உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 08, 2011

திட்டக்குடி வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு




  கடல் போல் கட்சியளிக்கும் திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கம்.
 
விருத்தாசலம்:
 
          கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் ஏரியிலிருந்து விவசாயத்துக்காக புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
 
           இதன்மூலம் 15,820 ஏக்கர் நிலம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் திட்டக்குடி வட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் முக்கியமானதாகும். இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதிகளிலுள்ள 63 கிராமங்களுக்கு உள்பட்ட 24,059 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நீர்த்தேக்க கரையின் ஒரு பகுதி பலப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு 27 அடி உயரத்திற்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
             இந்த நீர்தேக்கத்தின் இப்போதைய கொள்ளளவாக 1,890 கனஅடி உள்ளது. இதன் மூலம் 15,820 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 13,561 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  ஊரக தொழில்துறை மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூகநலத் துறை அமைச்சர் செல்விராமஜெயம் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.  விவசாயிகள் குறை: 24,059 ஏக்கர் பயன்பெறத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து இப்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், 15,820 ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறக்கூடிய நிலையில் உள்ளது. 
 
              இதிலும் கூட கடைமடைப் பகுதியிலுள்ள நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்கு முழுமையான வாய்ப்பு இல்லை. கரைகளைப் பலப்படுத்தினால் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்க முடியும். இதனால் 24,059 ஏக்கர் நிலமும் பயன்பெறும்.  ஆனால் கரைகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதேபோல் பாசன வாய்க்கலை தூர்வாராததால் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரும் பாசன நிலங்களுக்கு முழுமையாக செல்லாத நிலையே உள்ளது. எனவே தமிழக அரசு ஏரியின் கரைகளை பலப்படுத்தி, வாய்க்கால்களை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.  
 
            ஏமாற்றம்: ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்து விடப்படும்போது தண்ணீர் திறக்கப்படும் பகுதியில் மலர்கள் மற்றும் நவ தானியங்களை தண்ணீரில் போடுவது வழக்கம். இந்த ஆண்டு அவ்வாறு செய்யாதது ஏமாற்றம் அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். 



















1 கருத்துகள்:

  • பெயரில்லா says:
    9 டிசம்பர், 2011 அன்று AM 10:34

    இந்த ஏரியின் நிஜக்கொள்ளளவு ஆன 27 அடியில் 15 அடிதான் நீர் பிடிக்கிறது. மீதி தூர் வாராமல் அடியில் உள்ளது, இந்த மண்ணையே வாரி கரை இடலாம், அல்லது மக்களுக்கு விற்பதன் மூலம் தூர் வாரலாம், ஆனால் கொள்ளையடிப்பது ஒன்றே குறியாக இருக்கும் அரசியல் வியாதிகள் நல்லன நடக்க விடாது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior