உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 31, 2012

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அமல் - உயர்த்தப்பட்ட கட்டண விபரம்

           தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய மின் கட்டணம் நடைமுறைக்கு வரவுள்ளது.


       இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் வெள்ளிக்கிழமை வழங்கியது. இதன்படி, வீடுகள் உள்ளிட்ட குறைந்தழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டணம் ஒட்டுமொத்தமாக 45 சதவீதம் உயருகிறது. தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயரழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டணம் 25 சதவீதம் உயருகிறது.
 
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் கே. வேணுகோபால், எஸ். நகுல்சாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
 


      ஆண்டுக்கு ரூ. 9,742 கோடி அளவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் மின் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என ஆணையத்திடம் மின்சார வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. தீவிரப் பரிசீலனைக்குப் பின், ஆண்டுக்கு ரூ. 7,874 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 5,300 கோடி கூடுதல் வருவாயும், உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 2,574 கோடி கூடுதல் வருவாயும் கிடைக்கும்.
 


      வீடுகளுக்கான கட்டண உயர்வு குறித்த மின்வாரிய பரிந்துரையில் மட்டும் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கும் கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பெட்டிக் கடைகளுக்கான மின் கட்டணம், மின் வாரியம் கேட்டதைவிடக் குறைக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் பிற பரிந்துரைகள் அனைத்தும் அப்படியே நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
சப் மீட்டர் கணக்கில் கொள்ளப்படாது: 


         வாடகை வீட்டில் குடியிருப்போரின் சப் மீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்போர் அதிக அளவு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.
 
 உயர்த்தப்பட்ட கட்டணம்  (இரண்டு மாதங்களுக்கு)


 * 100 யூனிட் வரை ரூ. 2.60
 (அரசு மானியம் ரூ.1.60 -
 நுகர்வோர் கட்டணம் ரூ.1.10).
 தற்போது 1 யூனிட் 85 பைசா.

 * 101 யூனிட் முதல்
 200 யூனிட் வரை ரூ. 2.80
 (அரசு மானியம் ரூ.1.00,
 நுகர்வோர் கட்டணம் ரூ.1.80)

 * 201 யூனிட் முதல்
 500 யூனிட் வரை ரூ.4.00
 (அரசு மானியம் 50 பைசா - நுகர்வோர் கட்டணம் ரூ. 3.50). இதில், முதல் 200 யூனிட்களுக்கு ரூ. 3-ம், 201 வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரை ரூ. 4-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 * 500 யூனிட்டுகளுக்கு மேல்- ரூ.5.75 (அரசு மானியம் கிடையாது)

 * * * ஒவ்வொரு நுகர்வோரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை சேவைக் கட்டணம் என்ற முறையில் ரூ. 20 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.








 

Read more »

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 16 லட்சம் விண்ணப்பங்கள்




      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 16 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார்.


     விண்ணப்பம் கோரும் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கிடைக்காததால் தருமபுரி உள்ளிட்ட இடங்களில் பிரச்னை ஏற்பட்டு போலீஸ் தடியடியும் நடத்தியது.
 
பல இடங்களில் விண்ணப்பங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
 

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

ஆனால், விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல்நாளே 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதையடுத்து, கூடுதலாக 6 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. ""ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் முதல் முறையாக ஜூன் 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தோராயமாக 8 லட்சம் பேர் வரை எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து மொத்தம் 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன.

          எங்கெங்கு விண்ணப்பங்கள் தேவையோ, அங்கு உடனடியாக அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் கோரும் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதுதொடர்பாக எந்தவித கவலையும் அடைய வேண்டாம். விண்ணப்பதாரர்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆசிரியராக விருப்பமுள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பத்தை வாங்கும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

           இதில் 12 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 4 லட்சம் விண்ணப்பங்கள் உள்ளன. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பங்கள் தீர்ந்துவிட்டால், அருகில் அதிகமாக விண்ணப்பங்கள் உள்ள பகுதியிலிருந்து உடனடியாக அந்த மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விநியோக மையங்களில் விண்ணப்பங்கள் தீர்ந்துவிட்டால் யாரும் பதற்றமடைய வேண்டாம்.
 
      மாவட்டந்தோறும் உள்ள மையங்களில் எவ்வளவு விண்ணப்பங்கள் உள்ளன என்பதை சென்னையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.  விரைவில் கணினிமயமாக்கப்படும்: விண்ணப்ப விநியோகம், சமர்ப்பிக்கும் முறை ஆகியவை விரைவில் முழுமையாகக் கணினிமயமாக்கப்படும். இதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்குள் நடைபெறும் ஏதேனும் ஒரு ஆசிரியர் தேர்வை முழுவதும் ஆன்-லைன் மூலம் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் தேர்ச்சியடைய வேண்டும்: இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் 7 சதவீதம் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வு எழுதும் அனைவரும் தங்களைச் சிறப்பான முறையில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 
      இந்தத் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்புகிறேன்.  மிகப்பெரிய ஒரு தேர்வை மிகக் குறைந்த ஆள்பலத்துடனும், வசதிகளுடனும் நடத்துகிறோம். இதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்வைச் சிறப்பாக நடத்த விண்ணப்பதாரர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தேவை'' என்றார் அவர்.
 
 தேவைப்பட்டால் கடைசித் தேதி நீட்டிக்கப்படும்


 ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் தேதி தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார்.
 


         ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இப்போதும் விற்பனையாகி வருகின்றன.
ஏதேனும் ஒரு பகுதியில் மொத்தமாக விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது விண்ணப்பங்கள் தாமதமாகக் கிடைத்தது என்றாலோ தேதி நீட்டிப்பு செய்வது குறித்துப் பரிசீலனை செய்யப்படும். 

       மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளதால் அதற்குரிய கால அவகாசம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தேவைப்படுகிறது. எனினும் இதுதொடர்பான இறுதி முடிவு ஏப்ரல் 3-ம் தேதி எடுக்கப்படும் என்றார் அவர்.
 

Read more »

நாட்டார்மங்கலம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா


கடலூர் : 

      நாட்டார்மங்களம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.


       கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினம் மற்றும் 9 வார்டு பெண் உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 100 சதவீதம் பெண்களே பொறுப் பேற்றதால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த டில்லி தமிழ்ச்சங்கம் டில்லிக்கு அழைத்திருந்தது. அதன்படி நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் 500 பேர் டில்லி சென்றனர். அங்கு நடந்த பாராட்டு விழாவிற்கு காங்., தமிழக தலைவர் ஞானதேசிகன் எம்.பி., தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் வாசன் வாழ்த்திப் பேசினார். தொழிலதிபர் மணிரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.


        ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினத்திற்கு தமிழ்ச்சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து டில்லி விஸ்வேஷ் சேவா சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரண்வாலிடா பாராட்டி பேசினார். அதனை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் விருந்தளித்தார்.










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior