உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

வங்கியில் ரூ.2 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட 2 பேருக்கு பணம் பெற்றுத் தந்தார் எஸ்.பி.

கடலூர்:
 
               வங்கியில் செலுத்திய ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முயற்சியால், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் அந்தப் பணம், அதே வங்கியில் இருந்து பெற்றுத் தரப்பட்டது.  
 
இதுகுறித்து கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஞாயிற்றுக்கிழமை  கூறியது:  
 
                   கடலூர் அருகே ஆதிவராக நல்லூரைச் சேர்ந்தவர்கள் ஷெரியாபேகம் மற்றும் அவரது மாமியார் மகபூப்பீவி. இருவரும் 2007-ம் ஆண்டு சிதம்பரம் நகரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் வங்கியில் தலா ரூ.1 லட்சம் டெபாஸிட் செய்தனர். வங்கி மோலாளர் அப்துல்ரகீம் அவற்றுக்கு ரசீதும், பாலிஸியும் வழங்கினார்.  உலக அளவில் வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து விட்டதாக அறிந்த ஷெரியா பேகமும், மகபூப் பீவியும், தங்கள் பாலிஸிக்கு வட்டி குறைந்து இருக்கிறதா என்று பார்க்க, 2008 அக்டோபரில் அந்த வங்கிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது வங்கி மேலாளர் அப்துல் ரகீம் அங்கு இல்லை. புதிய மேலாளராக அய்யப்பன் இருந்தார்.  அந்த இருவரின் பாலிஸிகளையும் மேலாளர் வாங்கிப் பார்த்தார். ஆனால் அத்தகைய பாலிஸிகள் எதுவும் வங்கியில் இருந்து வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். எனவே, இருவருக்கும் 2007-ல் வழங்கப்பட்ட பாலிஸிகள் போலியானவை என்று தெரியவந்தது.   இது குறித்து இருவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் வங்கி மேலாளராக இருந்த அப்துல் ரகீம் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருவரும் செலுத்திய பணத்தை வங்கி நிர்வாகம் வழங்காமல் இருந்தது. இதனால் வழக்கு விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.    இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை பெற்றுத் தருவதற்கான முயற்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் நடவடிக்கை எடுத்தார். இரு பெண்களும் அந்த வங்கியில் பணம் செலுத்தியதற்கான ஆதாரம் முறையாக உள்ளது. எனவே வழக்கு நிலுவையில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வங்கி, பணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  வங்கியின் மும்பை அலுவலகத்துக்கு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு எஸ்.பி. இதைத் தெரிவித்தார். அதன்பேரில் வங்கித் தலைமை அலுவலக அதிகாரிகள் சிதம்பரம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி, இரு பெண்களும் வங்கியில் பணம் செலுத்தியது உண்மைதான் என்று கண்டறிந்தனர்.   அதைத் தொடர்ந்து அவர்கள் வங்கியில் செலுத்திய தொகை, தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வங்கியில் இருந்து வழங்கப்பட்டு உள்ளது என்றார் எஸ்.பி.

Read more »

குடிநீரின்றி அவதியுறும் கீழிருப்பு பள்ளி மாணவர்கள்


பண்ருட்டி:
 
              பள்ளி வளாகத்தில் குடிநீர் இல்லாததால் கீழிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பண்ருட்டி வட்டம் கீழிருப்பு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 20.11.1926-ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வருகின்றனர். இதே போல் சத்துணவு சமைக்கவும் தண்ணீர் வெளியில் இருந்து தான் எடுத்து வருகின்றனர். இந்த பள்ளியின் மிக அருகில் (30 அடி தூரத்தில்) 2007-2008-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்பட்ட 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் இருந்து சில நூறு ரூபாய் செலவில் இப்பள்ளிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தும் குடிநீர் இணைப்பு கொடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பள்ளி வளாகத்தில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட தொட்டி பராமரிப்பு இல்லாமல் சிதலம் அடைந்துள்ளது. மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக ஊராட்சியோ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் கூறினர். எனவே இப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் பள்ளி வளாகத்திலேயே கிடைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

Read more »

1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் கண்டுபிடிப்பு


பண்ருட்டி:

                   பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமத்தில் சுமார் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிவன் கோயிலும், சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பண்ருட்டியில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் சிறுவத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள தருணேந்துகேசர் உடனுறை நாகநாதஈஸ்வரர் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை இந்து சமய அறநிலைத் துறை நிர்வாக செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் பண்ருட்டி தமிழரசன், புதுப்பேட்டை கோவிந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் நிருபர்களிடம் கூறியது:   பண்ருட்டி வட்டத்தில் திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் மட்டுமே பல்லவர் கால கோயிலாக இருந்தது. தற்போது இதன் அருகிலேயே சிறுவத்தூரில் பல்லவர் கால கோயிலும், சிற்பங்களும் இடம் பெற்றிருப்பது வரலாற்றில் புதிய செய்தி. சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவத்தூர் ஏதோ ஒரு வகையில் சிறப்பிடத்தை பெற்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.  இக்கோயிலின் தென்புறத்தில் கி.பி. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்க ஆவுடையார் மட்டில் பூமியில் புதைந்துள்ளது. 390 செ.மீ சுற்றளவும் 120 செ.மீ அகலமும் கொண்ட இந்த ஆவுடையார் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. அதனைச் சேர்ந்த சிவலிங்கமே கோயில் கருவறையில் வைத்து வழிபட்டதாகும். மேலும் விநாயகர், சண்டிகேசுவரர், எட்டுப்பட்டை கொண்ட சிவலிங்கம் ஆகிய அனைத்தும் பல்லவர் காலத்தில் வழிபாட்டில் இருந்ததாகும்.  பின்னர் ஆட்சிக்கு வந்த சோழர்கள் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக தென்முகக் கடவுள், பைரவர், சூரியன், உமையவள் சிலைகள் உள்ளன. சோழர்களுக்கு பின் இப்பகுதியை ஆண்ட விஜயநகர-நாயக்கர் காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர்-சண்டிகேசுவரர் சிற்பங்கள் வேறெங்கும் காண்பதற்கரிய கலைப் படைப்பாகும்.   இக்கோயிலின் வெளிப்புறச் சுற்றுச்சுவரில் இருந்த கல்வெட்டுகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திருப்பணியின் போது சிமென்ட் கலவையால் பூசி மறைக்கப்பட்டுவிட்டன. இதனால் இக்கோயிலின் பழைய வரலாறு ஆய்வுக்குறியது என்றார் அவர்.

Read more »

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தனிநபர் ஆதிக்கம்! உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி


குறிஞ்சிப்பாடி : 

                குறிஞ்சிப்பாடி ஒழுங் குமுறை விற்பனை கூடத்தில் தனிநபர் ஆதிக்கத்தால் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
            குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் நெல், மணிலா, உளுந்து, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தட்டைப்பயிர் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் விளை பொருட்களை குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். இங்கு விற்பனைக்கு வரும் விளை பொருட் களை வாங்குவதற்காக கடலூர் மாவட்டம் மட்டுமன்றி வெளிமாவட்ட வியாபாரிகள் அதிக அள வில் வந்தனர். குறிப்பாக இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் மணிலா  ஏற்றுமதி தரத்தில் திடமாக இருப்பதால் மணிலா வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்தது.
 
                   தற்போதும் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வியாபாரிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால் அந்த வியாபாரிகளை இப்பகுதியை சேர்ந்த தனிநபர் தடுத்து நிறுத்தி, கடலூர்- விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனையாகும் பொருள் களின் விலையை விட குறைவாக வாங்கித் தருவதாக ரகசிய ஒப்பந்தம் செய்து, இவர் ஒருவரே அனைத்து பொருள்களுக் கும் விலையை நிர்ணயம் செய்து வாங்கி வருகிறார். வியாபாரிகளும் தங்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைப்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வராமல் அந்த தனிநபரின் உதவியுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள், தாங்கள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைந்து வருகின்றனர். வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்யும் விளை பொருட்களை,  விவசாயிகள் பெயரில் சிட்டா அடங்கல் கொடுத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூட குடோனில் இருப்பு வைத்துக் கொள்கின்றனர்.
இதனால் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நேரங்களில் இருப்பு வைக்க முடிவதில்லை. பொருட்களை மீண்டும் வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் மிக குறைந்த விலைக்கு விற்க வேண் டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர்.
 
         மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பொருட்களுக்கு உடனடியாக பணம் தராமல், இரவு நேரங்களில் பணம் பட்டுவாடா செய் யப்படுகிறது. இரவு நேரத்தில் பணத்தை வாங் கும் விவசாயிகள் அவற்றை பாதுகாப்பாக வீட்டிற்கு எடுத்து செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது. இப்பகுதி விவசாயிகள் பாடுபட்டு அறுவடை செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட, ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தில் நிலவி வரும் தனிநபர் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் கூடுதல் குடோன், விவசாயிகள் ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறைகேடுகளை தவிர்த் திட கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

பொது வினியோக திட்ட முழு பயனை உறுதிப்படுத்த வேண்டும் : விவசாய தொழிலாளர் சங்கம் முன்னாள் நீதிபதி வாத்வாவிடம் மனு


கடலூர் : 

             பொது வினியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, முழுபயனும் மக்களை சென்றடைய  நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், கடலூருக்கு வருகைத் தந்த பொது வினியோகத் திட்ட சட்ட புலனாய்வு குழு தலைவர் முன்னாள் நீதிபதி வாத்வா விடம் அளித்துள்ள மனு: 

                  உணவுக்கான உரிமை அடிப்படை உரிமைகளின் ஒன்று என சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில் அரசின் நோக் கங்கள் செயல்படுத்தி வந் தாலும், வரைமுறைகள் கடைபிடிக்காத நிலை உள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு மற்றும் குடிமை பொருட்கள் முழுமையாக கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.
 
               கடலூர் மாவட்டத்தில் 22 லட்சம் மக்கள் தொகையில் 5 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பொது வினியோக திட்ட பயன் கிடைப்பதில் பெரும் பலகீனம் உள்ளது. மாவட்டத் தில் உள்ள 1200 ரேஷன் கடைகளிலும், அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. மூன் றில் ஒரு பங்கு உணவு பொருட்கள் கடத்தப்படுவதை தடுத்திட வேண் டும். வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிபடைத்திட கடைவாரியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ குழு பிரதிநிதிகளை கொண்ட கண்காணிப்பு குழு நியமிக்க வேண்டும்.
 
                     அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்தோதயா அன்ன யோஜனா திட்டத்தில் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் காண்பதில் நெறிமுறைப்படுத்த வேண்டும். உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் நிரப்பி வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தங்கள் குழு பொதுமக்களின் பிரதிநிதிகளை சந்தித்து மனு அளிக்க வாய்ப்பு ஏற்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மாவட்டத்தில் தொடர் திருட்டை தடுக்க தீவிர முயற்சி : குற்றவாளிகள் விபரம் சேகரிக்கிறோம்: எஸ்.பி.,


கடலூர் : 

                தொடர் திருட்டு மற்றம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை பல்வேறு கோணங்களில் தேடி வருவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.
 
இதுபற்றி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது: 

             சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்த போது ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த அன் வர்பாஷா மனைவி ஷெரியா பேகம் மற்றும் அவரது மாமியார் மகபூப் பீவியும் சிதம்பரம் ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கியில் தலா ஒரு லட்சம் ரூபாயை மேனேஜர் அப்துல் ரகீமிடம் டெபாசிட் செய்து ஏமாற்றப் பட்ட வழக்கு பதிந்து நிலுவையில் இருந்தது.
 
               விசாரணையில் வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்தது உண்மை என தக்க ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டு அதன் பேரில் பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப் பட்டது. மும்பையில் தலைமை கணக்கு அலுவலர் மண்டல் என்பவரை தொடர்பு கொண்டு பாதிக் கப்பட்டவர்களுக்கு  தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்தேன். அதன் பேரில் வங்கி மூலம் முறைப்படி 2 லட்சம் ரூபாயை திரும்ப பெற்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமறைவான வங்கி மேலாளர் அப்துல் ரகீமை தேடி வருகிறோம்.
 
                மாவட்டத்தில் சமீப காலமாக  வீட்டை உடைத்து நடக்கும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை ஆங் காங்கே செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனைகள் மூலம் தீவிரமாக தேடி வருகிறோம். மேலும் கடலூர், புதுச் சேரி மற்றும் திருச்சி மத் திய சிறைகளில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் வெளியே வந்த கைதிகள் மற்றும் 10 ஆண்டாக குற்றங்களில் ஈடுபடுவோர் விபரம் சேகரித்து அதன் அடிப்படையிலும் குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
தினமும் நான் மற்றும் அனைத்து டி.எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணி மேற் கொள்கிறோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது வெளியே விளக்குகளை எரிய விட்டு செல்ல வேண்டும். மேலும் போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவித்துவிட்டு சென்றால் குறிப்பிட்ட அப்பகுதியை கண்காணிக்க வசதியாக இருக்கும். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

Read more »

கவர்னர் விருதுக்கு தேர்வான சாரண மாணவர்களுக்கு பாராட்டு

ராமநத்தம் :

         கவர்னர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ம.புடையூர் சாரண, சாரணிய மாணவர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

        நெய்வேலி என்.எல்.சி., உயர்நிலைப்பள்ளியில் சாரண, சாரணிய மாணவர்கள் ஆளுநர் விருதுக்காக (ராஜ்யபுரஸ்கர்) தேர்வு செய்ய மாநில அளவில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வு, முடிச்சுகள் போடுதல், திசையறிதல், கட்டுகள் போடுதல், கூடாரம் அமைத்தல் ஆகிய தேர்வுகளில் ராமநத்தம் அடுத்த ம.புடையூர் அரசு மேல்நிலைப் பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் வெற்றி பெற்று, கவர்னர் விருதுக்கு தகுதி பெற்றனர். இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா ம.புடையூர் பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. இதில் சாரண, சாரணியர்கள் குருச்சந்திரன், ரமேஷ், சதீஷ்குமார், நதியா ஆகியோரை உதவி தலைமை ஆசிரியர் ரத்தினம், பசுமைப்படை  ஆலோசகர் ஞானபிரகாசம், ஜே.ஆர்.சி., ஆலோசகர் சுப்ரமணியன் வாழ்த்தி கவுரவித்தனர்.

Read more »

அரசு மருத்துவக் கல்லூரி துவக்க முதல்வருக்கு கவுன்சிலர் கோரிக்கை


பரங்கிப்பேட்டை : 

           கடலூர் மாவட்டத்தில் அரசு மருத் துவ கல்லூரி துவக்கக் கோரி முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

          தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியும்,  இன்ஜினியரிங் கல்லூரிகளும் உள்ளன.  இந்த மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. அதேபோல் இந்த பகுதிமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு குழுவினர்களுக்கு பயிற்சி


கடலூர் : 

             மாவட்டத்தில் கான்கிரீட் வீடு திட்டத்திற்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள குழுவினர்களுக்கு ஒன்றியம் வாரியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
 
             தமிழக அரசு அறிவித்துள்ள கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வீட்டு வசதி திட்டத்திற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி துவங் கப்பட உள்ளது. இதற்காக அந் தந்த ஊராட்சிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், மக்கள் நலப்பணியாளர் மற்றும் ஊராட்சி உதவியாளர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவினர் குடிசை வீடுகளை கணக்கெடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
கடலூர்: 

              கோண்டூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமில் 15 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு ஆர்.டி.ஓ., செல்வராஜ், பி.டி.ஓ.,க்கள் சீனிவாசன், மங்கலட்சுமியும், தூக்கணாம் பாக்கம் மற்றும் நடுவீரப்பட்டில் நடந்த முகாமில் பங்கேற்ற குழுவினர்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)  தர்மசிவம், கடலூர் பி.டி.ஓ.,  பத்மநாபன், தாசில்தார் தட்சிணாமூர்த்தி பயிற்சி அளித்தனர்.


கம்மாபுரம்: 

               ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமில் பங்கேற்ற 14 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு நில எடுப்பு தாசில்தார் முகுந்தன், பி.டி.ஓ., நடராஜன் பயிற்சி அளித்தனர். சி.கீரனூரில் நடந்த முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், பி.டி.ஓ.,க்கள் தமிழரசி, சுந்தர் பயிற்சி அளித்தனர்.
 

திட்டக்குடி: 

              இறையூரில் நடந்த முகாமில் பங்கேற்ற 17 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், நல்லூர் ஒன்றிய ஆணையர் சந்திரகாசன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உதவி திட்ட மேலாளர் நாராயணன், உதவி ஆணையர்கள் வீரபாண்டியன், பிரேமா பயிற்சி அளித்தனர். நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்லபெருமாள், ஆணையர் ரவிசங்கர்நாத்தும், மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சையத்ஜாபரும், சிறுபாக்கத்தில் திட்டக்குடி தாசில்தார் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், ஆணையர் புஷ்பராஜ் பயிற்சி அளித்தனர்.
 

புவனகிரி: 

           மஞ்சகொல்லையில் நடந்த முகாமில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பாலசுப்ரமணியன், பி.டி.ஓ.,க்கள் வாசுகி, திருமுருகனும், எறும்பூரில் நடந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், பி.டி.ஓ.,க்கள்  ஜமுனா, நீலகண்டன் பயிற்சி அளித்தனர்.
 
ஸ்ரீமுஷ்ணம்: 

               தேத்தாம்பட்டில் நடந்த முகாமில் பங்கேற்ற 13 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு காட்டுமன்னார்கோயில் பி.டி.ஓ., விஜயன், சிதம்பரம் உதவி செயற்பொறியாளர் அருண்மொழி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Read more »

வக்கீல் சங்கத்தில் ஸ்டாம்ப் விற்பனை நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி :

             கோர்ட் ஸ்டாம்புகளை வக்கீல் சங்கம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை செயலாளர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

            தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் வழக்குகளுக்காக 1,2,5,10 ரூபாய்க் கான கோர்ட் ஸ்டாம்புகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். கோர்ட் ஸ்டாம்புகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்றவர்களில் ஒரு சிலர் செயற்கையான தட்டுப் பாட்டை உருவாக்கி அரசு நிர்ணயம் செய்த விலையை விட 50 பைசா முதல் 3 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அரசு உரிமம் பெற்றவர்களிடம் ஒரு சில வியாபாரிகள், சட்ட விதிகளை மீறி கோர்ட் ஸ்டாம்புகள் மற்றும் முத்திரை தாள்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே முத்திரை தாள்கள் மற்றும் கோர்ட் ஸ்டாம்புகளை கூடுதல் விலைக்கு விற் பனை செய்வதை தடுக்க வக்கீல்கள் சங்கத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கொளஞ்சியப்பர் கல்லூரியில் என்.சி.சி., ஆண்டு விழா


விருத்தாசலம் : 

         விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் என்.சி.சி., ஆண்டு விழா மற்றும் பதக்கம் வழங்கும் விழா நடந்தது.
 
                     கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் பக்கிரிசாமி, தங்கதுரை முன் னிலை வகித்தனர். பேராசிரியர்கள் அப்துல்ரகீம் வரவேற்றார். நிகழ்ச்சியின் துவக்க விழாவில் என்.சி. சி., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.  திட்ட அலுவலர் மதிவாணன் ஆண்டறிக்கை வாசித்தார். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் பசுபதி பதக்கம் வழங்கி பேசினார்.  உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், பேராசிரியர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் மார்டின்ஜெயராஜ் நன்றி கூறினார்.

Read more »

மணல் குவாரி அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை

விருத்தாசலம் :

           கருவேப்பிலங்குறிச்சியில் மணல் குவாரி அமைக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து கார்மாங்குடி உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

               விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சுற்றி 20 ம் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மணல் குவாரி இல்லாததால் வீடு கட்டும் பணிக்கும், மற்ற பணிகளுக்கும் வெகு தூரம் உள்ள மணல் குவாரிகளுக்கே செல்ல வேண்டியுள்ளது. அதுவும் தங்கள் தேவைக்கேற்ப மணல் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு கருவேப்பிலங்குறிச்சியை மையமாக கொண்டு டயர் வண்டி மற்றும் டிப்பர்களுக்கான மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பெண்ணாடத்தில் அறிவியல் கண்காட்சி


திட்டக்குடி : 

                பெண்ணாடத்தில் தேசிய பெண்கல்வி சிறப்பு திட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற் றும் கைவினை பொருட்களின் பொருட்காட்சி நடந்தது.
 
                 நல்லூர் ஒன்றிய எஸ். எஸ்.ஏ., சார்பில் தேசிய பெண் கல்வி சிறப்பு திட்ட மாதிரி தொகுப்பு மைய மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் கைவினை பொருட்களின் பொருட்காட்சி பெண்ணாடத்தில் நடந்தது. பெண்ணாடம் பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காதர், ஆசிரிய பயிற்றுனர்கள் ரவி, கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், தமிழ் வேந்தன் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் சிவகாமசுந்தரி வரவேற்றார். நல்லூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி வாழ்த்தி பேசினார். அறிவியல் மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சிகளை நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா துவக்கி வைத்தார்.
 
                    இதில் கொடிக்களம், கிளிமங்கலம், பாசிகுளம், கொசப்பள்ளம், பெண்ணாடம், திருவட்டத்துறை, கூடலூர் குடிகாடு, வடகரை, இறையூர், கூடலூர், பெ.பூவனூர் மாதிரி தொகுப்பு மையங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். சி.எஸ்.டி., திட்ட அலுவலர் டாக்டர் லெனின், ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, விஜிஅனிகிரே, லதாமகேஸ்வரி, செல்வராஜ், அஞ்சலம், ராணி, கண்ணகி, சிவராமசேது பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.

Read more »

திறமையான மாணவர்களே எங்களது நோக்கம் : பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் பேட்டி

கடலூர் :

                திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியின் புதிய நிர்வாக இயக்குனரான கெவின் கேர் நிறுவனர் ரங்கநாதன் கூறினார்.

இதுகுறித்து கெவின் கேர் நிறுவனர் ரங்கநாதன் கூறியதாவது: 

             கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியை தற்போது சி.கே.கல்வி நிறுவனத்தின்  நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கல்லூரியை மாநில அளவில் சிறந்த கல்லூரியாக உருவாக்கி,  ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுப்பொலிவுடன் நடத்தப்படும். இங்கு படித்து பட்டம் பெற்று வெளியே செல்லும் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் நிர்வாக திறன்படைத்தவர்களாக இருக்க வேண்டும். இதற்காக திறமைமிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் அளவிற்கு மாணவர்களை உருவாக்குவதே குறிக்கோளாகும்.

                      அடுத்தாண்டு புதிய பாடப் பிரிவுகள் கொண்டு வரப்படும். இந்தியாவின் தலை சிறந்த கல்வியாளர்களை கொண்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வழிவகை செய்யப்படும்.  இந்நிறுவனத்திலிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் உடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் அளவிற்கு திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார். உடன் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், சி.கே.கல்வி குழும இயக்குனர் சந்திரசேகரன், முன்னாள் நிர்வாக இயக்குநர் சேகர் உடனிருந்தனர்.

Read more »

மணிமுத்தாற்றில் பாலம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சிறுபாக்கம் :

           வேப்பூர் அருகே மணிமுத்தாற்றில் பாலம் கட்ட வேண்டும் என நான்கு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

                    வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்துக் கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் குறுக்கே மணிமுத்தாறு சென்று பிரிப்பதால் இரு பகுதிகளுக்கும் பொதுமக்கள் மழைகாலத்தில் சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்லும் போது ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு செல்வது தடைபடுகிறது. இதனால் பா.கொத்தனூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் மணிமுத்தாற்றால் கூத்தக்குடி, மரூர் உள்பட 4 கிராம மக்களின் போக்குவரத்துக்கு வசதியாக பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 25ம் தேதி நேர்காணல்

கடலூர் :

             அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்  காப்பீடு திட்ட முகவர்களுக்கான நேர்காணல் வரும் 25ம் தேதி விருத்தாசலம் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

இது குறித்து விருத்தாசலம் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப் பாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
 

            அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட முகவர்களுக்கான நேர்காணல் வரும் 25ம் தேதி விருத்தாசலம் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத் தில் பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் வயது சான்றுகளுடன் பங்கேற்கலாம். வயது 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் ஊரில் மக்கள் தொகை 5000க்குள் இருந்தால்  பத்தாம் வகுப்பு கல்வி தகுதி சான்றும், மக்கள் தொகை 5000 மேல்  இருந்தால் பிளஸ் 2  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

                     முன்னாள் இதர காப்பீடு முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஓய்வு பெற்ற  ஆசிரியர்கள்,  சுய வேலை வாய்ப்பில் இருக்கும் இளைஞர்களும் இத்திட்டத்தில் சேரலாம். கம்ப்யூட்டர் இயக்கும் திறமை உடையவர்கள் மற்றும் உள்ளுர் பகுதிகளை முழுமையாக அறிந்திருப்பது அவசியம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

பெரியார் கல்லூரியில் வரலாற்று பேரவை விழா

கடலூர் :

              கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் வரலாற்றுப் பேரவை நிறைவு விழா நடந்தது.

             கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வரலாற்றுத்துறை பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் ராஜேந்திரன் பல்கலை கழக தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். நிகழ்ச்சிகளை பேராசிரியர் சேதுராமன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் ராயப்பன், பிரபா வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர்கள் விஜயலட்சுமி, ரங்கராஜூ மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் பிரபு நன்றி கூறினார்.

Read more »

கிள்ளை ரயில்வே கேட் பகுதியில் சாலையை அகலப்படுத்த ஆய்வு

கிள்ளை :

           கிள்ளை ரயில்வே கேட் பகுதியில் சாலையை அகலப்படுத்த ஆய்வு நடத்தப் பட்டது.

                     விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆணையர் கே.ஜே. எஸ். நாயுடு. தலைலை பாதுகாப்பு ஆணையர் சுதிர்குமார் ஆகியோர் தண்டவாளங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், கிராசிங் பாயின்ட்கள், பாலங்களின் உறுதி தன்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிள்ளை ரயில் நிலையத்தில் இருவழி ரயில்வே கிராசிங், தற்போது மூன்று வழி ரயில்வே கிராசிங்காக  மாற்றி அமைக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ரயில்வே கேட்டிலிருந்து, சிதம்பரம்- கிள்ளை  பஸ் ரூட் சாலையில் அமைக்கப் பட்ட ரயில்வே பகுதியில் சால விரிவாக்கப்பணிகள் குறித்தும், சாலையின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

Read more »

கால்நடை மருத்துவ முகாம்

கடலூர் :

              கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

                      மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, பாதிரிக்குப்பம் ஊராட்சி  மற்றும் நவகாளியம்மன் ஆலய சேவா சங்கமும் இணைந்து நடத்திய முகாமிற்கு  ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செந் தில்முருகன் வரவேற்றார். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் நடேசன் முகாமை  துவக்கி வைத்தார். முகாமில் 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சிவலிங்கம், கவுன்சிலர்கள் ஜோதி தமிழ்ச்செல்வன், செல்வி குமார் பங்கேற்றனர். சிறந்த கால்நடைகளுக்கு திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு பரிசு வழங்கினார். ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி முகாம் துவக்க விழா


விருத்தாசலம் : 

               விருத்தாசலம் வேளாண்மை பல்கலை கழக மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
 
                    ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜெயராஜ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் மாரிமுத்து வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத்தையா முந்திரி பருப்பு மற்றும் பழங்களின் முக்கியத்துவம் குறித்தும், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்தும் பேசினார். முந்திரி விளைச்சலை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து இணை பேராசிரியர் அனீசாராணி பேசினார். பேராசிரியர் ஜீவா, இணை பேராசிரியர் அம்பேத்கார், உதவி பேராசிரியர் கண்ணன் மற்றும் முந்திரி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Read more »

பலத்த போலீஸ் பாதுகாப்பில் எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள்கள்

கடலூர் :

            கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள்கள் 12 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு நாளை (23ம் தேதி) துவங்குகிறது. 36 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான வினாத்தாள்கள் நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மாவட்டத்திற்கு வந்தது.  இதனையடுத்து கடலூர் 2, சிதம்பரம் 2, விருத்தாசலம் 2 மற்றும் பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், தொழுதூர், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் தலா 1 மையங்கள் என 12  கட்டுக் காப்பகத்தில் வினாத் தாள்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டு காப்பகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

Read more »

பாழடைந்த கார்குடல் தாய் சேய் நல விடுதி : பொது இடத்தில் சிகிச்சை பெறும் அவலம்


விருத்தாசலம் ; 

             கார்குடல் தாய் சேய் நல விடுதி கட்டடம் பாழடைந்துள்ளதால் சிகிச்சை பெற இடமின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
 
               விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி தாய் சேய் நலவிடுதி அமைக் கப்பட்டது. இந்த தாய் சேய் நல விடுதி குடியிருப்பிலே செவிலியர் ஒருவர் தங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கார்குடல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான மாவிடந்தல், பொன்னேரி, சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் இதில் சிகிச்சை பெற்று வந்தனர்.
 
                   நான்கு ஆண்டாக இந்த தாய்சேய் நல விடுதி கட்டடம் மற்றும் குடியிருப்பு கட்டடம் பாழடைந்து முட்புதர்கள் மண்டி பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் இங்கு தங்கி பணியாற்றிய செவிலியர் நகரத்தில் தங்கி தங்கியுள்ளார். தினமும் காலை கிராமத்திற்கு வரும் செவிலியர் பஸ் நிறுத்த நிழற்குடை, பள்ளி வளாகம் என பொது இடங்களில் மருத்துவ உதவிகள் செய்துவிட்டு பின்னர் மாலையில் தனது வீட்டிற்கு சென்று விடுகிறார்.
 
                தாய்சேய் நல விடுதி இருந்தவரை கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை, பிரசவம் அங்கு நடந்து வந்தது. தற்போது இடம் இல்லாததால் அவர்களது வீட்டிலே பரிசோதனைகள், பிரசவம் நடந்து வருகிறது. இதனால் குழந்தை பெற்றுகொள் ளும் பெண்கள் வசதிகள் இன்றி சிரமமடைகின்றனர். மேலும் இரவில் செவிலியர் கிராமத்தில் தங்காததால் கர்பிணி பெண் கள் அவசர உதவிகள் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கிடையே நகர மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள் ளது. பொதுமக்கள் நலன் கருதி கார் குடல் கிராமத்திற்கு புதிய தாய்சேய் நல விடுதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Read more »

நான்கு பெண்களின் கண்கள் தானம்


சிதம்பரம் : 

           சிதம்பரத்தை சேர்ந்த மூன்று மூதாட்டிகள் உள் ளிட்ட நான்கு பெண்களின் கண்கள் தானமாக வழங் கப்பட்டது.
 
                சிதம்பரம் பள்ளிப் படை கந்தையாபிள்ளை மனைவி பிச்சம்மாள் (90), மாலைக்கட்டித்தெரு சுப்ரமணியன் மனைவி சுசீலா(44), கொத்தங்குடி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி திரிபுரசுந்தரி (84), சடகோபன் நகரை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி கிருஷ்ணவேனி(75) ஆகிய நான்கு பேர் இறந்தனர். அவர்களின் கண்களை தானமாக வழங்க காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் விஜயகுமார் தாலேடா, பொருளாளர் மனோகர், புதிய தலைவர் முருகப்பன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
 
                    அதையடுத்து இறந்தவர்கள் கண்களை தானமாக வழங்க அவர்களது குடும்பத்தார் முன்வந் தனர். அதையொட்டி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பாரதி, ஆஷா, சண்முகம் ஆகியோர் உதவியுடன் கண்கள் பெறப் பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 103 கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

Read more »

மீன் பிடிக்கச் சென்றவர் கடலில் தவறி விழுந்து பலி

கடலூர் :

              கடலில் மீன் பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

                      மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன்(46). மீன்படி தொழில் செய்யும் இவர் குள்ளஞ்சாவடி ரயிலடி பகுதியில் வசித்து வந் தார். நடராஜன், நாயக்கர்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம் உட்பட ஐந்து பேர் கடந்த 16ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 18ம் தேதி இரவு 7.30 மணி அளவில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நடராஜன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். உடன் இருந்தவர்கள் கடலில் குதித்து தேடியும் நடராஜன் கிடைக்கவில்லை. நள்ளிரவு 12 மணிக்கு நடராஜன் உடல் கண்டெடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

விஷ வண்டுகள் அழிப்பு

சிறுபாக்கம் :

                வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோர மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் தாக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

                     சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த புல்லூர் கைகாட்டி அருகில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் 60 அடி உயரரத்தில் தென்னை மரம் உள்ளது. இதில் விஷ வண்டுகள் கூடு கட்டி வழியில் செல்வோரை கொட்டி அச்சுறுத்தி வந்தது. நேற்று காலை இவ்வழியாக சென்ற சிறுநெசலூர் பழனியம்மாள், வள்ளியம்மாள், வெங்கடாசலம், சுரேஷ், பாண்டியன் உட்பட புல்லூர், சிறுநெசலூர் கிராமங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை விஷ வண்டுகள் கொட்டியது. இவர்கள் அனைவரும் கழுதூர் மற்றும் வேப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றனர். வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில், கணேசன், பாலகிருஷ்ணன், செந்தில்குமார் உள்ளிட் டோர் விரைந்து சென்று மயக்க மருந்து தெளித்து விஷ வண்டுகளை அழித்தனர்.

Read more »

கார் கவிழ்ந்தது: 4 பேர் தப்பினர்

கடலூர் :

              கடலூர் பெண்ணையாற்று பாலம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிர்தப்பினர்.

                 புதுச்சேரியை சேர்ந்தவர் மாதவன்(30). இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் தனது மனைவி நித்யா(23), உறவினர்கள் மணி(62), ஜமுனா(53) ஆகியோருடன் சிதம்பரம் கோவிலுக்கு சென்றுவிட்டு இரவு புதுச்சேரிக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தார். கடலூர் பெண்ணையாற்று பாலம் அருகே சென்றபோது, குறுக்கே ஒருவர் வரவே, அவர் மீது மோதாமல் இருக்க மாதவன் சடன் பிரேக் போட்டார். அதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Read more »

தரமின்றி சாலை அமைக்கும் பணி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்


ராமநத்தம் : 

                ராமநத்தம் அருகே தரமின்றி போடப்பட்ட சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
 
               மங்களூர் ஒன்றியம் மேலக்கல்பூண்டி- லட்சுமணபுரம் வரை உள்ள 5கி.மீ., சாலை நெடுஞ்சாலை துறை சார்பில் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த சாலையை முற்றிலுமாக பெயர்த்து எடுத்து பின்னர் பெரிய ஜல்லியை கொட்டி சமப்படுத்தி, அதன் மீது சிறிய ஜல்லி கொண்டு சாலை அமைக்க வேண்டும். ஆனால் தற்போது சாலை அமைக்கும் பணியை கான்ட் ராக்ட் எடுத்தவர், பழைய சாலையை பெயர்க்காமல் அதன் மீது பெரிய ஜல்லியை கொட்டி சாலை அமைத்துள்ளனர். இதற்கு ஊற்றிய தாரும் அதிக அளவில் மண்ணெண்ணெய் கலந்திருந்ததால், சாலை தரமின்றி அமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக வடகராம்பூண்டி, கொரக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைத்த சில வாரங்களிலேயே ஜல்லிகள் பெயர்ந்துள்ளன. 

                       இதேபோன்று கொ.குடிகாடு -லட்சுமணபுரம் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டு ஆவேசமடைந்த கொ.குடிகாடு கிராம மக்கள் ரங்கராயர் தலைமையில் திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், கான்ட்ராக்டரை சந்தித்து பழைய சாலையை பெயர்த்து முறையாக சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Read more »

ரோட்டில் கிடந்த அதிர்வெடியால் சிதம்பரம் அருகே திடீர் பரபரப்பு

கிள்ளை :

               சிதம்பரம் அருகே வெடிக்காமல் கிடந்த அதிர் வெடியால் பரபரப்பு ஏற்பட்டது.

                      சிதம்பரம் அடுத்த கிள்ளை சாலையில் மண்டபம் சுடுகாடு எதிரில் குடியிருப்பு நிறைந்த சாலை ஓரத்தில் அரை கிலோ எடையுள்ள நாட்டு அதிர் வெடி (சணலால் செய்யப் பட்டது) கிடந்தது. அதை பார்த்த அப்பகுதியினர் நாட்டு வெடிகுண்டாக இருக்குமோ என அச்சம் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி., மூவேந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அது அதிர் வெடி என்பதும், கடந்த 11ம் தேதி அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்ததற்காக நடந்த இறுதி ஊர்வலத்தில் வெடிக்காமல் தூக்கி வீசப்பட்ட வெடி என தெரியவந்தது.

Read more »

பண்ணையில் தீ விபத்து

கடலூர் :

                 கடலூர் செம்மண்டலத்தில்  உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கரும்பு ஆராயச்சி பண்ணையில் நடப்பட்டிருந்த சோதனை கரும்பு பயிர் நேற்று மதியம் 3.30 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தன. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 15 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior