உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 26, 2011

அணைக்கரை பாலம் சீரமைப்பு பணியால் மக்கள் பாதிப்பு






காட்டுமன்னார்கோவில்: 

              அதிகாரிகளின் திட்டமிடாத செயலால் பழுதடைந்த அணைக்கரை பாலம் சீரமைப்பு பணி ஜவ்வாக இழுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் அவதி தொடர்கிறது.

                சென்னை - கும்பகோணம் சாலையில் முக்கிய பாலமாக 174 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொள்ளிடம் அணைக்கரை பாலம் உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு இப்பாலத்தின் கீழணையில் தண்ணீர் தேக்கி கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்ட பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு பலவீனமடைந்த பாலம் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு கருதி லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. இதனால் சென்னை - கும்பகோணம் போக்குவரத்து துண்டித்தது. 

                 அப்பகுதியைச் சுற்றியுள்ள இரு பகுதியைச் சேர்ந்த மக்களும் 2 கி.மீ., தூரம் பாலத்தை கடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை இது வரை தொடர்ந்து வருகிறது. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு தற்காலிமாக பாலம் சீரமைப்பு பணிக்கு 6 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் துவங்கி இதுவரை ஜவ்வாக இழுத்து வருகிறது. மழை, வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு வருவதால் பணிகள் தாமதமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் முறையாக திட்டமிடாத செயலே தொய்விற்கு காரணமாகியுள்ளது.

                    முதல் கட்ட பணியாக தெற்கு பகுதி பாலத்தில் அடித்தளம் கான்கிரீட் போட்டும், கம்பி கட்டி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரசாயன பூச்சு மூலம் (கெனைட்டிங்) பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதில் 40 ஷட்டர்களில் 30 ஷட்டர்கள் பழுது நீக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஷட்டர்கள் பணி நடந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து கடந்த பிப். 27ம் தேதி பாலத்தின் மேல்தளம் முற்றிலுமாக அகற்றப்பட்டு அடித்தளம் அமைப்பதற்காக வேலைகள் துவங்கி நடந்து வருகிறது. தற்போது மேல் தளத்தை பலப்படுத்தும் வகையில் ரசாயன பூச்சு பணி பணி நடக்கிறது. அதற்குமேல் கான்கிரீட் போட்டு தளம் அமைத்து சாலை அமைக்கப்பட வேண்டும்.

                இதற்கு இன்னும் ஒரு மாதம் பிடிக்கும். பாலம் சீரமைப்பு பணி நடப்பதையொட்டி பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல தெற்கு பகுதி கொள்ளிடம் ஆற்றில் தற்காலிகமாக செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு புற ஆற்றில் மட்டும் பாலத்தின் மீது இலகு ரக வாகன போக்குவரத்து தொடர்ந்து வந்தாலும் ஆற்றில் 7 லட்சம் ரூபாய் செலவில் சாலை போடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

              இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கோடை மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகரித்து தற்காலிக சாலை முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 27ம் தேதி முதல் வடபுற பாலத்தில் மேல் தள சாலை உடைக்கும் பணிகள் துவங்கப்பட இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள நிலையில் கோடை மழையால் இரு பக்கமும் ஆற்றில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. 

               இதனால் நேற்று முதல் பொதுமக்கள் ஷட்டரின் மேல் தளத்தில் பாதுகாப்பற்ற நிலையில் நடந்து செல்கின்றனர். கும்பகோணம் ஆர்.டி.ஓ., அசோக்குமார், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வராஜ், அணைக்கரை உதவி செயற்பொறியாளர் பெரியசாமி ஆகியோர் பணிகளை பார்வையிட்டனர். பாலம் பணி துவங்குவதற்கு முன் பொதுப்பணித்துறை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் இரு பாலத்திலும் ஒரே நேரத்தில் பணியை துவங்காமல் ஒரு பாலத்தின் பணியை முழுமையாக முடித்து, அடுத்து மற்றொரு பால பணியை துவக்கலாம். 

                அதுவரை பணி நடக்கும் பாலம் வழியாக ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக அணை கட்டி தண்ணீரை திருப்பிவிடலாம் போன்ற ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். ஆனால் அதுபற்றி கவலைப்படாத பொதுப்பணித் துறையினர் இரு பக்க பாலத்திலும் வேலையை துவக்கி போக்குவரத்தை துண்டித்ததால், தற்போது ஆற்றில் போடப்பட்ட தரைப்பாலமும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் இலகு ரக வாகனம் மற்றும் நடந்து செல்லவே முடியாத நிலையில் அவதியடைந்து வருகின்றனர்.

ஒரே நாளில் காலி

                அணைக்கரை வடப்புற பாலத்தின் மேல்தளம் உடைக்கும் பணி 27ம் தேதி துவங்க உள்ளதால் பொதுமக்கள் ஆற்று வழியாக நடந்து செல்ல 7 லட்சம் ரூபாய் செலவில் ஒரு மாதமாக செம்மண் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் கடந்த மூன்று நாட்கள் பெய்த மழையால் நேற்று தண்ணீர் வந்ததால் முற்றிலுமாக உடைந்து மக்கள் நடந்து செல்ல முடியாத நிலைக்கு வந்து விட்டது.

எப்போது முடியும்? 

               அணைக்கரை பாலத்தில் மார்ச் 1ம் தேதி முதல் போக்குவரத்து துவங்கப்படும் என்றனர். அடுத்து ஏப்ரல் மாதம் என்றனர். தற்போது ஜூன் மாதத்திற்கு நாள் குறித்துள்ளனர். ஆனால் பணியில் வேகம், ஆள் பற்றாக்குறை நீடித்தால் 2012ல் தான் போக்குவரத்து துவங்கும் என்கின்றனர்.

2 கருத்துகள்:

  • அசோக் குமார் ஜெயபாலன் .... அணைக்கரை says:
    26 ஏப்ரல், 2011 அன்று AM 11:23

    அடிச்ச ஸ்பெக்ட்ரம் பணத்துல .௦௦00001 % வச்சி முடிக்கலாம் ....

  • அசோக் குமார் ஜெயபாலன் says:
    26 ஏப்ரல், 2011 அன்று AM 11:29

    அடிச்ச ஸ் பெக் ட் ரம் பணத்துல .00001 % வச்சி முடிக்கலாம்

    ... அணைக்கரை

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior