உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 31, 2010

சிதம்பரம் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

சிதம்பரம்:

               சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் |125 லட்சம் செலவில் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

                       இதற்கான தொடக்க விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட கவர்னர் பி.குப்பசாமி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைநிலை கவர்னர் ஆர்.எம்.சுவேதகுமார், மாவட்டத் தலைவர் டி.சேகரன், வீரேந்திரகுமார், ஜி.துரைசாமி, டி.உச்சட்,  வட்டாரத் தலைவர் கமல்கிஷோர்ஜெயின், லியோ மதிவாணன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.செயலர் ஏ.ராமச்சந்திரன் வரவேற்றார். பொருளர் எஸ்.பாலநாகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Read more »

தீபாவளிப் பண்டிகைக்காக தீத்தடுப்பு நடவடிக்கைகள்

கடலூர்:

                        தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் கடலூர் கோட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

                     இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம், திருச்சி, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்புத் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.÷தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கச் செய்தல், தீவிபத்து நேராமல் பாதுகாத்தல், முறையான அனுமதியின்றி பட்டாசுக் கடைகளை நடத்தாமல் பார்த்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் தகுந்த அறிவுரைகளை, தீயணைப்புத் துறை திருச்சி மண்டல துணை இயக்குநர் ராமச்சந்திரன் வழங்கினார்.

                        கடலூர் கோட்ட தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் ராமச்சந்திரன் மரக்கன்றுகளை நட்டார். கடலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் குமாரசாமி, உதவிக் கோட்ட அலுவலர் சரவணன், நிலைய தீயணைப்பு அலுவலர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

சனி, அக்டோபர் 30, 2010

உயிரித் தொழில்நுட்பத்தில்தான் எதிர்கால விவசாயம்

             உயிரித் தொழில்நுட்பத்தில்தான் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி  தெரிவித்தார்.

பருத்தி சாகுபடிக்கு உயிரித் தொழில்நுட்பம் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தின் (போல்கார்டு - 2 ரவுண்ட்அப் ரெடி ஃபிளக்ஸ்) அறிமுக நிகழ்ச்சியில் வியாழக்கிழமை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி   பேசியது: 

                  நாடு சுதந்திரம் அடைந்தபோது உணவு பற்றாக்குறை அதிகளவில் இருந்தது. உணவு தானியங்களுக்காக பிற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தோம். இப்போது தேவையான அளவுக்கு உணவுத் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், வருங்காலத் தேவையைக் கணக்கிடும்போது உற்பத்தியை மேலும் பெருக்க வேண்டியது அவசியம். 2002-ல் பிடி பருத்தி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது பருத்தி உற்பத்தி அதிகரித்து வருகிறது. 

                மொத்த சாகுபடி பரப்பில் 90 சதம் பிடி பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, வேளாண்மை நிகழ்ந்த பெரும் புரட்சியாக பிடி பருத்தியைக் கூறுகின்றனர். பருத்தி சாகுபடிக்கான செலவில் 20 சதம் பூச்சி கட்டுப்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. அதோடு, களை கட்டுப்பாடு பெரும் சவாலாக உள்ளது. களைகளால் 42 சதம் சாகுபடி இழப்பு ஏற்படுகிறது. மரபணு மாற்று ரகங்களில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதில்லை. சாகுபடிக்கான செலவு குறைவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கிறது. 

                    பிடி பருத்தி சாகுபடி காரணமாக பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு கணிசமாக குறைகிறது. பிடி கத்தரி குறித்து மக்களிடம் எதிர்மறையான கருத்து நிலவுகிறது. மரபணு மாற்று ரகங்களால் மனிதர்கள், விலங்குகள், சூழலுக்கு பாதிப்பு கிடையாது. சாதாரண கத்தரியில், அறுவடைக்கு முன்பு வரை பூச்சி மருந்துகள் அடிக்கப்படுகிறது. பிடி கத்தரிக்கு அதற்கான அவசியம் இல்லை என்றார். மான்சாண்டோ நிறுவன அறிவியல் வெளிவிவகாரத் துறை தலைவர் சாந்தனு தேஷ்குப்தா, மஹிகோ விதை நிறுவன அதிகாரி சந்திரசேகர் சபோர்கர், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன், வேளாண் பல்கலை. பதிவாளர் பி.சுப்பையன், உழவியல் துறைத் தலைவர் பி.முத்துகிருஷ்ணன், ஆராய்ச்சி இயக்குநர் எம்.பரமாத்மா உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம்


கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் நட்டு 15 நாள்கள் ஆன சம்பா நெல் வயலில் களையெடுக்கும் பெண்கள்.
 
கடலூர்:

             கடந்த 10 நாள்களாக அவ்வப்போது பரவலாக பெய்துவரும் மழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.  

                   கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 2.41 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்படுகிறது. இதில் 1.25 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளாகும். இந்த ஆண்டு பி.பி.டி., பொன்னி, ஏடிடி 43 சம்பா நெல் ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக டெல்டா பாசனப் பகுதிகளில் 10 நாள்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் நாற்றங்கால் பணிகளும் நடவுப் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளன. 

                 கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கும் சென்னை குடிநீருக்கும், கொள்ளிடம் கீழணையில் இருந்து 1,207 கன அடி வீதம் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரி பாசனத்துக்காக வடவாறில் 862 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  ÷வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரதான ஏரிகளில் நீர்மட்டம், வீராணம் 43.6 அடி (மொத்த உயரம் 47.5 அடி), பெருமாள் 4.8 அடி (மொத்த உயரம் 6.5 அடி), வாலாஜா 5 அடி (மொத்த உயரம் 5.5 அடி) என இருந்தது. கொள்ளிடம் கீழணையில் நீர்மட்டம் 7.8 அடி (மொத்த உயரம் 9 அடி).  

சம்பா சாகுபடி குறித்து வேளாண் துறை அளிக்கும் தகவல்: 

                 மாவட்டத்தில் 97 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 78,421 ஹெக்டேரில் நடவு முடிந்துள்ளது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 44,988 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.  

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                ""வீராணம் ஏரியின் கடைமடைப் பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் முடிந்துள்ளன. நடவுப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. டெல்டா பாசனப் பகுதிகளில், சில நாள்களாக பெய்து வரும் மழை, கடைமடைப் பகுதிகளில் நடவுப் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. சம்பா நடவுப் பணிகள்  நவம்பர் 20 வாக்கில், முடிவடையும்'' என்றார்.  

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறுகையில், 

                   ""வீராணம் ஏரி பாசனப் பகுதிகளில் (50 ஆயிரம் ஏக்கர்) 20 சதவீதமும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகளில் (44 ஆயிரம் ஏக்கர்) 5 சதவீதமும் மோட்டார் பம்ப்செட் வசதி உள்ளது. இப்பகுதிகளில் காவிரி நீரை எதிர்பார்க்காமல் முன்னரே சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பகுதிகளில் நடவுப் பணிகள் முடிவுற்றுள்ளன.  தற்போது பெய்துள்ள மழை காரணமாக கடைமடைப் பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் வரத் தொடங்கி இருக்கிறது. எனவே நாற்றங்கால் பணிகளும், நடவுப் பணிகளும் துரிதம் அடைந்துள்ளன'' என்றார்.  

                   டெல்டா பாசனப் பகுதிகள் அல்லாத ஆழ்குழாய்ப் பாசனத்தை நம்பி இருக்கும் மற்ற பகுதிகளில் தற்போது, நடவுப் பணிகள் முடிந்துவிட்டன. நட்டு 15 நாள்கள் முடிவடைந்த வயல்களில் முதல் களையெடுக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.  கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், ரசாயன உரங்கள், நுண்ணுயிர் உரங்கள் முறையாக கையிருப்பில் உள்ளதால், சாகுபடிப் பணிகள் சிரமமின்றி நடைபெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.  

                    தண்ணீர் முறையாகக் கிடைத்து, இயற்கைச் சீற்றம் மற்றும் பூச்சி, பூஞ்சாணம் தாக்குதல்கள் இன்றி இருந்தால் கடலூர் மாவட்டத்தில், சம்பா பருவத்து நெல் உற்பத்தி 45 லட்சம் குவிண்டாலுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read more »

காண்பதற்கே அரிதாகிவிட்ட பூவரசம் மரங்கள்


காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் பகுதியில் உள்ள பூவரசம் மரம்.
 

         சில ஆண்டுகளுக்கு முன், கிராமங்கள்தோறும் தெருவுக்கு தெரு வளர்ந்து அழகாக பூத்துக் குலுங்கிய பூவரசம் மரங்கள் தற்போது காண்பதற்கே அரிதாகிவிட்டன.  

                 ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட அனைத்து கிராமங்களிலும் அழகிய மஞ்சள் நிற பூவுடன் பூவரச மரங்கள் ஆங்காங்கே இருந்தன.  இந்த மரங்கள் தெஸ்பீசியா பேரணித்தையும், தெ.பாபுல்னியா இனத்தையும் சார்ந்தவை. வெப்பவளையப் பகுதிகளில் காணப்படும் இந்த மரங்கள் 5 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை.  

               இந்த பூவரசில் "நாட்டுப் பூவரசு' ஆண்டு முழுவதும் பூத்துக் குலுங்கும். பருவத்தில் மட்டும் பூக்கும் "கொட்டை பூவரசு' என்றொரு மற்றொரு ரகமும் உண்டு. தேக்கு, கோங்கு போன்ற மரங்கள் வரிசையில் சிறந்த மரம் இந்த பூவரசு மரம். இம் மரம் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும் ஏற்றவை. இதற்கு மருத்துவ குணமும் உண்டு.  

                தற்போது கிராமப்புறங்களில் இந்த பூவரச மரம் காண்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இந்த மரங்களை காணவில்லை. இம் மரங்களை வீட்டு உபயோகத்துக்காகவும், ஏனைய பயன்பாட்டுக்காகவும் வெட்டியவர்கள், அதை வளர்க்க முன்வரவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த இந்த மரம் தற்போது காண்பதற்கு அரிதாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் பல்கிப் பெருகி இருந்த இம் மரங்கள் எங்கோ கிராமத்தின் ஒரு மூலையில் ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே உள்ளன.  

                   இந்த மரங்களை மீண்டும் வளர்க்கவும், பாதுகாக்கவும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

இது குறித்து இயற்கை விவசாயிகள் சங்கத்தின் அமைப்பாளர் அருங்குன்றம் தேவராஜ் கூறியது: 

                    "பூவரச மரம் வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல்கள் தயாரிக்க சிறந்த மரம். தேக்கு, கோங்கு மரங்களுக்கு இணையானது.  இம் மரத்தின் தழைகளை வெட்டி வயல்களில் போட்டால் நல்ல உரம். இம் மரத்தை விதையைக் கொண்டுதான் வளர்க்க வேண்டும் என்பதில்லை. கிளைகளை நட்டு வைத்தாலே எளிதில் வளர்ந்துவிடும்.  இந்த மரங்களை கிராமங்கள்தோறும் விவசாயிகள் வளர்க்க அரசு அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'  என்றார்.

Read more »

தமிழகத்தில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ. 100 கோடிக்கு மாற்றம்: ரிசர்வ் வங்கி துணைப் பொது மேலாளர்

               தமிழகத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் பழையதும், கிழிந்ததுமாக இருந்த ரூபாய் நோட்டுகளை மக்களிடம் பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை ரூ. 100 கோடிக்கு மாற்றிக் கொடுத்துள்ளோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் துறையின் துணைப் பொது மேலாளர் காயா திரிபாதி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

                  ராமநாதபுரம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையும், இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் துறையும் இணைந்து ராமநாதபுரத்தில் கிழிந்த நோட்டுகளை மாற்றும் முகாமை நடத்தினர்.  

முகாமில் கள்ள நோட்டுகளை எப்படிக் கண்டறிவது என்பதற்கான கையேட்டை வங்கியின் வாடிக்கையாளரிடம் இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் பிரிவு துணைப் பொது மேலாளர் காயா திரிபாதி வழங்கிப் பேசியது: 

                    கிராமத்தில் வசிக்கும் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலும் கள்ள நோட்டுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழகம் முழுவதும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து கிழிந்த நோட்டுகளை மாற்றி, புதிய நோட்டுகளை வழங்கும் முகாமை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் நடத்திய முகாம்கள் மூலமாக  மொத்தம் ரூ. 100 கோடிக்கு கிழிந்த நோட்டுகளை மக்களிடம் பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகளை வழங்கியிருக்கிறோம்.  கள்ள நோட்டுகளை அடையாளம் காணுவது எப்படி என்ற கையேடு மற்றும் துண்டுப் பிரசுரங்களையும் முகாம்களின் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விளக்கமளிக்கிறோம். 

                      இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.  அண்மையில் புதுச்சேரியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் இணைந்து நடத்திய முகாமில் மட்டும் ஒரே நாளில் ரூ. 35 லட்சத்துக்கு கிழிந்த நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொண்டனர்.  தமிழகத்தில் எந்த கிராம வங்கிகளும் அழைத்தால்கூட அந்தந்தப் பகுதி மக்களுக்காக நாங்கள் நேரில் வந்து கிழிந்த நோட்டு முகாம்களை நடத்தத் தயாராக இருக்கிறோம்.  அண்மையில் தங்க முலாம் பூசப்பட்ட ரூ. 5 நாணயங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் காயா திரிபாதி.

Read more »

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்

சிதம்பரம்:

                   தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டிஎஸ்பி ச.சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டிஎஸ்பி ச.சிவனேசன் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

                  சென்னை, பாண்டி, கடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து சிதம்பரம் வரும் பஸ்கள் வடக்கு வீதி, 16 கால் மண்டபத் தெரு, கமலீஸ்வரன் கோயில் தெரு, வேணுகோபால் பிள்ளைத் தெரு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும். சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால் பகுதிகளில் இருந்து சிதம்பரம் வழியாக கடலூர், பாண்டி, சென்னை செல்லும் பஸ்கள் பச்சையப்பன் பள்ளித் தெரு, சபாநாயகர் தெரு, தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி வழியாக வெளியே செல்ல வேண்டும்.

                  லாரி மற்றும் கனரக வாகனங்கள் சிதம்பரம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மேலரத வீதியில் போக்குவரத்துத் தடை செய்யப்படுகிறது.மேற்கண்ட 5 தினங்களும் மேலவீதியில் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலவீதி, தெற்குவீதி, பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டும் போலீசாரால் கண்காணிக்கப்படும்.மேலும் சிதம்பரம் நகரில் எல்லைப் பகுதிகளில் போலீசார்  வாகனத் தணிக்கையில்  ஈடுபடுவர். 

                 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கடையை திறந்து வைத்து வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ச.சிவநேசன் தெரிவித்தார்.அப்போது இன்ஸ்பெக்டர்கள் எஸ்.கார்த்திகேயன், எம்.கண்ணபிரான் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்: 246 பேர் வேலைக்கு வரவில்லை

கடலூர்: 

                  கடலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த 350 பேரில் (பதிவுரு எழுத்தர் முதல் வட்டாட்சியர் வரை) 246 பேர் வேலைக்கு வரவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நிலஎடுப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப் பட்டன. பல அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சத்தில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு

சிதம்பரம்:

                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சம் செலவில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, உடற்கல்வித் துறை தலைவர் பேராசிரியர் ஜி.ரவீந்திரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விளையாட்டு அரங்கை தொடங்கி வைத்தார். விழாவில், மருத்துவப் புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், அறிவியல் புல முதல்வர் கண்ணப்பன், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலம் ஜங்ஷனில் கூட்ஸ் ரயில் தடம் புரண்டது : ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்




விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் ஜங்ஷனில் நேற்றிரவு கூட்ஸ் ரயில் தடம் புரண்டதால் ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது.

                        தூத்துக்குடியில் இருந்து 42 வேகன்களில் யூரியா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கூட்ஸ் ரயில் நேற்று மதியம் விருத்தாசலம் ஜங்ஷன் வந்தது. அந்த கூட்ஸ் ரயில் 8வது டிராக்கில் நிறுத்தி, 20 வேகன்களில் இருந்த யூரியா மூட்டைகள் இறக்கப்பட்டது. பின் இரவு 8.30 மணிக்கு காட்பாடிக்கு புறப்பட்டது. ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் இன்ஜினில் இருந்து 18 மற்றும் 19வது வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியபடி 500 மீட்டர் தூரம் வரை சென்றது. 

                       சத்தம் அதிகமாக கேட்டதால் டிரைவர் இன்ஜினை நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்த்தபோது இரண்டு வேகன்கள் தடம் புரண்டிருப்பதை கண்டு, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். கூட்ஸ் ரயில் தடம் புரண்டு நின்ற டிராக்கில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, சிக்னலும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னையிலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் வயலூர் அருகே நிறுத்தப்பட்டது. அதேபோன்று இரவு 9.15 மணிக்கு வர வேண்டிய கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டது.

                           ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் கூட்ஸ் ரயில் தடம் புரண்ட 8வது டிராக்கில் மட்டும் மின் இணைப்பை துண்டித்து விட்டு, பிற டிராக்குகளில் மின் இணைப்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து வயலூரில் நிறுத்தப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10.05க்கு விருத்தாசலம் ஜங்ஷனை கடந்து சென்றது.அதன் பிறகு கூட்ஸ் ரயில் தடம் புரண்ட ரயில் பாதையை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் விருத்தாசலம் ஜங்ஷனில் யூரியா மூட்டைகளை இறக்க நிறுத்திய போது, வேகன்களின் சக்கத்திற்கு இடையே கல் சிக்கிக் கொண்டதும், அதனைக் கவனிக்காமல் ரயில் இயக்கியதால் தடம் புரண்டிருக்கலாம் என தெரிகிறது.

Read more »

காட்டுமன்னார்கோவில் கூட்டுறவு வங்கியில் ரூ.11 லட்சம் முறைகேடு

கடலூர் : 

                   கூட்டுறவு வங்கியில் 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன. 

                      மாவட்ட கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மிருணாளினி உத்தரவின் பேரில், கூட்டுறவு தணிக்கைத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அதில் 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வங்கிகளின் கணக்குகளை முடக்கம் செய்தனர். பின், முறைகேடு குறித்து வங்கியின் தனி அலுவலர் சுப்ரமணி, செயலர் ரங்கநாதன் மற்றும் அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

சட்டசபை தேர்தலுக்காக விரைவில் பொதுத் தேர்வு:மாணவர், பெற்றோர் கலக்கம்

கடலூர்: 

                    சட்டசபை தேர்தல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருவதால், தேர்விற்கு போதிய கால அவகாசம் இருக்குமோ என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். 

                    தமிழக கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்பிற்கு மார்ச் முதல் வாரத்தில் தேர்வுகள் துவங்கி அந்த மாதத்திற்குள் முடிக்கப்படும். அதேபோல் 10ம் வகுப்பிற்கு மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படும். கடந்த (2009-10) கல்வி ஆண்டில்  பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி 23ம் தேதியும், 10ம் வகுப்பு மற்றும் ஓ.எஸ்.எஸ்.எல்.சி., மார்ச் 23ம் தேதி துவங்கி ஏப்ரல் 7ம் தேதியும், மெட்ரிக் பிரிவிற்கு மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதிவரை  நடத்தப்பட்டது. 

                 பிளஸ் 2 விற்கான எட்டு தேர்வுகளை 23 நாளும், 10ம் வகுப்பு மற்றும் ஓ.எஸ்.எஸ்.எல்.சி.,கான 7 தேர்வுகளை 16 நாளும், மெட்ரிக் பிரிவிற்கான 10 தேர்வுகளை 18 நாளிலும் நடத்தியதால் ஒவ்வொரு தேர்விற்கும் இடையில் விடுமுறை இருந்ததால் மாணவர்கள் அடுத்த தேர்விற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வசதியாக இருந்தது.
 
                     ஆனால், இந்தக் கல்வி ஆண்டில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே (மார்ச் இறுதிக்குள்) நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருகிறது.  இவ்வாறு பொதுத் தேர்வை தேர்தலுக்காக அவசரமாக நடத்தினால், தேர்வு நடைபெறும் மொத்த நாட்கள் குறையும் அபாயம் உள்ளது. 

                     இதனால் ஒவ்வொரு தேர்விற்கும் இடையே விடுமுறை நாட்கள் ஏதுமின்றி தொடர்ச்சியாக நடத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்விற்கு படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு  தள்ளப்படுவதால், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். அரசு பள்ளி  மாணவர்கள் பாவம்: பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடங்கள் அரையாண்டு தேர்விற்குள் நடத்தி முடிக்கப்படும். 

                  அதன்பிறகு பாடங்கள் "ரிவிஷன்' செய்யப்படும். தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை  "கிறிஸ்துமஸ்' விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். ஆனால் அரசு பள்ளிகளில் பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் இறுதியில் துவங்கி ஜனவரி இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படும்.
 
                 தற்போது சட்டசபை தேர்தலுக்காக பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தினால் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜனவரி மாத இறுதியில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி நடத்தினால், டிசம்பரில் அரையாண்டு தேர்வு முடித்த தனியார் பள்ளி மாணவர்கள் அடுத்த ஒரு மாதத்தில் பொதுத் தேர்விற்கு ஆயத்தமாக கால அவகாசம் உள் ளது. 

                           ஆனால் அரசு பள்ளிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு எழுதி பொங்கல் விடுமுறை முடிந்ததும் செய்முறைத் தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. இதனால் எழுத்துத் தேர்விற்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை. இந்த ஏற்றத் தாழ்வுகளால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறையும்.

Read more »

பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதி நாள் முகாம் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

பண்ருடடி: 

                  பண்ருட்டி அடுத்த அவியனூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில்  19 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சீத்தாராமன்  வழங்கினார். பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி தலைமை தாங் கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூவராகவன் வரவேற்றார். 

                     கலெக்டர் சீத்தாராமன் மனுக்களை பெற்று 19.26 லட்சம் மதிப்பில் 58 நபர்களுக்கு வீட்டுமனைபட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: பசுமை, வளமை, நிறைந்த இப்பகுதி தொடர்ந்து பசுமையாகவும், வளமாகவும் இருக்க வேண்டும். தமிழக அரசு உயிர்காக்கும் காப்பீடு திட் டம், வரும்முன் காப் போம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. மாற்று திறனாளிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வேளாண் களம் மற்றும் சாலை அமைத்து தரப்படும். போக்குவரத்து துறை சார்பில் பண்ருட்டி-அவியனூர்-விழுப்புரம் சாலையில் ஒரு மாதத்தில் கூடுதல் பஸ்வசதி செய்து தரப்படும். அவியனூர்- எனதிரிமங்கலம் சாலைக்கு தனியார் நிலம் தானமாக வழங்கியதால் 55 லட்சத் தில் ஊரக சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்றார்.

                    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், தாசில்தார் பன்னீர் செல்வம், துயர்துடைப்பு தாசில்தார் மங்கலம்,  தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் ராமலிங்கம், பிரேமாவதி, மாற்று திறனாளி நல அலுவலர் சீனுவாசன்,போக்குவரத்து துறை பாஸ்கர், பஷீர்அகமது, கைலாசம், முன்னாள் ஒன்றிய தி.மு.க., செயலளர் பலராமன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளி, அக்டோபர் 29, 2010

பண்ருட்டியில் இருளின் பிடியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்


பண்ருட்டி:
                 
                 ண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் இருளின் பிடியில் சிக்கியுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

                 பண்ருட்டி திருவதிகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலுக்கு முற்பட்டது.  முதல்முதலில் தேர் உருவானது, தேவாரம் பாடப்பட்டது இத்தலத்தில்தான். அட்ட வீரத் தலங்களில் (திரிபுரம் எரித்தல்) சிறப்புடையதும், நாயன்மார்களால் பாடல் பாடப்பெற்றது.  

                   இத்தலத்தில் தேர் உருவானதால், இக்கோயிலின் கருவறை விமானம் தேர் போன்ற வடிவில் அடிப்பகுதியில் இருந்து சுதைகளால் அமைக்கப்பட்டுள்ளது.  ÷ஆன்மிகச் சிறப்புகளையும், வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட இக்கோயில் மின் வெட்டு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளதை அறிந்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேசன் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புதிய ஜெனரேட்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார். 

                 உத்தரவாதக் காலம் முடிவதற்குள் ஜெனரேட்டரில் ஏற்பட்ட சிறு பழுதை சரி செய்ய, உரிய கடைக்கு தகவல் அளிக்காமல், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் வெளியாள்களை வைத்து ஜெனரேட்டரை பிரித்து வேலை செய்ததில் அதில் இருந்த சில முக்கிய பாகங்கள் சேதம் அடைந்து மீண்டும் பொருத்த முடியாமல் போனது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டின்போது, இக்கோயில் இருள் மண்டி கிடந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.  இதை பாதிக்கப்பட்ட பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்ததை தொடர்ந்து இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் ஜெனரேட்டரை பழுது நீக்க அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.  

 பழுது நீக்க அனுப்பப்பட்ட ஜெனரேட்டர் 5 மாதங்கள் ஆகியும் கோயிலுக்கு திரும்ப வரவில்லை. கோயிலுக்கு சொத்துக்கள் இருந்தும், கட்டளைதாரர்கள் இருந்தும், அன்றாடம் நடக்க வேண்டிய 6 கால பூஜையை கூட முறையாக செய்வதில்லை. இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்டுகொள்வதும் இல்லை.  

இது குறித்து இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் வி.பாலகிருஷ்ணன்: 

                        "ஜெனரேட்டரை பழுது நீக்க புதுச்சேரிக்கு அனுப்பியுள்ளோம். இதற்கு தேவையான பாகங்கள் கிடைக்கவில்லை. மேலும் ரூ. 50 ஆயிரம் செலவாகும்' என தெரிவித்துள்ளனர் என கூறினார்.  

செயல் அலுவலர் கே.நாகராஜன் கூறியது: 

                       "ஜெனரேட்டர் பழுது நீக்க சென்று 3 மாதமாகலாம், தொடர்ந்து இயங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், நிறைய பாகங்கள் மாற்ற வேண்டும் என தெரிய வருகிறது. இதை பழுது நீக்க நன்கொடையாளர்களை தேடி வருகிறோம். பூஜைகள் நடப்பதில் குறையிருந்தால் எனக்கு எழுத்து மூலம் புகார் அளிக்கலாம்' என கூறினார்.

Read more »

கடலூர் சாலைகளில் வாகன ஓட்டிகளை மிரட்டும் சாலைப் பள்ளங்கள்


கடலூர் மஞ்சக்குப்பம் தெற்கு கவரைத் தெருவில் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளம்.
 

கடலூர்:

               கடலூர் சாலைகளில் அடிக்கடி ஏற்படும் திடீர் பள்ளங்கள், ஆழ்குழிகள், வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் பயமுறுத்தி  வருகின்றன.  

                     கடலூரில் ரூ.66 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் 3 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்காக சாலைகளில் நெடுகிலும் 15 அடி ஆழம் வரை, பள்ளம் தோண்டப்படுகிறது. ஆனால் இப்பள்ளங்களை காண்ட்ராக்டர்கள் முறையாக மூடுவது கிடையாது.  சாலைகளில் தோண்டப்பட்ட மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் தள்ளி மூடிவிட்டு சென்று விடுகிறார்கள். இப்பள்ளங்கள் முறையாக மூடப்பட்டனவா என்று அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடுவதும் கிடையாது. தோண்டப்படும் மண்ணை அருகில் உள்ள வீட்டுச் சொந்தக்காரர்களும், தங்கள் உபயோகத்துக்கு காண்ட்ராக்டரின் உடந்தையுடன் அள்ளிச் சென்று விடுகிறார்கள்.  

                    மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை உள்ளிட்ட சில முக்கிய சாலைகளில் தோண்டப்பட்ட இடங்களில் மட்டும், 2 அடி அகலத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கிறார்கள். அதற்கும் முறைப்படி சரியான அளவுக்கு ஆற்றுமணல் கொட்டி, கான்கிரீட் தளம் அமைப்பது இல்லை.  ÷பெரும்பாலான சாலைகளில் களி மண்ணால் மூடப்பட்ட பள்ளங்கள் மீது காண்ட்ராக்டர்கள் சாதாரணமான முறையில் தார்ச்சாலை அமைத்து விடுகிறார்கள். இதனால் அடித்தளம் வெற்றிடமாகவும், வலுவற்றும், முறையாக இல்லாததால், சாலைகள் அமைத்த ஒரு வாரத்தில், ஏற்கெனவே தோண்டப்பட்ட இடங்களில் பள்ளங்களும், 10 அடி ஆழத்துக்கு திடீர் குழிகளும்  ஏற்படுகின்றன.  

                  எதிர்பாராமல் ஏற்படும் இப்பள்ளங்கள் மற்றும் ஆழ்குழிகளில் வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் விழுந்து பெரும் விபத்தைச் சந்திக்க நேரிடுகிறது. கனரக வாகனங்களும் சற்றும் எதிர்பாராமல் இந்தப் பள்ளங்களில் சிக்கி, பளுதூக்கும் இயந்திரங்கள் வந்தால்தான் அவற்றை வெளியே எடுக்க முடியும் என்ற பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுகின்றன. கடலூர் நகரம் வண்டல் களிமண் படிந்த பூமியாக இருப்பதால், முறையான அடித்தளம் அமைக்காமல் சாலைகள் போடுவது, இத்தகைய நீண்டகால பிரச்னைகளுக்கு இடம் அளித்து விடுகிறது.  

                            எனவே பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு, தோண்டப்பட்ட இடங்களில் முறையாக ஆற்று  மணல் கொட்டி, நன்றாக அடித்தளம் அமைத்து வலுவான பிறகு சாலைகளை அமைக்க வேண்டும் என்று  கடலூர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Read more »

நெய்வேலி வேலை நிறுத்தம் வாபஸ்: தொழிற்சங்க பிரதிநிதிகள் கருணாநிதிக்கு நன்றி நேரில் தெரிவித்தனர்


 

                      நெய்வேலி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி 40 நாட்கள் வேலை நிறுததம் செய்தனர்.

                         முதல்-அமைச்சர் கருணாநிதி தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று முதல்- அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முன்னிலையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

                      தொ.மு.ச. சார்பில் அதன் தலைவர் செ.குப்புசாமி, பொதுச்செயலாளர் ஆர். கோபாலன், ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பழனிவேல், பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் வேல்முருகன் எம்.எல்.ஏ., பெருமாள், தினகர், அன்பழகன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேகர், ஐ.என்.டி.யு.சி. சார்பில் ஜானகிராமன், எல்.எல்.எப். சார்பில் குமார் உள்பட பல்வேறு பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் தொ.மு.ச. தலைவர் செ. குப்புசாமி அளித்த பேட்டி வருமாறு:-

                    என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் பாட்டாளித் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற ஊதியம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 39 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

                         தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி, மத்திய அரசுக்கு இது குறித்து எழுதி, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நிர்வாகம் மீண்டும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார்கள். அதன் அடிப்படையில் இப்போது ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக முதல்- அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டோம்.

கேள்வி:- ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் ஆக்குகிறோம் என்று நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதா?

பதில்:- அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலனையில் இருக்கிறது. அனைத்துச் சங்கங்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன.

கேள்வி:- நிர்வாகம் இதை எப்படிச் செய்யப்போகிறது?

பதில்:- இது மத்திய அரசின் கொள்கை முடிவு. எனவே, மத்திய அரசை அணுகியிருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பா.ம.க. எம்.எல்.ஏ. வேல் முருகன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி: முதல்- அமைச்சரைச் சந்தித்து என்ன பேசினீர்கள்?

பதில்:- 39 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த என்.எல்.சி. தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இந்தப் பிரச்சினையில் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை பெற்றுத் தர உதவியாக இருந்த முதல்- அமைச்சரை, இன்றைய தினம் போராட்டக் குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

                    மேலும், இந்த வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து காவல் துறையினர் பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். சில இடங்களில் தொழிலாளர் கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

                    எனவே, அந்த வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, சுமுகமான சூழ் நிலைக்கு வழி வகுத்திட உத்தரவிட வேண்டுமென்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டோம். தற்போது ஒரு சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. எனினும், கடந்த 30 ஆண்டுகளாக அங்கே ஒப்பந்தத் தொழிலாளர்களாக 5 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை நிரந்தரம் செய்ய உதவிட வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக்கொண்டோம்.

                     அவரும் மத்திய அரசோடு இது குறித்துப்பேசி உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்காகவும் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.

Read more »

நெய்வேலியில் கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை?

நெய்வேலி:

                  நெய்வேலியில் கல்லூரி மாணவியை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது நெய்வேலி வட்டம் 24-ல் உள்ள டிராக்டர் வீதியில் வசிக்கும் ரட்சகர் எனும் ஒப்பந்ததாரர் வீட்டின் பக்கவாட்டில் தனியாக ஷெட் அமைத்து தனது மனைவி, மகள் சுபாஷினி (20) ஆகியோருடன் வசித்து வந்தார்.

                  சுபாஷினி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சுபாஷினி, புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது ஒப்பந்ததாரர் ரட்சகர், சுபாஷினியைக் கற்பழித்து, கெரசின் ஊற்றி தீவைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சுபாஷினி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையறிந்த நடுக்குப்பம் கிராம மக்கள் ரட்சகர் வீட்டின் முன் திரண்டு, ரட்சகர் பயன்படுத்திய வாகனத்தை சேதப்படுத்தினர். 

                       பின்னர் கடலூர் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் டிஎஸ்பி மணி ஆகியோர் குற்றவாளியாகக் கூறப்படும் ரட்சகரின் மனைவி ஜான்சிராணியை கைது செய்திருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் ரட்சகரை இரவுக்குள் கைது செய்வோம் என சமாதானம் செய்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Read more »

ஆன்-லைனில் மருத்துவப் புத்தகங்கள்: சென்னையில் அறிமுகம்


 
 
                 மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் ஆகியோர் கம்ப்யூட்டரில் மருத்துவ புத்தகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறியும் முறை சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
 
                   எந்தவித பதிவுக் கட்டணமும் இன்றி "அபாட் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட்' அறிமுகப்படுத்தியுள்ள "நாலட்ஜ் ஜெனி' என்ற இந்த ஆன்லைன் முறையை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் வி. கனகசபை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 
 
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் வி. கனகசபை கூறியது:- 
 
                          ""எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்-எம்சிஎச் (உயர் சிறப்பு மருத்துவம்) படிப்போருக்கும் டாக்டர்களுக்கும் இந்த ஆன் லைன் முறை மிகவும் உதவியாக இருக்கும்.  இந்த ஆன் லைன் முறையில் 3000 மருத்துவ ஆராய்ச்சி இதழ்கள், 50 இ-புத்தகங்கள், அமெரிக்க மருத்துவக் கல்லூரிகளின் 11 சிறப்பு மருத்துவத் துறைகள் மூலம் 2,000 பக்கங்களுக்கு மேல் உள்ள மருத்துவத் தகவல்கள், அண்மைக்கால மருத்துவ முன்னேற்றங்கள், மருத்துவ புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்து பலன் அடைய முடியும்.  
 
இரண்டு கல்லூரிகளில்...:
 
                           இந்த ஆன் லைன் முறை முதல் கட்டமாக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஆன் லைன் முறை திட்டத்தின்படி எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். என படிப்புகளின் துறைகளுக்கு ஏற்ப எட்டு ஸ்மார்ட் கார்டுகளும் பொதுவான ரகசியக் குறியீடும் வழங்கப்படும்.  ஸ்மார்ட் கார்டு, பொதுவான ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டிலும் மொத்தம் 3,500 மருத்துவ மாணவர்களும் டாக்டர்களும் பலன் அடைவார்கள்.  இந்தத் திட்டம் படிப்படியாக மீதமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும்'' என்றார் டாக்டர் வி. கனகசபை.

Read more »

ரோபோக்களுக்கான பந்தயம்: களத்தில் பொறியியல் மாணவர்கள்


தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் கல்லூரி மாணவர்கள்.
 

              சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் பொறியியல் மாணவர்கள் வியாழக்கிழமை அணிவகுத்து நின்றனர்.  உள்நாட்டுப் போர்கள், ஆபத்தான சூழல்களில் ராணுவத்துக்குப் பயன்படும் வகையில் ஆளில்லாத வாகனங்களை வடிவமைக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

                  ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ரோபோ போட்டி நடத்தப்படுகிறது.  இந்தப் போட்டியில் பங்கேற்க மொத்தம் 240 கல்லூரிகள் விருப்பம் தெரிவித்திருந்தன. தங்களது ரோபோ மாடல்களையும் விண்ணப்பங்களுடன் கல்லூரிகள் அனுப்பியிருந்தன.  இதில் ரோபோ வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து 14 கல்லூரிகள் மட்டும் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன.  

                    சென்னை ஐ.ஐ.டி., கோரக்பூர் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், ஹைதராபாத் ஐ.ஐ.டி. உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகளின் மாணவர்கள் இந்தப் போட்டிக்கு தேர்வாகியிருந்தனர்.  இவர்களின் பல மாத உழைப்பில் உருவாகியிருந்த இயந்திரங்கள் வியாழக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியிருந்த ரோபோ, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.  அர்ஜுன் டாங்கியை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம், தடைகளையும், தனக்கான பாதையையும் துல்லியமாக அறிந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக எம்.ஐ.டி. மாணவர் கணேஷ் தெரிவித்தார். 

                     வில்லிவாக்கத்தில் இருந்து அண்ணா நகருக்கு இந்தப் பாதை வழியே செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டால் போதும். அனைத்து விதமான தடைகளையும் கடந்து குறிப்பிட்ட வழியே அது இலக்கை அடையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  "எங்களது அணியினரின் 4 மாத உழைப்பில் உருவான இந்த இயந்திரம், படிக்கட்டுகளில் கூட மிகச் சுலபமாக ஏறி இறங்கும்' என்கிறார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் பவானி பிரசாத்.  சாலைகளில் ஆளில்லாத வாகனங்களை இயக்குவதற்கு முன்னோட்டமாக இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளதாக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.  

                       ரோபோ போட்டிக்காக பிரத்யேகமான தளம், போர் வாகனங்கள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் தரையிலும், ஜல்லிக் கற்களிலும், செயற்கைத் தடைகளையும் தாண்டி ரோபோக்கள் தங்களது இலக்கை அடைய வேண்டும்.  தடைகளை ரோபோக்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதற்கும், எவ்வளவு விரைவாக தங்களது இலக்கை அடைகின்றன என்பதற்கும் மதிப்பெண் வழங்கப்படும்.  அதனடிப்படையில் அடுத்தச் சுற்றுக்கு 5 அணிகள் தேர்வு செய்யப்படும். 

Read more »

வி.ஏ.ஓ. தேர்வு நடத்துவதில் சிக்கல்? 10 லட்சம் இளைஞர்கள் தவிப்பு

சென்னை:

                    கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வுத் தேதி எப்போது எனத் தெரியாமல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.  

                    தேர்வுத் தேதி அறிவிக்கப்படாததால் பல மாதங்களாக தனியார் பயிற்சி நிறுவனங்களிடம் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் செலவழித்து தொடர்ந்து படித்து வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 1,576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனுடன், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலி பணியிடங்கள் 1,077 என மொத்தம் 2,653 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியானது.  

                   தேர்வுக்கு விண்ணப்பிக்க 2010 ஆகஸ்ட் 20 கடைசி நாள் என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் தேர்வுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  பிரிவுகள் மூலம் பதவி உயர்வு: அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.  ஒவ்வொரு தேர்வின்போதும் விண்ணப்பங்களைப் பரிசீலித்தல், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்குதல் ஆகிய பணிகளுக்கு தனித்தனியே பிரிவுகள் தொடங்கப்படும்.  

                   இந்தப் பிரிவுகளுக்கு பதவி உயர்வின் மூலம் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவுக்கும் பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், அலுவலக உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்படுவது வழக்கம்.  ÷இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான பிரிவுகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

என்ன காரணம்? 

                     பிரிவுகள் தொடங்கப்பட வேண்டுமானால், அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்டவர்களின் பட்டப் படிப்பு என்ன என்பது ஆராயப்படும். திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் எனில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதுதான், கிராம நிர்வாக அலுவலர் தேர்வை நடத்துவதில் உள்ள சிக்கல் எனத் தெரிகிறது.  60-க்கும் மேற்பட்டோர்: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 60-க்கும் மேற்பட்டோர் திறந்தநிலை பல்கலைக்கழங்களில் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் ஆவர்.  

                    கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு பிரிவுகளைத் தொடங்கி பதவி உயர்வு மூலம் அதிகாரிகளை நியமிக்கும் போது திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை என்ன செய்வது எனத் தெரியாமல் உயரதிகாரிகள் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.  அரசிடம் கருத்து கேட்பு: இதனிடையே, தேர்வாணைய அதிகாரிகள் வேறுவகையான உத்தியைக் கையாள முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அதாவது, இப்போது திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் நேரடியாக படித்து பட்டம் வாங்கியவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சலுகை அளிக்கலாமா எனக் கருதுகிறது. 

                அதாவது, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் மூன்றாண்டு பட்டப் படிப்புகளை முடிக்க வசதியாக ஐந்தாண்டுக் காலத்தை அளித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா என யோசித்து வருகிறது தேர்வாணையம். இதற்காக, அரசிடம் கருத்து கேட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.  

போட்டா போட்டி: 

                   இந்த நிலையில், தேர்வாணைய அலுவலகத்துக்குள் இருபெரும் பிரிவுகளுக்கு போட்டா போட்டி நிலவி வருகிறது. திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் நேரடியாக பட்டம் பெற்றவர்கள், 10-ம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் கல்லூரியில் படிப்பு என வழக்கமான முறையில் பட்டம் வாங்கியவர்கள் என இருபிரிவுகளாகப் பிரிந்து போட்டா போட்டியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் வி.ஏ.ஓ. தேர்வை நடத்துவதில் தொடர்ந்து கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதைப் போக்க தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Read more »

சிதம்பரம் அருகே தனியாரிடம் நிலத்தைப் பெற்று புதிய மயானம் அமைப்பு

சிதம்பரம்:

                   சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் முயற்சியால் தனியார் நிலத்தை கிரயம் பெற்று புதிய மயானம் மற்றும் மயான பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

                                  சிதம்பரத்தை அடுத்த கண்ணங்குடி ஊராட்சிக்குள்பட்ட பெரிய தெரு ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தலித் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு 50 ஆண்டு காலமாக மயான வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் சடலங்களை பாசிமுத்தான் ஓடைக்கரை பகுதியில் அடக்கம் செய்து வந்தனர். 

                    இதையடுத்து ஊராட்சித் தலைவர் கே. ராஜசேகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் உத்திரவின் பேரில் தனியாருக்கு சொந்தமான இடத்தை ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கிரயம் பெற்று புதிய மயானப் பாதையும், புதிய மயானக் கொட்டகையும் அமைக்கப்பட்டுள்ளது.

Read more »

நவம்பர் 1-ல் சோழன் விரைவு ரயில் இயக்கம்

பண்ருட்டி:

                   சென்னை- திருச்சி இடையே சோழன் விரைவு ரயில் நவம்பர் 1-ம் தேதி முதல் இயங்க உள்ளது. இந்த வண்டி பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி. சண்முகம் தெரிவித்துள்ளார். 

பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி. சண்முகம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: 

                          பொது மக்கள் நலன் கருதி 1.11.2010 முதல் சென்னையிலிருந்து திருச்சிக்கும் (6853) அதேபோல் மறு மார்கத்தில் இருந்தும் (6854) சோழன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.  சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.20 புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் வழியாக பண்ருட்டிக்கு 11.40 வந்து பின்னர் கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு மாலை 4.35 சென்று அடையும். 

                        இதேபோல் திருச்சியில் இருந்து 9.15 புறப்படும் ரயில் மேற்கண்ட ஊர்கள் வழியாக பண்ருட்டிக்கு மதியம் 1 மணி அளவில் வந்து மாலை 5.45 மணி அளவில் சென்னை எழும்பூர் சென்று அடையும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் 1.11.2010 அன்று காலை 11.30 மணிக்கு பண்ருட்டி வரும் சோழன் விரைவு ரயிலை வரவேற்று வழி அனுப்பி வைக்க பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக டி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை அகதிகளுக்கு ரூ. 55 கோடியில் வீடுகள்

சிதம்பரம்:

                  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமை தமிழக அரசு மறுவாழ்வுத்துறை இணை ஆணையர் ஜெயக்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது முகாமில் வசிப்பவர்களிடம் அரசின் நலத்திட்ட உதவிகள் சரியாக வழங்கப்படுகிறதா என அவர் கேட்டறிந்தார். அவரிடம், தங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரினர். விரைவில் வீடுகள் கட்டித்தரப்படும் என ஜெயக்குமார் உறுதியளித்தார். ஆணையருடன் தனிவட்டாட்சியர் ராஜகோபால், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் உடன் வந்தனர். 

பின்னர்  தமிழக அரசு மறுவாழ்வுத்துறை இணை ஆணையர் ஜெயக்குமார் தெரிவித்தது: 

                   தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அகதிகள் முகாம்களில் 37.3 செலவில் 14 வகையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் முகாமில் ரூ. 7 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. ரூ. 1.25 லட்சம் செலவில் மின்ஒயர்கள் மாற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ரூ. 55 கோடி செலவில் வீடுகள் கட்டித்தரப்படும். காட்டுமன்னார்கோவில் முகாமில் உள்ள 75 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்படும். 

                        இப்போது அகதிகள் முகாம் அமைந்துள்ள வேளாண்மை மார்க்கெட்டிங் கமிட்டி சொந்தமான இடத்தில் வீடுகள் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் வீடுகள் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிகளுக்கு ரூ. 6 லட்சம் மானியம்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் பயிலும் 6 சிறப்புப் பள்ளிகளுக்கு, ரூ. 6.1 லட்சம் நிதி உதவியை, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன்  புதன்கிழமை வழங்கினார். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லமான கடலூர் ஒயஸிஸ் தொண்டு நிறுவனம், கருணா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் புதன்கிழமை திறந்து வைத்தார்.   

                       இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் மன வளர்ச்சி குன்றியோருக்கான 6 சிறப்புப் பள்ளிகளுக்கு, ரூ. 6.1 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் வழங்கினார். மேட்டுப்பாளையத்தில் லைஃப் ஹெல்ப் சென்டர் என்ற மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு முதல் முறை மானியமாக ரூ. 1,69,832 வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் 4,794  பேருக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட 74 பேருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 

                     மனவளர்ச்சி குன்றியோருக்கான 6 பள்ளிகளில் 356 மாணவர்கள் படிக்கிறார்கள். 2010- 11 ம் ஆண்டில் ஏப்ரல்  முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு பரமரிப்பு உதவித் தொகை ரூ. 31.95 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

                          கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் தெரு, கருணா மன நலம் பாதிக்கப் பட்டோருக்கான இல்லத்தில், மனலம் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்ப்பதற்கு தொலைபேசி 04142-295953, செல் 9443129464 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

Read more »

விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் சாலையில் தேங்கும் மழை நீர் நீந்தி செல்லும் வாகனங்கள்

விருத்தாசலம் :

                 விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் நேற்று திடீரென பெய்த மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி நின்றன. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் பஸ்நிலையம் அருகே ரோட்டின் குறுக்கே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சில மாதங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டதால் சாக்கடை நீர் தேங்கியது. இதனால் கால்வாயை தோண்டி அடைப்பை சரிசெய்து கிராவல் மண் கொண்டு மூடினர். 

                     ரோட்டின் உயரத்தை விட உயரமாக கிராவல் கொட்டி மூடியுள்ளதால் அந்த இடம் வேகத்தடை அமைத்தது போல் உள் ளது. இதனால் மழை நீர் வடிய வழியில்லாமல் அந்த பகுதியில் தேங்கி நிற்கிறது. நேற்று மதியம் பெய்த கனமழையால் அந்த பகுதி குளம் போல் காட்சியளித்தது.  இதில் வாகனங்களை ஓட்டி செல்லமுடியாமல் டிரைவர்கள் சிரமப்பட்டனர்.  அதுபோல் கடலூர் ரோட்டில் ஸ்டேட் பாங்கில் இருந்து பாலக்கரை வரை மழைநீர் தேங்கியது. பிரதான சாலைகளில் மழை நீர் தேங்காமல் வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

Bid to block train services

CUDDALORE: 

                 Police arrested 45 cadre of the Communist Party of India (Marxist), including 14 women, when they tried to block train services at the Thirupadiripuliyur railway station here on Thursday. They demanded speedy implementation of the subway project at the Lawrence Road level-crossing and laying of an alternative path to reach the Pan Pari market there.

Read more »

Rare surgery done on pre-term baby

CUDDALORE: 

             Two paediatricians of Rajah Muthiah Medical College Hospital, functioning under Annamalai University at Chidambaram, have done a rare surgery on a grossly under-weight pre-term baby.

            A statement from the university said that medical team comprising Raveenthiran and Dakshinamoorthy successfully performed the surgery on October 20 on the extremely pre-term and palm-sized female baby weighing hardly 800 grams. The baby was born at 32 weeks of pregnancy.

               She was suffering from a peculiar malformation called amniotic band syndrome. In this condition the mother's placental membrane would get detached and strangulate the foetal parts. Consequently, a deep encircling scar was caused in the baby's limbs. If left untreated the ring of scar would hamper blood supply and cause auto-amputation of limbs.

Hour-long surgery

               After an hour-long surgery the medical team removed the scar and also carried out a plastic surgery. The baby is well and is still under intensive care. Vice- Chancellor of Annamalai University M.Ramanathan and Medical College Dean N.Chidambaram congratulated the team.

Read more »

Nursing student dies of burns

CUDDALORE: 

             A nursing student R. Subashini (22) died of burns in her house at Block No.24 of the Neyveli Township near here on Wednesday.

            Police sources said that she was studying first year nursing course in a private college at Tiruchi. She had come to Neyveli to spend her holiday with her father, who is an employee of a fair price shop at Panruti. According to sources, neighbours heard cries from the house and rushed there to see Subashini lying on the ground with burns. She died even before she could be taken to hospital. Some of her agitated relatives, suspecting involvement of a contractor in the incident, attacked his house and car.

Read more »

வியாழன், அக்டோபர் 28, 2010

பராமரிப்பு இன்றிப் பாழாகும் கடலூர் ரயில்வே மேம்பாலம்

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே மேம்பாலம். (வலது படம்) ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி.
கடலூர்:

                நகராட்சி முறையாகப் பராமரிக்காததால், கடலூர் ரயில்வே மேம்பாலம் பாழாகிக் கொண்டு இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் கடலூர் லாரன்ஸ் சாலையில், ரயில்வே கேட் நாளொன்றுக்கு 40 முறை மூடித் திறப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

                 இப்பிரச்னைக்குத் தீர்வு காண, 6 ஆண்டுகளுக்கு முன் ரூ. 12.5 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.  நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட இப்பாலம் தற்போது, நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தில் 32 விளக்குகள் உள்ளன. இவைகள் முழுவதும் பல நாள்கள் எரிவதில்லை. கடந்த 3 நாள்களாக ஒரு விளக்குகூட எரியவில்லை. பாலத்தை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் எட்டிப் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. பாலம் குப்பைக் கூளங்கள், மணல் படிந்து அசுத்தமாகக் காட்சி அளிக்கிறது.  

                 பாலத்தில் நீர் வழிந்தோட அமைக்கப்பட்டு உள்ள துளைகள் எல்லாம் அடைபட்டு அந்த இடங்களில், காட்டுச்செடிகள் முளைத்து உள்ளன. பாலத்தில் சேரும் மழைநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட 5 அங்குல விட்டம் உள்ள, பல நூறு மீட்டர் நீளம் கொண்ட பிளாஸ்டிக் குழாய்கள் அனைத்தும், சமூக விரோதிகளால் வெட்டித் திருடப்பட்டு விட்டன. தண்ணீர் முறையாக வழிந்தோடாமல் தேங்கி, அதில் உள்ள இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து, பாலம் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

               பாலத்தில் இருந்து இறங்குவதற்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் படிக்கட்டுகள் கழிவறையாக மாற்றப்பட்டு சுகாதாரக் கேட்டுடன் அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறது. பாலத்தில் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகிறது. பாலத்தில் செல்வோரிடம் திருடர்கள் வழிப்பறி செய்து தப்பிச் செல்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள, விளக்குகள் ஏதும் எரியாமல், எவ்வித பாதுகாப்பும் இன்றிக் கிடப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் செயல்களுக்கு ஏற்ற இடமாக மாறியிருக்கிறது.  

                  பாலத்தின் அருகே தற்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருப்பது, சமூக விரோத செயல்களுக்கு மேலும் வசதியாக பாலத்தின் கீழே உள்ள பகுதி மாற்றப்பட்டு இருக்கிறது. சில பகுதிகளில் மாட்டுத் தொழுவங்கள், கட்டுமானக் காண்ட்ராக்டர்களின் பொருள்கள், குப்பைக் கூளங்கள், சாக்கடைக் கழிவுநீர் மண்டிக் கிடக்கின்றன. நரிக்குறவர்கள், பிச்சைக்காரர்கள், வழிப்போக்கர்கள் போன்றவர்களின் புகலிடமாகவும், பன்றிகளின் உறைவிடமாகவும் பாலத்தின் கீழ்பகுதி மாற்றப்பட்டு இருக்கிறது. 

                       பிற நகரங்களில் எல்லாம் இத்தகைய பாலங்கள், கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு, கண்கவர் பூங்காக்களாக காட்சி தருகின்றன. பல பாலங்களின் கீழ்பகுதி கார்கள், சைக்கிள்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு நகராட்சிக்கு வருவாய் தரும் வகையில் காட்சி அளிக்கின்றன. ஆனால் கடலூர் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு இன்றி அறுவெறுப்பின் சின்னமாக மாறிக் கொண்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

Read more »

கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்து மூவர் படுகாயம்

கடலூர் :

                 கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்ததில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். கடலூர், முதுநகர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அரவிந்தோ பார்மா லிமிடெட் கம்பெனியில் மாத்திரைகள் தயாரிப்பதற்கான முக்கிய ரசாயனப் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இக்கம்பெனியில் கடலூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.

                     நேற்றிரவு 7 மணிக்கு கம்பெனியில் உள்ள மூலப் பொருட்களான ரசாயன பவுடரை உலர வைக்கும் கொதிகலன் அதிக வெப்பம் தாங்காமல் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த முதுநகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மின் இணைப்புகளை துண்டித்து, உலர் கொதிகலனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
 
              இவ்விபத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ்மேத்தா, பங்கஜ் கிஷோர், திவாரி மேத்தா ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன், மூவரும் கடலூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலூர் முதுநகர் போலீசார், மாசுகாட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

சோற்றுக்கற்றாழையால் பணமும் சேரும்



கடலூர்: 
 
                     தமிழ்நாட்டில் சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் மூலிகைச்-செடி அலோவரா, பெருமளவில் உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.  சோற்றுக் கற்றாழையில் அலோயின், அலோசோன் என்ற வேதிப் பொருள்கள் 4 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உள்ளன. இவ்வேதிப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அலோவரா ஜெல், அழகுசாதனங்களுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  
 
                   சூரிய ஒளியில் இருந்து வரும் கடும் வெப்பம், காமா, எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளில் தோலை பாதுகாக்க சோற்றுக் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. இது தோலின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. எனவே சோற்றுக் கற்றாழையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள்கள் உலகம் முழுவதும் சருமத்துக்கான லோஷன்கள், கிரீம்கள், சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சித்தா, ஆயுர்வேத மருத்துவங்களில் இருமல், சளி, குடல் புண் ஆகியவற்றுக்கு மருந்தாகவும், தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.  
 
வளரும் நிலை: 
 
                     25 முதல் 45 செல்ஷியஸ் வெப்ப நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ள பிரதேசங்களில் சோற்றுக் கற்றாழை நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதி உள்ள எல்லா வகையான நிலங்களிலும் சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும் என்றாலும் தரிசுமண், மணற்பாங்கான நிலங்கள், பொறைமண் நிலங்களில் சிறப்பாக வளரும் என்று வேளாண்துறை பரிந்துரைக்கிறது.  
 
                  இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வறட்சியான பகுதிகளில் சோற்றுக் கற்றாழை வணிக ரீதியாகப் பயிரிடப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி, கிரீஸ், உள்ளிட்ட நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் சோற்றுக் கற்றாழையைப் பதப்படுத்தியோ, ஜெல் தயாரித்தோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.  இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களில் வணிக ரீதியாக விவசாயிகள் பயிரிடுகிறார்கள். 
 
விதைகள் இல்லை: 
 
                 சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற பருவகாலம் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகும். சோற்றுக் கற்றாழையில் பூக்கள் உற்பத்தியானாலும் அதன் மகரந்தங்கள் செயல் இழந்து விடுவதால், விதைகள் உருவாவது இல்லை. எனவே செடியின் பக்கக் கன்றுகளை பிரித்தெடுத்து, வளர்க்கப்படுகிறது.  இதன்படி, 3 அடி இடைவெளிக்கு ஒரு கன்று வீதம், ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் நடவேண்டும். நிலத்தை இருமுறை உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் இட்டு, சிறு பாத்திகளில் சோற்றுக் கற்றாழை நடவேண்டும்.  இலை முதிர்ச்சி அடையும்போது, ஒரளவுக்கு வறட்சியான வானிலையில் இலைகளை சேகரித்தால், அதில் தரமான ஜெல் தயாரிக்க முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. 
 
                     சோற்றுக் கற்றாழை இலை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர்ச்சத்து கொண்டது. எனவே விரைவில் வீணாகும் தன்மை கொண்டது. எனவே வெகுவிரைவில் ஜெல் தயாரிக்க எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏக்கருக்கு 15 டன்கள் வரை இலை கிடைக்கும்.  புதுவை மாநிலத்தில் உள்ள சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து அலோவராவைக் கொள்முதல் செய்கின்றன.  திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி வட்டங்களில் சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற தட்பவெப்ப நிலையும், தகுந்த நிலத் தன்மையும் உள்ளன. கொள்முதல் செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், அலோவரா நல்ல லாபம் தரும் பயிர் என்கிறார்கள் வேளாண்  துறையினர்.

Read more »

"கோ கோ' தென்னந்தோப்பு விவசாயிகளின் வரப்பிரசாதம்



      
                     நிழல் ஊடு பயிரான கோ கோ தோட்டம், தென்னந்தோப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு செலவில்லாமல் அதிக லாபம் தரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சாக்லேட் முதல் ஐஸ் கிரீம் வரை அனைத்திலும் கலக்கப்படுவது கோ கோ. மேலும் மருத்துவத்துக்கும், முக அழகு கிரீம்களில் கலக்கவும் கோ கோ பவுடர் பயன்படுகிறது.  
 
                   இந்தியாவில் கோ கோ தோட்டப்பயிர் குறைவாக உள்ளதால் பிரேசில், மெக்சிகோ, கானா, நைஜீரியா, இந்தோனேஷியா, கேமரூன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 60 சதவீத கோ கோ இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.  இந்த கோ கோ தோட்டப்பயிர் கோவை, திருச்சி போன்ற தமிழகத்தின் ஒரு சில மாவட்டத்தில் மட்டும் பயிரிடப்படுகிறது.  
 
                      திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முதலாக மப்பேடு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் தோட்டக்கலை வேளாண் உதவி அலுவலரின் ஆலோசனைப்படி கோ கோ பயிரிட்டு லாபம் அடைந்து வருகிறார்.  
 
இந்த கோ கோ தோட்டம் குறித்து தோட்டக்கலை வேளாண் உதவி அலுவலர் பாபு கூறும் போது, 
 
                          கோ கோ செடி வளர 60 சதவீத நிழல் பகுதி தேவை. மேலும் 15 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை, மழையளவு 500 முதல் 2000 மில்லி மீட்டர் வரை, வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் வண்டல் மண் ஆகியவை இருந்தால் போதுமானது. 
 
                     மேற்கண்ட சூழல் பெரும்பாலும் தென்னந்தோப்புகளில் நிலவும். ஆகையால் தென்னந் தோப்பு வைத்திருப்பவர்கள் ஊடு பயிராக கோ கோ பயிரை நடவு செய்யலாம்.  இதற்கென தனியாக எவ்வித பராமரிப்பும் இல்லை. தென்னந்தோப்புக்கு விடப்படும் தண்ணீரே இதற்கும் போதுமானது. இதற்கு சொட்டு நீர் பாசன வகையையும் பின்பற்றலாம். இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு கோ கோ அல்லது 10 அடி இடைவெளியில் ஒரு கோ கோ செடி என பயிரிடலாம். ஒரு ஏக்கர் தென்னந் தோப்பில் 200 முதல் 250 செடிகள் வரை பயிரிடலாம்.  
 
                    கோ கோ பயிர் நடவு செய்த 3 ஆண்டுகளில் பலன் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. 3 ஆண்டு வளர்ந்து ஒரு செடியில் 750 கிராம் கோ கோ கிடைக்கும். 5 ஆண்டு வளர்ந்த செடியில் 2 கிலோ கோ கோ கிடைக்கும். கோ கோ பொறுத்தவரையில் குறைந்தபட்ச ஆதார விலையைக் கருத்தில் கொண்டாலும் ஆண்டுக்கு ரூ. 18 ஆயிரம் முதல்  ரூ. 24 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.  மேலும் கோ கோ செடியில் இருந்து விழும் இலையில் தழைச்சத்து நுண்ணூட்டச்சத்து போன்றவை இருப்பதால் மண் வளம் பெற்று தென்னை மரமும் நல்ல அறுவடையை தரும். 
 
                  கோ கோ செடி வகைகளை பூச்சியினங்களும் தாக்காது. ஆகையால் தென்னந்தோப்பு விவசாயிகளுக்கு கோ கோ ஒரு வரப்பிரசாதமாகும். 
 
                   இந்த நிழல் ஊடுபயிரான கோ கோ பயிரிட விருப்பமுள்ள விவசாயிகள் 9444227095 என்ற மொபைல் எண்ணில் அழைத்தால் தோட்டக் கலைத் துறை மூலம் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் கிடைக்கும் என்றார் பாபு.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior