உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

விருத்தாசலத்தில் கரும்பு சாறிலிருந்து பானம் தயாரித்தல் பயிற்சி

விருத்தாசலம் : 

        விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கரும்பு சாறிலிருந்து பதப்படுத்தப்பட்ட பானம் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

         விருத்தாசலத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இம்மாதம் இரண்டாம் வாரத்தில் கரும்பு சாறிலிருந்து பதப்படுத்தப்பட்ட பானம் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

                கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணை சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு முதலில் வரும் நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால், கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரிடையாக வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





Read more »

என்.எல்.சி. சேர்மன் அன்சாரி மீது ரூ.10 ஆயிரம் கோடி முறைகேடு புகார்: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

நெய்வேலி:


            நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சேர்மன் அன்சாரி. இவர் பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டன.  

              இந்த நிலையில் 2009-ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கன்வேயர் பெல்ட் அமைக்க சாதனங்கள் வாங்கப்பட்டன. இதில் ரூ.40 கோடி ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.  இதுதொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. என்.எல்.சி. நிறுவனம் உள்பட 9 இடங்களில் 2010-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனாலும் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


              இந்த நிலையில் நெய்வேலி தொழிற்சங்க நிர்வாகி செல்வராஜ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் என்.எல்.சி. சேர்மன் முறைகேடு செய்துள்ளார்.  ரூ.10 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. எனவே அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரும்படி கூறினார்கள்.  

               இதையடுத்து செல்வராஜ் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி யூசுப் அலி என்.எல்.சி. சேர்மன் அன்சாரி மீது சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.  இது சம்பந்தமாக விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறினார்.






Read more »

பொறியியல் பட்டதாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,   

           ‘’ பி.இ., பி.டெக். மாணவர்களுக்கு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 61,200 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் அவர்களது பதிவுகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது.
  

            வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்யச் செல்லும்போது, பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். உள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், குடும்ப அடையாள அட்டையில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை மேற்கொள்ளலாம்.

              பதிவு செய்த மாவட்டத்திலேயே பொறியியல் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை உடனே வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior