உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 25, 2010

அஞ்சல் துறையில் 615 காலியிடங்களுக்கு அக்.14-ல் தேர்வு

              அஞ்சல் துறையில் உள்ள 615 காலியிடங்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.  தமிழக அஞ்சல் வட்டாரத்தில், அஞ்சல் உதவியாளர், கடிதங்களை பிரிக்கும் உதவியாளர் ஆகிய பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடியாக ஆள்தேர்வு செய்யப்படவுள்ளது.
 
இது குறித்து தமிழக வட்டத்தின் தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
              விண்ணப்பங்கள், தகவல் கையேடு மற்றும் காலியிட விவரங்கள் ஆகிவவை தமிழக அஞ்சல் வட்டாரத்துக்குட்பட்ட அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இதன் விலை ரூ. 25 ஆகும்.  ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கப்படும் பணியிடத்தின் பெயரை அதற்கான விண்ணப்பம் அடங்கிய அஞ்சல் உறை மீது தெளிவாகக் குறிப்பிட வேண்டும். 

            அஞ்சல் துறையின் இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவம், தகவல் கையேடு மற்றும் காலி பணியிட விவர அட்டவணை ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை எந்த அஞ்சல் அலுவலகத்தில் யூ.சி.ஆர். முறையில் செலுத்தலாம். கட்டணத்துக்கு தரப்படும் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.   இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, யூ.சி.ஆர். ரசீது இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் முன்னாள் ராணுவத்தினர் இணையதளத்தில் உள்ள தனி விண்ணப்பப்படிவத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 
                    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் அக்டோபர் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். மற்ற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அது தொடர்பான எந்த கடித போக்குவரத்தும் ஏற்கப்படமாட்டாது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுனாமியில் தாய், தந்தை இழந்த 8 பேருக்கு தலா ரூ.51 ஆயிரம்

டலூர்:
 
         சுனாமியில் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குள்பட்ட 8 பேருக்கு, தலா ரூ.51 ஆயிரம் வீதம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.

           பாரதப் பிரதமரின் தேசிய குழந்தைகள் நலஉதவித் திட்டத்தில் இத் தொகை வழங்கப்பட்டது. திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இத் தொகை குழந்தைகள் பெயரில் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு, பாதுகாவலரையும் நியமனம் செய்து, வட்டித் தொகையில் இருந்து, 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்புத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

                மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 61 நபர்களுக்கு ஆட்சியர் வழங்கினார். மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 305 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

என்.எல்.சி. புதிய ஊதிய விகித ஒப்பந்தம் நாளை கையெழுத்து

நெய்வேலி:

              என்எல்சி தொழிலாளர்களுக்கான புதிய ஊதியமாற்று வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இதுநாள் வரை புதிய ஊதிய விகிதம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகை கிடைக்காமல் தொழிலாளர்கள் விரக்திக்கு ஆளாகியுள்ளனர்.

              இந்நிலையில் வியாழக்கிழமை, மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் புதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் கிடைக்கும் என்ற ஆவலில் தொழிலாளர்கள் உள்ளனர். என்எல்சி தொழிலாளர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய விகித அடிப்படையில் ஊதியம் வழங்கவேண்டும் என்று நிறுவனத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

                  இதையடுத்து நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கத்தினருடன் நிர்வாகம் பலசுற்று பேச்சு நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து ஜூன் 31 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜூலை 5-ல் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

                             இருப்பினும், தொழிலாளர்களுக்கான பதவி உயர்வு, இறந்தோரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு, டெக்னிக்கல் சொசைட்டி குறித்து நிர்வாகத்தினருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சு நடத்திவந்தனர். இதனிடையே புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு 2 மாதமாகியும் இதுவரை புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் சம்பளமும், நிலுவைத்தொகையும் கிடைக்காததால் தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். செப்டம்பர் மாதத்திலாவது புதிய சம்பளம் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுதொடர்பாக பாமக தொழிற்சங்கத் தலைவர் பெருமாள் கூறுகையில், 

                       ""திங்கள்கிழமை நிறுவன நிர்வாகத்துறை இயக்குநர் தேர்வு நடைபெற்றதால் நிறுவனத் தலைவர் வெளியூர் செல்ல நேரிட்டது. புதன்கிழமை மண்டல தொழிலாளர் நல ஆணையர் வெளியூர் செல்வதால், வியாழக்கிழமை சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புகிறோம். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்பட்டால் செப்டம்பர் 2-ம் தேதி நிலுவைத்தொகையும், புதிய ஊதியமும் கிடைக்கும்'' என்றார் பெருமாள்.

Read more »

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மழை நீடிப்பு: கடல் அலை அரிப்பால் மீனவர் கட்டிடம் சேதம்


கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. வங்ககடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடித்தது.

               கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல்வேறு இடங்களிலும் நேற்று பகலில் மழை பெய்தது. நெய்வேலி, கடலூர் ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, விருத்தாசலத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கி இன்று அதிகாலைவரை விட்டு, விட்டு மழை தூறியது. கடல் கொந்தளிப்பு காரணமாக கடலூர் மீனவர்களில் பெரும்பாலானோர் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.

                     விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, மரக்காணம், வானூர், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. திருக்கோவிலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மழை தூறியது இன்று காலையிலும் மழை நீடித்தது. கடல் சீற்றம் காரணமாக சின்ன முதலியார் சாவடி, பெரிய முதலியார் சாவடி, பொம்மையார்பாளையம், கோட்டக்குப்பம் பகுதி மீனவர்கள் 4-வது நாளாக இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.  சின்ன முதலியார் சாவடி பகுதியில் ஆர்ப்பரித்த கடல் அலை அரிப்பால் கரையோரத்தில் கட்டப் பட்டிருந்த மீனவர்கள் வலை பின்னும் கட்டிடம் சேதமடைந்தது.

Read more »

கோவிலை தோண்டிய போது புதையல்: தொழிலாளி பதுக்கிய 19 தங்க காசுகள் மீட்பு

கடலூர்:

               கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குழி கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

                 இப்பணியை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீகாஞ்சி கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவரிடம் ஸ்ரீகாஞ்சி கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது55), சஞ்சீவி, ராமு ஆகிய 3 தொழிலாளிகள் ஈடுபட்டு இருந்தனர். திடீரென அவர்கள் வேலைக்கு வரவில்லை. மேலும் அவர்கள் ஆடம்பரமாக உலா வருவது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காண்டிராக்டர் துரை முனுசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

                  அப்போது கோவில் சுவரை இடித்தபோது தங்க காசு புதையல் கிடைத்ததாகவும், மொத்தம் 46 தங்க காசுகள் இருந்தது என்றும் அதனை 3 பேரும் பிரித்து கொண்டதாகவும் கூறினார். கோவிலில் கிடைத்த தங்க காசு புதையல் முழுவதையும் தன்னிடம் தரவேண்டும் என்று முனுசாமியை காண்டிராக்டர் மிரட்டினார்.

                      இதனால் பயந்துபோன முனுசாமி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை கூறினார். ஆனால் போலீசார் முனுசாமி மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதி அவரது புகாரை முதலில் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர் முனுசாமி தன்னிடம் இருந்த 4 தங்க காசுகளை போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து தங்க காசுகளை பரிசோதித்து பார்த்தனர்.

                  அப்போது அவை அனைத்தும் சுத்த தங்கம் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த தங்க காசுகள் 1620-ம் ஆண்டு மன்னர் காலத்து தங்க காசுகள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் முனுசாமி மேலும் 15 தங்க காசுகளை தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முனுசாமியுடன் காஞ்சிபுரத்துக்கு சென்று அவரது வீட்டில் இருந்த 15 தங்க காசுகளையும் மீட்டனர்.
 
                  நேற்று இரவு அந்த 19 தங்க காசுகளும் திருக்கோவிலூர் உதவி கலெக்டர் பிருந்தாவிடம் போலீசார் ஒப்படைக்கப்பட்டது. தங்க காசுகளுடன் தலைமறைவாகி உள்ள மற்ற தொழிலாளர்களான சஞ்சீவி, ராமு ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்

Read more »

விளக்கப்பாடியில் அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சிதம்பரம் சாலையில் மறியல்

விருத்தாசலம் : 

                 விளக்கப்பாடி கிராம மக்கள் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

                 விருத்தாசலம் கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் இருந்து முகந்திரையான்குப்பம் கிராமத்திற்கு இணைப்பு சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் விளக்கப்பாடி காலனி சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும். இந்த சாலை பல ஆண்டுகளாக செப்பனிடப்படாததால் தற் போது சேரும் சகதியுமாக மாறி நடந்து செல்லவே முடியாத நிலையில் உள்ளது.

                 இச்சாலையை செப்பனிட்டு புதிய சாலை அமைக்கவும், கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரக்கோரியும் அக்கிராம மக்கள் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் நேற்று காலை 11 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால், துணை பி.டி.ஓ., குணசேகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், அதிகாரிகள் வந்து சாலையை பார்வையிட வேண்டும் என கேட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

                    இதனைத் தொடர்ந்து ஊருக்குள் செல்ல முயன்ற துணை பி.டி.ஓ., காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகள் எங்கள் ஊருக்கு வரவேண்டாம், எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் கலெக்டரை சந்தித்து குறைகளை கூறிக் கொள்கிறோம் என தெரிவித்து 11.35 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் 35 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

கடலூர் மத்திய சிறையில் கைதிகள் மோதல்

கடலூர் :  

               கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக் குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

               புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (24). கடலூர் அடுத்த மேல் பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாரூக் (27). இருவரும் வெவ்வேறு திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் மத் திய சிறையில காவலில் உள்ளனர். நேற்று முன்தினம் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளை அவரவர் வார்டுகளை சுத்தம் செய்யுமாறு சிறைக் காவலர்கள் கூறினர்.

                     வார்டை சுத்தம் செய்த போது சதீஷ் மற்றும் பாரூக் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ் அறையில் இருந்த மாத்திரை பிளாஸ்டிக் அட்டையைக் கொண்டு பாரூக்கை தாக்கினர். அதில் அவர் படுகாயமடைந்தார். சிறைக் காவலர்கள் விரைந்து வந்து பாரூக்கை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சிறை அலுவலர் வேணுகோபால் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior