உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வேலைவாய்ப்பு பதிவு அட்டைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு பதிவு அட்டைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 06, 2011

பொறியியல் பட்டதாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,   

           ‘’ பி.இ., பி.டெக். மாணவர்களுக்கு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 61,200 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் அவர்களது பதிவுகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது.
  

            வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்யச் செல்லும்போது, பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். உள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், குடும்ப அடையாள அட்டையில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை மேற்கொள்ளலாம்.

              பதிவு செய்த மாவட்டத்திலேயே பொறியியல் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை உடனே வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.




Read more »

செவ்வாய், ஜூன் 14, 2011

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இணைய தளம் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு

கடலூர் : 

          பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு பதிவை இணைய தளம் மூலமாக பள்ளியில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக்குறிப்பு: 

                 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணைய தளம் மூலம் அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். சி.இ.ஓ., அமுதவல்லி, டி.இ.ஓ.,க்கள் பாரதமணி, பத்ரூ, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்மொழிதேவி, வேலைவாய்ப்பு அலுவலர் பங்கேற்றனர். இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவை வரும் 20ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். 

               தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர், வீட்டு முகவரி (ரேஷன் கார்டில் உள்ளபடி) மொபைல் எண், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை தாங்கள் படித்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வரும் 19ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். பதிவிற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் செல்லத் தேவையில்லை. தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பதிவு செய்ய இயலாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




Read more »

புதன், மே 25, 2011

பள்ளிகளிலேயே இணையத்தளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு

            பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்படுகின்றன.

               இந்த சான்றிதழ்களை வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 

 இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  

                 பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு தகுதி உடனடியாகக் கிடைக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாணவ, மாணவியர் நாடுகின்றனர்.  தேர்ச்சிபெற்ற அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கால விரயம், போக்குவரத்து செலவு ஆகியவற்றால் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  இந்தப் பிரச்னை எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டவுடன், அதனைத் தீர்க்கும் வகையில் மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெறும் நாளிலேயே, மாணவ, மாணவியர் பயிலுகின்ற பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளேன்.  

             அதன்படி, 2011-ல் பிளஸ் 2 தேர்ச்சியடைந்த அனைத்து மாணவ, மாணவியர்களும் பள்ளியிலிருந்தே தங்களது கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம்.  பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மே 25 (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. மே 25 முதல் 15 நாள்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.  இவ்வாறு 15 நாள்களில் பதிவு செய்யும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மே 25-ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.  

            இந்தப் பணியை பள்ளிக் கல்வித் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனம் ஆகியவை இணைந்து செய்யும்.  மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக வரும்போதே, மாணவ, மாணவியர் தங்களது பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டை, குடும்ப அட்டையின் நகலினை தவறாது எடுத்து வந்து கல்வித் தகுதியையும் பதிவு செய்து கொள்ளலாம்.  அவர்களுக்கான பதிவு எண் பதிவு செய்யும் நாளன்றே வழங்கப்படும்.  பத்தாவது கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் அதற்கான வேலைவாய்ப்பு அடையாள அட்டையினையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். 

               மாற்றுத் திறனாளிகள் இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளியில் பதிவு செய்த பின்னர் தங்கள் முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.  படித்த பள்ளியிலிருந்தே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.  புதன்கிழமை முதல் 15 நாள்கள் வரை ஆன்-லைன் பதிவு அமலில் உள்ளதால் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.  

 இணையதள முகவரி 










Read more »

திங்கள், மே 23, 2011

வேலைவாய்ப்புப் பதிவை பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம்

கடலூர்:

             பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 25-ம் தேதிமுதல் தங்கள் பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுவல்லி அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              2011 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டியதை, அவர்கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்து கொள்ள தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.  இணையதளம் மூலம் இப்பதிவு மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு அட்டை வழங்கப்படும். ஏற்கெனவே 10-ம் வகுப்பு தேர்ச்சியை பதிவு  செய்தவர்களும், கூடுதல் கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சியைப் பதிவு செய்து கொள்ளலாம்.  

              இதற்காக மாணவர்கள் தங்களது குடும்ப அட்டை, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வருதல் வேண்டும்.  இப் பதிவுக்காக எவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்துத்துச் செல்லத் தேவையில்லை. பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பதிவு செய்ய இயலாது. இப்பதிவு பள்ளிகளில் 25-5-2011 முதல் 10-6-2011 வரை நடைபெறும். இந்த நாள்களில் எப்போது பதிவு செய்தாலும் 25-5-2011 அன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததாதக் கருதப்படும்.  மாவட்டக் கல்வித்துறையும், மாவட்ட வேலைவாய்ப்புத் துறையும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

வியாழன், அக்டோபர் 07, 2010

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுக்காக குவியும் விண்ணப்பங்கள்!


           
               தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்யக் கோரி இளைஞர்களிடம் தினமும் பெறப்படும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கட்டுக் கட்டாகக் குவிந்து வருகின்றன.   தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் மின் ஆளுமை மயமாக்கும் திட்டத்தை ரூ.5.06 கோடியில் செயல்படுத்த அரசு அனுமதி அளித்தது.   இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மென்பொருள்கள் முடக்கப்பட்டன.   
 
                வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், முகவரி மாற்றம், கூடுதல் கல்வி தகுதி பதிவு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன.   இதையடுத்து, ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. வேலைவாய்ப்புத் துறைக்காக பிரத்யேக இணையதள முகவரியும் வெளியிடப்பட்டது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இதுவரை இந்த இணையதளம் செயல்படவில்லை. ஆன்லைன் பதிவு சேவையும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக முடங்கிய நிலையில் உள்ளது.   
 
                    வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இப்போது 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், புதிதாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தினமும் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் குவிகின்றனர். ஆனால், பெரும்பாலான கணினிகள் செயல்படாததால், பதிவு செய்தல் உள்ளிட்ட அன்றாடப் பணிகளைக் கூட செய்ய முடியவில்லை. இதனால், வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் தவிக்கும் நிலை தொடர்கிறது. 
 
                   இதையடுத்து, வேலைவாய்ப்பு பதிவு கோரி வருவோரிடம் விண்ணப்ப மனுவையும், அஞ்சல் தலையுடன் கூடிய சுய முகவரியிடப்பட்ட கடித உறைகளும் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் எதுவும் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுவது இல்லை. ஏற்கெனவே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 387 காலியிடங்களை நிரப்பாத நிலையில், இப்போது விண்ணப்பங்கள் குவிவது, கூடுதல் பணிச் சுமையாக அதிகரித்துள்ளது.   போதிய இடவசதி இல்லாததால், கட்டுக் கட்டாக குவிந்துள்ள விண்ணப்பங்களைப் பராமரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும், மீண்டும் விண்ணப்பங்களைப் பெறுவது கண் துடைப்பாக மாறி வருகிறது.      
 

Read more »

வியாழன், செப்டம்பர் 16, 2010

வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்


                  
                     ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. 
 
              இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமை வகித்தார். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பதிவில் மாறுபாடு ஏதேனும் இருப்பின் அதனை உரிய சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பகத்தை நேரில் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம்.புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 
 
இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in 
 
ஆன்லைனில் பதிவு செய்யும் முறை1 
 
ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
 
                இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும்.  பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.
 
2.கூடுதல் பதிவு செய்வது எப்படி ?
 
               ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.
 
3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?
 
                      ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
 
4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா?
 
                 என்பதை எப்படி அறிவது?தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்.
 
5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?
 
                     ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
 
6.ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை( priority certificate) பதிய இயலுமா?
 
              முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.
 
7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?
 
                     இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.
 
8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை? 
 
                           நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

மின் ஆளுமை மயமாகிறது அரசு வேலைவாய்ப்புத் துறை

சென்னை:

          தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை விரைவில் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) மயமாக்கப்பட உள்ளது.  

           செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் ஆன்லைனில், பதிவு செய்து கொள்ள முடியும். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான பின் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டவுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நெரிசல் அதிகரித்து வருகிறது.

            இதற்காக வட்டார அளவில் அந்தந்த பள்ளிக் கூடங்களுக்கே அலுவலர்கள் சென்று சான்றிதழ்களை பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. எனினும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் கூடுதலாக பல்வேறு உயர் கல்வி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பின்னர், அதற்கான சான்றிதழ்களை உடனடியாக பதிவு செய்து, பதிவு மூப்பு பெற ஆர்வம் காட்டுகின்றனர்.  இதுதவிர, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையை புதுப்பிக்கவும் ஏராளமானோர் தினமும் குவிகின்றனர். 

              இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வந்தது. இதையடுத்து, கூடுதலாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. வேலைதேடுவோர் 62 லட்சம் பேர்: வேலைவாய்ப்புத் துறையின் உயிர்ப் பதிவேட்டின்படி, இப்போது பதிவு செய்து, காத்திருப்போர் எண்ணிக்கை 62 லட்சத்தை எட்டியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சான்றிதழ் பதிவு உள்பட 95 சதவீத பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மின் ஆளுமை முறையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டது.

             "எம்பவர்' (அதிகாரம் அளித்தல்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு |2.75 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.  எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் "லினெக்ஸ்' மென்பொருள் அடிப்படையில் முதல் கட்டமாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் மின் ஆளுமை முறையில்  ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாள்களில், இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வைரஸ் பாதிப்பு இல்லை: "லினெக்ஸ்' மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் வைரஸ் தாக்குதலால் கணினியில் உள்ள பல்வேறு ஆவணப் பதிவு விவரங்கள் எதுவும் பாதிக்கப்படாது.

            இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள கணினியில் தொகுக்கப்பட்டுள்ள பதிவேட்டு விவரங்கள் அனைத்தும் மின்ஆளுமை முறைக்கு "லினெக்ஸ்' மென்பொருள் உதவியுடன் விரைவில் மாற்றப்பட உள்ளது.  2-வது கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பெரும்பாலான அலுவலர்களுக்கு நவீன கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மின்ஆளுமை திட்டப் பணிகள் நிறைவடைந்த பின், தனி "சர்வர்' மற்றும் இணையதள தொடர்பு மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

ஆன்லைனில் பதிவு செய்யலாம்: 

           இதன்பின் மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை "ஸ்கேனர்' சாதனம் மூலம் பிரதி எடுத்து, வேலைவாய்ப்புத் துறையின் புதிய இணையதளத்தைப் பயன்படுத்தி "ஆன்லைன்' மூலம் பதிவு செய்யலாம். இதன்பின் 6 நாள்கள் செல்லுபடியாகும் வகையில் தற்காலிகமான அடையாள எண் கொடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவில் ஏதேனும் குறை இருந்தால் 6 நாள்களுக்குள் திருத்தம் ("எடிட்' வசதி மூலம்) செய்து கொள்ளலாம். 6 நாள்களுக்குள் வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்த சான்றிதழ் விவரங்களை சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவர். இதன்பின் தங்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக நிரந்தரப் பதிவு அட்டையை "பிரிண்டர்' சாதனம் மூலம் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

போலிகளுக்கு வாய்ப்பு இல்லை: 

            கல்வித் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மாணவர்களுக்கு வழங்கும் சான்றிதழ் எண் குறித்த விவரங்களும் தொகுக்கப்படும் என்பதால் எந்த விதமான முறைகேடு செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. ரேஷன் அட்டை உள்ளிட்ட இருப்பிடச் சான்றுகளை சமர்ப்பித்து, வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. "ஆன்லைன்' முறையில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையையும் புதுப்பித்துக் கொள்ளலாம். 

வேலை தருவோரும் பயன்படுத்தலாம்...

                வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான, தகுதியுள்ள பணியாளர்களின் பட்டியலைப் பெற இயலும். மாற்றுத் திறனாளிகள், முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றோர், தொழிற்படிப்பில் தேர்ச்சி பெற்றோர், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த திட்டம் மூலம் எளிதில் பயன் பெறலாம்.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், 240 அலுவலர்களுக்கு முதல்கட்டமாக எல்காட் நிறுவனம் கணினி பயிற்சி அளித்துள்ளது. இதையடுத்து  எம்பவர்' மின் ஆளுமை திட்டத்தை வேலைவாய்ப்புத் துறையில், அண்ணா பிறந்த தினமான வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

விருத்தாசலத்தில் வேலை வாய்ப்பு பதிவு அட்டை வழங்கும் விழா

விருத்தாசலம்:

             விருத்தாசலம் டேனிஷ் மிஷன் பள்ளியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

            மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு முகாம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தங்கள் தேர்ச்சி சான்றிதழை பதிவு செய்தனர். இவ்வாறு பள்ளியில் பதிவு செய்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி விருத்தாசலத்தில் உள்ள டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அதிசயராஜன், உதவித் தலைமை ஆசிரியர் ரவீந்திரநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior