உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

ஆசிய கோப்பை கிரிக்கெட்: கோப்பை வென்றது இந்தியா





தம்புலா: 

                 ஆசிய கோப்பையை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கையை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தினேஷ் கார்த்திக் அசத்தல் அரைசதம் மற்றும் நெஹ்ராவின் மிரட்டல் பந்துவீச்சு, இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
 
                  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் சுற்றில் சொதப்பிய பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேறின. நேற்று தம்புலாவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 

மீண்டும் நெஹ்ரா:
 
                 இந்திய அணியில் டிண்டா, ஓஜா நீக்கப்பட்டு, நெஹ்ரா, ஹர்பஜன் இடம் பெற்றனர். இலங்கை தரப்பில் முரளிதரன், மலிங்கா, குலசேகரா மீண்டும் அணிக்கு திரும்பினர். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
 
காம்பிர் "100':
 
                    இந்திய அணிக்கு காம்பிர், தினேஷ் கார்த்திக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். தனது 100வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய காம்பிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குலசேகரா வீசிய 2வது ஓவரில் இரு முறை கண்டம் தப்பினார். முதலில் கண்டம்பி "கேட்ச்சை' கோட்டை விட்டார். அடுத்த பந்தில் சங்ககரா கை நழுவியது. இதனை பயன்படுத்திக் கொள்ளாத காம்பிர்(15) பரிதாபமாக ரன் அவுட்டானார்.

கார்த்திக் அதிரடி:
 
               அடுத்து வந்த விராத் கோஹ்லி "கம்பெனி' கொடுக்க, தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடினார். மகரூப் வீசிய 8வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். பின் மாத்யூஸ் வீசிய 14வது ஓவரிலும் 3 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் நிதானமாக ஆடிய கோஹ்லி(28), மலிங்கா வேகத்தில் வீழ்ந்தார். இந்த நேரத்தில் அரைசதம் கடந்த கார்த்திக்(66), கண்டம்பி பந்தில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது. 

தோனி "சிக்சர்':
 
               மகரூப் பந்தில் ஒரு இமாலய சிக்சர், முரளிதரன் பந்தில் ஒரு பவுண்டரி பறக்க விட்ட தோனி அதிக நேரம் நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கண்டம்பி பந்தில் குலசேகராவின் சூப்பர் "கேட்ச்சில்' 38 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மலிங்கா "யார்க்கரில்' ரெய்னா(28) நடையை கட்டினார். 

மந்தமான ஆட்டம்:
 
               கடைசி கட்டத்தில் ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா சேர்ந்து மந்தமாக ஆடினர். இவர்கள் "பவர் பிளே' ஓவரில் ஒன்று, இரண்டு ரன்களாக எடுக்க, எதிர்பார்த்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. குலசேகரா வேகத்தில் ரோகித் சர்மா(41) அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(25), ஹர்பஜன்(7) அவுட்டாகாமல் இருந்தனர்.

திணறல் துவக்கம்:
 
              சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணி எடுத்த எடுப்பிலேயே திணறியது. பிரவீண் வீசிய முதல் ஓவரில் தில்ஷன் "டக்' அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய இந்திய "வேகங்கள்' அடுத்தடுத்து விக்கெட் வேட்டை நடத்தினர். ஜாகிர் பந்தில் தரங்கா(16) காலியானார்.
 
நெஹ்ரா அசத்தல்:
 
                இதற்கு பின் நெஹ்ரா போட்டுத் தாக்கினார். போட்டியின் 14வது ஓவரில் ஜெயவர்தனா(11), மாத்யூசை(0) வெளியேற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். தனது அடுத்த ஓவரில் சங்ககராவை(17) அவுட்டாக்கிய இவர், இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டார். அப்போது 15.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் கண்டம்பி, கபுகேதரா இணைந்து போராடினர். கண்டம்பி(31) ரன் அவுட்டானார். இறுதியில் இலங்கை அணி 44.4 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. அரைசதம் கடந்து ஆறுதல் அளித்த கபுகேதரா(55) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய நெஹ்ரா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் போர்டு


இந்தியா

காம்பிர்-ரன் அவுட்-(தரங்கா/குலசேகரா)    15(16)
கார்த்திக்(கே)ஜெயவர்தனா(ப)கண்டம்பி    66(84)
கோஹ்லி(கே)சங்ககரா(ப)மலிங்கா    28(34)
தோனி(கே)குலசேகரா(ப)கண்டம்பி    38(50)
ரோகித்(கே)மகரூப்(ப)குலசேகரா    41(52)
ரெய்னா எல்.பி.டபிள்யு.,(ப)மலிங்கா    29(31)
ஜடேஜா-அவுட் இல்லை-    25(27)
ஹர்பஜன்-அவுட் இல்லை-    7(7)
 
உதிரிகள்    19

மொத்தம்(50 ஓவரில் 6 விக்.,)    268

விக்கெட் வீழ்ச்சி: 

1-38(காம்பிர்), 
2-100(கோஹ்லி), 
3-146(கார்த்திக்), 
4-167(தோனி), 
5-217(ரெய்னா),
6-249(ரோகித்).
 
பந்துவீச்சு: 

குலசேகரா 9-0-44-1, 
மலிங்கா 10-0-57-2, 
மகரூப் 6-0-41-0,
மாத்யூஸ் 3-1-16-0,
முரளிதரன் 10-0-34-0, 
கண்டம்பி 7-0-37-2,
தில்ஷன் 5-0-30-0.

இலங்கை

தரங்கா(ப)ஜாகிர்    16(30)
தில்ஷன்(கே)ஹர்பஜன்(ப)பிரவீண்    0(2)
சங்ககரா(கே)ஜாகிர்(ப)நெஹ்ரா    17(38)
ஜெயவர்தனா(கே)தோனி(ப)நெஹ்ரா    11(19)
மாத்யூஸ்(கே)தோனி(ப)நெஹ்ரா    0(2)
கண்டம்பி--ரன் அவுட்(ரெய்னா/ஜடேஜா)    31(45)
கபுகேதரா-அவுட் இல்லை-    55(88)
மகரூப்(கே)தோனி(ப)ஜாகிர்    10(14)
குலசேகரா(ஸ்டம்டு)தோனி(ப)ஜடேஜா    20(16)
மலிங்கா(கே)ஜடேஜா(ப)நெஹ்ரா    7(11)
முரளிதரன்(கே)தோனி(ப)ஜடேஜா    2(5)
 
உதிரிகள்    18
 
மொத்தம் (44.4 ஓவரில் ஆல் அவுட்)    187
 
விக்கெட் வீழ்ச்சி: 

1-5(தில்ஷன்), 
2-31(தரங்கா), 
3-50(ஜெயவர்தனா), 
4-50(மாத்யூஸ்), 
5-51(சங்ககரா). 
6-104(கண்டம்பி), 
7-132(மகரூப்), 
8-168(குலசேகரா),
9-177(மலிங்கா),
10-187(முரளிதரன்).
 
பந்துவீச்சு: 

பிரவீண் 9-1-29-1, 
ஜாகிர் 8-2-36-2, 
நெஹ்ரா 9-0-40-4, 
ஹர்பஜன் 9-0-40-0, 
கோஹ்லி 3-0-16-0, 
ஜடேஜா 6.4-0-29-2


ஐந்தாவது முறை

                   ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கடைசியாக 1995ல் கோப்பை வென்றது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இம்முறை சாதித்துள்ள்ளது. இதன் மூலம் 5வது முறையாக(1984, 88, 90-91, 95, 2010) கோப்பை கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணியின் "ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் கனவு தகர்ந்தது.

பீல்டிங் சொதப்பல்

             இலங்கை அணியின் பீல்டிங் நேற்று மோசமாக இருந்தது.கேப்டன் சங்ககரா, கண்டம்பி உள்ளிட்டோர் சுலப "கேட்ச்' வாய்ப்புகளை வீணாக்கினார். களத்தில் மகரூப் மந்தமாக செயல்பட, அவர் கண் முன்பாகவே இரண்டு முறை பந்து, பவுண்டரியை கடந்து பறந்தது. இதே போல பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. கடந்த போட்டியில் "ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய மகரூப், இம்முறை ரன்களை வாரி வழங்கியதை காண முடிந்தது. பேட்டிங்கும் படுமட்டமாக இருந்தது.

Read more »

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. கலந்தாய்வுக்கான பணிகள் விறுவிறுப்பு

               பி.இ. கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களுக்கான மாணவர் உதவி மையம், கலந்தாய்வு மையம் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் வகையில் சுமார் 15 வங்கிகள் தங்களது கவுன்ட்டர்களை அமைக்க உள்ளன.
                  முதல்கட்ட பி.இ. கவுன்சலிங் ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது.   பி.இ. படிப்பில் சேருவதற்கு 1.67 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே பி.இ. கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் விளக்க அரங்கம், மாணவர் உதவி மையம், கலந்தாய்வு மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு போதிய கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதி, கேன்டீன் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து பி.இ. மாணவர் சேர்க்கைக்கான செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ் கூறியது:
               பி.இ. கலந்தாய்வுக்கான போதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், கவுன்சலிங் விவரத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்க அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இங்கு 5 புரஜக்டர்கள் மூலம் கவுன்சலிங் விவரங்கள் உடனுக்குடன் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.கலந்தாய்வு மையத்தில் இந்த முறை 50 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு 40 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டன. முதல்கட்ட கலந்தாய்வில் நாளொன்றுக்கு 3,000 மாணவர்கள் வரை அழைக்கப்படுவர். இந்த எண்ணிக்கை, இரண்டாம் கட்ட கலந்தாய்வின்போது 6,000 பேராக அதிகரிக்கப்படும். கலந்தாய்வின்போது சான்றிதழ்களை சரிபார்க்க மட்டும் 25 கவுன்ட்டர்கள் அமைக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே வங்கி வரைவோலை எடுக்க போதிய வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினர் ரூ.5,000-க்கும், எஸ்.சி. எஸ்.சி.(ஏ), எஸ்.டி. மாணவர்கள் ரூ.1,000-க்கும் வங்கி வரவோலை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு எளிதாக கடனுதவி கிடைக்கும் வகையில், கல்விக் கடன் வழங்குவதற்காக சுமார் 15 வங்கிகள் தங்களது கவுன்ட்டர்களை அமைக்க உள்ளன. 
              அன்னிய நபர்களை அடையாளம் காணும் வகையில் அனுபவமிக்க 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், கலந்தாய்வு மையத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி நடைபெறும் என்றார் உத்தரியராஜ்.* முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* கலந்தாய்வு மையத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரிடம் எந்தக் கல்லூரி சிறந்தது என்று கேட்கக் கூடாது. ஏனெனில் கம்ப்யூட்டரை இயக்க மட்டுமே அவருக்கு அனுபவம் உண்டு. அவருக்கு திருநெல்வேலியிலோ அல்லது கோவையிலோ உள்ள முக்கிய கல்லூரிகள் பற்றி தெரியவாய்ப்பில்லை. எனவே கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரிடம் எந்த அறிவுரையும் கேட்கக்கூடாது.
* கலந்தாய்வுக்கு வரும் மாணவருடன் ஒருவர் மட்டுமே வரலாம். ஆசிரியர்கள் உள்ளிட்டவரை அழைத்து வருதல் கூடாது.
* பல்கலைக்கழக வளாகத்தில், எந்தக் கல்லூரியும் தங்களது கல்லூரி தொடர்பான துண்டுபிரசுரங்களை மாணவர்களிடம் விநியோகித்து விளம்பரம் செய்யக்கூடாது என பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

Read more »

கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஒரே நாளில் 259 கட்டுரைகள் சமர்ப்பிப்பு

              கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வியாழக்கிழமை ஒரே நாளில் 259 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.மாநாட்டின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை காலை, முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கத் தொடக்க விழா நடைபெற்றது. இதையடுத்து நண்பகல் 12 மணி முதல் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 22 அரங்குகளில் ஆய்வரங்கங்கள் தொடங்கின.

                   இதில் மாலை 6 மணி வரை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட 259 பேர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துப் பேசினர். இந்த ஆய்வரங்க அமர்வுகளுக்கு அஸ்கோ பர்ப்போலா, கிரிகோரி ஜேம்ஸ், தியோடர் பாஸ்கரன், மயில்சாமி அண்ணாதுரை, சிலம்பொலி செல்லப்பன், நீதியரசர் மோகன், கிறிஸ்டியானா முரு, ரவிக்குமார் எம்.எல்.ஏ., உல்ரிக் நிக்லாஸ், ஆ.சிவதாணுப்பிள்ளை, எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் தலைமையேற்று நடத்தினர்.

Read more »

செல்பேசியில் பொறியியல் பாடங்கள்: தேவையானதை தேர்வு செய்து பார்க்கலாம்; கேட்கலாம்

 
              பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்களில் பல மணி நேரம் பயணம் செய்யும்போது செல்பேசியில் தேவையான பொறியியல் பாடங்களை தேர்வு செய்து, பார்க்கவும், கேட்கவும் கூடிய புதிய திட்டத்தை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தயார் செய்து வருகிறது.மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய இந்தத் திட்டம் 2011-ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
                  சென்னை தரமணியில் உள்ளது தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம். பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பாடத்திட்டம் வரைதல், மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முறைகள், மாணவர்களின் திறனாய்வு மதிப்பீடு செய்யும் முறை ஆகியவற்றையும் வடிவமைத்து வருகிறது. நிறுவனத்தின் வல்லுநர்கள் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியின்போது மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்தவேண்டும், குறிப்பிட்ட பிரிவுகளில் என்னென்ன நவீன வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் கற்றுத்தரப்படும்.இந்த பயிற்சிகளை வீடியோவாக பதிவு செய்தும், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், பாலிடெக்னிக்குகளுக்கும் இந்த நிறுவனம் அளித்து வருகிறது. வெர்ட்சுவல் என்.ஐ.டி.டி.டி.ஆர்.: இந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆன்-லைன் பயிற்சி மற்றும் வகுப்புகளை நடத்தக்கூடிய புதிய திட்டத்தை, தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இப்போது உருவாக்கி வருகிறது. ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் "சி-டாக்' நிறுவனம் வடிவமைத்து வருகிறது.
 
இதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ச. மோகன் கூறியது: 
 
                 ஆசிரியர்களுக்கான திறன் உயர்த்தும் பயிற்சிகளை, அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இலவசமாக அளித்து வருகிறோம். தனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். மிகுந்த பயனுள்ள இந்த பயிற்சி தங்களுடைய ஆசிரியர்களுக்கு அளிக்க, தனியார் கல்லூரிகள் அதிக அளவில் முன்வருவதில்லை. இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி சென்றடைவது தடைபடுகிறது.இதைப் போக்கும் வகையில் நிறுவனத்தின் பயிற்சிகள் மற்றும் வீடியோ வகுப்புகளை ஆன்-லைனில் கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்ட பாடங்கள் மற்றும் செய்முறை வகுப்புகளை மாணவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும் என்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி இடம்பெற்றிருக்கும். மேலும், கடினமான பாடங்களை தேர்வு செய்து, அதை சிறந்த ஆசிரியர் மூலம் நடத்தி வீடியோவில் பதிவு செய்யப்படும். இதுவும் ஆன்-லைனில் இணைக்கப்படும். இதன் மூலம், ஆசிரியர்களும், வகுப்புகளைத் தவற விடும் மாணவர்களும் தங்களுக்குத் தேவையான பாடங்களை இணைய தளம் மூலம் இலவசமாக பார்த்து பயனடைய முடியும். இந்தத் திட்டம் 2010 டிசம்பரில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
 
செல்பேசியில்... 
 
                       ஆன்-லைன் பயிற்சி திட்டம் நிறைவு பெற்றவுடன், அடுத்த கட்டமாக அந்த பயிற்சிகளையும், வீடியோ வகுப்புகளையும் செல்பேசியில் பார்க்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. செயற்கைக்கோள் மூலம் செயல்படக்கூடிய இந்தத் திட்டத்தை 2011-ல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்கள், வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்ல தினமும் 4 மணி நேரத்துக்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த பயண நேரத்தை மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இணையதள வசதியுடைய செல்பேசி வைத்திருப்பவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். ஒரு முறை பதிவு செய்துவிட்டு, எப்.எம். ரேடியோவில் நிலையங்களை தேர்வு செய்வதுபோல், தேவையான பாடங்களை தேர்வு செய்து பார்க்கவும், வீடியோ வகுப்புகளை கவனிக்கவும் முடியும். வகுப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பஸ்ஸிலுள்ள மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையிலும் பாடங்களை கேட்க முடியும் என்றார்.

Read more »

பி.எஸ்ஸி (நர்சிங்) ரேங்க் பட்டியல் எப்போது?



            பி.எஸ்ஸி (நர்சிங்), பி.ஃபார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பி.எஸ்ஸி (நர்சிங்), பி.ஃபார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்துள்ளனர். ரேங்க் பட்டியல் ஜூன் 25-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூன் 25) அல்லது சனிக்கிழமை (ஜூன் 26) ரேங்க் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி முதல்கட்ட கவுன்சிலிங் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Read more »

சமச்சீர் கல்வி முறை குறித்த கருத்தாய்வுக் கூட்டம்

சிதம்பரம்:

             குமராட்சி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிதம்பரம் வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6,7,8 ஆசிரியர்களுக்கான சமச்சீர் கல்வி முறை குறித்த கருத்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

                  கூட்டத்துக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பி.சிவக்குமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசரஸ்வதி, துணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டைட்டஸ் இஸ்ரேல், ஆசிரியப் பயிற்றுநர்கள் உமா, ஜமுனா உள்ளிட்டோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.மணவாள ராமானுஜம், திட்ட அலுவலர் சம்பத் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் நிறை, குறைகளை கேட்டு ஆய்வு செய்தனர். ஆசிரியை ஜி.சுந்தரி நன்றி கூறினார்.

Read more »

மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம்:
 
               சிதம்பரத்தை அடுத்த ஒரத்தூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவ, மாணவியர்களின் மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பேரணியில் தலைமைஆசிரியர் பாலசுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.சர்க்கரை, பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பின்னர் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் கொசுக்கடியினால் ஏற்படும் நோய்கள் குறித்தும், கொசுக்கடியிலிருந்த பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்தும் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.சுமித்ரா,விளக்கமளித்தார்.

Read more »

ஊராட்சிகளில் வீட்டுமனைப் பிரிவு விதிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெறுதலுக்கான விதிமுறைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

கடலூர் மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                   தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டட விதிகள் 1997 பிரிவு 3 ன்படி, வீட்டு மனைப் பிரிவு அனுமதி, நகர ஊரமைப்புத் துறையில் தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்ட பின்னர், கிராம ஊராட்சியில் அனுமதி பெறப்பட வேண்டும்.  கூட்டு உள்ளூர் திட்டப்பணி மற்றும் புறநகர் வளர்ச்சித் திட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், 5 ஏக்கர் பரப்பு வரை மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க, சம்பந்தப்பட்ட உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.  ஏனைய அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும், 5 ஏக்கர் பரப்பு வரை, சம்பந்தப்பட்ட மண்டல இயக்குநருக்கு மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப அனுமதி மற்றும்  ஊராட்சி அனுமதி இன்றி அமைக்கப்படும் மனைப் பிரிவுகளில் கட்டப்டும் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட மாட்டாது.  அனுமதியின்றிக் கட்டடம் கட்டப்படும் மனைப் பிரிவுகளில் அடிப்படை வசதிகள் ஊராட்சிகள் மூலம் செய்துதர இயலாது. ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்படும் அரசுக் கட்டடங்கள் தவிர மற்ற எந்த பொதுக் கட்டடங்களையும், மற்றும் அடுக்குமாடிக் கட்டடங்களையும் கட்ட, நகர ஊரமைப்புத் திட்ட இணை இயக்குநர் அல்லது துணை இயக்குநரிடம் தொழில்நுட்ப ஆலோசனை பெற்று, பின்னர் ஊராட்சியில் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

AIADMK flays “poor upkeep” of hospital

CUDDALORE:

             All India Anna Dravida Munnetra Kazhagam cadre, led by S. Semmalai, staged a demonstration at the Vadalur bus stand near here on Thursday, criticising “the poor upkeep” of the Kurinjipadi Government Hospital and lack of basic amenities in Kurinjipadi and Vadalur.

            The protestors alleged that the Government Hospital at Kurinjipadi did not have adequate healthcare facilities and patients were forced to go elsewhere for treatment of even common ailments. For want of medicines, dog and snake bite victims had to be referred to far away hospitals. This posed hardships to farmers, weavers and the general public. The protestors also said that the health sector was dogged with the problem of fake medicines, thereby, threatening the well-being of patients. The local bodies at Kurinjipadi and Vadalur were adopting discriminatory attitude to AIADMK councillors by not sanctioning adequate funds to their wards, the protestors alleged.

Read more »

தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

சிதம்பரம், : 

            தமிழகத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் செம்மொழி மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு வேலையில்லா தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

                     தமிழகத்தில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதன் மூலம் உலகத்தில் உள்ள அனை வருக் கும் தமிழகத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ் நாட்டில் தமிழை முதன்மை பாடமாக கொண்டு படித்து கூடுதலாக பி.எட்., பட்டமும் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான பட்டாதாரிகள் வேலை இல்லாமல் 45 வயதை கடந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்காமல் இடை நிலை ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் அவலம் தொடர்கிறது. 

                    அத்துடன் தமிழில் பட்டம் பெற்றவர்கள் தலைமை ஆசிரியராக இருந்தாலும் அவரை தமிழாசிரியராக கருதி வேறு ஆசிரியரை நியமிக்காமல் விட்டு விடுகின்றனர். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் மொழி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதால் சில இடங்களில் எதிர்ப்புகள் உருவாகி வருவதை அறிய முடிகிறது. உலக மக்களை தமிழ் நாட்டுப்பக்கம் திசை திருப்ப வைத்த முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப மாநாட்டில் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு


கிள்ளை : 

                உலக தமிழ்ச்செம் மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிச்சாவரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

                    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலகப்புகழ் பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் அரிய வகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன. இந்த மூலிகைத் தாவரங்களின் காற்றை சுவாசிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து இயற்கையை ரசித்தும், மூலிகை காற்றில் இளைப்பாறியும் வருகின்றனர். பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த விடுமுறையின் போது இருமுறை சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பயணிகள் கூட்டம் குறைந்தது. தற்போது உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Read more »

அரசு ஐ.டி.ஐ., மேம்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர், : 

                பொது மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை மேம்படுத்த தொழில் நிறுவனங்கள், தனியாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
             இத்திட்டத்தில் மத்திய அரசு முதல் பங்குதாரராகவும், மாநில அரசு 2வது பங்குதாரராகவும், தொழில் நிறுவனங்கள், தனியார் 3வது பங்குதாரராகவும் அமைத்து செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு 2.5 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

               இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2010-11ம் நிதியாண்டில் திருச்சி மண்டலத்திலுள்ள கீழ்க்காணும் 4 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளன.

                      திருக்குவளை, ஆண்டிமடம், பெரம்பலூர், புள்ளம்பாடி ஐ.டி.ஐ.,க்கள் பொது நிறுவனங்களில் தனியாரின் பங்கினை வளர்க்கும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

                    விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்காணும் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று 30ம் தேதியன்றோ, அதற்கு முன்போ ஆணையர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஆயத்தூர் சாலை, கிண்டி, சென்னை-32 என்ற முவகரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read more »

சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.1 லட்சத்தில் குடிநீர் இயந்திரம்

சிதம்பரம் : 

              சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் நகராட்சியில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது. சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்கம், மான்மல் - மன்னிபால் நினைவாக கியானா பேங்கர்ஸ் மற்றும் மாவட்ட சேவை நிதி மூலம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது. 

                       சிதம்பரம் கீழவீதி வரி வசூல் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் கமல்கிஷார் ஜெயின் தலைமை தாங்கினார். கியானா பேங்கர்ஸ் உரிமையாளர் மதன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆளுனர் ரத்தினசபாபதி புதிய குடிநீர் இயந்திரத்தை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சேர்மன் பவுஜியா பேகம், சேர்மன் (பொறுப்பு) மாரியப்பன், அரிமா சங்க மன் றத் தலைவர் துரைசாமி, வட்டாரத் தலைவர் லலித் குமார் பங்கேற்றனர்.

Read more »

இலவசக் கல்வி திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

              தமிழகத்திலுள்ள அரசு, உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
   
                       இலவச கல்வித் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவசக் கல்வி திட்டத்தின் கீழ் சிறப்புக் கட்டணம், திரும்பப்பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் ஆகியவை அரசு நிர்ணயித்த அளவிலும் தேர்வுக் கட்டணங்கள் முழுமையாகவும் ஒப்பளிக்கப்படுகின்றன. மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல மாணவ மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலும், குடும்பத் தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு இலவசக் கல்வி திட்டத்தின் கீழ் படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத இதர கட்டணங்கள் ஒப்பளிக்கப்படுகிறது. 

                   மேலும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் ஒதுக்கீடு பெற்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் இதே நிபந்தனைகளுக்குட்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பயிலவில்லை என்ற நிபந்தனைகளுக்குட் பட்டு இலவசக் கல்வி திட்டத்தின் ழ் சிறப்புக் கட்டணம், படிப்பு கட்டணம், தேர்வுக் கட்டணம் இதர திரும்ப பெற்றிடாத கட்டணங்கள் ஒப்பளிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி இடம் ஆக்கிரமிப்பு: கலெக்டர் நேரில் பார்வை

விருத்தாசலம்:

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமாக 42 ஏக்கர் இடம் உள்ளது. 

                   இதில் ஒரு பகுதியில் மட்டுமே கல்லூரி இயங்கி வருகிறது. மற்ற பகுதிகள் முள் செடிகள் வளர்ந்துள்ளது. நாச்சியார் பேட்டைக்கு அருகில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் 30க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர். இந்நிலையில் கலெக்டர் சீத்தாராமன், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில் தார் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சன்று அப்பகுதிகளை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அறிவுறுத்தினார். மேலும் அதிகாரிகளிடம் நடவடிக்கை மேற் கொள்ள உத்தரவிட்டார்.

Read more »

கடலூர் மாவட்டம் முழுவதும் சாலையோரம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் தகவல்

பண்ருட்டி : 

                கடலூர் மாவட்டம் முழுவதும் சாலையோரம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பண்ருட்டி பகுதி சாலை பணிகளை நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.

பின்னர் நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் வெங்கடேசன் கூறியதாவது:

              கடலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் 298 கி.மீ., மாநில முக்கிய நெடுஞ்சாலைகள் 395 கி.மீ., கிராம சாலைகள் 960 கி.மீ., கரும்பு அபிவிருத்தி சாலைகள் 244 கி.மீ., என மொத்தம் 1,899 கி.மீ., சாலைகள் உள்ளன. கடந்த ஆண்டு சாலை பணிகள் 27.5 கோடி ரூபாய் மதிப்பில் நடந்தது. கடலூர் - சித்தூர் சாலை பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் வரையிலான சாலையில் புதிய தார் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும். முதல் கட்டமாக இந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்து குண்டு, குழிகள் மூடப்படும். கெடிலம் ஆற்றில் பாதித்த பகுதிகள் சீரமைக்கவும், மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் புளிய மரக் கன்றுகள் சாலையோரம் நடுவதற்கு ஒவ்வொரு அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் பாதுகாப்பாக வளரவும், சாலையோரம் உள்ள மரங்களில் ஒளி பிரதிபலிப்பான்கள் ஒட்டவும், வளைவுகள் உள்ளிட்ட பகுதியில் மித வேகத் தடை அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு வெங்கடேசன் கூறினார். உடன் உதவி கோட்ட பொறியாளர் சுந்தரி, உதவி பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.

Read more »

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளிக்குழு செயலருக்கு பாராட்டு விழா

சிதம்பரம், : 

                அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து கொடுத்தமைக்காக பள்ளிக் குழு செயலருக்கு பாராட்டு விழா நடந்தது.

                    அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி பள்ளிக் குழு செயலர் மற்றும் அண்ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி, இவர் பள்ளியில் வகுப்பறைகள், தனித்தனியே ஆய்வக கூடங்கள், விளையாட்டு மைதானம் சுற்றுச் சுவர் மற்றும் நடைபாதை அமைத்து கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்துள்ளார். இதற்காக அலுவலர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் தலைமை தாங்கி னார். அலுவலர் கழக செயலர் அன்புராஜா, உதவி தலைமை ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 88 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக ஆசிரியர்கள், அலுவலர்களை பாராட்டி ரத்தினசபாபதி நினைவு பரிசு வழங்கினார்.

Read more »

விருத்தாசலம் அடுத்த பூவனூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தில் மரக்கிளை விழுந்ததுரயில் போக்குவரத்து பாதிப்பு

கடலூர் : 

                       விருத்தாசலம் அடுத்த பூவனூர் ரயில்வே ஸ்டேஷனில் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி அரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து நேற்றிரவு 8.20 மணிக்கு ரயில் பாதையில் விழுந்தது. இது குறித்து ரயில்வே ஊழியர்கள், ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர். 

                         பூவனூர் ஸ்டேஷன் மாஸ்டர் மவுன்ட்பேட்டன், உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து, விருத்தாசலம் வழியாக வரும் ரயில்களை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். பின், ரயில் பாதையில் கிடந்த மரக்கிளையை ரயில்வே ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு துறையினர் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தினர். மரக்கிளை விழுந் ததால் சென்னையில் இருந்து செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.

Read more »

பழ வியாபாரிகளுக்கு கடலூர் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

கடலூர் : 

                "கார்பைட்' கற்கள் மூலம் மா, வாழையை பழுக்க வைத்து விற் பனை செய்யும் வியாபாரிகள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

                 கடலூர் நகராட்சி பகுதியில் சில பழ வியாபாரிகள் வணிக நோக்கத்துடன் மாம்பழம் மற்றும் வாழைப் பழங்கள் இயற்கை முறையில் கனிவதை தவிர்த்து லாபம் ஈட்டும் நோக்கில் "கார்பைட்' கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்து அதனை விற்பனை செய்வது தெரிய வருகிறது. பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவது உடல் நலத் திற்கு கேடு ஏற்படுத்தும். இது போன்ற தவறுகள் ஆய்வில் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பழ வியாபாரிகளிடம் இருந்து பழங்கள் பறிமுதல் செய்து, அவர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1993ன் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களின் மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் சாம்பல் நிற பவுடர் படிந்தது போல் இருக்கும். பொது மக்கள் இதுபோன்ற பழங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் விடுத்த செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டியில் போக்குவரத்து பாதிப்பு ஒரு கி.மீ., தூரம் கடக்க 15 நிமிடம்

பண்ருட்டி : 

               பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் நேற்று அதிக வாகனங்கள் வரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பண்ருட்டி கடலூர்-சித்தூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிகளவில் நேற்று வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்ஸ் பெக்டர் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து போலீசாரும் கோவை செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர். பணியில் இருந்த ஒரே போலீஸ்காரரால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் திண்டாடினார். இதனால் தட்டாஞ்சாவடியில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரையிலான ஒரு கிலோ மீட்டரை கடக்க 15 நிமிடங்கள் வரை ஆனது.

Read more »

நெய்வேலி அருகே சாலை விபத்துகளில் இருவர் பலி

கடலூர் : 

               நெய்வேலி அருகே இரண்டு சாலை விபத்துகளில் என்.எல்.சி., தொழிலாளர் உள்பட இருவர் இறந்தனர். நெய்வேலி தர்மல் 28வது வட்டம் இரண்டாவது மெயின் தெருவைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் பாலமுருகேசன்(33). இவர் டி.எஸ்.,இரண்டு பாப்லர் சொசையிட்டியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முதல் ஷிப்ட் முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தர்மல் 1லிருந்து இரண்டிற்கு செல்லும் ரோட்டில் எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் என்.எல்.சி., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

               இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி தர்மல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதே போன்று வடலூர் அடுத்த செங்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (70). இவர் நேற்று காலை 11 மணியளவில் வீணங்கேணி பஸ் நிறுத்தம் அருகே ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்தார். உடன் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

மது கடத்தி வந்த சுமோ; கார் மீது மோதல் கடலூர் டாக்டர் உட்பட 4 பேர் படுகாயம்



                 மது பாட்டில்கள் கடத்தி வந்த டாடா சுமோ கார் எதிரே வந்த கார் மீது மோதியதில் டாக்டர் குடும்பத்தினர் நான்கு பேர் படுகாயமடைந்தனர். கடலூர் கூத்தப்பாக்கம் விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ்(41). இவர் தனது உறவினர்களான கடலூர் அரசு மருத் துவமனை டாக்டர் ரவியின் மனைவி உஷா(45), கடலூர் மோகன் மனைவி ராஜராஜேஸ்வரி(45), கிஷோர்(21) ஆகியோருடன் ஆல்டோ காரில் காஞ்சிபுரத்திலிருந்து நேற்று மதியம் கடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

                           மதியம் 3.45 மணிக்கு திண்டிவனம்-புதுச்சேரி ரோட்டில் எடையன்குளம் கிராமம் அருகே நான்கு வழி சாலை பணிகள் நடந்து வருவதால் சாலையின் ஒரு புறம் மட்டுமே வாகனங் கள் சென்றுக் கொண்டிருந் தன. அப்போது புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த டாடா சுமோ கார் ஒன்று டாக்டரின் கார் மீது மோதியது. இந்த டாடா சுமோ காரில் அதிகளவில் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த பீர், பிராந்தி பாட்டில்கள் திடீரென வெடித்தன. இதனால் டாக்டர் ரமேஷ் உட்பட காரில் வந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். டாடா சுமோ காரில் வந்த இருவர் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த 4 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து வடலூரில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி:

                 குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை மற்றும் வடலூர் பேரூராட்சி சுகாதார சீர்கேட்டினை கண்டித்து அ.தி.மு.க.,வினர் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

             குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை மற்றும் வடலூர் பேரூராட்சி சுகாதார சீர்கேடு, பேரூராட்சி ன்றியங்களில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். வடலூர் பேரூராட்சி செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். ம.தி.மு.க., ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம், ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் திராவிட அரசு, தண்டபாணி, நமச்சிவாயம், ராமலிங்கம், செல்வராணி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துக் கொண்டனர். அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தங்கராசு, சிவசுப்ரமணியம், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராமலிங்கம், சட்டமன்ற தொகுதி செயலாளர் வெங்கடாஜலபதி, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ரஜினி, அம்பு, முத்துலிங்கம், பொது குழு உறுப்பினர் காமராஜ், சவுந்தரராஜ், உதயராஜ், தொழில் சங்க மணி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior