உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 09, 2012

கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: கண்ணீருடன் கரும்பு விவசாயிகள்

நெய்வேலி அருகே அறுவடை தாமதத்தால் வயலிலேயே காய்ந்து வரும் கரும்பு.

நெய்வேலி:

 கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்யவேண்டிய கரும்புகள் வெட்டப்படாததால் அவை கருகுவதைக் கண்டு, பயிரிட்ட விவசாயிகள் கண்ணீருடன் மாற்றுவழித் தெரியாமல் தவிக்கின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டுமே இயங்கிவருகிறது. இவற்றைத் தவிர பெண்ணாடம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் தனியார் சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன.

இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நம்பி பயிர்செய்த விவசாயிகள் பயிரிட்ட கரும்பை குறித்த காலத்துக்குள் அறுவடை செய்து அவற்றை சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்புகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருமாத காலமாக போராடிவருகின்றனர். ஆனால் போராட்டம் தீர்ந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயப் பகுதியான சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த காட்டுமன்னார் கோயில், கம்மாபுரம், சிதம்பரம், விழுப்புரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது.

கூட்டுறவு ஆலைகளை நம்பி பயிரிட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை பாழாகிக் கொண்டிருப்பதை அரசு கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் கரும்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வட்டி அதிகரிப்பதால் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கின்றனர். சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்துவருவதால் கரும்பை வெட்ட முடியாத விரக்தியடைந்த தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தான் பயிர்வித்த கரும்பை தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.கரும்பு விதைப் பயிர் சட்டத்திட்டத்திற்கேற்ப ஒரு இடத்தில் பயிரிட்ட கரும்பை குறிப்பிட்ட ஆலைகளைத் தவிர வேறு ஆலைகளுக்குக் கொண்டு சென்று அரைக்க முடியாத அவலநிலை இருப்பதால் கருகும் நிலையில் உள்ள கரும்புகளை வெட்ட முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதேநிலை நீடித்தால் கரும்பு விவசாயிகள் எதிர்காலத்தில் கரும்பு பயிரிடுவதை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடவேண்டிய சூழல் ஏற்படும். இந்த நிலையை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களும் அரசும் புரிந்துகொண்டு, மாற்று வழிகளை ஆராய்ந்து கரும்பு விதைப் பயிர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு இப்போராட்டம் நடைபெறுவதால், பாதிக்கப்படுவர்கள் கரும்பு விவசாயிகள்தான். தமிழக கரும்பு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் கண் முன்னே தினந்தோறும் செத்து மடியும் கரும்பு விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறது? 






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior