உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 23, 2010

கடலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இழுபறி : தேர்தலுக்குள் முடியுமா என்பது கேள்விக்குறி

கடலூர் : 

                  கடலூர் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 3 ஆண்டுகளைக் கடந்தும் இழுவையாக இழுத்து வருகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குள் பணிகள் முடிவடையுமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது. கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடி ரூபாயில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை. பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆளுங்கட்சியினர் மக்களை சந்தித்து சாதனைகளை எடுத்துக் கூற வேண்டிய சூழ்நிலையில்  நகரத்தில் தோண்டிய பள்ளங் களே சரியாக மூடப்படாமல் உள்ளன.

                           குழாய் பதிப்பதற்காக தோண்டிய மண் மேடுகள் யாவும்  மக் களை எரிச்சலடையச் செய்துள்ளது. இந்த மண் மேடுகள் மழை பெய்தவுடன் சகதியாகவும், வெயிலடித்தால் புழுதி நகரமாகவும் மாறிவிடுகிறது. மேலும் பீச்ரோடில் கழிவு நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆழம் குறைத்து  3.15 மீ., ஆழத் தில் குழாய் பதிக்கப்படுகிறது. புதுப்பாளையம் மெயின் ரோடு, பீச் ரோடில் பாதியளவு குழாய் பதிக்கும் பணி முடிந்துள்ளது. ஆனால் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக பள்ளம் தோண்டுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது. இந்த இரு சாலைகளும் நகரத்தின் முக்கிய சாலையாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர்.

                      முதுநகர் நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள் ளம் தோண்டும் போது வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக் கப்படும். இதனால் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு மாநில நெடுஞ்சாலைகள், மற் றும் அருகில் உள்ள தார் சாலைகளை  உறுதியானதாக மாற்றி தயார் படுத்த வலியுறுத்தியுள்ளது. பள்ளம் தோண்ட நெடுஞ்சாலைத்துறை இதுவரை அனுமதி கொடுக்காததால் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கவில்லை. சென்னையில் உள்ள சீனியர் செயற்பொறியாளர் சாஸ்திரி கடந்த மாதம் கடலூர் முதுநகர் நெடுஞ்சாலையை பார்வையிட்டுச் சென்றார். அனுமதி கிடைத்துவிடும் என நம்பி இருந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை திடீரென "நகாயி'டம் அனுமதி பெறவேண்டும் என கழற்றிக் கொண்டது.

                        முக்கிய சாலையில் பணிகள் துவங்காததால் எவ்வளவுதான் பணிகள் செய்தாலும் முடிந்த மாதிரி தெரியவில்லை. இன் னும் ஒரு சில வாரங்களில் தென் மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் சாலைகளில் பள்ளம் தோண்ட முடியுமா என்பது கேள் விக்குறியாக உள்ளது. வரும் பொதுத்தேர்தலுக்குள் முடிக்க வேண்டும் என நம்பிய மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

போக்குவரத்து மாற்றம்... : 

                        கடலூரில் இருந்து கூத்தப்பாக்கம் சாலையில் வண்டிப்பாளையம் சாலை சந்திப்பிலிருந்து முத் தாலம்மன் கோவில் வரை பாதாள சாக்கடை திட் டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி 27.9.2010 முதல் 6.10.2010 வரை கடலூர் பஸ் நிலையத்திலிருந்து கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல் லும் வாகனங்கள் தேரடி தெரு, போடிசெட் டித்தெரு, அக்கிள்நாயுடு தெரு வழியாக கூத்தப் பாக்கம் சாலை செல்ல வேண்டும்.

                       திருவந்திபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் கான்வென்ட் சாலை, போடிசெட்டித்தெரு, கம்மியம்பேட்டை, ஜவான்ஸ் பவன் புற வழிச்சாலை, அண்ணாபாலம், சீமாட்டி சந்திப்பு வழியாக பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். 10.10.2010 முதல் 13.10.2010 வரை பஸ் நிலையத்திலிருந்து திருவந்திபுரம் வழியாக செல்லும் வாகனங்கள் ஜவான்ஸ் பவன் புறவழிச்சாலை, கம்மியம்பேட்டை, போடிசெட்டித்தெரு, சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக திருவந்திபுரம் சாலை செல்லவும்.  திருவந்திபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் மேற் குறிப்பிட்ட சாலையில் வழியாகவே பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior