உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 27, 2011

வடலூர் சுத்தசன்மார்க்க நிலையத்தின் வைரவிழா

வடலூர்:
              வடலூர் சுத்தசன்மார்க்க நிலையத்தின் வைரவிழாவின் நிறைவு விழாவும், முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர். 41-ம் ஆண்டு நினைவு தினமும், ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழாவும் வடலூர் அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில், அகவல் பாராயணத்துடன் தொடங்கி நடைபெற்றது.

               நிகழ்ச்சிக்கு சுத்தசன்மார்க்க நிலைய துணைத்தலைவர் ஊரன் அடிகள் தலைமை தாங்கினார். மாணவிகள் இறைவணக்கம் பாடினார்கள். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர். உருவப்படத்தை பூமலை அய்யா திறந்துவைத்தார்.

விழாவில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அவ்வை சண்முகம் பேசியது:-


             உயர்ந்த மனிதராகவும், ஒப்பற்ற தலைவராகவும் விளங்கிய ஓ.பி.ஆர்.தான் முதன்முதலில் சுதந்திர தினகொடியினை ஏற்றிய பெருமைக்குரியவர். திருவண்ணாமலைக்கு செல்ல இருந்தவர் வள்ளலாரின் உயரிய கொள்கையின்பால் வடலூர் வந்தார். வள்ளலார் பசித்த வயிற்றுக்கு உணவு வழங்கினார். ஓ.பி.ஆர். அறிவு பசிக்கு உணவு வழங்கினார். அவர் தொடங்கிய கல்வி நிறுவனம் வளர்ந்தோங்கி நிற்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் கல்வி அவசியம். சென்னை அளவே உள்ள கொரியா நாட்டில் படிக்காத பெண்களே இல்லை. அவர்கள் கல்வியுடன் தொழில்களையும் கற்றுக் கொண்டவர்கள். அதேபோல் இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள், தொழில் நுட்ப வல்லுனர்களாக உருவாகி வெளியே செல்ல வேண்டும். அதுதான் இந்த நிறுவனத்துக்கு பெருமை ஆகும். ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பது மட்டும் போதாது. அதனை சிறப்பாக நடத்த வேண்டும் என்று எண்ணி செயல்படவேண்டும்.

              அந்த அடிப்படையில் இந்த நிறுவனம் செயல்படுவது பாராட்டுக்குறியது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இளங்குமரன், ராமலிங்கர் பணிமன்ற நிர்வாகி சோமசுந்தரம் உள்பட பலர் பேசினர். முன்னதாக காலையில் தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் ஓ.பி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிப்பும், அஞ்சலி ஊர்வலமும் நடைபெற்றது.

                இதுபள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. ஊர்வலத்தில் வடலூர் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், காட்டுக் கொல்லை உள்ளிட்ட கிராம மக்கள் ஓ.பி.ஆர்கல்வி நிறுவன மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. மாவட்ட பேரவை நிர்வாகி ஜெயபிரகாஷ், நகர நிர்வாகி உதயராஜ், மணி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior