உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, நவம்பர் 28, 2010

கடலூரில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் மூழ்கின


கடலூர் சிப்காட் அருகே நடுத்திட்டு கிராமத்தில் உப்பனாற்றின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பு.
கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணிரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 
            கடலூர் மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நாற்று நட்டு, 20 நாளுக்குள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள், வாலாஜா, பெருமாள் ஏரி பாசனப் பகுதிகள், பரவனாற்றின் கரைகள், புவனகிரி, பரங்கிப்பேட்டை வட்டாரங்களில்  வெள்ளாற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
 
          வெள்ளியங்கால ஓடையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாலும், மணவாய்க்காலில் வெள்ளம் அதிகரித்து இருப்பதாலும் சிறகிழந்த நல்லூர், எடையார், திருநாரையூர், மேலவன்னியூர், வீரநத்தம் உள்ளிட்ட 15 கிராமங்களில் வெள்ளம் புகுந்து, நட்டு 2 மாதங்கள் ஆன நெல் பயிர்கள், தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
 
               வெள்ளாற்றில் பெருமளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மடுவங்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை, வானம்பாடி, கீழ்அணுவம்பட்டு, சி.முட்லூர், கீழமூங்கிலடி உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன.÷1,800 கன அடி நீர் செல்லும் திறன் கொண்ட பாசிமுத்தான் ஓடையில், 2100 கனஅடி உபரிநீர் வழிந்து சென்று கொண்டு இருப்பதாகவும் பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.
 
           என்எல்சி சுரங்கங்களில் இருந்து அபரிமிதமான நீர் வெளியேற்றப் படுவதாலும், பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும், வடலூரை அடுத்த மறுவாய் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பண்ருட்டி- கும்பகோணம் சாலை துண்டிக்கப்பட்டது.÷மணிமுக்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விருத்தாசலம்- சேலம் சாலையில் பெருளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விருத்தாசலம்- சேலம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
             நந்திமங்கலம், நாச்சியார் பேட்டை, அகரப்புத்தூர் பகுதிகளில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கடலூரில் கெடிலம் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. கூத்தப்பாக்கம், புருஷோத்தமன் நகர், பாதிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும், முதுநகர் ஏணிக்காரன் தோட்டம், பீமாராவ் நகர், வண்டிப் பாளையம், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் 3 உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.
 
                 கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதியின்றி, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், வண்டிப்பாளையம் சாலையில் சனிக்கிழமை  காலை, மறியலில் ஈடுபட்டனர்.கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர். தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
                    பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கடலூர்- தாழங்குடா தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடலூர்- தாழங்குடா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம்- ஸ்ரீமுஷ்ணம் சாலை, விருத்தாசலம்- வேப்பூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளன.  பெண்ணாடம் அருகே முருகன்குடி- திருமங்கலம் சாலை வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டது. ஆலடி பாலக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் விதைக்கப்பட்டு இருந்த மணிலா, உளுந்து சேதம் அடைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

             வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 186.84 மி.மீ. மழை பெய்துள்ளது.நிவாரணப் பணிகளை முடிக்கிவிடுமாறு முதல் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவுப்படி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பூதம்பாடி, கல்குணம், மருவாய் சேத்தியாத்தோப்பு, பாழ்வாய்க்கால், வீராணம் ஏரி, திருநாரையூர், வெள்ளியங்கால் ஓடை, கீழவன்னியூர், வீரநத்தம், நெடும்பூர், ஆகிய இடங்களுக்குச் சென்று, மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்டார்.

              நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.கல்குணம் கிராமத்தில் செங்கால் ஓடையில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிட்டார்.குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லப்பன் பேட்டை, ராசாப்பேட்டை அரங்கமங்கலம், கல்குணம் கொளக்குடி, ராசாக்குப்பம் பூதம்பாடி, ஆடூர் அகரம், ரெட்டியார் பேட்டை ஆகிய கிராமங்களில் 5,000 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் காரணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவேலு (75) உயிரிழந்தார். 2 மாடுகள், 4 ஆடுகள், உயிரிழந்துள்ளன. 167 குடிசைகள் பகுதியாகவும்,  57 குடிசைகள் முழுமையாகவும், சேதம் அடைந்துள்ளன.

                 பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வட்ட அளவில் துணை ஆட்சியர்களும், வட்டார அளவில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வெள்ள நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு உத்தவிடப்பட்டு உள்ளது. வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்க, மாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது என்றார்.

Read more »

காட்டுமன்னார்கோவிலில் வெள்ளநீர் புகுந்ததால் சாலையோரம் வாரச்சந்தை

சிதம்பரம்:

            வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் சனிக்கிழமை காலை 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்தது.இந்நிலையில் வழக்கமாக சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும் இடத்திலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் சாலையின் இருபுறமும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர்.

 காட்டுமன்னார்கோயில் அருகே 25 கிராமங்களில் வெள்ளம்


         கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டதால் காட்டுமன்னார்கோவில் அருகே 25 கிராமங்களை நீர் சூழ்ந்தது. 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.வீராணம் ஏரிக்கு அதிகளவு நீர்வரத்து: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் பெய்து வரும் மழை நீர் சுமார் 6 ஆயிரம் கன அடி அளவுக்கு செங்கால்ஓடை, கருவாட்டுஓடை, பாபாக்குடி ஓடை உள்ளிட்ட காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு வருகிறது.அதிகளவு நீர் வருவதால் வீராணம் ஏரியிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வெள்ளியங்கால் ஓடையில் 5 ஆயிரம் கனஅடி நீரும், சேத்தியாத்தோப்பு விஎன்எஸ் அணைக்கட்டுக்கு ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. 

             சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியில் 45.5 அடி நீர் தேக்கிவைக்கப்பட்டு உபரியாக வரும் மழைநீர் 6 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  இவையல்லாமல் காட்டாறுகள் மூலம் வரும் மழைநீர் மணவாய்க்கால் மற்றும் வெள்ளியங்கால்ஓடையில் சுமார் 12 ஆயிரம் கனஅடி அளவுக்கு கலக்கிறது. இதனால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், தொரக்குழி, எடையார்,  நந்திமங்கலம், பிள்ளையார்தங்கல், அதங்குடி உள்ளிட்ட கிராமங்களை நீர் சூழ்ந்தது. 

              திருநாரையூர் செல்லும் சாலையை கடந்து வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் படகுமூலம் ஊருக்குள் செல்கின்றனர்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு: காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி செல்லும் சாலையில் வெண்ணங்குழி ஓடை உடைப்பெடுத்ததால் வீராணந்தபுரம் எனுமிடத்தில் சாலை துண்டித்தது. இதனால் காட்டுமன்னார்கோவிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று நாரைக்கால் ஏரி உடைப்பெடுத்ததால் காட்டுமன்னார்கோவிலிருந்து பாப்பாக்குடி வழியாக திருச்சி செல்லும் சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

                 25 கிராமங்களில் நீர் சூழ்ந்தது: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் பாபாக்குடிஓடை, வெண்ணங்குழிஓடை வழியாக வடவாற்றில் கலப்பதால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், வெங்கடேசபுரம், மடப்புரம், மணிக்குழி, அறந்தாங்கி, சித்தமல்லி, வா.புத்தூர், மணவெளி, அகரபுத்தூர், கண்டமங்கலம், வீராணந்தபுரம், வில்வகுளம், சப்பாணிக்கோட்டை உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது.

                    மேலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் 5 ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர் பூ பருவத்தில் மூழ்கியுள்ளதால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும் நிலங்களில் உடனடியாக தண்ணீர் வடியாமல் 3 நாளுக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தால் மீதமுள்ள பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior