகிச்சை அளியுங்கள்' என நாகராஜ், டாக்டரிடம் கெஞ்சினார். 

              டாக்டர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல், கடலூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கண்டிப்புடன் கூறி விட்டனர்.வேறு வழியின்றி, மருத்துவமனையில் இருந்து வெளியேறி, இரு கைகளிலும், "குளூகோஸ்' ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், தாய், தந்தை இருவரும் தலா ஒரு, "குளூகோஸ்' பாட்டிலை கையில் பிடித்தவாறே மகன் பாண்டியனுடன் பஸ் நிலையத்திற்கு வந்து காத்துக் கிடந்தனர். தனியார், அரசு பஸ் கண்டக்டர்கள் சிறுவனின் கைகளில், குளுக்கோஸ் ' ஏறிக் கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தும் கொஞ்சம் கூட மனிதநேயமின்றி பஸ்சில் ஏற்ற மறுத்தனர்.

                இதற்கிடையே, "குளூக்கோஸ்' இறங்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் பாட்டிலுக்குள் ஏறியது. அப்போது, அருகில் இருந்த தன்னார்வ தொண்டர் ஒருவர் அதை சரி செய்தார்.அவஸ்தையுடன் காத்துக் கிடந்த அவர்களைப் பார்த்த பொது மக்கள், வியாபாரிகள் என அனைவரும் 250 ரூபாய் வழங்கி, ஒருவழியாக 12 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைத்தனர். 

               வறுமையில் வாடிய நாகராஜ் தன் மகனை கடலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணம் இல்லை என்று சொன்ன பிறகாவது, டாக்டர்கள் 108 ஆம்புலன்சுக்கு சிபாரிசு செய்து அனுப்பியிருக்கலாம். உயிரைக் காப்பாற்றும் பணிக்காக வரும் டாக்டர்கள், மனித நேயமில்லாமல், "குளூக்கோஸ்' முழுவதும் இறங்குவதற்குள் மேல் சிசிச்சை என்ற போர்வையில் வெளியேற்றியது வேதனையான விஷயம்.

Read more »

விருத்தாசலம் வாணிபக் கழக கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் விருத்தாசலத்தில் சரிபார்க்கும் பணி

விருத்தாசலம் :

             மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை முழுமையாக சரி பார்த்தல் பணி நடந்தது. வரும் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விருத்தாசலம் வாணிபக் கழக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

              இந்த மின்னணு இயந்திரங்களை முழுமையாக சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன், நில எடுப்பு டி.ஆர்.ஓ., மாலினி, தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பெட்டிகள் திறக்கப்பட்டது. பின்னர் பல்வேறு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா, முன்னரே ஓட்டுகள் பதியப்பட்டுள்ளதா என சரிபார்க்கப்பட்டது. பின்னர் மாதிரி ஓட்டுப் பதிவு நடத்தப்பட்டு ஓட்டு எண்ணிக்கை மற்றும் முடிவு சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.

Read more »

பண்ருட்டி அடுத்த மருங்கூரில் அனல் மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா

பண்ருட்டி : 

          பண்ருட்டி அடுத்த மருங்கூரில் அனல் மின் நிலையம் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. டேனக்ஸ் கம்பெனி இயக்குனர் கிறிஸ்டியர்ன்லீஸ் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் விஸ்வநாதன், ஆண்ட்ரோ முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப இயக்குனர்கள் சிவக்குமார், ராமச்சந்திரன், டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், நகர தி.மு.க., மாணவரணி குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தொழில் நுட்ப இயக்குனர் ராமச்சந்திரன் கூறியது: 

           டேனக்ஸ் அனல் மின்நிலைய நிறுவனம் 100 ஏக்கர் பரப்பளவில் 600 கோடி முதலீட்டில் 110 மெகாவட் உற்பத்தி திறனுக்காக இந்தோஷினியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மிககுறைந்த அளவில் தன்னிறைவு பெறுவதற்கான (காற்று உபயோகத்துடன் குளிரூட்டும்) தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் உபயோகப்படுத்தப்பட உள்ளது. 24 மாதத்திற்குள் உற்பத்தியை துவங்கும். நேரடியாக 200 பேருக்கும், மறைமுகமாக 150 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தொழில்நுட்ப இயக்குனர் ராமச்சந்திரன் கூறினார்.

Read more »

காட்டுமன்னார்கோவில் - சிதம்பரத்திற்கு காலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான கூரைப் பயணம்

சிதம்பரம் : 

             காட்டுமன்னார்கோவில் - சிதம்பரத்திற்கு காலை நேரங்களில் கூடுதல் பஸ் இன்றி ஆபத்தான கூரைப்பயணத்தால் விபத்துகள் நிகழ்கிறது. காட்டுமன்னார்கோவில்பகுதியைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 

             இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியவாசிய தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் தினமும் சிதம்பரம், கடலூர் பகுதிக்குச் சென்று வருகின்றனர். ஆனால், அதற்கேற்ப காலை நேரத்தில் போதுமான பஸ் வசதி இல்லை. குறைந்த எண்ணிக்கையில் வரும் பஸ்களில் தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் பஸ் படிக்கட்டில் தொற்றிக் கொண்டும், கூரை மீதும் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். 

             எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு சாலையோரத்தில் செல்லும் பாசன வாய்க்காலில் பஸ் கவிழுமானால் பெரும் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகி விடும். அதிகாரிகள், காலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Read more »

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்

 கடலூர் :

          கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று நடந்த 300க்கும் மேற்பட்ட திருமணங்களால், ஐந்து கி.மீ., தொலைவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்களும், பக்தர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். தை மாதத்தில் மிகச் சிறந்த சுப மூகூர்த்த நாளான நேற்று கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

             50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் மாலை முதல் குவிந்ததால் திருவந்திபுரத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும், மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. காலை 7.30 மணி வரை 225 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், அதன் பிறகு 75க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஒரே நேரத்தில் 300 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், எந்த இடத்தில் தங்கள் உறவினரின் திருமணம் நடக்கிறது எனத் தெரியாமல் அல்லாடினர். கோவிலில் திருமண கோஷ்டியினர் திரண்டதால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளா கினர்.

                 திருமண கோஷ்டியினர் வந்த பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களும், திருமணத்திற்கு வந்தவர்களின் இருசக்கர வாகனங்களும், கடலூர் - பாலூர் நெடுஞ்சாலை ஓரங்களில் 5 கி.மீ., தூரத்திற்கு நிறுத்தப்பட்டன.
இதனால் கடலூர் - பாலூர் - பண்ருட்டி நெடுஞ்சாலையில், சுந்தரவாண்டி முதல் கூத்தப்பாக்கம் வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி சென்ற மாணவ, மாணவியரும், அலுவலகம் சென்றவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior