உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 01, 2012

புவனகிரி அருகே நள்ளிரவில் தாலி செயினை பறித்த கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டி பிடித்த பெண்













           கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பி.உடையூர் கிராமத்தை சேர்ந்தவர், தாமோதரன் (வயது 40). இவர் தனது வீட்டு முன்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (35). நேற்று முன்தினம் தாமோதரன் வியாபாரத்தை முடித்து விட்டு மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று விட்டார்.

           வீட்டில் அவருடைய மனைவி ராஜலட்சுமி, மகள்கள் ஜெயப்பிரியா (20), சிவரஞ்சினி (18) ஆகிய 3 பேரும் இருந்தனர். சிவரஞ்சனி, சிதம்பரம் பெண்கள் மேல் நிலைப்பளிளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த ஆண்டு திருமணம் நடந்த ஜெயப்பிரியா, பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார். 3 பேரும் இரவில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில், கொள்ளையர்கள் 2 பேர், வீட்டின் மாடிப்படி வழியாக பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

          கொள்ளையர்களில் ஒருவன், ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 71/2 பவுன் தாலி செயினையும், மற்றொருவன் காதில் கிடந்த தோட்டையும் இழுத்தனர். திடுக்கிட்டு விழித்த ராஜலட்சுமி தாலி சங்கிலியை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். தாயாரின் சத்தம் கேட்டு விழித்த மாணவி சிவரஞ்சனி மின் விளக்கை எரியவிட்டார். உடனே கொள்ளையர்கள் சிவரஞ்சனியை கீழே தள்ளி மானபங்கம் செய்ய முயன்றனர். சுதாரித்து எழுந்த ராஜலட்சுமி கொள்ளையர்களை பிடித்து தள்ளினார். ராஜலட்சுமியையும் மானபங்கம் செய்ய முயன்ற அவர்கள், சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.

           அப்போது சமயோசிதமாக செயல்பட்ட மாணவி சிவரஞ்சனி, கொள்ளையன் ஒருவனின் முகத்தில் ஒரு துண்டைப் போட்டு மூடி கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதனால் அவனால் தப்பி ஓட முடியவில்லை. சத்தம் கேட்டதும் பக்கத்து வீட்டில் வசித்த சிவரஞ்சனியின் பெரியப்பா மகன் மோகன், அருண்குமார் மற்றும் சிலர் ராஜலட்சுமியின் வீட்டிற்கு வந்தனர். கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்ததால், அவர்களால் உடனடியாக உள்ளே செல்ல முடியாமல் கொள்ளையர்களை எச்சரித்து சத்தம் போட்டனர். உடனே தாலி செயினை மட்டும் பறித்துக் கொண்ட கொள்ளையன் வெளியே தப்பி ஓடினான். மற்றொருவனும் அவனுடன் ஓட முயன்றபோது ராஜலட்சுமி, கபடி வீராங்கனை போல் அவனுடைய காலை இறுகப் பிடித்துக் கொண்டதால் அவனால் தப்ப முடியவில்லை.

           இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கொள்ளையன், கீழே கிடந்த அரிவாளை எடுத்து ராஜலட்சுமியை வெட்டுவதற்காக ஓங்கினான். இருப்பினும் அஞ்சாமல் போராடிய ராஜலட்சுமி கால் பிடியை விட்டு விட்டு அவனை அந்த அறைக்குள் வைத்து பூட்ட முயன்றார். அப்போது கொள்ளையன் மீண்டும் அவரை வெட்ட முயன்றார். உடனே சிவரஞ்சனி மீண்டும் கொள்ளையனுடைய கழுத்தை இறுகப்பிடித்துக் கொண்டு அவனால் தாக்க முடியாமல் தடுத்துவிட்டார். அந்த நேரத்தில் தனது உயிரை துச்சமென கருதிய ராஜலட்சுமி அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து அவனை வெட்டினார்.

           சட்டென்று அவன் கீழே குனிந்ததால் கொள்ளையனின் தலையில் மண் வெட்டி வெட்டு விழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தான். அவனை தாயும் மகளும் பிடிப்பதற்குள் சுதாரித்து எழுந்த கொள்ளையன் வெளியே ஓட முயன்றபோது வீட்டின் நிலைப்படியில் மோதி தலையில் அடிபட்டு மீண்டும் கீழே விழுந்தான் உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுடன் சேர்ந்து தாயும் மகளும் கொள்ளையனை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். புவனகிரி போலீசார் கொள்ளையனை கைது செய்து சிகிச்சைக்காக அவனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவன் மாற்றப்பட்டான்.

போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டினுள் புகுந்து சிக்கிக் கொண்ட கொள்ளையன், நாகை மாவட்டம் சீர்காழி மணல்மேடு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் முருகன் (வயது 41) என்று தெரிய வந்தது.
அவனுடன் வந்து தாலி செயினுடன் தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன், தஞ்சை மாவட்டம் திருவைபாடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் அருள் என்று தெரிய வந்தது. இருவரும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் ஆவர்.  வீடு புகுந்து தாலி செயினை பறிப்பதற்கு முன்பு வீட்டின் முன்புறம் உள்ள மளிகைக் கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் அவர்கள் திருடி உள்ளனர்.

      தப்பி ஓடிய அருளை பிடிப்பதற்கு தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது.
கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடியதுடன், மண் வெட்டியால் வெட்டிச்சாய்த்து கொள்ளையன் ஒருவனை மடக்கிப் பிடித்த ராஜலட்சுமியையும் அவருடைய மகள் சிவரஞ்சனியையும் பாராட்டி, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior