உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 04, 2012

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை!

        விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசித்து கொண்டே கோவிலுக்கு நுழைய முயன்ற போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

          கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அர்த்தசாமபூஜை, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம், ஆடிப்பூரம் உள்ளிட்ட விழாக்காலங்களின்போது இசைக்கலைஞர்கள் கைலாய இசைக்கருவிகளை (கொம்பு ஊதுதல்) கொண்டு வாசித்து இறைப்பணியாற்றி வந்தனர். . இந்த நிலையில் கைலாய இசைகருவிகள் அதிகளவில் சப்தம் (ஒலி) ஏற்படுகிறது. எனவே அவற்றை கோவிலுக்குள் வாசிக்க கூடாது என , கடந்த 7 7 11 அன்று அறிவிப்பு பலகைகளில் நோட்டீசு ஒட்டப்பட்டது. இதைதொடர்ந்து, இசைகலைஞர்கள் கைலாய வாத்தியங்களை வாசிப்பதை தவிர்த்து வந்தனர். இருப்பினும் அத்தகைய இசைகருவிகளை வாசிக்க அனுமதி கேட்டு இந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் சிவ காண பூத கன நாதர் இசை திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள் கடிதமும் கொடுத்திருந்தனர்.

            ஆனால் அதற்கு சரியான பதில் கிடைக்காத காரணத்தினால் இசைக் கலைஞர்கள் கடந்த ஜனவரி மாதம் 8 ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆதரவுடன் கோவிலுக்குள் இசைக் கருவிகளை வாசிக்க தொடங்கினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் த சிவாச்சாரியார்கள் வீதியுலாவிற்கு தூக்கிச்சென்ற சாமியை கீழே இறக்கி வைத்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வாசிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, அன்று இரவு அர்த்த சாமபூஜைக்கு கைலாய இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டது.

             இந்த நிலையில், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03.03.2012 அன்று 6 ம் நாள்  கோவில் கட்டிய விபத்து முனிவருக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி' நடந்தது. இந்த விழாவில் சிவ காண பூத கன நாதர் இசை திருக்கூட்டத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கைலாய இசைக்கருவிகளை வாசித்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு முன்பு வந்தனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

            பின்னர், தாசில்தார் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சீராளன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரிஷபவாகனத்தில் சாமியும், அம்மனும் கோவில் வெளி மண்டபத்திற்கு வந்த போது, கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கைலாய வாத்திய இசைக்குழுவினர் இசை வாசிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில், நாங்களும் வாசிப்போம் என இசை திருகூட்டத்தை சேர்ந்தவர்கள் இசைக்கருவிகளை வாசித்து கொண்டே நடந்து சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், இசைக்கலைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. பின்னர், ஒரு பெண் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதையடுத்து, சாமி வீதியுலா வழக்கம் போல நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

           இந்த பிரச்சினை குறித்து திருவிழாவுக்கு முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி துரித நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.



































0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior