உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 24, 2011

கடலூர் மத்திய சிறையில் கந்தவேல் என்ற ஆயுள் கைதி கொலை

கடலூர்:

            கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி, சக கைதியால் புதன்கிழமை நள்ளிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  

              கடலூர் மத்திய சிறையில் 830 தண்டனைக் கைதிகளும், 420 விசாரணைக் கைதிகளும் உள்ளனர். ஆயுள் தண்டனைக் கைதிகள் 8-வது பிளாக்கில் தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சில கைதிகள் தனித் தனியாகவும், சில அறைகளில் இருவரும் அடைக்கப்பட்டு உள்ளனர்.  இருவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து, நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டது. சிறைக் காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு கைதி, ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்தார். மற்றொரு கைதி அவர் மீது அமர்ந்து சாப்பாட்டுத் தட்டால் ஓங்கி அடித்துக் கொண்டு இருந்தார்.  
       
                பணியில் இருந்த மற்ற காவலர்கள் அறையைத் திறந்து, தாக்குதலில் ஈடுபட்ட கைதியை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். பலத்த காயம் அடைந்த கைதியை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.  இறந்த ஆயுள் தண்டனைக் கைதி, விழுப்புரம் ராஜாகோவில் தெருவைச் சேர்ந்த கந்தவேல் (34) என்று விசாரணையில் தெரியவந்தது. பண்ருட்டி காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்கில், இவர் ஆயுள் தண்டனை அடைந்தவர். அவர் 9-4-2007 முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 

             தாக்குதல் நடத்திய கைதி, சென்னை செயின்ட் தாமஸ் மெüன்ட் ராஜபாளையம் தெருவைச் சேர்ந்த அய்யனார் (31). அவர் திருவெண்ணை நல்லூரில் நடந்த கொலை தொடர்பாக ஆயுள் தண்டனை அடைந்தவர். அவர் 16-3-2007 முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கந்தவேலை கொன்றது ஏன் என்று விசாரித்தபோது அய்யனார் மௌனம்  சாதித்ததாகக் கூறப்படுகிறது.  கந்தவேலும், அய்யனரும் சிறைக்கு வந்தபின் மன நோயாளிகளாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.  சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார்  வழக்குப் பதிவு செய்து உள்ளனர். கடலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்த இருக்கிறார்.









Read more »

கடலூர் நகராட்சிப் பகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

கடலூர்:

          கடலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள 126 வாக்குச் சாவடிகளில், 20 சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளன என்று கடலூர் நகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். 

இதுபற்றி நகராட்சி ஆணையர் இளங்கோவன் வியாழக்கிழமை கூறியது: 

              இந்தியாவில் முதல் முறையாக தமிழக உள்ளாட்சித் தேர்தலில், புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப் படுகிறது. 29-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். கடலூர் நகராட்சியின் 45 வார்டுகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை. 3 தாழ்த்தப்பட்டோருக்கு பொதுவான வார்டுகள். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

வாக்காளர் பட்டியல்:

              நகராட்சி அலுவலகத்திலும் வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. தேவையான மாற்றங்கள் செய்வதற்கான படிவங்கள் நகராட்சி அலுவலகத்தில் கிடைக்கும். புதிய வாக்காளர்களை இப்போது சேர்க்க முடியாது. 

கடலூர் நகராட்சியில் 

ஆண்கள் 52,179. 
பெண்கள் 53,275. 
மொத்த வாக்காளர்கள் 1,05,456. 

                 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் இலவசமாக வழங்கப்படும். மற்றவர்கள் ஒரு பக்கத்துக்கு ரூ. 5 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் ரூ. 2.25 லட்சம் வரையிலும், உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுவோர் ரூ. 56,250 வரையிலும் செலவு செய்யலாம். பிரசார வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி பெறவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விதிமுறைகள் அனைத்தும் நகராட்சித் தேர்தலுக்கு பொருந்தும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: 

            காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். சுவரொட்டிகள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி இல்லை. 

நகராட்சித் தலைவர் பதவிக்கு டெபாஸிட் தொகை ரூ. 2 ஆயிரம், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 1000. 
உறுப்பினர் பதவிக்கு ரூ. 1000. 
தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 500. 

               தலைவர் தேர்தலுக்கும் உறுப்பினர் தேர்தலுக்கும் தனித்தனி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து விட்டன. அவற்றை பெல் நிறுவனத்தினர் சோதனை செய்து வருகிறார்கள். கடலூர் நகராட்சித் தேர்தலுக்கு 5 உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகள்: ஏற்கெனவே மதுக்கடை ஏலம் எடுத்து பாக்கி வைத்து இருப்பவர்கள் பட்டியலை நகராட்சிக்கு அரசு வழங்கி உள்ளது.

             கடலூர் நகராட்சியைப் பொருத்தவரை சுமார் 10 பேர் அப்பட்டியலில் உள்ளனர். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் கலால் அலுவலகத்தில், தடையில்லாச் சான்று பெறவேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது.   தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 8 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடலூர் நகராட்சிப் பகுதியில் 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். அவற்றில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டு உள்ளன. தேர்தல் பணிகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்படும் என்றார் ஆணையர்.











Read more »

கடலூர் மாவட்ட பொதுமக்கள் காவல் துறையில் இணையத்தளத்தில் புகார் தெரிவிக்கலாம்

கடலூர்:

          பொதுமக்கள் புகார் தெரிவிக்க கடலூர் மாவட்ட காவல் துறையில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.பி., பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

             பொதுமக்கள் தங்கள் புகார்களையும், தகவல்களையும் தெரிவிக்கும் வகையில் "இண்டர்நெட்' வசதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டுமென டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டார்.அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் புகார்கள் மற்றும் சொல்ல வேண்டிய தகவல்களை  தெரிவிக்க விரும்பினால்



 என்ற இணையத்தளத்தில் மூலமாக புகாரை அனுப்ப


எனும் லிங்க்- ஐ கிளிக் செய்து அனுப்பலாம். அவ்வாறு பெறப்படும் புகார்கள், தகவல்கள் எஸ்.பி.,க்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 









Read more »

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கலில் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

கடலூர்:

          உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவுடன் 6 ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கலின் போது சேர்க்க தேர்தல் ஆணையத்தின் சட்டப் பூர்வ ஆணை எண் 27ன்படி சிற்றுராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சாற்றுரையும், 

இதர பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி மொழி ஆவணமும் சேர்ந்து தாக்கல் செய்ய வேண்டும்.

மனுவுடன் நிரந்தர கணக்கு எண், 
வருமான வரி தாக்கல் செய்த விவரம், 
தமக்கு எதிராக கோர்ட்டில் தொடரப்பட்டு வழக்குகள், 
குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள், 
அசையும் மற்றும் அசையாத சொத்துகள்,
கடன் விவரங்கள், 
பொது மற்றும் அரசு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும்
கல்வித் தகுதி 

ஆகிய 6 விவரங்களையும் ஆவணமாக இணைக்க வேண்டும்.

மேலும் 20 ரூபாய் பத்திரத்தில் உறுதி மொழி ஆவணம் அளிக்க வேண்டும். 

மேற்கூறிய உறுதிமொழி, 

உறுதிமொழி ஆணையர்,
முதல் நிலை குற்றவியல் நீதிபதி, 
சான்று அலுவலர் (நோட்டரி பப்ளிக்) 

முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.








Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இரண்டாவது நாளில் 448 பேர் மனு தாக்கல்

கடலூர்:

          உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று 448 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

            உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் ஆகிய இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதியிலிருந்து துவங்கியது.தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. 

மனு தாக்கலின் முதல் நாளான நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 92 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இரண்டாம் நாளான நேற்று

கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 41 பேரும், 
கிராம ஊராட்சி உறுப்பினருக்கு 401, 
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3, 
பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 3 பேர் 

என மொத்தம் 448 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக 540 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.




Read more »

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்? விபரம்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள்  எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. 
 
அதன் விரம் வருமாறு:-

ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 3750

ஊராட்சி தலைவர் - ரூ. 15,000

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் - ரூ. 37,500

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் - ரூ. 75,000

பேரூராட்சி, 3-ம் நிலை நகராட்சி தலைவர் - ரூ. 56,250

நகராட்சி மன்ற தலைவர் 

(முதல் மற்றும் 2-ம் நிலை) - ரூ. 1,12,500

நகராட்சி தலைவர்:

(தேர்வுநிலை, சிறப்பு நிலை) - ரூ. 2,25,000

மாநகராட்சி மேயர் - ரூ. 5,62,500

சென்னை மாநகராட்சி மேயர் - ரூ.11,25,000

பேரூராட்சி 3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 11,250

நகராட்சி உறுப்பினர் (முதல் நிலை மற்றும் 2-ம் நிலை - ரூ. 22,500

நகராட்சி மன்ற உறுப்பினர் (தேர்வு நிலை, சிறப்பு நிலை) - ரூ. 56,250

மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை நீங்கலாக) - ரூ. 33,750

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 56,250 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior