கடலூர்:
பாம்பு கடித்தது தெரியாமல் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கடலூர் அருகே அகரம் எழுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். அவரது மகன் சுதாகர் (8). இவர் தனது நண்பர்களுடன் வீட்டுத் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இலைச் சருகுகளில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு சுதாகரைக் கடித்தது. ஏதோ குச்சி குத்திவிட்டதாக நினைத்த சுதாகர், தொடர்ந்து விளையாடினார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். சுதாகரின் காலில் காயம் இருந்ததைப் பார்த்த உறவினர்கள், பாம்பு கடித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். சருகுகள் கிடந்த இடத்தை தட்டிப் பார்த்தபோது, அதில் இருந்து நல்லபாம்பு ஓடியது. உடனடியாக சுதாகரை கடலூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுதாகர் இறந்தார்.
இச்சம்பவம் குறித்து கடலூர் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் கூறுகையில்,
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால் தங்களை மறந்து மகிழ்ச்சியோடு, விளையாடும் சிறுவர்கள் அடிக்கடி பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்து, சிகிச்சைக்காக மருத்துவ மனைகளுக்கு வருகிறார்கள். எனவே பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டையும் தோட்டத்தையும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு விஷ ஜந்துக்கள் பற்றியும் அவற்றால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் எடுத்துக் கூறவேண்டும். விஷ ஜந்துக்கள் தீண்டியது தெரிந்து, உடனே சிகிச்சைக்கு வந்தால், உயிரைக் காப்பாற்ற முடியும். விழிப்புணர்வு இல்லா விட்டால், கவனக் குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக விலை மதிப்பற்ற நமது மழலைச் செல்வங்களை பறிகொடுத்துத் துயரப்பட வேண்டியது இருக்கும் என்றார் அவர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
