உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா


மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.
 
 
மும்பை:
 
                  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. 
 
 
சொந்த மண்ணில் முதல்முறை... 
 
                 இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 1996-ம் ஆண்டு போட்டியை நடத்திய இலங்கை வென்றிருந்தாலும், இறுதி ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.  
 
சச்சின் கனவு நனவானது 
 
                6-வது உலகக் கோப்பையில் விளையாடிய சச்சின், மும்பையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் நீண்ட நாள் கோப்பைக் கனவு நனவாகியுள்ளது.  
 
சாதனை கேப்டன் தோனி
 
                     ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர் கிரிக்கெட் என இரண்டிலும் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி. டெஸ்ட் அரங்கிலும் அவரது தலைமையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இந்திய அணி கோப்பையை வென்றதும் மைதானத்தில் சச்சினை தோளில் தூக்கி வைத்து வலம் வந்தார் யூசுப் பதான். இந்திய வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன் சிங் ஆகியோரின் கண்களில் கண்ணீர்ப் பெருக்கெடுத்தது உணர்ச்சிபூர்வமாக இருந்தது. நாடு முழுவதும் கொண்டாட்டம்இந்திய அணியின் வெற்றி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் பட்டாசுகளை வெடித்தும், பலூன்களை பறக்கவிட்டும், கலர் பொடிகளை தூவியும் வெற்றியைக் கொண்டாடினர். கார்களில் தேசியக் கொடியை ஏந்தியும் வலம் வந்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், உரக்கக் குரல் எழுப்பியும் கொண்டாடினர். 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோது ஏற்பட்ட அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்தியா முழுவதும் காண முடிந்தது. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாடல்களை பாடியும், சாலைகளில் நடனமாடியும் ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. 
 
ரசிகர்கள் கொண்டாட்டம் 
 
                 உலகக் கோப்பை வெற்றியால் சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டது. சென்னையின் பல்வேறு சாலைகளும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சாலைகளில் வந்த வாகனங்களை எல்லாம் மறித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். இளைஞர்கள் வாகனங்களில் படையெடுத்ததால் புத்தாண்டு கொண்டாட்டம் போன்று காட்சியளித்தது. எல்லா வீடுகளிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர். மெரீனா சாலையில் வாகனங்களில் வந்து குவிந்த இளைஞர்களால் அந்தப் பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸôர் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். 
 
 
ஸ்ரீசாந்த் வாய்ப்பு: 
 
         இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா,"பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஜாகிர் துல்லியம்: 
 
             இந்திய "வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் "மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

 
 
  
            "ரன் ரேட்' மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2 ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து தவித்தது.

யுவராஜ் அபாரம்: 
 
                பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), "ரிவியு' முறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார்.

இரண்டாவது சதம்: 
 
            அடுத்து வந்த குலசேகரா "கம்பெனி' கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் "பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87 மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்öட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.

மலிங்கா மிரட்டல்
 
              அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் "டக்' அவுட்டானார். இது தொடர்பாக "ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18) அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின்.

காம்பிர் அதிர்ஷ்டம்: 
 
              பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது "கேட்ச்' வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் "ரன் அவுட்' வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் "கேட்ச்சில்' விராத் கோஹ்லி(35) அவுட்டானார்.

வெற்றி கேப்டன்: 
 
               அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது "கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய தோனி, முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

இரண்டாவது கோப்பை: 
 
            தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத் தினார். "பேட்டிங் பவர்பிளேயில்' யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி, வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதல்முறையாக அசத்தல் : 
 
                சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior