உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 23, 2010

கன மழை: கடலூர் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பின


 
கடலூர்:
 
                  வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின.
 
                 கடந்த 2 நாளாக மாவட்டத்தில் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.வெள்ளாற்றில் நீர்வரத்து இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்த ஆண்டு வெள்ளாற்றில் சுமாராக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வெலிங்டன் ஏரி நிரம்பி வருகிறது. 
 
                  ஏரியின் கரை அண்மையில் |29 கோடியில் பலப்படுத்தப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு 23 அடி உயரத்துக்கு மட்டுமே (மொத்த உயரம் 29.7 அடி) நீர் பிடிக்க வேண்டும் என்று பொதுப் பணித்துறை அறிவுறுத்தி உள்ளது.ஞாயிற்றுக்கிழமை ஏரியின் நீர் மட்டம் 19.4 அடியாக இருந்தது. ஏரிக்கு 460 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் அதன் வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் வாய்க்கால்களைத் தூர் வாரவேண்டும் என்று, நாம் விவசாய அமைப்பின் கடலூர் மாவட்டச் செயலாளர் வேணுகோபால் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மற்ற ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நீர் மட்டம் (மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்) வருமாறு: 
 
          வீராணம் 45.5 அடி (47.5 அடி). ஏரிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 
 
           வாலாஜா 6.5 அடி (5.5 அடி). ஏரிக்கு விநாடிக்கு 3,605 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. வரத்து நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. 
 
             பெருமாள் ஏரி 5.5 அடி (6.5 அடி) ஏரியில் இருந்து விநாடிக்கு 1504 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
 
கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
 
மே.மாத்தூர் 87,
கொத்தவாச்சேரி 64, 
கடலூர் 60, 
குப்பநத்தம் 50, 
விருத்தாசலம் 44, 
பண்ருட்டி 40, 
பரங்கிப்பேட்டை 29, 
வானமாதேவி 29, 
அண்ணாமலை நகர் 24, 
லக்கூர் 24, 
சிதம்பரம் 23, 
காட்டுமயிலூர் 22, 
ஸ்ரீமுஷ்ணம் 20, 
சேத்தியாத்தோப்பு 18, 
வேப்பூர் 13, 
கீழ்ச்செறுவாய் 12, 
பெலாந்துரை 11,
லால்பேட்டை 10.

Read more »

கடலூரில் கன மழை: மீன்பிடித் தொழில் பாதிப்பு




சிதம்பரம்:

                சிதம்பரத்தை அடுத்த கடலோரப் பகுதியான முடசல்ஓடை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பலத்த காற்றுடன்கூடிய கன மழை காரணமாக மீன்பிடிக்கச் செல்லாததால் மீன்பிடித் தொழில் பாதித்துள்ளது.

               சிதம்பரத்தை அடுத்த கிள்ளை முடசல்ஓடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கடல் அலை வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாலும், தொடர்ந்து கன மழை மற்றும் பலத்த காற்று வீசுவதாலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

                  தங்களது படகுகளை பாதுகாப்பு கருதி முடசல்ஓடையில் நிறுத்தி வைத்துள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள மீனவ கிராமங்களிலிருந்து சிதம்பரம் மீன்மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு மீன் கொண்டு செல்லப்படும். தற்போது மீன்பிடிக்க மீனவர்கள் செல்லாததால் கேரளத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்கள் சிதம்பரம் மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன. இதனால் மீன் விலையும் உயர்ந்துள்ளது. உதாரணமாக கிலோ ரூ. 150-க்கு விற்ற மீன் தற்போது ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more »

புவனகிரியில் மழையில் மிதக்கும் பள்ளி : மாணவர்கள் தவிப்பு




புவனகிரி : 

              புவனகிரி அடுத்த வத்துராயன்தெத்து, பள்ளியில் வடிகால் வசதியின்றி மழைக் காலங்களில் குளம் போல் தண்ணீர் சூழ்ந்து விடுவதால், கடந்த 11 ஆண்டுகளாக மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர். 

                கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட வத்துராயன்தெத்து ஊராட்சியில், 1999 - 2000ம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆரம்பப் பள்ளி கட்டப்பட்டது. பள்ளி தொடங்கி 11 ஆண்டுகள், ஆனாலும் வடிகால் வசதியின்றி மழைக் காலத்தில், பள்ளி வளாகத்திற்குள் தேங்கிய தண்ணீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் சகதியில் நடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. 

                 பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதும், பள்ளியின் அருகே சாலை போடப்பட்டதுமே, மழை நீர் வெளியேற முடியாததற்கு காரணம். 

ஊராட்சி தலைவர் குணசேகரன் கூறுகையில், 

                   "கடந்த மூன்று மாதத்திற்கு முன் கலெக்டரிடம் பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என மனு கொடுத்துள்ளேன். இதுவரை நடவடிக்கை இல்லை' என்றார். பள்ளி குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க வடிகால் வசதியும், சுகாதார வசதியும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior