உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 01, 2011

பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கம்: கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.கலைக்கப்பட்டது

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/3b22320c-edc7-4f49-8362-5ada6e6277c1_S_secvpf.gif
கடலூர்:
            பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ம.க.வின் மாநில இணை பொது செயலாளருமான வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் வேல்முருகனின் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

          கடலூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் நேற்று இரவு அவர்கள் திரண்டனர். கட்சி அலுவலகம் முன்பு இருந்த பா.ம.க. கொடிகம்பத்தை உடைத்து எறிந்தனர். டாக்டர் ராமதாசின் கட்அவுட்டை உடைத்து ரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பா.ம.க. அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

            பண்ருட்டியிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கன் குப்பம் மெயின் ரோட்டில் இருந்த பா.ம.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்தனர். இதேபோல் காடாம்புலியூர் முத்தாண்டிக்குப்பம், கீழக்குப்பம், கீழ்மாம்பட்டு, மருங்கூர், காட்டாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கட்சி கொடிகம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.

            நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள வேப்பங்குறிச்சி பஸ்நிலையம், ஜெயப்பிரியா பஸ்நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பா.ம.க. கொடிகளையும் அகற்றினார்கள்.  

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. தலைவர் இரா.கோதண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

            முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் நீக்கப்பட்டதை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. கூண்டோடு கலைக்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு ராஜினாமா செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிற்சங்கத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். வேல்முருகன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சங்கத்தின் பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் சங்கத்தை கூண்டோடு கலைத்து விடுவதாக பாட்டாளி தொழிற்சங்க பேரவைக்கு தகவல் அனுப்பி உள்ளார்.  

வேல்முருகனை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

              வேல்முருகன் சமீப காலமாக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தார். கட்சிக்கு எதிரான கருத்துக்களை பரப்பினார். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் பேசிய பேச்சுக்கள் கட்சிக்கு விரோதமாக இருந்தது. இதனுடைய டேப் எங்களிடம் இருக்கிறது. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம். உயர் மட்ட குழு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அவர் சரியாக முறையான பதில் சொல்லவில்லை. எனவே கட்சியில் உள்ள 24 உறுப்பினர் கொண்ட உயர்மட்டக்குழு அவரை நீக்குவது என்று முடிவெடுத்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.  

கட்சியில் இருந்து நீக்கியது பற்றி வேல்முருகனிடம் கேட்டபோது அவர் கூறியது:-

          நான் 15 வயதிலேயே வன்னியர் சங்கத்தில் சேர்ந்தேன். இயக்க நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டேன். எனது கடின உழைப்பால் நான் படிப்படியாக முன்னேறினேன். நான் கட்சி விரோத செயலில் ஈடுபடவில்லை. என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமலேயே நீக்கி விட்டனர். தற்போது இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.  தனது அடுத்தகட்ட முடிவுபற்றி இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டியளிக்க போவதாக அவர் கூறியுள்ளார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior