உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 23, 2010

தீவிரமடைகிறது என்எல்சி ஸ்டிரைக்


 
நெய்வேலி:
 
                 என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 5-ம் நாளாக தொடர்கின்ற நிலையில், போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக செப்டம்பர் 25-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 27-ம் தேதி மனிதசங்கிலிப் போராட்டமும் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப் பணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியடைந்தது.இதையடுத்து தொமுச, அதொஊச, பாதொச உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஸ்கியூபாலத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
                                இப்போராட்டத்தை வாழ்த்திப் பேசிய அதிமுகவைச் சேர்ந்த எம்.பி. செம்மலை, தொழிலாளர்களின் பணிநிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் உடனடியாக செவிசாய்த்து ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்
 
பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில், 
 
                    ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பலமுறை இதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்தியுள்ளேன். நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவளிக்கிறோம். எனவே நிர்வாகம் 2 தினங்களுக்குள் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். 
 
                 இல்லையெனில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டத்தை செப்டம்பர் 27-ம் தேதி நடத்துவார்கள் என்றார் வேல்முருகன்.உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலியில் உள்ள தொமுச, பாதொச, அதொஊச, எல்எல்எப் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். உண்ணாவிரதப் போராடத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உண்ணாவிரதப் போராட்டம் பேச்சுவார்த்தை விளக்கப் பொதுக்கூட்டம் என அறிவிக்கப்பட்டது. 
 
                         கூட்டத்தின் இறுதியில் பேசிய பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், இது உண்ணாவிரதப் போராட்டம்தான் என்றார்.ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் மெயின்பஜார் காமராஜ் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தினமும் 2.52 லட்சம் மாணவர்களுக்கு வாரம் 5 நாள் முட்டை

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் தினமும் 2.52 லட்சம் மாணவர்களுக்கு வாரம் 5 நாள் முட்டை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

                 சத்துணவுக் குழந்தைகளுக்கு வாரத்தில் 5 நாள்கள் முட்டை வழங்கும் தமிழக முதல்வரின் திட்டம், கடலூர் மாவட்டத்தில் 20-9-2010 முதல் அமல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை, கடலூர் ஒன்றியம் வழிசோதனைப்பாளையத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். வாரத்தில் 5 நாள்கள் முட்டை வழங்கும் திட்டம் அப்பள்ளியில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று சத்துணவு சாப்பிட்ட மாணவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

                    முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாள்களும் வாழைப்பழம் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை தோறும் மாணவர்களுக்கு கொண்டக்கடலை அல்லது பச்சைப்பயறு 20 கிராம் வழங்கப்படும், வெள்ளிக்கிழமைகளில் 20 கிராம் உருளைக்கிழங்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இத் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும், 2.52 லட்சம் மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கப்படும் என்றும் ஆட்சியரின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் கலைஞர் வீட்டு வசதி திட்டப் பணிகள்

கடலூர்:

              கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

                     கடலூர் ஒன்றியம் வழிசோதனைப் பாளையம் கிராமத்தில் வீடுகள் கட்டும் பணியை, மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில்,  முதல்வரின் சிறப்புத் திட்டமான வீடுகள் வழங்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளன. கடலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 51 ஊராட்சிகளில் 2,435 வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் கட்டடப்படும் வீடுகள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார் என செய்திக் குறிப்பு கூறுகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior