உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 29, 2010

3 ஆண்டுகளாகக் கட்டப்படும் கடலூர் நகராட்சி எரிவாயு தகன மேடை


கடலூர் மஞ்சக்குப்பத்தில் கட்டப்படும் எரிவாயு தகனமேடை.
 
கடலூர்:
 
              கடலூரில் 2 எரிவாயு தகன மேடைகள், கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகின்றன. கடலூரில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு ஆகியவற்றின் கரைகளில் சடலங்கள் புதைக்கவும் எரிக்கவும் செய்யப்படுகின்றன. சடலங்கள் எரிக்கப்படும்போது நகருக்குள் பெருமளவுக்கு துர்நாற்றம் அடிக்கும் நிலையும் உள்ளது. 
                 
             இதனால் நகருக்குள் காற்று மாசுபடுவதாகக் கூறப்படுகிறது.எனவே கடலூர் மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை ஆகிய இரு இடங்களில் தலா  50 லட்சம் செலவில், எரிவாயு தகன மேடைகள் அமைக்கும் பணி, 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவற்றில் மஞ்சக்குப்பம் எரிவாயு தகனமேடைக்கான பணிகள் மட்டுமே பெரும்பாலும் நிறைவு அடைந்துள்ளது. எரிவாயு தகன மேடைகளை தனியார் அறக்கட்டளை மூலமாகத்தான் நிர்வகிக்க வேண்டும் என்று, நகராட்சிகளின் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 
 
             இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையின்பேரில், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன் தலைமையில் அறக்கட்டளை ஒன்று 4 மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளையில் நகராட்சித் தலைவர் மற்றும் ஆணையர், மக்கள் பிரதிநிதிகள் பலரும் உறுப்பினர்களாக உள்ளனர்.அறக்கட்டளைக்கு இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கணக்குத் தொடங்கி  10 ஆயிரம் நிதியும் செலுத்தி உள்ளனர். 
 
              இந்நிலையில் நகராட்சி, 2 மாதங்களுக்கு முன் இதே பணிக்காக மற்றொரு வங்கியில் கணக்கு தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் சிலரிடம் நன்கொடைத் தொகையும் வசூலித்து, அந்தக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு தொடங்கியது பற்றி நகராட்சி நிர்வாகம், தங்களுக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அறக்கட்டளைத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்தார். எனவே இப்பணியில் நாங்கள் அக்கறை கொள்ள மாட்டோம் என்று, நகராட்சிக்குக் கடிதம் கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 
 
அறக்கட்டளைத் தலைவர் ரங்கநாதன் மேலும் கூறியது: 
 
                              கடலூரில் 2 எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றில் விறகைக் கொண்டு டீசலைச் சூடாக்கி, அதில் இருந்து கிடைக்கும் வாயுவை எரித்து, சடலங்கள் தகனம் செய்யப்படும். மஞ்சக்குப்பம் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி மட்டும் பெரும்பாலும் முடிந்துள்ளது. அதிலும் சில வேலைகள் பாக்கி உள்ளன.
 
                ஒரு எரிவாயு தகன மேடை, முறையாகச் செயல்பட மாதம்  35 ஆயிரம் நிதி வேண்டும். மேலும் ஒரு சடலத்துக்கு  2,500 கட்டணம் வசூலிக்க வேண்டும். பராமரிப்புப் பணிகளுக்காக அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஆனால் எங்களுடன் ஆலோசிக்காமல், நகராட்சியே வங்கிக் கணக்கைத் தொடங்கி இருப்பது எங்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டது என்றார்.
 
இதுகுறித்து நகராட்சி ஆணையர் டி.குமார் கூறியது , 
 
                             ""எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. சென்னையில் இருந்து பொறியாளர் ஒருவர் வந்து, இயந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காகத்தான் காத்து இருக்கிறோம். மற்ற பணிகள் எல்லாம் முடிந்து விட்டன. மஞ்சக்குப்பம் எரிவாயு தகன மேடை விரைவில் செயல்படத் தொடங்கும்'' என்றார்.

Read more »

பூகம்பத்தை தாங்கும் கட்டுமானம்: என்எல்சி சாதனை


பிளாக்குகளை பயன்படுத்தி சோதனை முறையில் கட்டப்பட்டுள்ள கட்டடம்.
 
நெய்வேலி:
 
                  பூகம்பத்தின் போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் கட்டுமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது என்எல்சி நிறுவனத்தின் ஆயத்தப் பொருள் உற்பத்திப் பிரிவு.
 
                 என்எல்சி நிறுவனத்தின் கட்டுமானத் துறையின் கீழ் செயல்படும் இத்துறை, என்எல்சி குடியிருப்பு, அலுவலகங்களுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்றவைகளை மரத்துக்கு மாற்றாக கான்கிரீட்டில் உற்பத்தி செய்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது.இங்கு பல பொருள்கள் மரத்துக்கு மாற்றாக பயன்படுத்துவதுதால் கோடிக்கணக்கான மதிப்புள்ள மரங்கள் வெட்டுப்படுவது தடுக்கப்படுகிறது. 
 
                 மேலும் நிறுவனத்தின் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பலைப் பயன்படுத்தி உலர் சாம்பல் செங்கல், மின்கம்பம், குப்பைத் தொட்டி உள்ளிட்டப் பொருள்களை தயாரித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பணியையும் ஓசையின்றி செய்துவருகிறது. இந்நிலையில் என்எல்சியின் ஆயத்தப் பொருள் உற்பத்திப் பிரிவும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகமும் இணைந்து இண்டர் லாக்கிங் கட்டுமானம் என்ற புதிய முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. 
 
                  இந்த முறையில் இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பிளாக்குகளைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பொருந்திக்கொள்ளும் வகையில் கட்டுமானம் செய்யப்படுகிறது. இவற்றைப் பொருத்த சிமெண்ட் கலவை பயன்படுத்தப்படுவதில்லை.வழக்கமான கட்டுமானத்தில் செங்கற்கள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கி இடையில் சிமென்ட், மணல் கலவை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த புதிய வகைக் கட்டுமான பிளாக்குகளின் சிறப்பான வடிவத்தால் ஒன்றுடன் ஒன்று உடனடியாக கச்சிதமாகப் பொருந்திக் கொள்கின்றன. 
 
                  இப்புதிய முறையில் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தை வேறு இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். பிளாக்குகளை சேதமின்றி பிரித்து திரும்பவும் பயன்படுத்த முடியும். வழக்கமான கட்டுமானங்களுடன் ஒப்பிடும்போது இப்புதிய முறையில் கட்டப்படும் கட்டுமானங்கள் அதிக எடையைத் தாங்கும் திறன், பூகம்பத்தால் ஏற்படும் அதிர்வைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும். மழைக் காலத்தில் கூட கட்டுமானத்தை தொடர்ந்து செய்யலாம். கொத்தனார்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இல்லாமல் கூட கட்டுமானப் பணியைச் செய்யலாம். 
 
                  இந்த முறையிலான கட்டுமானத்தில் 19 முதல் 24 சதவீத கட்டுமானச் செலவு குறைவதுடன், 65 சதவீத கட்டுமான காலத்தையும் குறைக்க முடியும்.இப்புதிய முறையில் சோதனை அடிப்படையில நெய்வேலியில் ஒரு சிறிய கட்டடமும், ஒரு சுற்றுச்சுவரும் கட்டுப்பட்டுள்ளன என்று என்எல்சி கட்டுமானத் துறையின் பொதுமேலாளர் சங்கரன் கூறினார்.
 
                        மேலும் கட்டுமான செலவைக் குறைக்கவும், மின்வசதி மற்றம் தண்ணீர் வசதிக்கு தேவையான குழாய்களை சுவர்களினுள் பதிப்பது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன என்றார் சங்கரன்.

Read more »

ஓட்டை உடைசல் பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள்

பண்ருட்டி:

                    அரசு பஸ்கள் நடுவழியில் பழுதடைந்து நிற்பதும், அதில் பயணம் செய்வோர்  அவதி அடைவதும் தொடர்கதையாகி வருகிறது.

                    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுமக்களின் வசதிக்காக நகரப் பகுதியில் நகர பஸ்களும், நீண்டதூர பயணத்துக்கென விரைவு பஸ்களையும் இயக்குகிறது. டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏர் பஸ், சூப்பர் ஃபாஸ்ட், எக்ஸ்பிரஸ் என பல்வேறு பெயர்களில் பஸ்களை இயக்கி வசதிக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கிறது.÷இவை வெவ்வேறு பெயர்களில் இயக்கப்பட்டாலும் சேவையில் வித்தியாசமில்லை என்றும் அனைத்து பஸ்களுமே பராமரிப்பின்றி இயக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

                 இந்நிலையில் சென்னை-கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வழித் தடத்தில் இயங்கும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த பஸ்கள் எந்த நிலையில் இருந்தாலும் பயணிகள் வேறுவழியின்றி அவசரத்துக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

                      நீண்டதூர அரசு விரைவு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்துள்ளதால் மழைக்காலத்தில் சாரல் அடிப்பதாலும், மழைநீர் உள்ளே ஒழுகுவதாலும் பயணிகள் பெரும் பாதிப்படைகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. நீண்ட தூரம் இயக்கக்கூடிய பெரும்பாலான பஸ்களில் ஸ்டெப்னி, ஜாக்கி உள்ளிட்டவை இல்லை. இதனால் டயர் பஞ்சராகி பஸ் நடுவழியில் நின்றால், டயரை மாற்றி பயணத்தை தொடர முடியாத நிலை உள்ளது.

                      உதாரணமாக, சனிக்கிழமை சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வந்துகொண்டிருந்த விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக விரைவு பஸ், பண்ருட்டி அருகே டயர் பஞ்சர் ஆனதால் பண்ருட்டி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோரை பணிமனையில் இறக்கி விட்டதால் அவர்கள் மாற்று வண்டியில் ஏறிச்செல்ல பணிமனையில் இருந்து மூட்டை முடிச்சுகளுடனும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடனும் தேசிய நெடுஞ்சாலைக்கு நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டியதாயிற்று. அங்கு வந்த பிறகும் அவர்கள் மாற்று வண்டிக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். அவசரமாக செல்ல வேண்டிய பலர் அவ்வழியே வந்த டவுன்பஸ்ஸில் ஏறிச் சென்றனர்.

தள்ளுவண்டி...

              கடந்த இருவாரங்களுக்கு முன் கடலூரில் இருந்து வேலூர் செல்லும் அரசு விரைவு பஸ் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே பழுதாகி நின்றது. இதில் வந்த பயணிகளே பஸ்சை  தள்ளி பஸ்நிலையம் அருகே ஓரம்கட்டிவிட்டு வேறு வண்டியில் சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற பஸ் பஞ்சராகி நான்குமுனை சந்திப்பில் நின்றது. இந்த வண்டியில் ஸ்டெப்னி, ஜாக்கி இல்லாததால் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அதே இடத்தில் நின்றது.

                       ""விரைவு பஸ் என்ற பெயரில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்துக் கழகம் நாங்கள் பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திலும், எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் சென்றுசேரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை'' என்பதே பெரும்பாலான பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. அரசுப் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் இதனை சிந்தித்து உருப்படியான நடவடிக்கை எடுத்தால் சரி.

Read more »

மனசாட்சி இல்லாத நகராட்சி; குமுறும் கடலூர்வாசிகள்

கடலூர்:
 
                பாதாள சாக்கடைத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களால், கடலூர் மக்கள் வெறுப்படைந்து சங்கடங்களின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
 
              கடலூரில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் மட்டும், சுமார் 70 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சிதைக்கப்படும் சாலைகளை சீரமைக்க 20 கோடிக்கு மேல் செலவாகிறது. எனவே கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டச் செலவு 100 கோடியை நெருங்கி விட்டது. சாலைகளைச் சீரமைக்க பணம் இல்லை என்று கை விரிக்கிறது நகராட்சி நிர்வாகம். அரசு 15 கோடி தந்தால் சமாளித்து விடுவோம் என்று தெரிவிக்கிறது. பாழ்பட்டுக் கிடக்கும் சாலைகள், அதனால் சிரமப்படும் மக்களைப்பற்றி அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
 
              சாலைகள் மிக மோசமாக இருக்கிறது என்று மக்கள் புகார் செய்தால், நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஓடோடி வந்து பார்வையிடுவதில் எப்போதும் குறை வைப்பது இல்லை. ஆனால் அவரது உத்தரவுகளை நகராட்சி அலுவலர்களும் ஊழியர்களும் முறையாகச் செயல்படுத்துவது இல்லை. நகராட்சித் தலைவரின் உத்தரவு ஒன்றும், அலுவலர்கள்,  ஊழியர்களின் செயல்பாடு மற்றொன்றுமாக இருப்பதாகக் கடலூர் மக்கள் வருத்தப்படுகிறார்கள்.
 
                 பாதாளச் சாக்கடைக்காக அமைக்கப்பட்ட ஆள் இறங்கு குழிகளில், மூடிகள் உடைந்து நொறுங்கியும், மூடிகளே இல்லாமலும், இருக்கும் முடிகள் சரியாக மூடப்படாமல் கிடப்பதும் இங்கே சர்வ சாதாரணமான காட்சிகள். ஆட்சியர் முதல் சாதாரண அரசு ஊழியர்கள் வரை, அமைச்சர் முதல் நகராட்சி கவுன்சிலர்கள் வரை, திட்டத்தை நிறைவேற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்கள் அனைவரும், கடலூர் நகர வீதிகளில்தான் செல்கிறார்கள். ஆனால் யாரும் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.   
 
                 தோண்டப்படும் பகுதியில் எந்த அறிவிப்புப் பலகைகளும் வைப்பதில்லை. நீதிபதிகள் குடியிருப்புச் சாலையில், பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழியில், திங்கள்கிழமை இரவு தனியார் நிறுவனப் பொறியாளர் மணி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார். பலத்த காயங்களுடன் அவர் இச்சம்பவத்தில் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இத்தகைய சம்பவங்களுக்கு கடலூரில் எப்போதும் குறைவில்லை.
 
                இத்தகைய சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற, சட்டம் இருந்தாலொழிய, அரசிடம் மாத ஊதியம் பெறுவோருக்கு மனச்சாட்சியும் பேசப் போவதில்லை, மனநிலையில் மாற்றமும் ஏற்படப் போவதுமில்லை என்கிறார்கள் விவரம் அறிந்த கடலூர் பொதுமக்கள். 
 
இதுகுறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 
 
                   பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் இடங்களில் பிரதிபலிப்பான்கள், தடுப்புக் கட்டைகள், அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்ற விதி, கடலூரில் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. புதுப்பாளையம் பிரதான சாலை போன்ற நெடுஞ்சாலைகளைத் தோண்டும் போது, மாற்றுச்சாலை ஒன்றை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
 
                    எனவே பொறியாளர் மணி விபத்துக்கு உள்ளானதற்கு, பாதாள சாக்கடைத் திட்ட காண்ட்ராக்டர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்தான் பொறுப்பு. அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும். மும்பையில் சாலை விபத்தில் ஒருவர் இறந்ததற்கு, மாநகராட்சி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. அதேபோல் கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் குற்றவியல் வழக்கு தொடர சட்டத்தில் இடம் இருக்கிறது என்றார் மருதவாணன்.

Read more »

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தொடர் முழக்க போராட்டம்

சிதம்பரம்:

               சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

                   மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்றார், பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், கடலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் இரா.சிலம்புச்செல்வி, நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள், பால்ஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வ.அன்பழகன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகட்டும் திட்டத்துக்கு 19 கோடி செங்கல் வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, 19 கோடி செங்கற்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

                கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்கான வீடுகளுக்கு செங்கல் வழங்குவது குறித்து, செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசியது: 

               கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் நடப்பு ஆண்டில் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் 19 கோடி செங்கற்கள் தேவை. இவற்றைத் தங்கு தடையின்றி வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் செங்கல் உற்பத்தியாளர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

           அவ்வாறு உற்பத்தி செய்யும் செங்கற்களில் ஓயயப என்று முத்திரை பதிக்க வேண்டும். நிலக்கரி சாம்பல் மூலம் சிமெண்ட் கற்கள் தயாரிப்பதற்கு, காதி கிராம தொழில் வாரியத்தில், மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 95 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செங்கல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு, குழுக்களுக்கு தலா 4 லட்சம் வீதம் 3.60 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 

                வீடுகள் கட்டும் பணியில் கம்பி கட்டும் தொழிலை மேற்கொள்ள 80 சுயஉதவிக் குழுக்களுக்கு, தலா 4 லட்சம் வீதம் 3.20 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்குத் தேவையான செங்கல் வழங்கப்படும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior