உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

           விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் குழு அனுமதி அளித்துள்ளது.

              இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முன் அனுமதி ("லெட்டர் ஆப் இன்டன்ட்'-எல்.ஓ.ஐ.) தில்லியிலிருந்து திங்கள்கிழமை (ஜூலை 12) வந்துள்ளது. மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஒப்புதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) வந்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 எவ்வளவு இடங்கள் கிடைக்கும்? 

                 விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகள் தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படுகிறது. இதில், தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்; மீதமுள்ள 15 எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடாகும்.2008-ல் தொடங்கப்பட்ட தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

            எனவே, எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வில், தருமபுரி-விழுப்புரம்-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 255 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

முதல் கட்ட கலந்தாய்வின்போது...:

                  சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற்றது.முதல் கட்ட கலந்தாய்வின்போது அனைத்து 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட்டன. எனினும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பி.இ. கலந்தாய்வில், எம்.பி.பி.எஸ். படிப்பு அனுமதிக் கடிதத்தைக் கொடுத்து விட்டு பொறியியல் படிப்புகளில் சில மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சில காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், முதல் கட்ட கலந்தாய்வு நடந்தபோதே, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் விரைவில் நடைபெற உள்ள தருமபுரி-விழுப்புரம்-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வின்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

திருவள்ளூர் அருகே புதிய தனியார் மருத்துவக் கல்லூரி

               திருவள்ளூர் அருகே 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்கும் வகையில் புதிய தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே குன்னவலத்தில் டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

                           டி.டி. கல்வி அறக்கட்டளையின் கீழ், மொத்தம் ரூ.9.5 கோடிக்கு வங்கி உத்தரவாதத்துடன் இந்த அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் ஓராண்டுக்கு மட்டும் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை அனுமதி புதுப்பிக்கப்படும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்தக் கல்லூரியிலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.சென்னையில் விரைவில் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கலந்தாய்வில் இந்த இடங்கள் நிரப்பப்படும்.

Read more »

2013 - ல் ஆளில்லா விண்கலம் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்


 
         ஆளில்லா விண்கலம் 2013-ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
              விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் முதற்கட்டமாக ஆளில்லா விண்கலம் அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிததார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி15 ராக்கெட் 5 செயற்கைக்கோள்களுடன் திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 
 
அதன்பிறகு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் அலெக்ஸ், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் வீரராகவன், பி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குநர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கூறியது:
 
                   விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான முன்னோட்டமாக இந்த ஆளில்லா விண்கலம் 2013-ம் ஆண்டில் அனுப்பப்படும். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்படும் இந்த விண்கலம், பூமியை 7 நாள்களுக்குச் சுற்றி வரும். மனிதர்கள் விண்வெளியில் தங்குவதற்கு தேவையான சுற்றுப்புறச் சூழல், அவர்களைத் தாக்கும் கதிர்வீச்சு ஆகியவை குறித்து இந்த கலத்தின் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.முக்கியமாக, இந்த ஓடத்தை பூமியில் பத்திரமாக இறக்குவதற்கான தொழில்நுட்பம் பொருத்தப்படும். விண்வெளிக்கு மனிதன் எப்போது?விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, ஸ்ரீஹரிகோட்டாவில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் ரூ.1000 கோடியில் மேற்கொள்ளப்படும். விண்கலத்தை அனுப்புவதற்காக 3-வது ஏவுதளம் அமைத்தல், விண்வெளி வீரர்களை உருவாக்குவதற்கான பயிற்சி மையங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். 
 
                இவை அனைத்தும் உருவாக்கப்பட்ட பிறகு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு எந்தக் காலக்கெடுவையும் குறிப்பிட முடியாது.சந்திரயான்-2÷சந்திரயான் -2 விண்கலம் வரும் 2013-ம் ஆண்டு செலுத்தப்படும். நிலவில் பத்திரமாக தரையிறங்குவது, நிலவில் சுற்றி தகவல்களைச் சேகரிப்பது ஆகிய அம்சங்கள் இதில் மேம்படுத்தப்படும். செப்டம்பரில் அடுத்த ராக்கெட்டுகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஜி.எஸ்.எல்.வி. -எப்06 ராக்கெட்டும், பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்டும் ஏவப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் உடனடியாகத் தொடங்கும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஜிசாட் 5-பி என்ற நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
               பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் செலுத்தப்படும் ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கைக் கோள் விவசாயத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரிசோர்ஸ்சாட்-1 செயற்கைக்கோளுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இந்தச் செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.புனித தலங்களைப் படம் பிடிக்கிறது கார்ட்டோசாட்பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 பி செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை முதல் பூமியைச் சுற்றி படம் எடுக்கத் தொடங்கும்.அவ்வாறு பூமியைச் சுற்றும்போது வாராணசி, நாகபுரி, திருப்பதி, மதுரை உள்ளிட்ட புனித தலங்களைப் படம் பிடித்து அனுப்ப உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
                 சுமார் 630 கி.மீ. உயரத்திலிருந்து சக்திவாய்ந்த கேமரா மூலம் படம் எடுக்கப்படுவதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் கூட மிகத் துல்லியமாக தெரியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த கேமரா மூலம் ஒரே நேரத்தில் 10 கிலோ மீட்டர் பரப்பளவு வரை படம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைக் கொண்டாடும் வகையில் அதன் மாதிரியுடன் (இடமிருந்து) விஞ்ஞானி ராமகிருஷ்ணன், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத் தலைவர் பி.எஸ். வீரராகவன், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத் தலைவர் டி.கே. அலெக்ஸ், ஹைதராபாதில் உள்ள தேசிய தொலையுணர்வு மையத்தின் இயக்குநர் ஜெயராமன்.

Read more »

அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் வழிக் கல்வி: ராமதாஸ் வலியுறுத்தல்



 
 
         தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் வழியில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 
 இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  
 
                   தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ் வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதுபோல், இது ஒரு தன்னிகரில்லா திட்டம்.  எனினும், தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்துப் பாடப் பிரிவுகளையும் தமிழ் வழியில் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைத்துக் கல்லூரிகளுக்கும் கட்டாய நிபந்தனையாக்க வேண்டும்.  தமிழ் வழி வகுப்புகளில் மாணவர்கள் பெருமளவு சேருவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.  
 
               குறிப்பாக, மின் வாரியம், பொதுப்பணித் துறை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் வழியில் படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு முதல் வாய்ப்பு வழங்குவதுடன், அந்தத் திட்டத்தை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தை, அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரை காத்திராமல், உடனடியாக அவசரச் சட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Read more »

வேலூர் திருவள்ளுவர் பல்கலை.யின் 229 விடைத்தாள்கள் மாயம்

                 வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஒரு தனியார் கல்லூரியைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்களின் 229 விடைத் தாள்கள் காணாமல் போயிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

              திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 85 கலை அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றன. இதில், ஆர்க்காடு மஹாலட்சுமி கல்லூரியில் மே 13-ம் தேதி நடந்த தேர்வில் மொத்தம் 1,189 மாணவ- மாணவிகள் தேர்வெழுதினர். இவர்களது விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த, சம்பந்தப்பட்ட திருத்தும் மையங்களுக்கு மே 19-ம் தேதி அனுப்பப்பட்டன. 

                விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்த நிலையில், ஆர்க்காடு மஹாலட்சுமி கல்லூரியில் பிஏ.தமிழ், பிகாம், பிகாம் கம்பெனி செகரட்ரிஷிப், பிசிஏ தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்ட பாடங்களில் "விடுப்பு' எனக் குறிப்பிடப்பட்டிருந்து. மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் இவ்வாறு மதிப்பெண்கள் விடுபட்டிருப்பதை சரிபார்த்தபோது, மொத்தம் 229 மாணவர்களின் 229 விடைத்தாள்கள் காணமல் போயிருப்பது ஜூலை 10-ம் தேதி தெரியவந்தது. அண்மையில் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், இளநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை. 

 இதுகுறித்து பல்கலைக்கழக துணைப் பதிவாளர் ஆ. ஜோதிமுருகன் கூறியது: 

               விடைத்தாள்கள் தொலைந்துபோனது பற்றி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு ஒரு வாரத்துக்குள் தீர்வுகாணப்படும். மேலும், விடைத்தாள்கள் தொலைந்து போன 229 மாணவ- மாணவியர்களுக்கு விரைவில் மறு தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. போதிய நிரந்தர ஊழியர்கள் இல்லாததே இதுபோன்ற தவறுகள் நடக்கக் காரணம் எனத் தெரிகிறது. பல்கலைக்கழகத்தின் நிரந்தர ஊழியர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்றவர்கள் தாற்காலிக ஊழியர்களே. விடைத்தாள்கள் தொலைந்து போன 4 பிரிவுகளைத் தவிர, பிற இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) வெளியிடப்படும் என்றார் ஜோதிமுருகன். ஆனால், விடைத்தாள் காணாமல்போன ஆர்க்காடு மஹாலட்சுமி கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் பிசிஏ பாடப் பிரிவில் பல்கலைக்கழக அளவில் 9-வது இடத்தைப் பிடித்தனர். அதே பாடப் பிரிவில் தற்போது விடைத்தாள்கள் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

பெயர் மாற்​றங்​கள் கண்ட பண்ணுருட்டி


பண்ணுருட்டி என எழுதப்பட்டுள்ள சிட்டா புத்தகம்.
 
பண்ருட்டி:

            கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய நகரமாகும். இந்நகரம் ஆன்மிகம், கலை, விவசாயம், வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே கொண்டு இன்று வரை உலகளவில் தனக்கென தனி முத்திரை பெற்று சிறப்பு கொண்டுள்ளது.

              பண்ருட்டி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது பலாப்பழம். அடுத்து முந்திரி இதன் வரிசையில் காகிதம் மற்றும் மண்ணால் செய்யப்படும் கலை எழில் மிகுந்த பொம்மைகள். ஆன்மிக மணம் கமழும் திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர், ஸ்ரீ சரநாராயணப் பெருமாள், ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் கோயில்கள், திலகவதியார் மற்றும் அப்பர் சுவாமிகள் பிறந்த திருவாமூர் ஆகியவையும் பண்ருட்டிக்கு தனி பெருமையை அளித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய புகழ்களைக் கொண்ட பண்ருட்டியின் பெயர் பல்வேறு காலகட்டங்களில் மறுவி வந்தாலும் இப்பெயர்கள் வந்ததற்கான காரணங்கள் பல கூறப்படுகின்றன.

இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியது:

                 சங்க காலம் முதற்கொண்டு கடைக்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள்-விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலங்கள் வரை பண்ருட்டி என்கிற ஊர்ப்பெயர் எங்கும் எதிலும் காணப்படவில்லை. கி.பி.1500-க்கு பிறகு தமிழகத்தை அரசாண்ட நாயக்க மன்னர்களின் இறுதிக் காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். 

               வரலாற்றின்படி அதிராச மங்கலபுரம் என்ற தொன்மைப் பெயரை கொண்ட அதிகாபுரி பின்னர் அதிகை என பெயர் மாற்றம் கொண்டு திரு என்ற மங்கல சிறப்பு சொல்லை  இணைத்து திருஅதிகை என்றாகி தற்போது திருவதிகை என்று அழைக்கப்படுகிறது. என்றாலும் இன்றைய மக்கள் வழக்குச் சொல்லில் திருவிதி என மாறி வருகிறது. கிழக்கே திருவதிகை அணைக்கட்டு, மேற்கே புதுப்பேட்டை, தெற்கே காடாம்புலியூர், வடக்கே பஞ்சமாதேவி வரை நகர எல்லைகளாக கொண்டிருந்தது அதிராச மங்கலபுரம் என்கிற திருவதிகை மாநகரம். காலப்போக்கில் பிரிந்து புதிய பெயர்களைக் கொண்ட ஊர்களை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு தற்போது சின்னஞ்சிறிய ஊராகக் கரைந்து இளைத்து விட்டது திருவதிகை.

                என்றாலும் சங்ககால தொன்மைப் புகழையும், வரலாற்றுப் பெருமையையும் இன்னமும் இழந்துவிடவில்லை. இழக்கப்போவதுமில்லை. காரணம் சைவ சித்தாந்த ஆன்மிகச் சிறப்பைத் தாங்கி வரலாற்றுச் சின்னமாக உயர்ந்து நிற்கும் திருவதிகை ஸ்ரீ வீரட்டானமுடையார் திருக்கோயிலே ஆகும்.÷இத்தலம் முப்புரம் எரித்த புராணச் சிறப்பினை உடையது. இதையொட்டி சில ஊர் பெயர்கள் தோன்றியதாக புராணிகர்கள் கூறுவார்கள். சிவபெருமாள் திருபுரம் எரிக்க தேரில் வந்த போது தேரின் அச்சு முறிந்த (இறுத்த) இடம் அச்சிறுபாக்கம் என்றும், முப்புரம் எரிந்து சாம்பலான போது ஒரு இடம் மட்டும் வேகவில்லை. அதனால் அதற்கு வேகாக்கொல்லை என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்தி.÷புராணத்தின் அடிப்படையிலேயே அச்சு முறிந்த தேரை பாடலால் ஓட வைத்த இடம் பண்ணுருட்டி. அதாவது பண் என்பது பாடல், உருட்டி என்பது ராகம் என்ற பொருளில் பண் உருட்டி- பண்ணுருட்டி ஆனது என்று கூறுவர். 

                   ஒருசிலர் பண் உருட்டி பாடல்களைப் பாடும் பாணர் என்கிற மரபினர் வாழ்ந்த இடமாதலால் பண்ணுருட்டி என்று பெயர் பெற்றதாக கூறுவர். சிலர் மண்ணை உருட்டி பொம்மை செய்யும் தொழிலை செய்ததால் மண்ணுருட்டியே பண்ணுருட்டி ஆனது என்பர். ஆனால் இவையெல்லாம் சரியான ஆதாரங்கள் இல்லை என்பது சமீபகால ஆய்வில் நான் கண்டறிந்த உண்மையாகும். கி.பி.1500 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை அரசாண்ட நாயக்க மன்னர்களின் இறுதிக் காலங்களில்தான் பாளைய ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினர். பாளைய ஆட்சி முறை என்பது நகராட்சி ஆணையர், தலைவர் போன்ற பதவி அதிகாரத்தை உடையதாகும். நிர்வாக மேம்பாடு மற்றும் வரிவசூல் போன்றவற்றை பாளையக்காரர்களே செய்து வந்தனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட பாளையங்களே பண்ருட்டியை சுற்றியுள்ள கொண்டாரெட்டிப் பாளையம், லிங்காரெட்டிப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம், பக்கிரிப்பாளையம், அரிசிக்கவுண்டன்பாளையம் போன்ற ஊர்களாகும். 

                 இதைபோலவே பண்டாரெட்டிப்பாளையம் பிரிக்கப்பட்டது. இதுவே பண்டாரெட்டி என மறுவி வந்து பண்ணுருட்டி ஆகி தற்போது பண்ருட்டி என அழைக்கப்படுகிறது. இந்தப் பாளையங்கள் வீரப்பாண்டிய கட்டபொம்மன் காலம் வரை அதாவது ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கியது வரை செயல்பட்டுக் கொண்டிருந்தன என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.

இது குறித்து பண்ருட்டி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வத்திடம் கூறியது

                 பண்ருட்டி என்ற பெயர் வந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவை அனைத்தும்  செவிவழி வந்த செய்திகள். இருந்தாலும் பண்டாரெட்டி என்பவரது எஸ்டேட்தான் பண்ருட்டி என பெயர் மாற்றம் பெற்று இருக்கலாம் என தெரியவருகிறது என கூறினார். என்றாலும் மறுவிவிட்ட ஊர்ப்பெயரை இனிமேல் மாற்ற முடியாது. எனவே பண்ருட்டி என்பதை விட பண்ணுருட்டி எனக் கூறப்படுவதே சாலப் பொருத்தமாகும். சில ஆண்டுகளுக்கு முன்புவரைக் கூட பண்ணுருட்டி எனத்தான் வருவாய் துறையினர் அடங்கள், ஏ ரிஜிஸ்டர்களில் எழுதி வந்துள்ளனர். இன்னமும் பண்ணுருட்டி நகராட்சி பண்ணுருட்டி எனத்தான் பயன்படுத்தி வருகிறது. இதேபோல் அனைத்து தரப்பினரும் ஆதரவளித்து ஊரின் பெயர் இனி மறுவாமல் இருக்க பண்ணுருட்டி என படிக்கவும், எழுதவும் வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் விரும்புகின்றனர். பண்ணுருட்டி என நடைமுறைக்கு வருவது சாத்தியமாகுமா?

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களில் செடிகள் அகற்றம்

சிதம்பரம் : 

            சிதம்பரம் நடராஜர் கோவிலில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன. 

             கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள், கம்பீர தோற்றத்துடன் சிற்ப கலை நுட்பத்துடன் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனால் கோபுரங்கள், முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டதால், அதிக அளவில் செடிகள் வளர்ந்தன. செடிகள் அகற்றப்படாமல் நீடித்தால் கோபுரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஸ்ரீரங்க ராஜகோபுரத்தில் விரிசல், காளஹஸ்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவை இங்கு ஏற்பட்டு விடக்கூடாது என எச்சரித்து, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனையொட்டி உடனடியாக நான்கு கோபுரங்களிலும் உள்ள செடிகள் அகற்றப்பட்டது. தற்போது கோபுரம், "பளிச்' என காட்சியளிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுனாமி நிகழ்ந்து 6 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் கட்டித்தரவில்லை எனப் புகார்

கடலூர்:

                சுனாமிப் பேரழிவு நிகழ்ந்து 6 ஆண்டுகள் ஆகியும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை என்று கடலூரில் புகார் எழுந்துள்ளது.

கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 100 பேர், அண்மையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனு:

                 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் ஏணிக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். வீடுகள் சேதம் அடைந்தன. அப்போது அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடுகள் வழங்கினர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை.

                 இதுகுறித்து பலமுறை பல அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. மீனவர்கள் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு ஏணிக்காரன் தோட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. அதிகாரிகள் எங்களைப் புறக்கணிக்கிறார்கள். விரைவில் எங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்காவிட்டால், அரசு அளித்த ரேஷன் கார்டுகள், கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சுனாமி மருத்துவ அட்டை, மின் அட்டை, வீட்டுப் பத்திரங்கள், ஆகியவற்றை அரசிடம் திருப்பிக் கொடுப்போம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலையும் புறக்கணிப்போம். வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி  தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Read more »

கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்காலை ரூ.200 கோடி செலவில் சீரமைக்க திட்டம்

சிதம்பரம்:

              கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடிகால் மற்றும் பாசன வாய்க்காலான வடக்கு ராஜன் வாய்க்காலை ரூ.200 கோடி செலவில் இருபுறம் கரைகளை பலப்படுத்தி, ஆழப்படுத்தி சாய்வு தள கான்கிரீட் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

               சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் செல்லும் வடக்கு ராஜன் வாய்க்காலில் 43 கி.மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் சாய்வு தள காங்கிரீட் அமைத்து கரையை பலப்படுத்தி, ஆழப்படுத்த மத்திய அரசு திட்டத்தின் நிதி ரூ.200 கோடி கோரப்பட்டுள்ளது. அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில தலைமைப் பொறியாளர்கள் பங்கேற்ற நீர்பாசன புணரமைப்பு கூட்டத்தில் தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் புணரமைப்புத் திட்டத்துக்காக ரூ.1500 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் வடக்கு ராஜன் வாய்க்காலை புனரமைக்க ரூ.200 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது காவிரி டெல்டா பாசன திட்ட தொழில்நுட்ப இயக்குநர் மோகன கிருஷ்ணன் தலைமையிலான குழு இத்திட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் 26,335 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வெள்ளப்பெருக்கும் ஏற்படாது என எஸ்.செல்வராஜ் தெரிவித்தார். அப்போது பாசிமுத்தான்ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் உடனிருந்தார்.

Read more »

சிதம்பரம் அடுத்த கிள்ளை சுற்றுப் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: படிப்பு பாதிப்பு


கிள்ளை: 

             சிதம்பரம் அடுத்த கிள்ளை சுற்றுப் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் பள்ளி திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

             சிதம்பரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட கிள்ளை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் தேவையான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் சமச்சீர் கல்வி குறித்து மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தரம் உயர்த் தப்பட்ட நடுநிலைப் பள் ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக தொடக்க நிலையில் இருந்து 6ம் வகுப்பிற்கு சென்றுள்ள மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி குறித்த பாடம் நடத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

                    தற்போது எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் மூன்று ஆசிரியர்களும், கிள்ளை பட்டினவர் நடுநிலைப் பள்ளியில் மூன்று, பொன்னந்திட்டு நடுநிலைப் பள்ளியில் நான்கு , முடசல்ஓடை நடுநிலைப் பள்ளியில் இரண்டு , தில்லைவிடங்கன் நடுநிலைப் பள்ளியில் ஒன்று மற்றும் புஞ்சைமகத்து வாழ்க்கை நடுநிலைப்பள்ளி இரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதை எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை. கோடை விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகள் திறந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையில் பாடங்கள் நடத்தப்படாமல் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு பிடிக்க கூண்டு

கடலூர்: 
 
             கலெக்டர் அலுவல வளாகத்தில் பாம்பு பிடிப் பதற்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 
 
                 கடலூரில் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் பாம்பு புகுந்ததால் அங்கு வேலை செய்தவர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து கலெக் டர் அலுவலகத்தில் இருந்து சாரை பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம் சந்த், பாம்புகளை பிடிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இரும்பு கம்பிகளினாலான கூண்டு வைத்தார். மேலும் பாம்புகளை வரவழைப்பதற்காக உயிருடன் எலியும் கூண்டில் வைக்கப்பட்டுள்ளது.

Read more »

வாக்காளர் திருத்தப்பட்டியல் சிறப்பு முகாமில் குளறுபடி: எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு

பண்ருட்டி: 

             தி.மு.க., நிர்வாகிகளுக்கு மட்டும் சேர்த்தல், நீக்கம் படிவங்கள் அதிகமாக வழங்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு முகாமில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.சி.சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.சி.சம்பத் கூறியதாவது: 

                புதிய வாக்காளர் சேர்ப் பது குறித்து கடந்த 10, 11 ஆகிய இரு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கான படிவம் 6 கிடைக்காமல் பல வாக் காளர்கள் படிவம் 6ஐ ஜெராக்ஸ் மூலம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.வாக்காளர் படிவம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் பலர் தங் களது பெயர்களை சேர்க்க முடியாமல் போனதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம். ஜெராக்ஸ் படிவத்தை பூர்த்தி செய்தவர்களின் பெயர்களை வாக் காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தனி நபருக்கு மட்டும் படிவம் வழங்குவதாக கூறி ஆளும் தி.மு.க., நிர்வாகிகளுக்கு மட்டும் சேர்த்தல், நீக்கம் குறித்த படிவங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் ஜனநாயக முறைப்படி அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க மீண்டும் சிறப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.சி.சம்பத் கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் பாதுகாப்பு பணி

கடலூர்: 

              ஸ்டேட் பாங்க் பணிக்கு முன்னாள் படை வீரர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது குறித்து முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் ஜைத் தூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

              ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியாவில் செக்யூரிட்டி முதன்மை அலுவலர் பணிக்கு தகுதியுள்ள முன் னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


Read more »

பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராம விவசாயிகளுக்கு ஐசோபார்ம் எண்ணெய்வித்து திட்ட பயிற்சி

திட்டக்குடி: 

             பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராம விவசாயிகளுக்கு நல்லூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் ஐசோபார்ம் எண்ணெய்வித்து திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. 

             நிறைவு நாள் முகாமிற்கு வேளாண் உதவி இயக்குநர் அப்பன்ராஜ் தலைமை தாங்கினார். வக்கீல் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் கதிரவன் வரவேற்றார். இதில் அசோஸ் பைரில்லம், பாஸ்போ - பாக்டீரியா, சூடோமோனாஸ் விதை நேர்த்தி, கோனோ வீடர்க ளை எடுக்கும் கருவி குறித்து கருத்து கண்காட்சியும், செயல்விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டது. துணை வேளாண் அலுவலர் பரமசிவம் விளக்கமளித்து பேசினார். துவக்க நாளில் கடலூர் தொழில்நுட்ப அலுவலர் சாலமன் பயிற்சியளித்தார். முகாமில் பாசன சங்கத் தலைவர் ஆறுமுகம், விவசாய கூட்டு பொறுப்புக் குழு தலைவர் கோவிந்தசாமி, முன்னோடி விவசாயி அருள், அனிதா உட்பட 50 விவசாயிகள் பங்கேற்றனர்.

Read more »

கடலூரில் அடிப்படை வசதி கேட்டு குறவர்கள் கலெக்டரிடம் மனு

கடலூர்: 

           அடிப்படை வசதி கேட்டு குறவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

இது குறித்து திருமாணிக்குழியில் வசிக்கும் குறவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

            கடலூர் அடுத்த திருமாணிக்குழி ஊராட்சி ஆர்.ஆர்., நகரில் காசா தொண்டு நிறுவனம் சார்பில் 28 குடியிருப்புகள் குறவர்களுக்கு கட்டித் தரப்பட்டு, அங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றோம். இங்கு கடந்த ஒன்னரை ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மின் விளக்கு வசதியும் இல்லை. இதனால் குடிநீர் கிடைக்காமலும், இரவு நேரங்களில் குடியிருப்புகள் இருளில் மூழ்கிவிடுவதாலும் வசிப்பதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றோம். எனவே எங்களின் நலன் கருதி இங்கு உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

இலவச மனைப்பட்டா கேட்டு சிதம்பரம் ஆர்.டி.ஓ., விடம் மனு

கிள்ளை:

           சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் ஊராட்சி புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு இவலச மனைப்பட்டா கேட்டு ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.

இது குறித்து மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, ஊராட்சி தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள மனு:

              சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் ஊராட்சி மேலச்சாவடியில் இருந்து கீழச்சாவடி பங்களா களத்துமேடு வரை 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சாலையோரம் குடிசை கட்டி கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் தற்போது குடிசைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது சாலையோரத்தில் குடிசையில் வசித்து வருபவர்கள் குழந்தைகள், பெண்களுடன் சொந்த இடமின்றி தவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் இலவச மனைப் பட்டா வழங்குவதுடன், அதுவரை தற்போது குடியிருக்கும் இடத்தில் வசிக்க ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் கிராமத்தில் வரும்முன் காப் போம் திட்டதின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

                 ஊராட்சி தலைவர் தங்கம் நந்தகோபால் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி முன்னிலை வகித்தார். முகாமில் ஸ்கேன், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. 987 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 22 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். ஒன்றிய கவுன்சிலர் ஆசைவள்ளி, ஊராட்சி துணைத் தலைவர் குப்புசாமி, முருகன், டாக்டர் ரவிச்சந்தின், சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், சுகாதார ஆய்வாளர் தாமோதரன், தேவசேனா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Read more »

பாலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

கடலூர்: 

                 பாலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. 

                       ஜூனியர் சேம்பர் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் டாக்டர் கணபதி, கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் புஷ்பராஜ் வரவேற்றார். ரெட் கிராஸ் மாவட்ட கவுரவத் தலைவர் பாலசுப்ரமணியன் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்களை வழங்கினார். பின்னர் உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் நடந்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்சாய் கிருஷ்ணன் பரிசு வழங்கினார். விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜசேகர், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாபு தானேஸ்வரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சாருமதி நன்றி கூறினார்.

Read more »

Job mela for differently-abled

CUDDALORE: 

           An exclusive job mela for the differently-abled persons will be held in the Collectorate complex here on July 24, according to P. Seetharaman, District Collector. In a statement here, the Collector said that the Welfare Department for the Differently Abled and the S.C.M. Garments, Avinashi (Tirupur), would recruit people with disabilities such as deaf and dumb, and, those who are disabled in one leg.

Read more »

Narikoravas seek basic amenities

CUDDALORE: 

           The Narikoravas on Monday made representations to District Collector P. Seetharam seeking basic amenities in their colony at Thirumanikuzhi near here.

          According to Anjalai (47), a spokesperson for the nomads, there are about 30 families, with over 100 members, living in the area. The dwelling units were built for them by a non-governmental organisation when the permanent houses for the tsunami-affected people were constructed. She further said that the colony lacked electricity connections and water supply. The groundwater available there was muddy and full of iron content. The consumption of such water over a period of time would certainly cause health hazards. She noted that the entire colony was covered with bushy areas that were infested with poisonous snakes. There were many occasions on which children suffered snake bites. Therefore, the Narikoravas also requested the Collector to clean up the area to make their life safe.

Read more »

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குள் பிரச்னை அதிகாரிகள் நேரில் விசாரணை

பரங்கிப்பேட்டை: 

            பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு பிரிவு மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

            பரங்கிப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நிரந்தர தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதாலும் மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த வாரம் 10ம் வகுப்பு மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

           அவர்களுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரைச் சேர்ந்த மாணவர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். மற்றொரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே பிரச்னை உருவானது. இந்நிலையில் நேற்று இந்த பிரச்னை காரணமாக மாணவர்கள் மீண்டும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளியில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி., மூவேந்தன் மற்றும் போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆர்.டி. ஓ., ராமராஜ், முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி ஆகியோர் நேரில் சென்று இரு தரப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அதனையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளிக் கட்டட பிரச்னை 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புதல்

ஸ்ரீமுஷ்ணம்: 

              அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை தருவதாக கூறியதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.

             ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர் நிலைப்பள்ளி கட்டடம் கட்ட மலைமேடு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத் தில் கடந்த ஏப்ரல் மாதம் இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் தவறுதலாக மனைப் பட்டா வழங்கப்பட்டது. இதனால் இந்த இடத்தில் குடியிருந்து வந்த 6 பேருக்கு மாற்று இடம் தருவது குறித்து தினமலரில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து கடந்த வாரம் தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாற்று இடம் தர முடிவு செய்யப்பட்டது. ஆனால் வீட்டை பிரித்து வேறு இடத்தில் கட்டுவதற்கு குடியிருப்பவர்கள் இழப்பீட்டுத் தொகை கேட்டதால் பணிகள் துவங்க தாமதமானது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி, தி.மு.க., நகர செயலாளர் தங்க ஆனந் தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குடியிருப்பவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் வீடுகளை பிரித்து கட்டுவதற்கு தனது சொந்த பொறுப்பில் செய்து தருவதாக தங்க ஆனந்தன் மற்றும் செல்வி ஆகியோர் உறுதியளித்தனர். இதன் பின்னர் குடியிருப்பவர்கள் வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் மாற்று இடம் கொடுப்பதற்கு மலைமேடு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்யும் பணி துவங்கியது.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத்தில் இரவில் கருங்கல் ஜல்லி அள்ளிய லாரி, புல்டோசர் சிறைபிடிப்பு

ஸ்ரீமுஷ்ணம்: 

           இரவில் கருங்கல் ஜல்லி அள்ளிய டிப்பர் லாரி மற்றும் புல்டோசரை பொதுமக்கள் சிறை பிடித்தனர். 

             ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத் திற்குச் செல்லும் சாலையில் 47.65 லட்சம் செலவில் சாலை போடும் பணி நடக்கிறது. தற்போது கருங்கல் ஜல்லி அமைத்து கிராவல் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாலையின் ஓரத்தில் கொட்டியிருந்த கருங்கல் ஜல்லியை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த குணமங்கலம் கிராம பொதுமக்கள் விரைந்து சென்று ஜல்லி அள்ளிய டிப்பர் லாரி மற்றும் புல்டோசரை வெளியே எடுத்து செல்லாமல் சிறைபிடித்து குணமங்கலம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். 

               இதனை தொடர்ந்து நேற்று காலை சாலை ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன், ரமேஷ், சவுந்திரபாண்டியன், வெற்றிவேல், பார்த்தசாரதி, சீனுவாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டிப்பர்களில் அள்ளிய ஜல்லியை மீண்டும் கொண்டு வந்து கொட்டிய பின்னர் சாலை பணிகளை துவங்குவது என ஒப்புக் கொண்டதன் பேரில் பொதுமக்கள் டிப்பர் லாரியையும், புல்டோசரையும் விடுவித்தனர்.

Read more »

சிதம்பரம் அடுத்த புஞ்சைமகத்துவாழ்க்கையில் மக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்

கிள்ளை: 

              சிதம்பரம் அடுத்த புஞ்சைமகத்துவாழ்க்கையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

               சிதம்பரம் அடுத்த புஞ்சைமகத்து வாழ்க்கை தாமரைக்குளம் அருகில் சாலையோரத்தில் உள்ள பனை மரம் மற்றும் மூங்கில் மரத்தில் இரு இடங்களில் விஷ வண்டு கூடுகள் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விஷ வண்டுகள் விரட்டுவதால் அச்சத்துடன் செல் கின்றனர். அத்துடன் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நடுநிலைப்பள்ளி உள்ளதால் இடைவேளை மற்றும் மதிய உணவு வேளையில் மாணவர்களை வெளியில் அனுப்ப முடியாமல் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாணவர்களின் நலனை உணர்ந்து விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கடலூர்: 

             கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 

             கடலூரில் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் குடிநீர், சாலை, முதியோர் உதவித் தொகை, பட்டா கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 335 பேர் மனுக்கள் கொடுத்தனர். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 14 பேருக்கு இலவச மனைப்பட்டா, பிற்பட்டோர் நலத்துறை சார்பில் இருவருக்கு தையல் இயந்திரம், பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 12 பேருக்கு கண் கண்ணாடி, வருவாய் துறை சார்பில் மூவருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவுகளை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior